அகமும் புறமும் : சங்கம் முதல் நவீனம் வரை | சிறுவாணி இலக்கியத் திருவிழா – 2023

சிறுவாணி இலக்கியத் திருவிழா – 2023 நிகழ்வில் அகமும் புறமும் : சங்கம் முதல் நவீனம் வரை என்ற தலைப்பில் நாஞ்சில் நாடன் உரை

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

குருணைக்கஞ்சி நாளிதழ்

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

நகக்குறி,பற்குறி, மயிர்க்குறி

நாஞ்சில் நாடன்

நேராக வாசற்படி ஏறி, படிப்புரை கடந்து, திண்ணை உள் நுழைந்தவன் சுற்று முற்றும் பார்த்தான். மங்களா, அரங்கு, சாய்ப்பு, பத்தயப்புரை, அடுக்களை, புழக்கடை எனக் கண்களை ஓட்டிக் காதுகளையும் தீட்டினான். ஆள் அனக்கம் இருக்கிறதா என ஆராய்ந்தான். திண்ணையில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து சுபகிருது வருடப் பஞ்சாங்கத்தில் மார்கழி மாதத்தைப் புரட்டிக் கொண்டிருந்தார் அம்பலவாணன், முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருப்பதைப் போன்று. வேலை தடைப்பட்டதால் எரிச்சல் அடைந்து கேட்டார்-

“ஏ, அழகப்பா… எழவெடுத்தவனே! என்னத்தையாக்கும் சுத்தி முத்திப் பாக்க? மயினி கொளத்துக்குக் குளிக்கப் போயிருக்கா… துணி தொவச்சு, தலை தேச்சுக் குளிச்சுக்கிட்டு வர இன்னும் அரை மணிக்கூர் ஆகும்… காலம்பற காப்பிக்குடி கழிஞ்சாச்சு… குளிச்சுக்கிட்டு வந்து தான் உலை வைப்பா பாத்துக்கோ… இப்பிடி ரெண்டுங் கெட்ட நேரத்தில என்னத்த அந்து விழுகுண்ணு வந்து அரக்கப் பரக்கப் பாக்க?”

“கோவப்படாத அம்பலண்ணே! மயினி இருக்காளான்னுதான் பாத்தேன். இந்த நேரம் பாக்க வந்ததுக்கும் காரியம் உண்டு. இப்பம் நான் பேசப்பட்ட விசயம் ஒரு குருவி அறியப்பிடாது, கேட்டயா? நீ மட்டும் மனசோட வச்சுக்கிடணும்…”

“அப்பிடி என்னடே அந்தரங்கம்? எங்கயாம் கூட்டத்திலே தற்கொலைப் படை தாக்குதல் நடத்த அச்சாரம் வாங்கீருக்கியா? நீ குண்டு கூட வைக்காண்டாம்… கூட்டத்திலே நிண்ணு குசு விட்டாப் போதும்… பத்துப் பேரு தலை சுத்தி விழுவான்… தேரை இழுத்துத் தெருவுலே விட்டிராதடே கொள்ளையிலே போவான்…”

“அட சும்மாருண்ணேன்… நீ வேற… நாமளே குண்டுலே விழுந்து கெடக்கோம்… இதுல போயி குண்டு வைக்கப் போறனாக்கும்…”

” சரி சரி… வந்த கால்லே நிக்காத… அன்னா அந்த பெஞ்சு கெடக்கில்லா, அதுல இரி… காரியம் என்னாண்னு சொல்லு…”

“ஆனா நீ விசயத்தை யாருட்டயும் கெம்பீரப்பிடாது… ராத்திரி கெட்டிப் புடிச்சுக்கிட்டு கெடக்கச்சிலே, மயினீட்ட கூட சொல்லப் பிடாது…”

“அடப் போலே புத்தி கெட்டவனே! நீ சொல்லப்பட்ட காரியத்தை நோட்டீசு அடிச்சு, பிள்ளையோ பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் கையிலே கொடுத்து, வீடு வீடாப் போயி விளம்பீட்டு வரச் சொல்லப் போறேன்… திரியான் வேலை மெனக்கிட்டு… சங்கதி என்னாண்ணு சொல்லுவியா!”

“சொன்ன உடனே வெப்ராளப் படப்பிடாதுண்ணே… வெளீல ஒரு மனுசன் கிட்டே மூச்சு விட்டிரப் பிடாது…”

“நீ இப்பம் இங்கினே இருந்து எந்திரிச்சுப் போறியா? வெறுவாக்கலங் கெட்ட மூதி… பொறப்பிட்டு வந்திருக்கான் நம்ம புடுக்கை அறுக்கதுக்கு!”

“சரி, விடு அதை… கவனமாட்டு கேட்டுக்கோ… ஒன்னை நம்பித்தான் சங்கதியைச் சொல்லுகேன்…”

“சரி டே! சொல்லி அழு!”

“வந்து… நம்ம… நீ சாடிக்கேறி அடிக்க வரப்பிடாது…நம்மள நடிகை கமலபாலிகா இருக்காள்ளா…”

“ஆமா, இருக்கா… அவளுக்குத் தீண்டல் வரல்லியா? இல்லே காய் விழுந்திற்றா…?”

“அது இல்லண்ணே… அவளுக்க கேசம் ஒண்ணு வேணும்…”

“என்னது? மனசிலாகல்லே…”

“அதாம்ணேன்… அவளுக்க தலைமுடி ஒண்ணு வேணும்…”

“என்னது? திரும்பச் சொல்லு…”

“என்னண்ணேன் நீ? பஞ்சாயத்து மெம்பராட்டு இருக்கே! இது தெரியாதா? இது கூடத் தெரியாமத்தான் டெல்லி வரை ஆளு இருக்குண்ணு பீத்தீட்டுத் திரியயா?”

“நீ காரியத்தை தொறந்து சொல்லுடே இரப்பாளி!”

“நடிகை கமலபாலிகாவுக்குத் தலையிலே இருக்கப்பட்ட நீளத் தலைமுடி ஒண்ணு வேணும்ணேன்…”

“எலே! கூறு கெட்டவனே! அது ஒரிஜினல் தலைமுடியா, டோப்பா முடியான்னு நாம என்னத்தைக் கண்டோம்?”

“எனக்கு அதெல்லாம் தெரியாதுண்ணேன்… ஒரிஜினல் கூந்தல் மயிரொண்ணு வேணும்! அம்புட்டுத்தான்… என்ன செலவானாலும் சாரமில்லே…”

“சரிடே! செலவைப் பொறவு யோசிப்போம்… இப்பம் அவளுக்கத் தலைமுடி என்னத்துக்கு ஒனக்கு…?”

“அதெல்லாம் ஒனக்கு என்னத்துக்குண்ணே?”

“சும்மா தெரிஞ்சிக்கிடத்தான்… குறைச்சல் படாம சொல்லு நீ!”

“பொறவு நீ என்னைப் பரியாசம் பண்ணப்பிடாது!”

“சும்மா சொல்லுடே… ரொம்ப வெளச்சல் காட்டாத என்னா?”

“எனக்கு இப்பம் வயசு என்ன இருக்கும்ணு நெனைக்கே?”

“முப்பத்திரண்டு, முப்பத்தி மூணு இருக்குமா?”

