சிற்றிலக்கியங்கள் பிரபந்தங்கள் பரணி

நாஞ்சில்நாடன்
முன் பகுதிகள்: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்
சொல்வனம் பனுவல் போற்றுதும்
பரணி
பரணி என்றால் பெரிய ஊறுகாய்ப் பரணி, நல்லெண்ணெய்ப் பரணி, சிறிய உப்புப் பரணி, தயிர்ப் பரணி என இன்று மணிவிழா வயதைத் தாண்டியவர் அறிந்திருப்பார்கள். திருநெல்வேலிக்காரர் ஒருபோதும் தாமிரபரணியை மறந்து வாழாதவர். ஆயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன்பே அவர் மரபணுக்களில் சேமிதமான செய்தி அது. தமிழில் இலக்கியம் படைக்க வேண்டுமானால் தாமிரபரணித் தண்ணீர் குடித்திருக்க வேண்டும் என்றார் என் வயதொத்த மரியாதைக்குரிய கவிஞர். என்னைக் குறித்துக் கவலையில்லை. மூதாதையர் குடித்தவர்தாம். காவிரித் தண்ணீர் பற்றியும் முன்பு அவ்விதமோர் பேச்சு இருந்தது. ‘தண்ணீரும் காவிரியே, தார்வேந்தன் சோழனே, மண் ஆவதும் சோழ மண்டலமே’ என்றது போல் ‘தண்ணீரும் தாமிரபரணியே’ என்றும் பாடல் எழுதலாம். ஒன்றும் தவறில்லை. ஆனால் படைப்பின் தன்மை பாலைவனத்தையும் புறக்கணிப்பதல்ல. இது பற்றிப் பட்டிமண்டபம் கூட – முத்தரப்போ, எழுதரப்போ – நடத்தலாம். நமக்குப் பொழுதில்லை. இன்று போத்தல் தண்ணீரைத்தான் யாவரும் போற்ற வேண்டும். ஏனெனில் இன்று எந்த நதியின் தண்ணீரையும் நேரடியாகக் குடிப்பது என்பது நேரடியாகக் சாக்கடையைக் குடிப்பதற்கு சமம். இன்னும் சற்றுத் தீவிரமான நாஞ்சில் நாட்டுக் கொச்சை வழக்குக்குத் தாவினால் தூமையைக் குடிப்பதற்கு ஒப்பானது.
எதுவானாலும் ஊறுகாய்ப் பரணியையும் பொருநை எனப்படும் தாமிரபரணியையும் ஈண்டு நாம் பேசப் புகவில்லை. கடந்த எழுபது ஆண்டு காலமாக, பெரும்பாலும் திராவிட இயக்க மேடைகளில், ‘பரணி பாடுவோம்’ என்றொரு சொற்றொடைரைச் செவிப்பட்டிருப்பீர்கள். அந்த பரணியைத்தான் பார்க்கப் போகிறோம்.
பரணி எனும் நாள்மீனையும் ஒருவேளை அறிந்திருக்கலாம். ‘பரணி தரணி ஆளும்’ என்றொரு வழக்கும் உண்டு அந்த நட்சத்திரத்தில் பிறந்தவரைக் குறித்து. பரணி எனும் நட்சத்திரத்தின் தேவதைகள் காளியும் யமனும் ஆவார்கள். நல்ல கூட்டாட்சித் தத்துவம் தான். அந்த நாள்மீனால் அமைந்த பெயர்தான் இவ்வகை இலக்கிய நூலுக்கும் பெயராக அமைந்தது என்று மகாமகோபாத்யாய டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் கருதுகிறார். போர்க்கள அதிபதிகள் யமனும் காளியும் என்பதால் இவ்வாறு கருதத் காரணம் இருக்கும். பொதுவாக, மாவீரரைப் புகழ்ந்து பாடுவதைப் பரணி பாடுவது என்றார்கள். பெரும்போரை சாமான்ய மன்னர்கள் வெல்ல முடியாது. பரணியை சாமான்யப் புலவர்கள் பாடவும் ஏலாது.
இருபதாம் நூற்றாண்டில் வந்த ‘சீனத்துப் பரணி’ வரைக்கும் தமிழில் இவ்வகை இலக்கியங்கள் கையாளப் பட்டிருக்கின்றன. சீனத்தை நாம் வென்றோமா என்பது பிரதானக் கேள்வி.
‘ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
மானவனுக்கு வகுப்பது பரணி’
என இலக்கண விளக்கம் கூறும். அது பரணியின் இலக்கணம். கடும்போரில் ஆயிரம் யானைகளை உடைய எதிரிப் படையை வென்ற மன்னவர் மீது மட்டுமே பரணி பாடப்படுவது மரபு. திராவிட இயக்கத்தவர் பஞ்சாயத்து தேர்தலில் வார்டு உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்றாலேயே பரணி பாடும் தகுதி வந்துவிட்டதாக எண்ணிக் கொள்கிறார்கள்.
கொப்பத்துப் பரணி, கூடல் சங்கமத்துப் பரணி, கலிங்கத்துப் பரணி, தக்கயாகப் பரணி, சோதிப் பிரகாசரின் அக்ஞவதைப் பரணி, மேகவதைப் பரணி, வைத்தியநாத தேசிகரின் பாசவதைப் பரணி, சீனிப்புலவரின் திருச்செந்தூர்ப் பரணி, தொட்டிக்கலை சுப்ரமணிய முதலியாரின் கைலாச சிதம்பரேசர் பரணி என்பன தமிழின் பரணிகளில் சில.
பரணியைக் கலித்தாழிசையால் பாடுவது வழக்கம் என்கிறார்கள். முதலில் நமக்குத் தாழிசை என்றால் என்னவென்று தெரியவேண்டும். பிறகு கலித்தாழிசை. அது என்னவென்று தேடினால் கிடைக்காமலா போகும்? கலிங்கத்துப் பரணி 599 தாழிசைகளால் ஆனது என்றறிகிறோம்.
பெரும்பாலும் தோல்வியுற்றவரை ஒட்டித் தலைப்பிடுதல் பரணி இலக்கிய மரபு. கலிங்கத்துப் பரணி எனில் கலிங்கம் வென்றதும் தக்கயாகப் பரணி எனில் தக்கனை வென்றதுமான செய்திகள். அக்ஞவதை, பாசவதை, மேகவதை என்பதில் இருந்தும் இது புலனாகும். பரணி, புறப்பொருள் இலக்கியவகை என்றாலும் கலிங்கத்துப் பரணியின் கடை திறப்புச் செய்யுள்கள் அகத்துறைப்பாடல்களுக்கு சற்றும் குறைந்தன அல்ல.
கலிங்கத்துப் பரணி……………………….
(தொடரும்)
முழுதும் படிக்க:  http://solvanam.com/?p=19624

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s