நகரப் பேருந்தில் ஏறியதும், யன்னலோர இருக்கை கிடைத்தால் நமக்கது அதிருஷ்டம். ரேஷன் கடைக்கு சாமான் வாங்கப் பையைத் தூக்கிப் போய், அங்கு நீங்கள் வாங்க விரும்பிய பச்சரிசி இருந்தால் உமக்கது அதிருஷ்டம். சீரியல் நேரத்தில் மின்சாரம் போகாதிருந்தால் அதிருஷ்டம், தாமதமாகப் புறப்பட்டுப் பேருந்து நிறுத்தம் சேர்ந்து, உடனே பேருந்து கிடைப்பது அதிருஷ்டம். பன்னப் பறட்டை சினிமாவுக்கு சீட்டுக் கிடைத்தால் அதிருஷ்டம். இப்படி எழுதிச் செல்லலாம் சில பக்கங்கள்.
அதிருஷ்டம் என்பது எத்தனை அற்ப காரியங்கள் பாருங்கள். AK 47 வைத்து மாங்காய் பறிப்பது போன்றதா, எலி பாச்சை அடிப்பது போன்றதா அதிருஷ்டம்? அதிருஷ்டம் எனும் சொல்லின் மெய்ப்பொருள் இவ்வளவுதானா?
எனதொரு புத்தகம் ‘சிற்றிலக்கியங்கள்’ நீண்டநாள் தேடியும் கண்டடைய இயலாத வருத்தத்தைச் சொன்னார் தேர்ந்ததோர் வாசகர். என்னிடம் இருந்த படியொன்றைத் தேடி எடுத்து, பேக்கிங் செய்து, முகவரி எழுதி, வீட்டில் இருந்து அஞ்சலகத்துக்கு பகல் பதினொன்றரை மணிக்கு ஆயிரத்து அறுநூற்றி முப்பத்தெட்டு காலடிகள் நடந்து நான்காண்டுகள் என்.சி.சி. பயிற்சி என்பதால் எனதொரு காலடி 0.71 மீட்டர் நீளம் – பதிவுத்தபால் பார்சலில் அனுப்ப வரிசையில் போய் நின்றேன். உலகறிந்த தூதஞ்சலில் அனுப்பினால் எண்பது பணம், பதிவுப் புத்தகப் பார்சல் என்றால் ஐம்பத்தாறு ரூபாய். அதுவே காரணம்.
வரிசையில் மூன்றாவது ஆளாக நின்றேன். நின்று நிதானித்து, செர்வர் டவுன் இல்லை என்று ஆசுவாசப் பெருமூச்சு எறிந்து, கீழே பார்த்த போது அகலவாக்கில் நான்காக மடிக்கப்பட்ட அழுக்கான பத்து ரூபாய்த் தாள் ஒன்று கிடந்தது தெரிந்தது. இடக்கண் அறுவை சிகிட்சை தீட்சண்யமும், வலக்கண் மங்கலுமாக இருந்தன. சற்று ஐயத்துடன் கீழே குனிந்து எடுத்தபோது தெளிவானது – பத்து ரூபாய் பணத்தாள்தான் என்று.
குனிந்து எடுத்ததை, வரிசையில் முன் நின்ற இருவரும் திரும்பிப் பார்த்தனர். “கீழ கெடந்தது சார்” என்று எனக்கு முன்னால் நின்றவரிடம் நீட்டினேன். வாங்கிக் கொண்ட அவர் தனது சட்டை, பேன்ட் பைகளில் எல்லாம் தடவிப்பார்த்துத் தனதில்லை எனத் தலையசைத்தார். அவருக்கு முன் நின்றவரும் தனதில்லை என்றார். கவுண்டரில் இருந்த பெண்மணி புன்னகைத்தவாறு, “எம்பணம் எப்படி வெளியே வந்து விழும்?” என்றார்.
நான் அடிக்கடி பதிவுத் தபாலில் நூல்கள் அனுப்பப் போவதால், அனுப்புநர் முகவரி வாசித்து – புத்தகங்கள் வாசித்து அல்ல எனையொரு எழுத்தாளன் என்று அவர் அனுமானித்திருக்கக் கூடும். என்னிடமே வந்து சேர்ந்தது அந்த பத்து ரூபாய்த் தாள். வாங்கிக் கொண்டேன். சாயாக்கடை வாசலில் இரந்து நிற்கும் எவருக்கும் தரலாம் அதை. அல்லது நடக்கும் பாதையில் இருக்கும் பஞ்சமுக ஆஞ்சநேயன் கோயில் உண்டியலில் போடலாம். ‘ஆனது ஆச்சு’, பத்துப்பணம் லாபம் எனக்கருதி பாக்கெட்டிலும் வைக்கலாம்.
இதையும் அதிருஷ்டம் எனச் சொல்வீராயின், எனது அதிருஷ்டத்தின் மதிப்புப் பத்துப் பணமா? வாழ்நாளில் ஏழுமுறை சபரிமலை ஏறி இருக்கிறேன், கார்த்திகை மார்கழி மாதங்களில் நாற்பத்தோரு நாட்கள் விரதம் இருந்து அல்ல. நினைத்த நாளில் திருவெண்பரிசாரம் திருவாழ் மார்பன் சந்நிதியில் மாலை போட்டுக் கொண்டு. ஒரு முறைகூட பெருவழிப் பாதையில் போனதில்லை. நாகர்கோயில் திருவனந்தபுரம் – கொட்டாரக்கரை – எரிமேலி. பம்பையில் நீராடிவிட்டு மலையேற வேண்டியதுதான்.
அலுவல் நிமித்தம் பயணம் போனபோது, எந்த விரதமும் மேற்கொள்ளாமல் தரிசித்த ஐயப்பன் கோயில்கள் செங்கோட்டை அருகேயுள்ள அச்சங்கோயில், ஆரியங்காவு. குழத்துப்புழை போனதுண்டு. சபரிமலை ஏறி இறங்கியதும், ஊர் திரும்பும் வழியில், ஏழு முறையும் பந்தளம்.
‘பாத பலம் தா! தேக பலம் தா!’ என்பது அன்றைய சரண கோஷம். துளசிமணிமாலை அணியாமலும், நோன்பு பூணாமலும், இருமுடி தரிக்காமலும், பதினெட்டாம் படி ஏறாமலும் சந்நிதானத்தில் கை கூப்பி நில்லாமலும் இன்றைய என் சரண கோஷம், “ஆன்ம பலம் தா! மூல பலம் தா!’ என்பது. மூலம் என்ற சொல்லுக்கு PILES எனப் பொருள் கொண்டு உள் மூலம், வெளி மூலம், மூலப்பவுந்தரம் என்றெல்லாம் பொருள் கொண்டால், நாமார்க்கும் பொறுப்பல்லோம், நமனை அஞ்சோம்!
சரி! பேச வந்த விடயம் – ஏழாவது முறை பம்பையில் நீராடி, கன்னி மூலை கணபதியைத் தொழுது, மலை ஏறத் தொடங்கி, கடின ஏற்றமான நீலிமலை ஏறினோம். அரையில் முழங்கால் வரை இறங்கிய நீலச் சாய வேட்டி. தோளில் நீலச் சாயத் துண்டு. கழுத்தில் துளசிமணி மாலை, தலையில் இருமுடிக் கட்டு, தோளில் தொங்கிய நீல நிற துணிப்பை, நீலிமலை ஏற்றத்தில் கல்லால் ஆன படிகளின் அடுக்கில், எனது காலடியில் தங்கச் சங்கிலியொன்று கண்பட்டது.
