நாஞ்சில் நாடனுக்கு இயல் விருது

iyal_bala

கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள், கொடையாளர்கள் ஆகியவர்களின் ஆதரவுடன் ஓர் அறக்கட்டளையாக 2001ம் ஆண்டு ரொறொன்ரோவில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் பொதுவான நோக்கம் உலகமெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதாகும். தமிழ், ஆங்கில நூல்களின் மொழிபெயர்ப்பு, அரிய தமிழ் நூல்களை மீள் பதிப்பு செய்வது, தமிழ் பட்டறைகள் நடத்துவது, நூலகங்களுக்கு இலவசமாக தமிழ் நூல்கள் அளிப்பது, தமிழ் சேவையாளர்களுக்கு விருதுகள் வழங்குவது ஆகியவை இதனுள் அடங்கும்.
 நாஞ்சில் நாடனுக்கு இயல் விருது
 2012ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழில் நீண்டகாலமாக எழுதிவரும் முக்கிய எழுத்தாளரான நாஞ்சில் நாடன் அவர்களுக்கு இந்த வருடம் வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் அறக்கட்டளையான தமிழ் இலக்கியத் தோட்டம் வருடாவருடம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, கேடயமும் பரிசுப்பணமாக 2500 டொலர்கள் மதிப்பும் கொண்டதாகும். சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லக்‌ஷ்மி ஹோம்ஸ்ரோம், அம்பை, கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன், எஸ்.பொன்னுத்துரை, எஸ். ராமகிருஷ்ணன் ஆகியவகளைத் தொடர்ந்து இம்முறை இந்த விருதுக்கு உரியவராக 25 வருடங்களுக்கு மேல் தமிழுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவரான நாஞ்சில் நாடன் அவர்கள் தேர்வாகியிருக்கிறார்.
நாஞ்சில் நாடன் இந்தியாவின்  சகல பாகங்களுக்கும் பயணித்தவர். பயணத்தில் மிகவும் ஆர்வமானவர். இருப்பினும் இவர் எழுத்து  நான்சில் நாட்டு வாசனையை  இழந்ததே கிடையாது. ஒரு மண்ணின் இயல்பான வாசனையை இவரைவிட வேறொருவர் இத்தனை தெளிவுற வெளிப்படுத்தியிருக்கமுடியும் என்று தோன்றவில்லை. நாஞ்சில்நாடனென்ற பெயருக்கு பொருத்தமாக ஒரு மண்ணின் சகல வாசனைகளையும் தொடர்ந்து அள்ளித் தெளிப்பது அந்த மண்ணுக்கும் மக்களுக்கும் கிடைத்த பெருமை. இவருடைய புதினங்கள் கட்டுரை கவிதைகள் எங்கேயும் இந்த வாசனை விரவிக்கிடக்கும். எழுத்திலே அறவுணர்வு முக்கியம். உணர்ச்சிவயமானவர். கட்டுரைகளில் அநியாயத்தைக் கண்டு அவர் பொங்குவதை காணலாம். அவர் எழுத்தின் அடிநாதம் மனித நேயம்தான்.
 தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருது வழங்கும் விழா ரொறொன்ரோவில் 15 ஜூன் 2013 மாலை சிறப்பாக நடந்தது. பேராசிரியர் சுகிர்தராஜா விருதை வழங்க திரு நாஞ்சில் நாடன் பெற்றுக்கொண்டார்.  தனது ஏற்புரையில் நாஞ்சில் நாடன் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் சேவையை பாராட்டினார். புறநானூற்றிலிருந்து ஒரு பாடல். அரசனிடம் பரிசு பெறுவதற்காக ஒரு புலவன் நீண்டதூரம் கடக்கிறான். அவையை அண்மித்தபோது அரசன் இறந்துவிட்ட சேதி கிடைக்கிறது. புலவர் மனமொடிந்து பாடுகிறார். ‘முல்லையே, நீ எதற்காக பூத்திருக்கிறாய். உன்னை இனி யார் அணியப் போகிறார்கள்? ஒல்லையூர் நாட்டவன் இறந்துவிட்டானே, இது தெரியாதா?’
 தமிழ் எழுத்தாளருடைய கதியும் இதுதான். நீண்ட காலம் அவர் எழுதுகிறார். பரிசு சமீபிக்கிறது ஆனால் வேறு யாருக்கோ போய்விடுகிறது. எழுத்தாளருக்கு கிடைப்பதில்லை. இந்நிலையில் தமிழ் இலக்கியத் தோட்டம் தகுந்தவர்களைத் தேடி பரிசளிக்கிறது. அது பாராட்டுக்குரியது’ என்றார்.
 விழாவுக்கு மண்டபம் நிறைய ஆர்வலர்கள் வந்து நிகழ்வைச் சிறப்பித்தார்கள்.
நன்றி:http://tamilliterarygarden.com/

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், கானடா, நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா, நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

1 Responses to நாஞ்சில் நாடனுக்கு இயல் விருது

  1. P.PAUL MURUGAN சொல்கிறார்:

    nanjil nadan padappukal anaithum oru varthaiyil sollivida mudiyathu ,atharkku varthaikale ellai

பின்னூட்டமொன்றை இடுக