“சரியாப் போச்சு… வாற வைகாசியிலே முப்பத்தொம்பது முடியும்…”

“இன்னுமாடே ஒரு பொண்ணு பாத்துக் கெட்டி வைக்கத் துப்பில்லாம இருக்காரு ஒங்க அப்பா…”

“நல்ல கதையாப் போச்சு… அவுரும் பதிமூனு வருசமாப் பாக்காரு… எங்க போனாலும் சாதகம் சேரமாட்டேங்கு… ஏழரை நாட்டுச் சனீ… செவ்வா தோசம்… பாவ சாதகம்… மூலம் நட்சத்திரம்… பல்லு நீளம்… கட்டை… கறுப்பு… காலு கிந்திக் கிந்தி நடக்காங்கான்… நல்ல காலம், இன்னும் எவனும் சாமான் நீளம் கொறைவுண்ணு மாத்திரம் சொல்லல்லே!”

“நல்ல கதையா இருக்குடே! பருவப் பத்திலே நாலரைக் கோட்ட விதைப்பாடு… ஊரடியிலே ரெண்டு ஏக்கர் தென்னந் தோப்பு… மட்டுப்பா போட்ட மங்களா வீடு… பால் மாடு, காங்கயம் காளை பூட்டின வில் வண்டி, உரம் அடிக்க, நெல்லு கொண்டு போக சக்கடா வண்டி… உனக்காடே இந்த நிலைமை? உங்க அம்மைட்ட நூத்தம்பது இருநூறு பவுனு உருப்படி இருக்காது?”

“அந்தக் கணக்கைத் தள்ளுண்ணேன்… நீ கேசத்துக்கு வழி சொல்லு சுணங்காம…”

“எலே, இதென்ன வெளையாட்டுக் காரியம்னு நெனச்சியா? சரி! ஒரு காரியம் கேக்கட்டும்! அவளுக்க தலைமுடியை வச்சு வசிய மந்திரம் போடப் போறியா? துரியோதனனுக்கு அவன் பொண்டாட்டி பானுமதி வசிய மருந்து கூட்டிப் பால்லே கலந்து குடுத்த கதை ஆயிராம! ஆனை தூறுச்சுண்ணு ஆட்டுக்குட்டி தூறுனா அண்டம் கிழிஞ்சிரும் தெரிஞ்சுக்கோ!”

“உனக்குத் தெரியாதுண்ணே… நாங்க போகாத கோயில் இல்லே! திருமணஞ்சேரி வரைக்கும் போயிப் பாத்தாச்சு… பால் கொடம், காவடி, தூக்கம், மொட்டை, அங்கப் பிரதட்சணம், தங்கத் தேரு இழுக்கது, இருமுடிக்கெட்டு, பொங்கலு, அரவணைப் பாயசம், ஔவையாரம்மன் கோயில் கொழுக்கட்டை, மண்டைக்காட்டுப் பகவதிக்கு நேர்ச்சை, வெள்ளாட்டுக் கிடா வெலி, கருங்கோழிச் சேவல் அறுப்பு, எல்லாம் எல்லாக் கோயில்லேயும் நேந்தாச்சு பாத்துக்கோ…”

“பின்னே எதுக்குடே? பாதாதி கேசம் பூசையா?”

“ஒனக்குத் தெரியாதுண்ணே… நம்ம சீதப்பால் ஊரு தாண்டி தாடகை மலைக்குப் போனா, மலை அடிவாரத்திலே ஒரு சித்தர் பீடம் இருக்குல்லா… வெள்ளி செவ்வாய்லே அங்க சித்தரு பிரஸ்னம் பாப்பாரு… அங்க போயிருந்தேன் ஒரு நாளு, வெளக்கு வய்க்கப்பட்ட நேரத்திலே… நான் மட்டும்தான்… யாரையும் கூட்டீட்டுப் போகல்லே…”

“அதுக்கு?”

“அவுரு மேல அருள் வந்து குறி சொன்னாரு!”

“என்னண்ணு? கமலபாலிகா தலைமுடி ஒண்ணு வாங்கீட்டு வந்து மணத்தி மணத்திப் பாரு, பக்கத்துலே போட்டுப் படுத்துக்கோண்ணு சொன்னாரா?”

“அதுல்லண்ணே … செலபேரு இந்த ஆனைரோமம் வாங்கீட்டு வந்து மோதிரத்திலே, காப்புலே வச்சு பொதிஞ்சு கெட்டிப் போடுகாள்ளா. ..”

“ஓகோ ..அது மாதிரி அவளுக்க முடியைக் கொண்டாந்து பூணு கெட்டி ஒனக்கு சக்கரையிலே போடச் சொன்னாரா ? ”

“தற்குத்தறம் பேசப்பிடாது…”

“பின்ன என்னடே ? கமலபாலிகா அவளுக்கு தீண்டல் வரப்பட்ட நாளு, எத்தனை கணவன், காதலன், வாடிக்கையாளன் என்பதெல்லாம் சித்தருக்கு எப்பிடிடே தெரியும்? அவுரும் படத்திலே அவளுக்க தொடை, குண்டி, முலைக்கூம்பு எல்லாம் பாக்காரா ?”

“திண்டுக்கு முண்டு பேசப்பிடாதண்ணேன்…அவ பேரை அவுரு சொல்லவேயில்லை !”

“பின்னே ?”

“எனக்கு யாரை ரெம்பப் பிடிக்குமோ, அவுளுக்கக் கேசம் ஒண்ணு கொண்டாந்து மோதிரத்துலே வச்சு அடச்சு, இடக்கை நடு விரல்லே போடச் சொன்னாருண்ணே …”

“அப்பம் அது பொம்பளை முடியாத்தான் இருக்கணும் என்னா?”

“ஆமாண்ணே ..எனக்கு கமலபாலிகாவை ரொம்பப் புடிக்கும். அதுனாலதான் அவ முடி கேக்கேன்!”

“ஏண்டே திருவளத்தான், வேற ஒனக்குப் பிடிச்ச பொம்பளையோ முடி ஆகாதா ? அம்மை, அத்தை, ஆத்தா …”

“அவங்கள்ளாம் புடிக்கும்ணே ..ஆனா இவ வேற மாதிரி. ..”

“ஓ அதாக்கும் சமாச்சாரம்! ஓண்ட்ராடம் கூட கரசேவையா ?”

“போண்ணேன்…நீ ஒரு கிருத்திருமம் புடிச்சவன்…”

“சரி ! அவளுக்க கேச மயிர் கொண்டாந்து மோதிரம் செய்து போட்டா ?”

“தொண்ணூறு நாள்லே எனக்கு கலியாணம் உறுதி ஆகீருமாம்…”

“யாரு?” கமலபாலிகா கூடவா ? எலே , அவ படத்துக்கு அஞ்சு கோடி வாங்குகாளாம்…அதை விட மூணு மடங்கு வருமானம் ஓவர் டைம் செய்தா ..வயசு நாப்பத்தேழு நாப்பத்தெட்டு இருக்கும்! இது ஆகிற காரியமாடா ஆக்கங்கெட்ட மூதி ?”

“அவளைக் கெட்டாண்டாம் ..வேற பொண்ணுத்தரம் அமைஞ்சிரும்லா”

“ஓ! தென்னை மரத்திலே தேள் கொட்டுனா புன்னை மரத்துக்கு நெறி கெட்டுமாங்கும்?”