சபரிமலை சாஸ்தா நமக்கு அருளிய அதிருஷ்டம் எனக் கருதி, ஒரு கையால் தலைமேல் இருந்த இருமுடிக் கட்டினைப் பற்றியவாறே, குனிந்து அந்தப் பொற்சரத்தை எடுக்கப் போனேன்.
“என்ன செய்யப் போற?” என்றான் பெங்களூர் தம்பி. எங்கள் குழுவில் எப்போதும் பயணத்திட்டம் ஒழுங்கமைத்து எங்களை வழிநடத்தும் வக்கீல் தம்பி, நாகர்கோயில் அத்தான், தாழக்குடி அத்தான் எல்லோரும் மலையேறுவதை நிறுத்தி நின்றனர்.
நான் சொன்னேன் – “இல்ல… கீழ ஒரு செயின் அந்து விழுந்து கெடக்கு!”
“கெடந்தா?”
“எடுத்து கோயில் உண்டியல்லே போட்டிரலாம்ணுதான்..” என்று சமாளித்தேன்.
“அதுக்குள்ளே மனசு மாறீட்டுண்ணா?”
“ஐயப்பன் கோயிலுக்கு வந்த அதிருஷ்டம்ணு நெனச்சுக்கிடுவேன்”
“ஐயப்பன் தரக்கூடிய அதிருஷ்டம் இந்த முக்காப்பவுன் செயின் தானா?” என்றான் தம்பி விடாமல், தயங்கி நின்ற என்னிடம், “பேசாம நட!” என்றான். அவன் சொற்களின் உண்மை உறைத்தது.
அதிர்ஷ்ட்டம் என்ற சொல் சமற்கிருதம். மூன்று ஒற்று சேர்ந்து வரும் சொல். அதிருஷ்டம் என்றாலும் அதிர்ஷ்ட்டமே! வடசொல்லைத் தற்பவம் என்ற தமிழிலக்கணப்படி தமிழ்ப்படுத்தினால் அதிட்டம் என்று எழுத வேண்டும். ஆயிரக்கணக்கான வட சொற்களைத் தமிழ்ப் படுத்திய கம்பன், நானறிய அதிட்டம் என்ற சொல்லை ஆண்டானில்லை.
அதிருஷ்ட கர்மா என்றொரு சொல்லுண்டு வடமொழியில். நன்மை தீமைகளைத் துய்க்கத்தரும் கருமம் என்று பொருள்.
ஹத் (Hadd) எனும் உருதுச் சொல்லின் பிறப்பே அதிர் என்ற மலையாளச் சொல் என்றும், பொருள் எல்லை மற்றும் மதிப்பு என்றும் வரையறுக்கிறது அயற்சொல் அகராதி.
“யாதினும் ஒரு அதிரு வேண்டே?” என்பது மலையாளத்தில் நாம் செவிப்படும் உரையாடல். யாவற்றுக்கும் ஒரு எல்லை வேண்டாமா என்று பொருள். மேலும் ஹத் என்றால் அதிர். இன்னொரு பொருள் மதிப்பு.
அதிர்ஷ்டக்காரன் என்பது நாம் அடிக்கடி கேட்கும் பிரயோகம். நாட்டு வழக்கில், “அவுனுக்கு மத்ததிலே மறு கெடக்கு!” என்றும், “அவுனுக்கு சக்கரையிலே மச்சம் உண்டு” என்றும் மொழிவார். பேருந்து நிலையத்தில் சில்லறைக் குற்றங்கள் பயின்று திரிந்தவன் நாடாளுமன்றத்துக்கும் பயணிப்பதைப் பார்த்து மக்கள் அங்கீகரிக்கும் வார்த்தை, அதிருஷ்டம்.
வார்த்தை எனும் சொல்லில் மயங்க வேண்டாம். வார்த்தா எனும் வடசொல்லின் தமிழாக்கமே வார்த்தை. சொல் என்பது சுத்தத் தமிழ். வார்த்தைப்பாடு எனும் சொல் விவிலியம் பயன்படுத்தும் சொல். ‘சொல் ஒக்கும் கடிய வேகச் சுடுசரம்’ என்பான் கம்பன். ‘சொல்லினால் சுடுவேன்’ என்பாள் கம்பனின் சீதை.
கம்ப இராமாயணத்தில், யுத்த காண்டத்தில், நாகபாசப் படலத்தில், வார்த்தை எனும் சொல் கண்டேன். கம்ப இராமாயணம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பில் 8277-வது பாடல். NCBH அதிர்ஷ்டக்காரன் எனும் சொல்லுக்கு சுத்த தமிழ்ச் சொல் ஆகூழன். ஆனால் ஊழ் எனில் விதி. நல்லூழ் – தீயூழ், ஆகூழ் – போகூழ் என்மனார் புலவர். அதிருஷ்டசாலி எனும் சொல்லுக்கு ஆகூழன், நல் வாய்ப்பன், நற்பேற்றன் எனும் பொருள் தருகிறார் பேராசிரியர் அருளி.
அதிர்ஷ்டம் எனும் சொல்லுக்கு அகராதிகள் தரும் பொருள்கள் 1. காண இயலாதது 2. நல் வாய்ப்பு 3. நல்லூழ் 4 ஆகூழ் என்பன. அதிருஷ்ட போக்கியம் என்றால் மறுமை, வினை, துய்த்தல் என்பன பொருளாம். அதிருஷ்ட யத்தினம் என்றால் பயன் – முயற்சி, பயன் தரு முயற்சி. யத்தினம் எனும் சொல்லையே நாமின்று யத்தனம் என்கிறோம். பிரயத்தனம் எனும் சொல்லும் அறிவோம். அதிருஷ்டானுகூலம் என்றால் ஆகூழ், நற்காலப் பயன், அதிருஷ்டத்தால் கிடைக்கும் அனுகூலம் என்பன பொருள்.
சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி, மேலும் சில தெளிவுகளைத் தருகிறது. அதிட்டம் எனும் சொல் வடமொழி மூலம் கொண்டது என்கிறது. தரும் பொருள்கள் –
1. பார்க்கப்படாதது. That which is unseen.
2. பாக்கிய வாய்ப்பு Luck, Fortune
3. இன்ப துன்பங்களுக்குக் காரணமானது.
Merit or sin accruing from a virtuous or vicious action as the ultimate cause of pleasure or pain
மேலும் பேரகராதி கூறுவது: அதிருஷ்டம் என்றால் –
1. காணப்படாதது. That which is not seen.
2. ஊழ், Destiny, Luck.
3. நல்லூழ். Good Luck.
திருஷ்டி எனும் சொல்லுக்குக் காண்பது, பார்ப்பது, காட்சி, பார்வை என்பன பொருள். பார்வையில் விடமுள்ள பாம்புக்கு கம்பன் பயன்படுத்தும் சொற்றொடர் ‘திட்டி விட அரவு’ என்பது. திருஷ்டிதான் திட்டி என்றாகும் தமிழில். அதிர்ஷ்டம் என்றாலும் அதிருஷ்டம் என்றாலும் பார்க்கப் படாதது, காணப்படாதது எனப் பொருள் கொள்வதைக் காணும்போது திருஷ்டியின் எதிர்மறை என்பது நினைவுக்கு வருகிறது. திட்டி அதிட்டம் என்று.
அதிருஷ்டக் கட்டை எனும் சொல்லும் கண்டேன். நாம் அன்றாடம் பயன்படுத்தும் சொல்தான். பொருள் – 1. துரதிட்டம். Lack of good fortune 2. அதிட்டவீனன். One who suffers ill fortune.
ஆகவே அதிருஷ்டசாலி என்றால் பாக்கியசாலி, Fortunate person என்பதுதானே! அதிருஷ்டம், துரதிருஷ்டம் எனும் சொற்களுக்கு மாற்றாக, நல்லூழ், தீயூழ் என்றும் ஆகூழ், போகூழ் என்றும் குறிப்போம் எனின் ஊழ் எனும் சொல்லின் பொருள் என்ன? பேரகராதி ஊழ் எனும் சொல்லுக்குப் பதினொன்று பொருள் தரும்.
பழமை. That which is pristine, of long date
ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான, திருத்தக்கத் தேவர் இயற்றிய, சீவக சிந்தாமணியில் ஆறாவது இலம்பகமான கேமசரியார் இலம்பகத்துப் பாடல் –
“தாழ்தரு பைம்பொன் மாலைத் தடமலர்த் தாம மாலை
வீழ்தரு மணிசெய் மாலை இவற்றிடை மின்னி நின்று சூழ்வளைத் தோளி செம்பொற்தூணையே சார்ந்து நோக்கும் ஊழ்படு காதலானை ஒரு பிடி நுசுப்பினாளே!”
என்று பேசும்.
கைப்பிடியில் அடங்கும் இடையினைக் கொண்ட, ஆபரணங்கள் அணிந்த தோள்களை உடைய கேமசரி, பொருந்திய பைம்பொன் மாலையும் வரிசையாக மலர்கள் தொடுக்கப் பெற்ற பூமாலையும் அரிய மணிகளால் கோர்த்த மாலையும் சூடி, மின்னலைப் போல் செம்பொன் தூண் சார்ந்து நின்று, தொன்று தொட்டு வருகின்ற தன்காதலனை நோக்கும் – இது பாடலின் பொருள்.
ஈண்டு ஊழ் எனும் சொல்லின் பொருள் பழமை.
2. பழவினை. Karma
ஊழ் எனும் சொல் முன்வினை, பழவினை எனும் பொருளில் நான்கு திருக்குறளில் ஆளப்பெற்றுள்ளது. ஊழ் அதிகாரத்தில் –
“ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான் முந்துறும்”
3. பழவினைப் பயன். Fruit of karma, fruit of deeds commited in a former birth or births.
4. முறைமை. Rule
சோழன் நலங்கிள்ளியை, உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரி, “பண்புடை ஊழிற்றாக, நின் செய்கை” என்கிறது. ஈண்டு ஊழ் எனில் முறைமை.
5. குணம். Disposition, Temper. (திவாகர நிகண்டு)
6. தடவை. Time, Turn, Occasion
7. முதிர்வு, Maturity
8. முடிவு, End, Completion
9. பகை. Hatred, Enimity, Malice (பிங்கல நிகண்டு)
10. மலர்ச்சி. Blossoming
11. சூரியன், Sun
மேற்சொன்னவை ஊழுக்கான பதினோரு பொருள்கள். ஆக ஊழ் எனில் விதி எனும் ஒன்று மாத்திரமே அல்ல. ஊழ் சார்ந்து வேறு சில சொற்களும் உண்டு.
ஊழ்த்துணை: மனைவி. Wife. As ones distined help male
ஊழ்பாடு: முடிவு படுகை. Coming to an end
ஊழ்முறை: வினைப்பயன் முறை Order of experience resulting from the karma in previous birth
ஊழ்மை : முறைமை. Established rule. Regulation.
ஊழ்விதி: பழவினைப் பயன். Inevitable result of deeds done in former births.
ஊழ்வினை : பழவினை
ஊழ்வினைப் பயன்: கரும பயன்.
எல்லாம் சரிதான், ஆனால் அதிருஷ்டம் எனும் சொல்லுக்கு ஊழ் என்பது பொருத்தமான மாற்றுத் தமிழ்ச்சொல்தானா என்று எவரிடம் கேட்டு யாம் உறுதி செய்து கொள்வது?
எனில் அதிர்ஷ்ட்டம், அதிர்ஷ்டம், அதிருஷ்டம், அதிட்டம் எனும் சொற்களின் துல்லியமான பொருள் உணர்த்தும் தமிழ்ச்சொல் யாது? பேறு எனலாமா! நற்பேறு, தீப்பேறு என்பன அதிருஷ்டம், துரதிருஷ்டம் என்பனவற்றுக்குப் பொருத்தமான மாற்றுச் சொற்களா? எனில் நற்பேறு, தீப்பேறு எனும் இரண்டு சொற்களுமே பேரகராதிப் பதிவில் இல்லை.
குதர்க்கமாக, குசும்பாக, விண்னாணமாக, வித்தாரமாக அல்லது விபரீதமாக எனக்குத் தோன்றுவது ஒன்று. பேறு என்றாலே அது பெரிய காரியம் அல்லவா? பெறற்கரியதுதானே? தீய, கெட்ட, அவம் ஆன சமாச்சாரம் எவ்விதம் பேறு ஆக இயலும்? பேறு என்றாலே அது அரியது, சிறந்தது, அருளப்படுவது எனும்போது அதில் நற்பேறு என்ன, தீப்பேறு என்ன? பேரகராதி தொகுத்த தமிழறிஞர் பெருமக்கள் இதனை ஆலோசிக்காமலா இருந்திருப்பார்கள்? அவர்கள் என்ன அரசுகள் வழங்கும் விருதுகள் கைப்பற்றியவரா?
வினை என்பது வேறு விடயம். நல்வினையும் தீவினையும் உண்டாங்கே! பேறு அது போலவா?
பேறு எனும் சொல்லுக்குப் பேரகராதி தரும் பொருள் பதினைந்து.
1. பெறுகை, Receiving, Obtaining திருக்குறள் மூன்று இடங்களில் பேறு எனும் சொல் பயன்படுத்துகிறது.
அ.
”மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன் நன்கலம் நன்மக்கட் பேறு“
மூன்றாவது குறளுக்குப் பொருள் உரைத்தல் நலம். யாரிடமும் பொறாமை கொள்ளாதிருப்பது உயர் பண்பு. அப்பண்புக்குச் சமமான சீரிய பேறு வேறேதும் இல்லை – இது உரை.
2. அடையத்தக்கது. Anything worth obtaining.
நாம் மேற்சொன்ன மூன்றாவது திருக்குறள் இப்பொருளுக்கு மேற்கோள்.
3. இலாபம். Profit. Gain. (பிங்கல நிகண்டு)
4. வரம். Boon. Blessing.
5. நன்கொடை. Gift, Prize, Reward
6. பயன். Advantage, Benefit, Result
கம்ப இராமாயணத்தில், யுத்த காண்டத்தில், இரணிய வதைப் படலத்தில், பிரகலாதன் – நரசிங்கப் பெருமாளின் அருள் வேண்டி நிற்கும் பாடல்
ஒன்றுண்டு.
முன்பு பெறப் பெற்ற பேறோ முடிவு இல்லை; பின்பு பெறும் பேறும் உண்டோ? பெறுகுவனேல், என்பு பெறாத இழி பிறவி எய்தினும் நின் அன்பு பெறும் பேறு அடியேற்கு அருள் என்றான்“
என்பது முழுப்பாடல். பொருள் எழுதினால் “எம்பெருமானே! உன் அடியவனாகிய யான் முன்பு பெற்ற பேறுகளுக்கு எல்லையே இல்லை. இனிமேலும் நான் பெறவேண்டிய பேறு ஏதும் மீதம் உண்டா? அப்படி வேறேதும் வேண்டிப் பெறுவதனால், எலும்பு இல்லாத இழிந்த புழுவாக நான் பிறக்க நேர்ந்தாலும், உனது அன்பினைப் பெற்று வாழும் பெரும் பேற்றினை, உனது தொண்டனாகிய எனக்கு அருள்வாயாக என்றான். ஒரே பாடலில் மூன்று பேறுகள் பேசுகிறார் கம்பர்.