“நீ அதெல்லாம் ஆலோசிக்காண்டாம்ணே ..எனக்கு ஒரு முடி மட்டும் வாங்கிக் குடு, போரும்!”

“ஏலே , அவ முடியைக் கேட்டு, வேற எவ முடியையாவது கொண்டாந்துட்டா ?”

“அதுக்காச்சுட்டித்தானே உங்கிட்டே வந்தே ன். நீ தலத்தட்டு வரைக்கும் புடி உள்ளவன்…கட்சிலேயும் நல்ல செல்வாக்கு…அடுத்த வட்டச் செயலாளருக்கு உன் பேராக்கும் அடிபடுகு…நீ சொன்னா எவம்ணேண் தட்டுவான்?”

“இதுக்கெல்லாம் ரெம்பச் செலவாகுமப்பா ..”

“செலவைப் பத்தி யோசிக்காண்டாம்ணே …அம்மைட்ட கொஞ்சம் காசு உண்டும்…சண்டு நெல் தூத்துனது…தேங்கா வித்தது..பாலு வித்தது..பணத்தை முடிச்சுப் போட்டு எங்க வச்சிருக்காண்ணு எனக்குத் தெ ரியும்! களவாண்டாலும் வெளீல சொல்ல முடியாது…”

“ஆனா கமலபாலிகா தரணும்லாடே ? ஏதாம் கெட்ட பிரவர்த்தி, செய்வினை, பில்லி சூனியம்செய்யதுக்குத்தான்ணு அவளுக்கு சம்சயம் வராதா ?”

“வாஸ்தவம்தா ன்…அவளுக்குத் தெரியாமத்தான் எடுக்கணும்…மேக்கப்காரன் கிட்டே சொல்லி வச்சுவாங்க முடியாதா ? காசு குடுத்தா அடைபடாத காரியம் உண்டுமா நாட்டிலே?”

வீ ட்டு வாசலில் ஆளரவம் கேட்டது. துவைத்துப் பிழிந்த துணிகள் தோளிலும், பித்தளைக் குடம் நிறையத் தண்ணீர் இடுப்பிலுமாக உதறி முடியாத ஈரக் கூந்தலுடன் அம்பலவாணன் மனைவி ஆவுடையம்மாள் படியேறி வந்தா ள்.

“என்னா கொழுந்தம்பிள்ளே ? காலம்பறயே செம்மொழி மாநாடா?”

“இல்லே மயினியோ ! அண்ணன் கிட்ட சும்ம அரசியல் பேசீட்டு இருந்தேன். நீங்க இருந்திருந்தா ஒரு தேயிலை போட்டுத் தந்திருப்பியோ ! போட்டும், நான் பொறவாட்டு வாறன் என்னா !”

அம்பலவாணனுக்கு கண்சாடை செய்துவிட்டு அழகப்பன் படி இறங்கிப் போனான்.

பத்துப் பதினைந்து நாள் சென்று, அம்பலவாணன், தன் மனைவியின் உதிர்ந்த தலை முடி ஒன்றை ஈருகோலில் கண்டடைந்து, நீளம் ஆய்ந்து, புதிய வெள்ளை உறையொன்றில் போட்டு ஒட்டி அழகப்பனிடம் சேர்த்து, சகல வரிகள் அடக்கம் ஐயாயிரத்து எண்ணூற்று அறுபத்தேழு பணம் கறந்துவிட யோசித்தார். அரசியல் தொழில் செய்பவர் என்றால் அது கூட இல்லாமல் எப்படி?

அம்பலவாணனுக்கு அப்போது தோன்றாமலும் இல்லை . “எழவெடுப்பான் என்னத்தை யாம் காட்டிக் கூட்டித் தன் மனைவியை வசியம் செய்து விடுவானோ ?” என்று. ‘சவம் போனால் போட்டு’ என்று தன்னைத் தேற்றியும் கொண்டார். தொழில் தர்மம் அறியாமல் கச்சவடம் செய்ய முடியுமா ?

*

விறுவிறு என எழுதி முடித்து, பேனாவை மூடிவிட்டு, சற்றுச் செருமினார் கும்பமுனி. சங்கேதத்தைப் புரிந்து கொ ண்ட தவசிப்பிள்ளை , “என்ன பாட்டா ? கட்டன் எடுக்கட்டா?” என்றார். எழுதி வைத்த கத்தைக் காகிதங்களை தவசிப்பிள்ளையிடம் நீட்டிய கும்பமுனி, “எப்பிடி வந்திருக்குண்ணு வாசிச்சுச் சொல்லும்வே !” என்றார். வாங்கி க்கொண்டு குசினிப்புரைக்குள் நுழைந்தார் தவசிப்பிள்ளை .

சற்றுப் பொறுத்து, தவசிப்பிள்ளை கொணர்ந்து கொடுத்த கட்டன் சாயாவைக் கொதிக்கக் கொதிக்க, ஊதியூதிக் குடித்து முடித்தார், கும்பமுனி. கடுமையான உழைப்பின் நிமித்தமாய், நெற்றியில், மேலுதட்டில் வியர்வை பொடித்தது, உவப்பின் உச்சம் கண்டவரைப் போல.

கும்பமுனி எழுதிய சிறுகதையின் முதல்படியை வாசித்து முடித்த தவசிப்பிள்ளை , இடக்கரத்தால் காகிதக் கத்தையை அவரிடம் நீட்டினார்.

“எப்படி வந்திருக்குவே ?” என்றார் கும்பமுனி.

தவசிப்பிள்ளை சற்று இளக்காரப் புன்னகையுடன் கேட்டார், “பாட்டா, உள்ளதைச் சொல்லும்..உண்மையிலேயே அழகப்பன் கமலபாலிகாவுக்குத் தலையிலுள்ள முடியைக் கேட்டான்ணு எழுதுகது தான் உம்ம ஆத்தியத்த உத்தேசமாட்டு இருந்ததா?”

கும்பமுனி வெடிச்சிரிப்பொன்று சிந்தினார், உரும் இனம் உக்கினதைப் போன்று. சிரித்துக்கொண்டே சொன்னார்.

“கேசம், அளகம், ரோமம் எல்லாம் சமஸ்கிருதம்வே கண்ணுவிள்ளே ! முடி இல்லேண்ணா மயிர்தான் தமிழ், கேட்டேரா?”

“நீரு பேச்சை மாத்தாதையும் என்னா !” என்று சலித்து யதாஸ்தானத்தில் நின்றும் நீங்கினார் தவசிப்பிள்ளை .

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

இந்தி- ஒரு வரலாற்றுச் சுருக்கம்- கார்த்திக் புகழேந்தி

“இந்திய மொழிகள் 1625 என்றும் அவற்றுள் பல அழிந்துவிட்டன எனவும் மேலும் பல அழிவில் உள்ளன என்றும் சொல்கிறார்கள். இந்திய அரசின் அட்டவணை மொழிகள் 24 எனவும் அறிகிறோம்.

எடுத்துக்காட்டுக்கு, ஜார்க்கண்ட் மாநிலத்தின் சனத்தொகை, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 3.30 கோடி என்றும் எழுத, வாசிக்கத் தெரிந்தவர்கள் 67.6 % சதமானம் என்றும் தகவல்கள் உள. அங்கு இன்றும் பேசப்பட்டுக்கொண்டிருக்கிற மொழிகள் பதினைந்து. ஆனால், இன்று ஜார்க்கண்ட் மாநிலத்தின் அலுவல் மொழியும் ஆட்சி மொழியும் இந்தி. எதிர்காலத்தில், அங்கு இன்று பேசப்படுகின்ற 15 மொழிகளின் நிலையென்ன, கதி என்ன? வரலாற்றினுள் கரைத்து எள்ளும் தண்ணீரும் இறைத்துவிடலாமா?

இந்தி எனும் மொழியின் தொன்மை 400 ஆண்டுகளே! இன்றைய இந்தியாவின் அலுவல் மொழிகள் ஆங்கிலமும் இந்தியும். இந்தி அலுவல் மொழிதானே அன்று ஆட்சி மொழி இல்லை.

தம்பி கார்த்திக் புகழேந்தி எழுதிய கட்டுரை நூல்களையும் சிறுகதைத் தொகுப்புகளையும் நான் வாசித்திருக்கிறேன். நான் மதிக்கும் இளம் படைப்பாளிகளில் ஒருவர் அவர். சில மாதங்கள் முன்பு வாசிக்க நேர்ந்த அவரின் குறு ஆய்வு நூல் ‘இந்தி- ஒரு வரலாற்றுச் சுருக்கம்’. விரிவானதோர் ஆய்வு நூல் எழுதப்படுவதற்கான நாற்றங்கால் இச்சிறுநூல் என உறுதியாகச் சொல்வேன். ஆனால், விரிவான அந்த ஆய்வு நூலை விருதுகளுக்காக அலையும் ஆய்வறிஞர் கூட்டம் சாராத ஒருவர் ஆழங்கால் பட்டுச் செய்ய முனைய வேண்டும்.

காய்தலும் உவத்தலும் இன்றி, அந்தரத்தில் நின்று, அரசியல் சாய்வின்றி, நேர்மையாக எழுதப்பெற்ற நூல் இது என்பது கார்த்திக் புகழேந்தி தரும் தரவுகளில் இருந்து பெறப்படும் உண்மை. அந்த உண்மை வாசிக்கும் எவருக்கும் சில அக எழுச்சிகளை உறுதியாகத் தரும்.”

-நாஞ்சில் நாடன்

04-01-2023

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

காரைக்குடி, காசி போல் புனித பூமி

காரைக்குடி, காசி போல் புனித பூமி

துள்ளு தமிழ் ஓசையுடன் தூய கவி நாட்டும் செல்ல கணபதி’ என்கிறார் கவியரசு கண்ணதாசன். ‘ஆண்டாள் தமிழை ஆண்டாள்’ என்றவரும் அவரே. கவியரசு கண்ணதாசன் பாராட்டிய கவிஞர் செல்ல கணபதி. அவரை அறிந்தவர்க்கு அவர் வெல்ல கணபதி. மிக நல்ல கணபதி. அவர் குழந்தைக் கவிஞர், ஆனால் அவரே ஒரு குழந்தை. கள்ளம், கபடு, பொய், சூது, புரட்டு, வஞ்சகம் யாவும் பிரித்தெடுக்கப்பட்ட பால் முகம் அவருடையது. கொழுப்பு நீக்கப்பட்ட பால் என்பது போல. எதிர்மறையாக வாழ்த்தக்கூடாது என்பார்கள். மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையே, ‘ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையா உன் சீர் இளமைத் திறன் என்றுதானே சமரசம் செய்யப்படாத தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார்!
மும்பையில் இருந்து கோவைக்கு வந்த 1989 முதலே செல்ல கணபதி அண்ணனை அறிவேன். என்னைவிட ஆறேழு ஆண்டாவது மூத்தவராக இருப்பார். நான் ஒரு ‘கடுவன் பூனை’ என்பது நவீன இலக்கிய உலகில் பரவலாக அறியப்படுபவன். எனில் அண்ணன் ‘புனிற்றா’ . இதை வாசிக்கிற உங்களில் பலருக்கும் ‘புனிற்றா’ என்றால் தெரிந்திராது. மாணிக்கவாசகர் பயன்படுத்தும் சொல்.
‘கற்றா’ என்றால் ஒருவேளை கேள்விப்பட்டிருக்கலாம். ‘கற்றாவின் மனம்போலக் கசிந்து உருகவேண்டுவனே!’ என்ற திருவாசக வரி செவிப்பட்டிருக்கலாம். ஆ எனில் பசு, கற்றா எனில் கன்று+ஆ. கன்றை உடைய பசு. புனிற்றா எனில் மிகச்சமீபத்தில் கன்றை ஈன்ற பசு என்று பொருள். மாணிக்கவாசகரே, ‘நுந்து கன்று’ என்ற சொல்லும் பயன்படுத்துகிறார். தேடி, பொருள் உணர்ந்து, வாசியுங்கள். எனில், புனிற்றா என்பது, புதியதாக மண்ணில் வந்து பிறந்த, இன்னும் சரியாக நடை பழகாத, முட்டி முட்டிப் பால் குடிக்கவே கற்றுக்கொள்ளாத, கன்றை நக்கிக் கொடுக்கும் தாய்ப்பசு. அதுபோன்றவர் குழந்தைக் கவிஞர் செல்ல கணபதி அண்ணன் என்று சொல்ல வந்தேன்.
தமிழைத் தோய்ந்து படிப்பவர், செவிமடுப்பவர், உடனே சிலாகித்தும் சொல்பவர். எப்போதும் அண்ணன் என்று அவரைக் கூச்சம் இன்றி அழைப்பேன். கோயம்புத்தூர், இரத்தின சபாபதிபுரத்தில் இருக்கும் அவரது ‘செல்லப்பா’ இல்லத்துக்குப் பலமுறை போயிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் உணவு கொண்டிருக்கிறேன். அது உணவல்ல விருந்து.
எங்கோ ஒருமுறை வாசித்த நினைவு. கவியரசர் கண்ணதாசன் வரிகள், ‘அப்பப்பா, கோவைக்கு வரக்கூடாது, அவர் சாப்பாட்டினாலேயே சாகடிப்பார்’ என்று. இதுவும் எதிர்மறை வாழ்த்துத்தான். கண்ணதாசன் சொற்களைத் திருத்தி நான் சொல்லலாம், ‘நகரத்தார் இல்லத்துள் போகவேண்டும், சாப்பிட்டு நீண்டநாள் வாழ வேண்டும்’ என்று.
‘பழனியப்பா பிரதர்ஸ்’ என்பது பாரம்பரியம் மிக்க பதிப்பகம். அவர்கள் பாடப்புத்தகங்களும் ஐயம்பெருமாள் கோனார் கைடும் மாத்திரம் பதிப்பிக்கவில்லை. அவர்கள் வெளியிட்ட நல்ல நூல்களைப் பட்டியலிட எனக்கு நான்கு பக்கங்கள் தேவைப்படும். என்றாலும் பதச்சோறாக ஒன்றைச் சொல்லிச் செல்வேன். அது அறிஞர் என். வரதராஜுலு நாயுடு என்ற N.V. நாயுடு எழுதிய ‘காப்பிய இமையம்!’ கம்பனில் நாட்டமுடையவர் வாசிக்கப் பரிந்துரைக்கிறேன். மேடைப் பேச்சுக்களுக்கு அது பயன்படுமா என்பதறியேன்.
குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா நினைவு அறக்கட்டளை ஒன்று நிறுவி, ஆண்டுதோறும் குழந்தை இலக்கியம் படைப்பவர்களுக்குப் பரிசளித்துக் கொண்டாடுகிறவர். அண்மையில், சாகித்ய அகாதமி, குழந்தை இலக்கியத்துக்கான விருதை செல்வகணபதி அண்ணனுக்கு வழங்கி மகிழ்ந்தார்கள்.
ஒரு தனிப்பட்ட உரையாடலின்போது, ‘வட்டி ஒன்றுதான் உறக்கத்திலும் நடக்கும்’ என்று குறிப்பிட்டார் கவிஞர் செல்ல கணபதி அண்ணன். அவரைக் கவிஞர் என்று அடைமொழி சேர்த்து உரைப்பதே வசதிக் குறைவாக இருக்கிறது எனக்கு. பிறந்தது தன வணிகர் குலம் என்றாலும் அவர் காசு சேர்ப்பவர் அல்ல. வரையறையற்று வழங்குகிறவர். அவரது தாளாண்மையில் நானும் நனைந்ததுண்டு.
என் பணி இந்த சந்தர்ப்பத்தில், அவரது ‘கவிதைச் சிறகுகள்’ எனும் கவிதை நூலுக்கு முன்னுரைப்பது. மூலவர் தரிசனம் மறந்து, நான் பிரகாரத்தில் வலம் திரிகிறேன்.
இயற்கை, உறவுகள், நாடும் மொழியும், காதலும் பெண்மையும், சமூகம், கவியரங்கம், பக்தி, மனக்கோயில் வாழும் உமையே, என்று எட்டுப் பகுதிகள் கொண்டது இந்தத் தொகை நூல்.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின், ‘அழகம்மை ஆசிரிய விருத்தம்’. கவிஞர் கண்ணதாசனின் ‘மதுரை மீனாட்சி உமையே’ வரிசையில் வைத்து எண்ணத்தக்கது கவிஞரின் ‘மனக்கோயில் வாழும் உமையே!’ ஒருவேளை கவியரசரிடம் இருந்து பெற்ற உத்வேகமாகக்கூட இருக்கலாம். அப்படித்தான் இலக்கியம் சம்பவிக்கும். வான்மீகி இன்றேல் கம்பன் எங்கே?
கவிஞரின் தமிழ்ப் புலமையும், செய்யுள் யாக்கும் தேர்ச்சியும், துள்ளிவரும் சந்தத் தமிழும், தமிழ்ப் பற்றும் இறைப்பற்றும், அவருக்கு இதனை சாத்தியமாக்கி உள்ளது.
சந்தத்தோடு சொல்லிப் பாருங்கள்:
*குழைகின்ற கவிதையில்
நெளிகின்ற உணர்வினால்
குருநாதன் புகழ்பாடுவேன்
 கோபுரத் தமிழ்வளரும்
காவியப் புலவர் மனக்
கோயிலில் வாழும் உமையே!’
என்று.
கவிஞர் செல்ல கணபதியின் கவிமனம் அர்த்தமாகும். ‘பேச்சில் ஒரு பாச்சுவையைப் பின்னி வைக்க வேண்டும்’ என்று கவி எழுத வல்லவருக்கு, கயற்கண்ணியை பாடக் கற்பனை இல்லாது போமோ?
கவிதையைப் பெண்ணாக உருவகித்துப் பாடும்போது,
‘மீனசையும் கடல் நீரில் மின்னித் தோன்றி
மேவி வரும் காதலினை வளர்ப்பாள்; மின்னும்
 வானசைந்தால் மழைவடிவில் ஏற்றம் கொண்டு
வாய்ந்த உயர் வாழ்வளித்துக் காப்பாள்’
என்று நடப்பது அவர் கவிதை.
 