7. தகுதி. Worth, Merit, Desert.
8. மகப் பெறுகை, மகப்பேறு, Child Birth.
பேறுகாலம், பிள்ளைப் பேறு என்போம்.
9. முகத்தல் அளவையில் ஒன்றைக் குறிக்கும் சொல். Term meaning one in measuring out grains. வயலறுத்து, சூடடித்து, மரக்காலால் பொலியளக்கும்போது, நாஞ்சில் நாட்டில் ஒன்று என்று தொடங்குவதற்குப் பதிலாக ‘லாபம்’ என்று ஆரம்பிப்பார்கள். சில பகுதிகளில் ‘பேறு’ எனத் தொடங்குவார் போலும்!
10. பதினாறு பேறுகள் ‘பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க’ என்பது வாழ்த்து. அந்தப் பதினாறு செல்வங்கள் எவை? எண்ணிக் கொள்ளலாம் – புகழ், கல்வி, வலி, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்லூழ், நுகர்ச்சி, அறிவு அழகு, பெருமை, இளமை, துணிவு,
நோயின்மை, வாழ்நாள். வலி என்றால் Pain அல்ல, வலிமை – Strength.
Acquisition. Of which there are sixteen.
கும்பமுனி பொருமுவது எனக்குக் கேட்கிறது – “எதுக்கு இந்தப் பதினாறு பேறு? எம்.எல்.ஏ. இல்லாட்டா எம்.பி. ஆனாப் போராதா?”
11. செல்வம். Wealth. (யாழ்ப்பாண அகராதி)
12. தருமம், அருத்தம், காமம், ஆத்மானுபவம், இறையனுபவம் ஆன்மாவினால் அடையப் பெறும் ஐவகைப் பேறு. அருத்தம் எனும் சொல்லுக்கு சொற்பொருள், கருத்து. செல்வப் பொருள், பொன், பயன், பாதி என ஆறு பொருள் தருகிறது பேரகராதி.
13. நல்லூழ், Good Fortune (யாழ்ப்பாண அகராதி) என
14. நிலத்தின் அனுபோக வகை. A kind of land tenure.
குத்தகை, பாட்டம், வாரம், போக்கியம் போன்று பேறு.
15. இரை. Prey, Food.
ஆனால் நாம் ஊழ் எனில் விதி எனப் பொருள் கொண்டு பழகி விட்டோம். எனவே அதிருஷ்டம் எனும் வட சொல்லுக்கு, ஊழ் என்ற தமிழ்ச்சொல்லை விட பேறு எனும் சொல்லே பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. நானோர் மொழி அறிஞனோ, சொற்பிறப்பியல் ஆய்வாளனோ, பேராசிரியனோ, தமிழ்ச் செம்மலோ, உலகத் தமிழ் மாநாடுகளில் கட்டுரை வாசிப்பவனோ இல்லை என்பதை நினைவில் இருத்திக் கொண்டே நானிதைப் பேசுகிறேன்.
அல்லது தொல்காப்பியரின் வழிகாட்டுதலின்படி அதிருஷ்டம் என்பதை அதிட்டம் என்றே புழங்கிப் போகலாம். முகூர்த்தம் எனும் வடசொல்லை கம்ப இராமாயணத்தின் யுத்த காண்டத்தில், நாக பாசப் படலத்தில், கம்பன் ‘முழுத்தம்’ என்று பயன்படுத்தும்போது, அதிருஷ்டத்தை அதிட்டம் எனப் பகன்றால் ஏழு கீழுலகும் ஏழு மேலுலகும் தலைகீழாய்ப் பெயர்ந்து விடுமா என்பதே என் வினா முழுத்தம் எனும் சொல்லே வடமொழி உருவாக்கப்பட்ட போது முகூர்த்தம் ஆயிற்று என்பாரும் உளர்.
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களில் பேறு எனும் சொல் புறநானூற்றில் மட்டுமே ஆளப்பெற்றுள்ளது. மோசிகீரனார் கொண் கானங்கிழாளைப் பாடிய பாடாண் திணை. பரிசில்துறைப் பாடலில், “பெற்றது ஊதியம்; பேறு யாது? என்னேன்’ என்கிறார்.
“உற்றனென் ஆதலின் உள்ளி வந்தனனே!
ஈஎன இரத்தலோ அரிதே; நீ அது
நல்கினும், நல்காய் ஆயினும்”
என்று தொடர்ந்து பேசுகிறார். பெற்ற பொருள் சிறிது எனினும் இகழ மாட்டேன். பெற்றதைப் பேறாகக் கருதுவேன் என்கிறார்.
நாலடியாரில் பேறு என்ற சொல் காணக் கிடைக்கவில்லை. மாணிக்க வாசகர், திருவாசகத்தின் 656 பாடல்களில், ஒரேயொரு பாடலில் பேறு எனும் சொல்லைப் பயன்படுத்துகிறார்.
“செய்வது அறியாச் சிறு நாயேன் செம்பொன் பாத மலர் காணாப்
பொய்யர் பெறும் பேறு அத்தனையும் பெறுதற்கு உரியேன் பொய்யிலா
பொய்யனேன் நான் உண்டு உடுத்து இங்கு இருப்பதானேன் போரேறே”
என்று பாடுகிறார்.
மகாவித்வான் ச. தண்டபாணி தேசிகர் உரை சொல்கிறார் – “போர் புரியும் சிங்க ஏறு போன்றவனே! செய்யத் தக்கது ஒன்றும் அறியாத சிறுமைத் தன்மை உடைய நாய் போல்பவனாகிய யான் திருவடித் தாமரையைக் காணப் பெறாத பொய்மையாளர்கள் பெறுகின்ற அப்பேறுகள் அத்தனையும் பெறுதற்குரியவன்; பொய்மை கலவாத மெய்யடியார்கள் உன்னுடைய மணம் பொருந்திய திருவடித் தாமரைகளை அடைய நான் நேரில் கண்டிருந்தும், பிறர் சொல்லக் கேட்டிருந்தும், பொய்யேனாகிய யான் உண்டும் உடுத்தும் இவ்வுலகில் வாழ்ந்திருக்கலானேன்; என் அறியாமை என்னே?” என்று.
மேலும் குறிப்பாகச் சொல்கிறார் – “பொய்யர் பெறுவன துன்பமாகிய ஊறே அன்றி, இன்பமாகிய பேறு ஆகா எனினும் அதனைப் பேறு என்றது நகைச்சுவை தோன்றக் கூறிய குறிப்பு மொழி” – என்று.
நாம் முன்பு சொன்ன நற்பேறு, தீப்பேறு குறித்த கருத்தானது உரையாசிரியர் குறிப்பிடுவதுதான். எனவே மனங்கொள்ள வேண்டியது அதிட்டமோ, ஆகூழோ, நல்லூழோ, நற்பேறோ எதுவானாலும் அது பெறற்கரிய பேறு.
என்னிடம், “A classified collection of Tamil Proverbs” என்ற நூலின் ஒளி நகல் உண்டு. Rev. Herman Jensen, Danish Missionery, Madras தொகுத்தது. 1897-ல் இலண்டனில் அச்சிடப்பெற்றது. தமிழ்ப் பழமொழிகளும் அவற்றுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பும். அதில் Fortune குறித்து முப்பது சொலவங்கள் உண்டு. சில இங்கு காணத்தருவேன்.