பிறந்த மண்ணைப் போற்றும் எண்ணற்ற கவி மின்னல்கள் உண்டு .
‘கம்பனுக்கு கழகத்தைத் தோற்று வித்த
காரைக்குடி காசியைப் போல் புனித பூமி’
என்று போற்றுகிறார்.
வம்பர்களுக்கான கழகங்கள் போன்றதன்று காரைக்குடி கம்பன் கழகம் என்பதை நாடறியும்.
 
பக்தி என்பதோ, பக்தி இயக்கம் என்பதோமக்களைச் செம்மைப் படுத்துவது. அது சக மானுடரைச் சிறுமைப்படுத்தாது. கவிஞர் செல்ல கணபதி பாரம்பரியமான பக்தி உணர்வு மீக்கொண்டவர். கோதை மீனாட்சியின் அருள் மிகக் கொண்டவர்’.
‘பகலவன் வலம் வரப் பனி விலகுதல் போல், படும் துயர் மறந்திடத் தரிசனம்
பெறுபவர். ‘விழியிருந்தும் குருடனாக உலவுகின்ற மனிதரின் வேறுபடுபவர். மேற்கோள் காட்டப்பட்டவை யாவும் கவிஞரின் பாடல் வரிகளே!
பண்பட்ட மனதில்தான் பக்தியும் தழைத்தோங்கி வளரும். ‘ஒருவர் படுப்பதில் நால்வர் அமரலாம்’ என்ற மனவிசாலம் அவரிடம் இருக்கிறது. சமூகக் கரிசனமும், தாய்த்தமிழ் செம்மாப்பும், தொல்மரபும், நற்பண்பும் விரவிய கவிதைகள் இவை.
வாழ்த்துவதற்கு வயது வேண்டாம். மனம் போதும்! பல்லாண்டு வாழ்ந்து, கவிஞர் செல்ல கணபதி பொருட் கொடையும் அருட்கொடையும் தமிழ்க்கொடையும் நல்க வாழ்த்துவோம்.
மார்ச் 2018
Posted in அனைத்தும் | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடன் – எட்டுத்திக்கும் மதயானை | பெருங்கதையாடல் | பவா செல்லதுரை

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

ஆசையெனும் நாய்கள்/சிறுவர்களின் சிற்றாசை/கிராமத்துத் திருவிழா/நாஞ்சில் நாடன்

தமிழ் நவீன இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கி வரும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் ஆவார். நவீன இலக்கியப் படைப்பாளர்களிலேயே செவ்விலக்கியங்கள் தொட்டு இன்றைய இலக்கியம் வரை ஆழ்ந்த புலமை பெற்றவர் என இவரைச் சுட்டலாம். சொல்லாராய்ச்சியில் ஆழங்கால் பட்ட சான்றாளராகத் திகழ்பவர். நாஞ்சில் நாட்டிலுள்ள பூதப்பாண்டி தேர் திருவிழாவைச் சற்றும் பிசகாமல் காட்சிப்படுத்தும் கதை என ‘ஆசையெனும் நாய்கள்’ என்ற கதையைச் சுட்டலாம். இக்கதை தமிழினி வெளியிட்ட ‘நாஞ்சில் நாடன் கதைகள்’ தொகுப்பில் இடம் பெற்றுள்ளது ; வஞ்சிநாடு இதழில் ஆகஸ்ட் 1977 ல் வெளியாகியுள்ளது. தேர்த்திருவிழாவில் இளஞ்சிறார்களின் பல்வேறு ஆசையை – அரங்கேறும் பல்வேறு செயற்பாடுகளை – சூதாட்டத்தை – போதும் என்ற மனமில்லா மனித மனத்தை எனப் பல காட்சிகளை நம் கண்முன் விரியும் படி மொழியில் விவரிக்கிறார்.