ஊடகத்தார் படும் இன்னல் உரைக்க ஒண்ணாது அல்லில்லை பகலில்லை அலுப்பொன்றில்லை பெற்றோர் மனையாள் தம்மக்கள் தறுகண் நினைப்பில்லை அவனன்றி ஓரணுவும் அசையாது என்பது போல் எவ்விடத்தும் நீக்கமற நிறைந்திருக்கும் பணி கொங்கைஶ்ரீ உண்டது செரிக்காமல் மூன்றாம் முறை வெளிக்குப் போனால் அங்கே இருக்கணும்! தலைவனின் வைப்பாட்டி மகளின் மாமியார் ஓட்டுநர் நாக்கில் புண்ணாம் அங்கே நிற்கணும்! மந்திரி கொழுந்தியாள் நாத்தனார் அம்பலம் சென்று பொங்கல் வைத்தால் அங்கே கிடக்கணும்! ஶ்ரீகோதண்டம் மைத்துனர் விரல் நகம் பெயர்ந்து வைத்தியம் பார்க்க அமெரிக்க நாட்டுக்கு விமானம் ஏறினால் அங்கே இருக்கணும்! மாமன்ற உறுப்பினர் பேரன் பதின் பருவத்துப் பாலகன் நெடுஞ்சாலையில் செலுத்திய மூன்று கோடி பெறுமதி வாகனம் புரண்டு மறிந்து கழுத்தும் இடுப்பும் கனமாய் முறிந்து செத்த சவமாய்ச் சிதறிக் கிடந்தால் அங்கே நிற்கணும்! நேதா வீட்டு வளர்ப்புப் பூனை வெருகுடன் ஓடிக் காமம் துய்த்தால் அங்கே கிடக்கணும்! இயக்குநர் தோட்டத்துப் பாற்பசு சினைக்குப் பிடித்தால், நகரின் சிறந்த நகைக்கடை திறந்து காட்ட புட்டஶ்ரீ வந்தால், மாமன்ற உறுப்பினர் தொந்தி இளைக்க கரும்பூனைக் காப்புடன் பூங்கா நடந்தால், வட்டச் செயலர் சாலையோரம் சாய் பருகினால், தொண்டனின் மகள் சமைந்த சடங்கில் வாரியத் தலைவர் வாழ்த்தப் போனால், ஊழல் பெருநதி ஓடிக் களைத்து உவரியில் கரைந்தால், அங்கும் இருக்கணும், எங்கும் இருக்கணும்! மக்களாட்சியின் நான்காம் தூண் என நல்லோர் நாவால் புகழப் பெற்றவர் நாயாய்ப் பேயாய்ப் படும் பெரும்பாடு தாளம் படாது தறியும் படாது!
நேராக வாசற்படி ஏறி, படிப்புரை கடந்து, திண்ணை உள் நுழைந்தவன் சுற்று முற்றும் பார்த்தான். மங்களா, அரங்கு, சாய்ப்பு, பத்தயப்புரை, அடுக்களை, புழக்கடை எனக் கண்களை ஓட்டிக் காதுகளையும் தீட்டினான். ஆள் அனக்கம் இருக்கிறதா என ஆராய்ந்தான். திண்ணையில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து சுபகிருது வருடப் பஞ்சாங்கத்தில் மார்கழி மாதத்தைப் புரட்டிக் கொண்டிருந்தார் அம்பலவாணன், முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருப்பதைப் போன்று. வேலை தடைப்பட்டதால் எரிச்சல் அடைந்து கேட்டார்-
“ஏ, அழகப்பா… எழவெடுத்தவனே! என்னத்தையாக்கும் சுத்தி முத்திப் பாக்க? மயினி கொளத்துக்குக் குளிக்கப் போயிருக்கா… துணி தொவச்சு, தலை தேச்சுக் குளிச்சுக்கிட்டு வர இன்னும் அரை மணிக்கூர் ஆகும்… காலம்பற காப்பிக்குடி கழிஞ்சாச்சு… குளிச்சுக்கிட்டு வந்து தான் உலை வைப்பா பாத்துக்கோ… இப்பிடி ரெண்டுங் கெட்ட நேரத்தில என்னத்த அந்து விழுகுண்ணு வந்து அரக்கப் பரக்கப் பாக்க?”
“கோவப்படாத அம்பலண்ணே! மயினி இருக்காளான்னுதான் பாத்தேன். இந்த நேரம் பாக்க வந்ததுக்கும் காரியம் உண்டு. இப்பம் நான் பேசப்பட்ட விசயம் ஒரு குருவி அறியப்பிடாது, கேட்டயா? நீ மட்டும் மனசோட வச்சுக்கிடணும்…”
“அப்பிடி என்னடே அந்தரங்கம்? எங்கயாம் கூட்டத்திலே தற்கொலைப் படை தாக்குதல் நடத்த அச்சாரம் வாங்கீருக்கியா? நீ குண்டு கூட வைக்காண்டாம்… கூட்டத்திலே நிண்ணு குசு விட்டாப் போதும்… பத்துப் பேரு தலை சுத்தி விழுவான்… தேரை இழுத்துத் தெருவுலே விட்டிராதடே கொள்ளையிலே போவான்…”
“அட சும்மாருண்ணேன்… நீ வேற… நாமளே குண்டுலே விழுந்து கெடக்கோம்… இதுல போயி குண்டு வைக்கப் போறனாக்கும்…”
” சரி சரி… வந்த கால்லே நிக்காத… அன்னா அந்த பெஞ்சு கெடக்கில்லா, அதுல இரி… காரியம் என்னாண்னு சொல்லு…”
“ஆனா நீ விசயத்தை யாருட்டயும் கெம்பீரப்பிடாது… ராத்திரி கெட்டிப் புடிச்சுக்கிட்டு கெடக்கச்சிலே, மயினீட்ட கூட சொல்லப் பிடாது…”
“அடப் போலே புத்தி கெட்டவனே! நீ சொல்லப்பட்ட காரியத்தை நோட்டீசு அடிச்சு, பிள்ளையோ பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் கையிலே கொடுத்து, வீடு வீடாப் போயி விளம்பீட்டு வரச் சொல்லப் போறேன்… திரியான் வேலை மெனக்கிட்டு… சங்கதி என்னாண்ணு சொல்லுவியா!”
“சொன்ன உடனே வெப்ராளப் படப்பிடாதுண்ணே… வெளீல ஒரு மனுசன் கிட்டே மூச்சு விட்டிரப் பிடாது…”
“இன்னுமாடே ஒரு பொண்ணு பாத்துக் கெட்டி வைக்கத் துப்பில்லாம இருக்காரு ஒங்க அப்பா…”
“நல்ல கதையாப் போச்சு… அவுரும் பதிமூனு வருசமாப் பாக்காரு… எங்க போனாலும் சாதகம் சேரமாட்டேங்கு… ஏழரை நாட்டுச் சனீ… செவ்வா தோசம்… பாவ சாதகம்… மூலம் நட்சத்திரம்… பல்லு நீளம்… கட்டை… கறுப்பு… காலு கிந்திக் கிந்தி நடக்காங்கான்… நல்ல காலம், இன்னும் எவனும் சாமான் நீளம் கொறைவுண்ணு மாத்திரம் சொல்லல்லே!”
“நல்ல கதையா இருக்குடே! பருவப் பத்திலே நாலரைக் கோட்ட விதைப்பாடு… ஊரடியிலே ரெண்டு ஏக்கர் தென்னந் தோப்பு… மட்டுப்பா போட்ட மங்களா வீடு… பால் மாடு, காங்கயம் காளை பூட்டின வில் வண்டி, உரம் அடிக்க, நெல்லு கொண்டு போக சக்கடா வண்டி… உனக்காடே இந்த நிலைமை? உங்க அம்மைட்ட நூத்தம்பது இருநூறு பவுனு உருப்படி இருக்காது?”