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

எச்சம்/இறப்பு வீடு/குடும்ப உறவு/ஒலி வடிவம்/நாஞ்சில் நாடன்

தமிழ்ச் சிறுகதைப் படைப்புலகில் தனித்த அடையாளத்துடன் இயங்கி வரும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன். அவர் எழுதிய சிறுகதைகளில் ஒன்று ‘எச்சம்’ ஆகும். “தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப் படும்” (குறள் எண் 114) என்பது பொதுமறை. பலவேசம் பிள்ளை அவர்களின் பிள்ளைகளாகிய எச்சங்களின் செயற்பாட்டை – மனநிலையை – பகடியுடன் இக்கதை வெளிப்படுத்துகிறது. கிராமத்து இழவு வீட்டினைக் காட்சிப் படுத்தும் கதை. குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் செயற்கைத் தனத்தை தோலுரித்துக் காட்டும் வகையில் நாஞ்சில் நாடன் கதையை அமைத்துள்ளார்.இக்கதை தமிழினி வெளியிட்ட நாஞ்சில் நாடன் சிறுகதை தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. இக்காணொளியில் எச்சம் கதையின் ஒலி வடிவத்தை காண்கிறோம்.

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

உபாதை/ சுரண்டும் வர்க்கம்/சுரண்டப்படும் வர்க்கம்/குடும்பம்/நாஞ்சில் நாடன்

நாஞ்சில் நாடன் அவர்களின் உபாதை என்கிற சிறுகதையின் ஒலி வடிவம். கிராமப்புற விவசாயக் கூலிப் பெண்களின் வாழ்வியலையும் – முதலாளித்துவத்தினையும் – ஏழைப் பெண்களின் உடலை பணம் படைத்தவர்கள் கையாளும் முறைமையையும் – ஏழை குடும்பத்தின் சூழலையும் காட்சிப் படுத்தும் கதை உபாதையாகும். இக்கதை தமிழினி வெளியிட்ட நாஞ்சில் நாடன் கதைகள் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடனின் ஐஞ்சிறு கதைகள்

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

குன்றாத வாசிப்புப் பரவசம்!

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடன்/சிறுகதை/வைக்கோல்/உழைப்புச் சுரண்டல்/முதலாளித்துவம்

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் 1975 லிருந்து தொடர்ந்து இலக்கிய உலகில் இயங்கி வந்தாலும் பல்லாண்டுகள் விற்பனை முகவராக மும்பையில் வாழ்ந்தவர். மும்பை வாழ்வை – நிறுவனங்களின் முதலாளித்துவத்தை – உழைப்புச் சுரண்டலை – ஏற்றுமதி இறக்குமதியில் உள்ள நெருக்கடியை காட்சிப்படுத்தும் வகையில் வைக்கோல் என்னும் கதை அமைந்துள்ளது. இக்கதை தமிழினி வெளியிட்ட நாஞ்சில் நாடன் கதைகள் என்னும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. செம்மலர் இதழில் ஜுலை 1977 ல் வைக்கோல் கதை வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. வைக்கோல் என்னும் கதையின் பெயர் நிறுவனங்களில் தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சுவதை குறியீடாக உணர்த்துகிறது

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

சாகும் முன்னே எழுத்தாளன் உழைப்புக்கு கூலி கொடுங்க!

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

சொல் ஒக்கும் சுடு சரம்

5வது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா 2022 தலைப்பு ”சொல் ஒக்கும் சுடு சரம்” நாஞ்சில் நாடன் சிறப்புரை

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

வெறி நாற்றம் – நாஞ்சில் நாடன்

குரல்: – ஆனந்தராணி பாலேந்திரா

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

அம்பாரி மீது ஒரு ஆடு/ஏற்றத்தாழ்வு/

தமிழினி வெளியிட்ட நாஞ்சில் நாடன் கதைகள் தொகுப்பில் இடம் பெற்ற சிறுகதை அம்பாரி மீது ஒரு ஆடு என்னும் கதையாகும். இக்கதையின் தலைப்பையே அங்கதம் தொனிக்கும் வகையில் அமைத்துள்ளார். மனிதம் மதிக்கப் படாமல் பொருளாதாரம் சார் உயர் வர்க்கம் மதிக்கப் படுவதை இக்கதையின் மூலம் காட்சிப் படுத்தியுள்ளார்.

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடன் | சிறுகதை | அழக்கொண்ட எல்லாம் தொழப் போம்

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

பெருந்தவம்| நாஞ்சில்நாடன் |

ஒலி வடிவம், காணொளி: சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

Padaippu Sangamam – 2022 | வாழ்நாள் சாதனையாளர் விருது | எழுத்தாளர் நாஞ்சில் நாடன்

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடன் | சிறுகதை |”அம்மை பார்த்திருந்தாள்” | NanjilNadan | Story |”Ammai ParthirunthaaL”

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

இது கண்களின் பார்வையல்ல

கவிஞர் ஏர்வாடி சிந்தா அவர்களின் இது கண்களின் பார்வையல்ல என்ற கவிதை தொகுப்பிற்கு மதிப்புக்குரிய எழுத்தாளர் நாஞ்சில் நாடன் எழுதிய அணிந்துரை..

நம்பியாறு வாழ்த்தட்டும்

‘இது கண்களின் பார்வையல்ல!’ என்பது இக்கவிதைத் தொகுப்பின் தலைப்பு. கண்ணால் காண்பது ஒன்றாகவும் உட்கருத்து முற்றிலும் முரண்பட்டதாகவும் இருத்தலும் கூடும் என்ற உண்மையை உணர்த்துகிறது தலைப்பு. கண்களின் பார்வை அல்ல என்றால் சிந்தனைத் தெளிவின் பார்வை. புறப்பார்வைக்கும் அகநோக்குக்கும் உண்டான வேறுபாடுகளை உணர்த்தும் தலைப்பு.

கவிஞர் சிந்தா எனக்கு அறிமுகமானவர் இல்லை. இதற்கு முன் அவர் கவிதை எதையும் வாசித்ததும் இல்லை. எனது சகோதரர் ஏர்வாடி சுல்தான் இந்தத் தொகுப்பை எனக்கு அறிமுகப்படுத்தினார். கவிஞர் சிந்தாவின் முழுப்பெயர் M.S. சிந்தா மதார் என்றும், சகோதரர் S.I. சுல்தான் அவர்களின் அடுத்த வீட்டுக்காரர் என்றும் பின்னர் அறிந்தேன். வயதென்ன, தொழிலென்ன, வருமானம் என்ன போன்ற தகவல்கள் எனக்கு அநாவசியம். கவிஞர் என்ற அறிமுகமே நமக்கு போதுமானது.

‘’பெருவெளி” என்ற கவிதையில் கவிஞர் சொல்கிறார்,

‘உடைந்தது மழைத்துளி
எத்தனை நைல் நதி?’

என்று. கவிதை எனும் அனுபவம் மழைத்துளி, அதுவே நைல் நதி. நதிகள் என்பன இங்கு சிந்தனைப் போக்குகள். புனிதம் என்பது உலகின் எந்த நதிக்குமான சொந்த உரிமையும் அல்ல.

அனைத்துக் கவிதைகளையும் வாசித்துச் செல்லும்போது, கவிஞரின் பரந்து பட்ட பார்வையின் தெளிவும் கூர்மையும் தெரிகிறது.

மனித உணர்வுகள் என்பன மதம் இனம் மொழி நிலப்பகுதி என்பனவற்றையும் கடந்து நிற்பன என்பதையும் கவிதைகள் நிறுவிச் செல்கின்றன.
‘அம்மா’ என்றொரு கவிதை அதற்கோர் எடுத்துக்காட்டு.

*குழந்தை மூசாவை
கூடைக்குள் கிடத்தி
நீரில் விட்டு
திரும்பியவளோ
கர்ணனை கங்கையில் விட்டு வந்தவளோ
ஈன்றவள் விழிகளில்
இடம் பெயர்ந்திருந்தன
நைலும் கங்கையும்’

என்றொரு கவிதை, விழிகளின் மூலம் மட்டுமே அல்லாத மிகச்சரியான அகப்பார்வையைத் தருகிறது. ஈன்ற தாய் என்பதோர் சக்தி வாய்ந்த சொல்லாட்சி. அதனால்தான் வள்ளுவன் ‘ஈன்ற தாய் பசி காண்பான் ஆயினும்’ என்று அழுத்தம் தந்து பேசினான்.

காதல், போர்கள், மதக்கலவரங்கள், துவக்குச் சூடுகள் குறித்த சில கவிதைகள் உண்டு நூல் நெடுக்க. வலி என்பது யாவர்க்குமாம்.

‘விரியும் சிறகுகள்’ எனும் நீண்ட கவிதை சொல்வதைப் போல –

‘பருந்தின் கால்களில்
சிக்கிய
பாம்பின் கண்களில்
தரிசனம் தந்து நெளிந்தது மண்புழு’

என்பதுதானே யதார்த்தம்.

‘புனிதப் பயணம்’ எனும் கவிதையில் கவிஞர் சிந்தாவின் பாடல் வரிகள் –

“அகந்தை மனது
தன் புழுதிகளை உதறிக் கொண்டே
புரண்டு சிரிக்கிறது”

என்பதும் இன்னொரு வகை யதார்த்தமே!

பெண்ணின் அவலங்களை மிகத்தீர்க்கமாக பேசுகிறார் கவிஞர்.
‘அவளுக்கே ஆன வனவாசம்’ என்ற கவிதையில்

“எவனோ ஒருவனின்
வார்த்தை எச்சத்திற்காய்
இரண்டாம் வனவாசத்தைத்
துவங்குகிறவள்
அசோகவனத்திலும் அதிகமாய்
அழுதிருக்கக் கூடும் அப்போது அவள்.

அடுதத கலவரத்தில்
யாரைப் புணரலாம்
என்றே
அலைந்து கொண்டிருக்கிறார்கள்
அன்றிலிருந்து’
என்ற கவிதை வரிகளின் அழல் எந்தக் குறிப்பிட்ட சமயத்தின், மொழியின், இனத்தின் பெண்களுக்கானவை மட்டுமே அல்ல. இதுவே கவிதைப் பண்பென்று உணர்கிறேன் நான். வார்த்தை எச்சம் என்பதொரு சிறந்த சொல்லாட்சி.

வேறொரு உண்மையை ‘நீரெழுதிய கவிதை உணர்த்தியது.

‘எந்த நதி என்று
யாருக்கும் தெரியாமல்
வந்து விழுந்தது மழைத்துளி’

என்பதது. மனித இரக்கம், காருண்யம், பரிவு என்பன தன்னாள் – வேற்றாள் பார்த்தா சுரக்கும்? அவையும் மழைத்துளிகள் போன்றவை அல்லவா?

‘பேயாட்டம் என்ற கவிதை நல்லதோர் சிறுகதைப் பண்பு கொண்டது. செய்னம்புவுக்கு பேய் பிடித்த கதையைப் பேசுகிறது கவிதை. ‘காராட்டு உதிரம் தூஉய் அன்னை களன் இழைத்து’ என்று தொடங்கும் முத்தொள்ளாயிரப் பாடலை நினைவுபடுத்தும்.

ஆதரவு இல்லம்’ ‘யாசிப்புகள்’, ‘கடவுளை விற்பவன்’, ‘பாவச் சுமைகள்’ எனப் பல, தொகுப்பின் குறிப்பிடத்தகுந்த கவிதைகள்.

மனிதநேயம் மிக்க கவிதை ஒன்று ‘மழை இரவு’ எனும் தலைப்பில்

‘‘தேநீர்க் கடைகளில
நாய்களுக்கும் மனிதனுக்கும் சமத்துவ தஞ்சம்
கூரை கிழிசல் வழி
ஒழுகும் நீரை
தடுத்துக் கொண்டிருக்கும்
குழந்தையின் கற்சிலேட்டு’

என்ற கவிதை வரிகள் அன்றும் இன்றும் ஊர்ப்புறங்களில் காட்சிபடுபவை.
ஆனா ஆவன்னாவும் வாய்ப்பாடும் எழுதிப் பயிலப் பயன்படும் பள்ளிக்கூட சிலேட்டு, மழைத்துளிகளுக்கும் மறைப்பு.
சாயாக் கடையின் ஒழுகும் சாய்ச்சிறக்கி மறைவில் நாயும்மனிதரும் பள்ளிச் சிறுமியும் தஞ்சமடைகிறார்கள்.

சிறுவயதில் நானும் மழைக்கு ஒதுங்கி இருக்கிறேன்.

ஊர்க்கோயில் கொடை என்பது கிராமங்களில் பிறந்து வளர்ந்தவர்களால் தோய்ந்து அனுபவிக்கப்படுவதொன்று. ஐம்பதாண்டு காலமாகப் புலம் பெயர்ந்து வாழ்பவன் நான். எம்மூர் முத்தாரம்மனுக்கு இந்த ஐம்பதாண்டு காலத்தில் இருபது கொடைகள் நடந்திருக்கும். அவற்றுள் குறைந்தது பதினெட்டு கொடைகளுக்கு நான் பம்பாயில் இருந்தும் கோவையில் இருந்தும் போயிருக்கிறேன். ஒரு கொடைக்கு போக வாய்க்காதபோது உணரும் ஏக்கமும் அறிவேன். புலம் பெயர்ந்து போன மகன் இந்த ஊர்க்கொடைக்காவது வருவான் என்று ஏக்கத்துடன் காத்திருந்த தகப்பனின் ஆவலாதியைப் புலப்படுத்துகிறது ‘ஊர்க்கொடை’ எனும் கவிதை.