“அந்தக் கணக்கைத் தள்ளுண்ணேன்… நீ கேசத்துக்கு வழி சொல்லு சுணங்காம…”
“எலே, இதென்ன வெளையாட்டுக் காரியம்னு நெனச்சியா? சரி! ஒரு காரியம் கேக்கட்டும்! அவளுக்க தலைமுடியை வச்சு வசிய மந்திரம் போடப் போறியா? துரியோதனனுக்கு அவன் பொண்டாட்டி பானுமதி வசிய மருந்து கூட்டிப் பால்லே கலந்து குடுத்த கதை ஆயிராம! ஆனை தூறுச்சுண்ணு ஆட்டுக்குட்டி தூறுனா அண்டம் கிழிஞ்சிரும் தெரிஞ்சுக்கோ!”
“உனக்குத் தெரியாதுண்ணே… நாங்க போகாத கோயில் இல்லே! திருமணஞ்சேரி வரைக்கும் போயிப் பாத்தாச்சு… பால் கொடம், காவடி, தூக்கம், மொட்டை, அங்கப் பிரதட்சணம், தங்கத் தேரு இழுக்கது, இருமுடிக்கெட்டு, பொங்கலு, அரவணைப் பாயசம், ஔவையாரம்மன் கோயில் கொழுக்கட்டை, மண்டைக்காட்டுப் பகவதிக்கு நேர்ச்சை, வெள்ளாட்டுக் கிடா வெலி, கருங்கோழிச் சேவல் அறுப்பு, எல்லாம் எல்லாக் கோயில்லேயும் நேந்தாச்சு பாத்துக்கோ…”
“பின்னே எதுக்குடே? பாதாதி கேசம் பூசையா?”
“ஒனக்குத் தெரியாதுண்ணே… நம்ம சீதப்பால் ஊரு தாண்டி தாடகை மலைக்குப் போனா, மலை அடிவாரத்திலே ஒரு சித்தர் பீடம் இருக்குல்லா… வெள்ளி செவ்வாய்லே அங்க சித்தரு பிரஸ்னம் பாப்பாரு… அங்க போயிருந்தேன் ஒரு நாளு, வெளக்கு வய்க்கப்பட்ட நேரத்திலே… நான் மட்டும்தான்… யாரையும் கூட்டீட்டுப் போகல்லே…”
“ஓ அதாக்கும் சமாச்சாரம்! ஓண்ட்ராடம் கூட கரசேவையா ?”
“போண்ணேன்…நீ ஒரு கிருத்திருமம் புடிச்சவன்…”
“சரி ! அவளுக்க கேச மயிர் கொண்டாந்து மோதிரம் செய்து போட்டா ?”
“தொண்ணூறு நாள்லே எனக்கு கலியாணம் உறுதி ஆகீருமாம்…”
“யாரு?” கமலபாலிகா கூடவா ? எலே , அவ படத்துக்கு அஞ்சு கோடி வாங்குகாளாம்…அதை விட மூணு மடங்கு வருமானம் ஓவர் டைம் செய்தா ..வயசு நாப்பத்தேழு நாப்பத்தெட்டு இருக்கும்! இது ஆகிற காரியமாடா ஆக்கங்கெட்ட மூதி ?”
“இல்லே மயினியோ ! அண்ணன் கிட்ட சும்ம அரசியல் பேசீட்டு இருந்தேன். நீங்க இருந்திருந்தா ஒரு தேயிலை போட்டுத் தந்திருப்பியோ ! போட்டும், நான் பொறவாட்டு வாறன் என்னா !”
அம்பலவாணனுக்கு கண்சாடை செய்துவிட்டு அழகப்பன் படி இறங்கிப் போனான்.
பத்துப் பதினைந்து நாள் சென்று, அம்பலவாணன், தன் மனைவியின் உதிர்ந்த தலை முடி ஒன்றை ஈருகோலில் கண்டடைந்து, நீளம் ஆய்ந்து, புதிய வெள்ளை உறையொன்றில் போட்டு ஒட்டி அழகப்பனிடம் சேர்த்து, சகல வரிகள் அடக்கம் ஐயாயிரத்து எண்ணூற்று அறுபத்தேழு பணம் கறந்துவிட யோசித்தார். அரசியல் தொழில் செய்பவர் என்றால் அது கூட இல்லாமல் எப்படி?
அம்பலவாணனுக்கு அப்போது தோன்றாமலும் இல்லை . “எழவெடுப்பான் என்னத்தை யாம் காட்டிக் கூட்டித் தன் மனைவியை வசியம் செய்து விடுவானோ ?” என்று. ‘சவம் போனால் போட்டு’ என்று தன்னைத் தேற்றியும் கொண்டார். தொழில் தர்மம் அறியாமல் கச்சவடம் செய்ய முடியுமா ?
*
விறுவிறு என எழுதி முடித்து, பேனாவை மூடிவிட்டு, சற்றுச் செருமினார் கும்பமுனி. சங்கேதத்தைப் புரிந்து கொ ண்ட தவசிப்பிள்ளை , “என்ன பாட்டா ? கட்டன் எடுக்கட்டா?” என்றார். எழுதி வைத்த கத்தைக் காகிதங்களை தவசிப்பிள்ளையிடம் நீட்டிய கும்பமுனி, “எப்பிடி வந்திருக்குண்ணு வாசிச்சுச் சொல்லும்வே !” என்றார். வாங்கி க்கொண்டு குசினிப்புரைக்குள் நுழைந்தார் தவசிப்பிள்ளை .
“இந்திய மொழிகள் 1625 என்றும் அவற்றுள் பல அழிந்துவிட்டன எனவும் மேலும் பல அழிவில் உள்ளன என்றும் சொல்கிறார்கள். இந்திய அரசின் அட்டவணை மொழிகள் 24 எனவும் அறிகிறோம்.
எடுத்துக்காட்டுக்கு, ஜார்க்கண்ட் மாநிலத்தின் சனத்தொகை, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 3.30 கோடி என்றும் எழுத, வாசிக்கத் தெரிந்தவர்கள் 67.6 % சதமானம் என்றும் தகவல்கள் உள. அங்கு இன்றும் பேசப்பட்டுக்கொண்டிருக்கிற மொழிகள் பதினைந்து. ஆனால், இன்று ஜார்க்கண்ட் மாநிலத்தின் அலுவல் மொழியும் ஆட்சி மொழியும் இந்தி. எதிர்காலத்தில், அங்கு இன்று பேசப்படுகின்ற 15 மொழிகளின் நிலையென்ன, கதி என்ன? வரலாற்றினுள் கரைத்து எள்ளும் தண்ணீரும் இறைத்துவிடலாமா?
இந்தி எனும் மொழியின் தொன்மை 400 ஆண்டுகளே! இன்றைய இந்தியாவின் அலுவல் மொழிகள் ஆங்கிலமும் இந்தியும். இந்தி அலுவல் மொழிதானே அன்று ஆட்சி மொழி இல்லை.
தம்பி கார்த்திக் புகழேந்தி எழுதிய கட்டுரை நூல்களையும் சிறுகதைத் தொகுப்புகளையும் நான் வாசித்திருக்கிறேன். நான் மதிக்கும் இளம் படைப்பாளிகளில் ஒருவர் அவர். சில மாதங்கள் முன்பு வாசிக்க நேர்ந்த அவரின் குறு ஆய்வு நூல் ‘இந்தி- ஒரு வரலாற்றுச் சுருக்கம்’. விரிவானதோர் ஆய்வு நூல் எழுதப்படுவதற்கான நாற்றங்கால் இச்சிறுநூல் என உறுதியாகச் சொல்வேன். ஆனால், விரிவான அந்த ஆய்வு நூலை விருதுகளுக்காக அலையும் ஆய்வறிஞர் கூட்டம் சாராத ஒருவர் ஆழங்கால் பட்டுச் செய்ய முனைய வேண்டும்.
காய்தலும் உவத்தலும் இன்றி, அந்தரத்தில் நின்று, அரசியல் சாய்வின்றி, நேர்மையாக எழுதப்பெற்ற நூல் இது என்பது கார்த்திக் புகழேந்தி தரும் தரவுகளில் இருந்து பெறப்படும் உண்மை. அந்த உண்மை வாசிக்கும் எவருக்கும் சில அக எழுச்சிகளை உறுதியாகத் தரும்.”
துள்ளு தமிழ் ஓசையுடன் தூய கவி நாட்டும் செல்ல கணபதி’ என்கிறார் கவியரசு கண்ணதாசன். ‘ஆண்டாள் தமிழை ஆண்டாள்’ என்றவரும் அவரே. கவியரசு கண்ணதாசன் பாராட்டிய கவிஞர் செல்ல கணபதி. அவரை அறிந்தவர்க்கு அவர் வெல்ல கணபதி. மிக நல்ல கணபதி. அவர் குழந்தைக் கவிஞர், ஆனால் அவரே ஒரு குழந்தை. கள்ளம், கபடு, பொய், சூது, புரட்டு, வஞ்சகம் யாவும் பிரித்தெடுக்கப்பட்ட பால் முகம் அவருடையது. கொழுப்பு நீக்கப்பட்ட பால் என்பது போல. எதிர்மறையாக வாழ்த்தக்கூடாது என்பார்கள். மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையே, ‘ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையா உன் சீர் இளமைத் திறன் என்றுதானே சமரசம் செய்யப்படாத தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார்!
மும்பையில் இருந்து கோவைக்கு வந்த 1989 முதலே செல்ல கணபதி அண்ணனை அறிவேன். என்னைவிட ஆறேழு ஆண்டாவது மூத்தவராக இருப்பார். நான் ஒரு ‘கடுவன் பூனை’ என்பது நவீன இலக்கிய உலகில் பரவலாக அறியப்படுபவன். எனில் அண்ணன் ‘புனிற்றா’ . இதை வாசிக்கிற உங்களில் பலருக்கும் ‘புனிற்றா’ என்றால் தெரிந்திராது. மாணிக்கவாசகர் பயன்படுத்தும் சொல்.
‘கற்றா’ என்றால் ஒருவேளை கேள்விப்பட்டிருக்கலாம். ‘கற்றாவின் மனம்போலக் கசிந்து உருகவேண்டுவனே!’ என்ற திருவாசக வரி செவிப்பட்டிருக்கலாம். ஆ எனில் பசு, கற்றா எனில் கன்று+ஆ. கன்றை உடைய பசு. புனிற்றா எனில் மிகச்சமீபத்தில் கன்றை ஈன்ற பசு என்று பொருள். மாணிக்கவாசகரே, ‘நுந்து கன்று’ என்ற சொல்லும் பயன்படுத்துகிறார். தேடி, பொருள் உணர்ந்து, வாசியுங்கள். எனில், புனிற்றா என்பது, புதியதாக மண்ணில் வந்து பிறந்த, இன்னும் சரியாக நடை பழகாத, முட்டி முட்டிப் பால் குடிக்கவே கற்றுக்கொள்ளாத, கன்றை நக்கிக் கொடுக்கும் தாய்ப்பசு. அதுபோன்றவர் குழந்தைக் கவிஞர் செல்ல கணபதி அண்ணன் என்று சொல்ல வந்தேன்.
தமிழைத் தோய்ந்து படிப்பவர், செவிமடுப்பவர், உடனே சிலாகித்தும் சொல்பவர். எப்போதும் அண்ணன் என்று அவரைக் கூச்சம் இன்றி அழைப்பேன். கோயம்புத்தூர், இரத்தின சபாபதிபுரத்தில் இருக்கும் அவரது ‘செல்லப்பா’ இல்லத்துக்குப் பலமுறை போயிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் உணவு கொண்டிருக்கிறேன். அது உணவல்ல விருந்து.
எங்கோ ஒருமுறை வாசித்த நினைவு. கவியரசர் கண்ணதாசன் வரிகள், ‘அப்பப்பா, கோவைக்கு வரக்கூடாது, அவர் சாப்பாட்டினாலேயே சாகடிப்பார்’ என்று. இதுவும் எதிர்மறை வாழ்த்துத்தான். கண்ணதாசன் சொற்களைத் திருத்தி நான் சொல்லலாம், ‘நகரத்தார் இல்லத்துள் போகவேண்டும், சாப்பிட்டு நீண்டநாள் வாழ வேண்டும்’ என்று.
‘பழனியப்பா பிரதர்ஸ்’ என்பது பாரம்பரியம் மிக்க பதிப்பகம். அவர்கள் பாடப்புத்தகங்களும் ஐயம்பெருமாள் கோனார் கைடும் மாத்திரம் பதிப்பிக்கவில்லை. அவர்கள் வெளியிட்ட நல்ல நூல்களைப் பட்டியலிட எனக்கு நான்கு பக்கங்கள் தேவைப்படும். என்றாலும் பதச்சோறாக ஒன்றைச் சொல்லிச் செல்வேன். அது அறிஞர் என். வரதராஜுலு நாயுடு என்ற N.V. நாயுடு எழுதிய ‘காப்பிய இமையம்!’ கம்பனில் நாட்டமுடையவர் வாசிக்கப் பரிந்துரைக்கிறேன். மேடைப் பேச்சுக்களுக்கு அது பயன்படுமா என்பதறியேன்.
குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா நினைவு அறக்கட்டளை ஒன்று நிறுவி, ஆண்டுதோறும் குழந்தை இலக்கியம் படைப்பவர்களுக்குப் பரிசளித்துக் கொண்டாடுகிறவர். அண்மையில், சாகித்ய அகாதமி, குழந்தை இலக்கியத்துக்கான விருதை செல்வகணபதி அண்ணனுக்கு வழங்கி மகிழ்ந்தார்கள்.
ஒரு தனிப்பட்ட உரையாடலின்போது, ‘வட்டி ஒன்றுதான் உறக்கத்திலும் நடக்கும்’ என்று குறிப்பிட்டார் கவிஞர் செல்ல கணபதி அண்ணன். அவரைக் கவிஞர் என்று அடைமொழி சேர்த்து உரைப்பதே வசதிக் குறைவாக இருக்கிறது எனக்கு. பிறந்தது தன வணிகர் குலம் என்றாலும் அவர் காசு சேர்ப்பவர் அல்ல. வரையறையற்று வழங்குகிறவர். அவரது தாளாண்மையில் நானும் நனைந்ததுண்டு.
என் பணி இந்த சந்தர்ப்பத்தில், அவரது ‘கவிதைச் சிறகுகள்’ எனும் கவிதை நூலுக்கு முன்னுரைப்பது. மூலவர் தரிசனம் மறந்து, நான் பிரகாரத்தில் வலம் திரிகிறேன்.
இயற்கை, உறவுகள், நாடும் மொழியும், காதலும் பெண்மையும், சமூகம், கவியரங்கம், பக்தி, மனக்கோயில் வாழும் உமையே, என்று எட்டுப் பகுதிகள் கொண்டது இந்தத் தொகை நூல்.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின், ‘அழகம்மை ஆசிரிய விருத்தம்’. கவிஞர் கண்ணதாசனின் ‘மதுரை மீனாட்சி உமையே’ வரிசையில் வைத்து எண்ணத்தக்கது கவிஞரின் ‘மனக்கோயில் வாழும் உமையே!’ ஒருவேளை கவியரசரிடம் இருந்து பெற்ற உத்வேகமாகக்கூட இருக்கலாம். அப்படித்தான் இலக்கியம் சம்பவிக்கும். வான்மீகி இன்றேல் கம்பன் எங்கே?
கவிஞரின் தமிழ்ப் புலமையும், செய்யுள் யாக்கும் தேர்ச்சியும், துள்ளிவரும் சந்தத் தமிழும், தமிழ்ப் பற்றும் இறைப்பற்றும், அவருக்கு இதனை சாத்தியமாக்கி உள்ளது.
சந்தத்தோடு சொல்லிப் பாருங்கள்:
*குழைகின்ற கவிதையில்
நெளிகின்ற உணர்வினால்
குருநாதன் புகழ்பாடுவேன்
கோபுரத் தமிழ்வளரும்
காவியப் புலவர் மனக்
கோயிலில் வாழும் உமையே!’
என்று.
கவிஞர் செல்ல கணபதியின் கவிமனம் அர்த்தமாகும். ‘பேச்சில் ஒரு பாச்சுவையைப் பின்னி வைக்க வேண்டும்’ என்று கவி எழுத வல்லவருக்கு, கயற்கண்ணியை பாடக் கற்பனை இல்லாது போமோ?
கவிதையைப் பெண்ணாக உருவகித்துப் பாடும்போது,
‘மீனசையும் கடல் நீரில் மின்னித் தோன்றி
மேவி வரும் காதலினை வளர்ப்பாள்; மின்னும்
வானசைந்தால் மழைவடிவில் ஏற்றம் கொண்டு
வாய்ந்த உயர் வாழ்வளித்துக் காப்பாள்’
என்று நடப்பது அவர் கவிதை.
பிறந்த மண்ணைப் போற்றும் எண்ணற்ற கவி மின்னல்கள் உண்டு .
‘கம்பனுக்கு கழகத்தைத் தோற்று வித்த
காரைக்குடி காசியைப் போல் புனித பூமி’
என்று போற்றுகிறார்.
வம்பர்களுக்கான கழகங்கள் போன்றதன்று காரைக்குடி கம்பன் கழகம் என்பதை நாடறியும்.
பக்தி என்பதோ, பக்தி இயக்கம் என்பதோமக்களைச் செம்மைப் படுத்துவது. அது சக மானுடரைச் சிறுமைப்படுத்தாது. கவிஞர் செல்ல கணபதி பாரம்பரியமான பக்தி உணர்வு மீக்கொண்டவர். கோதை மீனாட்சியின் அருள் மிகக் கொண்டவர்’.
‘பகலவன் வலம் வரப் பனி விலகுதல் போல், படும் துயர் மறந்திடத் தரிசனம்
பெறுபவர். ‘விழியிருந்தும் குருடனாக உலவுகின்ற மனிதரின் வேறுபடுபவர். மேற்கோள் காட்டப்பட்டவை யாவும் கவிஞரின் பாடல் வரிகளே!
பண்பட்ட மனதில்தான் பக்தியும் தழைத்தோங்கி வளரும். ‘ஒருவர் படுப்பதில் நால்வர் அமரலாம்’ என்ற மனவிசாலம் அவரிடம் இருக்கிறது. சமூகக் கரிசனமும், தாய்த்தமிழ் செம்மாப்பும், தொல்மரபும், நற்பண்பும் விரவிய கவிதைகள் இவை.
வாழ்த்துவதற்கு வயது வேண்டாம். மனம் போதும்! பல்லாண்டு வாழ்ந்து, கவிஞர் செல்ல கணபதி பொருட் கொடையும் அருட்கொடையும் தமிழ்க்கொடையும் நல்க வாழ்த்துவோம்.
தமிழ் நவீன இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கி வரும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் ஆவார். நவீன இலக்கியப் படைப்பாளர்களிலேயே செவ்விலக்கியங்கள் தொட்டு இன்றைய இலக்கியம் வரை ஆழ்ந்த புலமை பெற்றவர் என இவரைச் சுட்டலாம். சொல்லாராய்ச்சியில் ஆழங்கால் பட்ட சான்றாளராகத் திகழ்பவர். நாஞ்சில் நாட்டிலுள்ள பூதப்பாண்டி தேர் திருவிழாவைச் சற்றும் பிசகாமல் காட்சிப்படுத்தும் கதை என ‘ஆசையெனும் நாய்கள்’ என்ற கதையைச் சுட்டலாம். இக்கதை தமிழினி வெளியிட்ட ‘நாஞ்சில் நாடன் கதைகள்’ தொகுப்பில் இடம் பெற்றுள்ளது ; வஞ்சிநாடு இதழில் ஆகஸ்ட் 1977 ல் வெளியாகியுள்ளது. தேர்த்திருவிழாவில் இளஞ்சிறார்களின் பல்வேறு ஆசையை – அரங்கேறும் பல்வேறு செயற்பாடுகளை – சூதாட்டத்தை – போதும் என்ற மனமில்லா மனித மனத்தை எனப் பல காட்சிகளை நம் கண்முன் விரியும் படி மொழியில் விவரிக்கிறார்.
தமிழ்ச் சிறுகதைப் படைப்புலகில் தனித்த அடையாளத்துடன் இயங்கி வரும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன். அவர் எழுதிய சிறுகதைகளில் ஒன்று ‘எச்சம்’ ஆகும். “தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப் படும்” (குறள் எண் 114) என்பது பொதுமறை. பலவேசம் பிள்ளை அவர்களின் பிள்ளைகளாகிய எச்சங்களின் செயற்பாட்டை – மனநிலையை – பகடியுடன் இக்கதை வெளிப்படுத்துகிறது. கிராமத்து இழவு வீட்டினைக் காட்சிப் படுத்தும் கதை. குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் செயற்கைத் தனத்தை தோலுரித்துக் காட்டும் வகையில் நாஞ்சில் நாடன் கதையை அமைத்துள்ளார்.இக்கதை தமிழினி வெளியிட்ட நாஞ்சில் நாடன் சிறுகதை தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. இக்காணொளியில் எச்சம் கதையின் ஒலி வடிவத்தை காண்கிறோம்.
நாஞ்சில் நாடன் அவர்களின் உபாதை என்கிற சிறுகதையின் ஒலி வடிவம். கிராமப்புற விவசாயக் கூலிப் பெண்களின் வாழ்வியலையும் – முதலாளித்துவத்தினையும் – ஏழைப் பெண்களின் உடலை பணம் படைத்தவர்கள் கையாளும் முறைமையையும் – ஏழை குடும்பத்தின் சூழலையும் காட்சிப் படுத்தும் கதை உபாதையாகும். இக்கதை தமிழினி வெளியிட்ட நாஞ்சில் நாடன் கதைகள் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் 1975 லிருந்து தொடர்ந்து இலக்கிய உலகில் இயங்கி வந்தாலும் பல்லாண்டுகள் விற்பனை முகவராக மும்பையில் வாழ்ந்தவர். மும்பை வாழ்வை – நிறுவனங்களின் முதலாளித்துவத்தை – உழைப்புச் சுரண்டலை – ஏற்றுமதி இறக்குமதியில் உள்ள நெருக்கடியை காட்சிப்படுத்தும் வகையில் வைக்கோல் என்னும் கதை அமைந்துள்ளது. இக்கதை தமிழினி வெளியிட்ட நாஞ்சில் நாடன் கதைகள் என்னும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. செம்மலர் இதழில் ஜுலை 1977 ல் வைக்கோல் கதை வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. வைக்கோல் என்னும் கதையின் பெயர் நிறுவனங்களில் தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சுவதை குறியீடாக உணர்த்துகிறது
அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.
’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’
எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.