‘’புலம் பெயர்ந்த மகன்
இம்முறையும் வரவேயில்லை
படையல் சோற்றை
காகம் மட்டுமே தின்றது’

என்பதன் வலி நமக்கு அர்த்தமாகிறது. அதுவும் படப்புச் சோறு என நாங்கள் கொண்டாடி உண்ணும் படையல் சோறும்கூட காத்திருந்து காகங்களுக்குப் போகும் சோகம். தூரா தொலைவுக்கு பிள்ளைகள் சம்பாதிக்கப் போய், அவர்கள் வரவு பார்த்திருக்கும் ஏக்கம் அது.

அதுபோலவே, ‘ஈரம்’ என்றொரு கவிதை

‘உணவுப் பொட்டலத்தைப் பிரித்து
நேசத்துடன் நோக்குகிறாள்
யாசிக்கும் சிறுமி
மன்னு சல்வா.

என்று தொடங்குவது. தொடர்ந்து –

‘இரண்டு சலாம்களுக்கு பதில் பெறாது
தொழுதுவிட்டு
பள்ளி வாசலைக் கடக்கையில்
ஏளனமாக சிரிக்கிறது பதிலளிக்காது
விட்டு வந்த
பக்கிரின் சலாமொன்று.’

என்று முடியும்போது நமக்குள்ளும் ஈரம் கசிகிறது. மனிதநேயம் இருந்தாலொழிய இவ்விதம் எழுத வராது.

ஊர்ப்பக்கம் வளர்ந்தவர்களுக்கு ஆறு, ஏரி, பொத்தை என்பன என்றுமே மறக்க இயலாத அனுபவங்களை தந்து நிற்கும். கவிஞர் சிந்தாவுக்கு அது நம்பியாறு.

திருக்குறுங்குடி மலையில் புறப்பட்டு திருமலை நம்பியின் கால் நனைத்து, சித்தூர் தென்கரை மகராஜா சாஸ்தாவுக்கும் வடக்குவாழ் செல்விக்கும் தாகம் தீர்த்து தொடரும் ஆறு அது. நம்பியாறு.பற்றி நிறையப் பேசுகிறார் கவிஞர்.

‘அத்தனை நினைவுகளையும்
ஆற்றோடு கொட்டிவிட்டேன்
என்ன செய்தாய் ஆற்றை என

என் பிள்ளைகள் கேட்கும் முன் என்று கவலும் வரிகள் நம் நிர்க்கதியை உணர்த்துகின்றன. மேலும்,

‘அத்தனைக் கள்ளக் குளியலுக்குப்
பின்னும்
பிரியாமல்
கால் சட்டைப்பைக்குள்
தங்கிப்போன மணல்துகள்தான்
மவுன சாட்சிகளாய்
அன்றும் இன்றும்

என்கிறார். ஆமாம் !மணல் துகள்களே இன்றெமக்கு அன்று பாய்ந்த யாறுகளை நினைவுபடுத்துகின்றன.

தொடர்ந்து நம் இயலாமைகளையும் உரைக்கிறார்.

‘அன்று

கட்டிய மணல் வீடுகளை

ஆறு கரைத்தது

இன்று கட்டிய வீடு

ஆற்றை கரைத்தது

என்று எவ்வளவு சீரழிந்த நிலைமையை கவிதை பேசுகிறது! மேலும் கடந்து தாண்டிப் போய் முறையிடுகிறார் –

‘அடுதத தேர்தல்வரை
ஆறிருக்கும் என
திண்ணமாய் நம்புகின்றன
மீன்கள்.

என்று. இங்கு நம்புவது மீன்கள் மட்டுமல்ல. பறவவகள், விலங்குகள், தாவரங்கள் அனைத்துமேதான்.

அஃதேபோல் ‘ஆற்று வழி’ என்ற கவிதையில் சொல்கிறார் –

‘எங்கோ பெற்றுக்கொண்ட தெங்கு ஒன்றை
யாரிடம் கொடுப்பதற்கென்றே தெரியாமல்
உருட்டிக் கொண்டே நகர்கின்றன அலைகள்

என்று. தெங்கு என்றால் தென்னை மரத்திலிருந்து முற்றிக் கழன்று விழுந்த தேங்காய். மேலும் சொல்கிறார் –

‘யாருடைய ஈமக் கடனையோ
பத்திரமாக எடுத்துச் செல்கிறது ஆறு’

என்று. எந்த நோக்கமும் திட்டமிடலும் இல்லாமல் கால்வாய் / ஓடை/ சிற்றாறு / ஆறு / நதி / பெருநதி என எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் நீரொழுக்கு தன் பணியை ஆற்றிக்கொண்டே நடக்கிறது. ஆறு போல் தானே அமைய வேண்டும் அரசியலும், மதமும், சமூகமும், ஆன்மீகமும், அவற்றின் கடமைகளும்! ஏன் அவ்வாறு இல்லை என அல்லாடுகிறது நம் மனம் அவ்வாறு இல்லை என்பதுகூட விடயமல்ல, ஏன் எதிற்மறையாக இருக்கிறது?

கவிஞரே ‘மழைத்தொழுகை’ எனும் கவிதையில் குறிப்பிஇருக்கிறது

வெட்டப்பட்டு பொட்டலாகி் போனத் திடலில்தான்
மழைக்காக சிறப்புத் தொழுகை
தொழுகை முடிந்தப்பின்
சுருட்டப்படுகின்றன
நதியைத் தொலைத்த
கோரைகளின் ஆன்மாக்கள்

என்ற உண்மை. ஏன் கோரை? இங்கு சுருட்டப்படுவது கோரம்பாய் என்பதனால். கோரம்பாய், கோரைத் தட்டி, கோரைப் படுதா, பன்றிகள் சேற்றில் தொடர்ந்து பறித்துத் தின்னும் கோரைக் கிழங்கு யாவுமே நம் நினைவுக்கு வருகின்றன. கூடவே கண்மணி குணசேகரன் இருபது ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய ‘கோரை’ எனும் சிறந்த நாவலும்.

கவிஞர் சிந்தா, தாம் கைக்கொள்ளும் கருப்பொருளுக்கும் உரிப்பொருளுக்கும் உண்மையாக இருக்கிறார். பாசாங்குகள் அற்ற மொழிப் பயன்பாடு, கவிச் செழுமையை மேம்படுத்த உதவுகின்றது. கவிதை என்பது மொழியின் உன்னதம். தமிழ்மொழியில் கவிதைக்கு ஏழாயிரம் ஆண்டுப் பாரம்பரியமும், தொன்மையும், அழகும், வளமும், நயமும் உண்டு. தமிழில் கவிதை எழுதிச் சாதிப்பது என்பது எளிவந்த காரியம் அல்ல.

மிகுந்த நம்பிக்கை தரும் இந்தக் கவிதைத் தொகுப்பை வழங்கியுள்ள கவிஞர் சிந்தா, மேலும் பயணிக்க, தடம்பல சமைக்க நமது வாழ்த்துகள். நம்பியாறும் வாழ்த்தும் என்பது நமது நம்பிக்கை.

மிக்க அன்புடன்

நாஞ்சில் நாடன்

கோயம்புத்தூர் – 641 042.
18 யூலை 2022

Posted in அனைத்தும் | 1 பின்னூட்டம்

நாஞ்சில் நாட ன் | சிறுகதை | “பாலம்” 

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக