நாஞ்சில் நாடன் | சிறுகதை | அழக்கொண்ட எல்லாம் தொழப் போம்

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

பெருந்தவம்| நாஞ்சில்நாடன் |

ஒலி வடிவம், காணொளி: சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

Padaippu Sangamam – 2022 | வாழ்நாள் சாதனையாளர் விருது | எழுத்தாளர் நாஞ்சில் நாடன்

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடன் | சிறுகதை |”அம்மை பார்த்திருந்தாள்” | NanjilNadan | Story |”Ammai ParthirunthaaL”

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

இது கண்களின் பார்வையல்ல

கவிஞர் ஏர்வாடி சிந்தா அவர்களின் இது கண்களின் பார்வையல்ல என்ற கவிதை தொகுப்பிற்கு மதிப்புக்குரிய எழுத்தாளர் நாஞ்சில் நாடன் எழுதிய அணிந்துரை..

நம்பியாறு வாழ்த்தட்டும்

‘இது கண்களின் பார்வையல்ல!’ என்பது இக்கவிதைத் தொகுப்பின் தலைப்பு. கண்ணால் காண்பது ஒன்றாகவும் உட்கருத்து முற்றிலும் முரண்பட்டதாகவும் இருத்தலும் கூடும் என்ற உண்மையை உணர்த்துகிறது தலைப்பு. கண்களின் பார்வை அல்ல என்றால் சிந்தனைத் தெளிவின் பார்வை. புறப்பார்வைக்கும் அகநோக்குக்கும் உண்டான வேறுபாடுகளை உணர்த்தும் தலைப்பு.

கவிஞர் சிந்தா எனக்கு அறிமுகமானவர் இல்லை. இதற்கு முன் அவர் கவிதை எதையும் வாசித்ததும் இல்லை. எனது சகோதரர் ஏர்வாடி சுல்தான் இந்தத் தொகுப்பை எனக்கு அறிமுகப்படுத்தினார். கவிஞர் சிந்தாவின் முழுப்பெயர் M.S. சிந்தா மதார் என்றும், சகோதரர் S.I. சுல்தான் அவர்களின் அடுத்த வீட்டுக்காரர் என்றும் பின்னர் அறிந்தேன். வயதென்ன, தொழிலென்ன, வருமானம் என்ன போன்ற தகவல்கள் எனக்கு அநாவசியம். கவிஞர் என்ற அறிமுகமே நமக்கு போதுமானது.

‘’பெருவெளி” என்ற கவிதையில் கவிஞர் சொல்கிறார்,

‘உடைந்தது மழைத்துளி
எத்தனை நைல் நதி?’

என்று. கவிதை எனும் அனுபவம் மழைத்துளி, அதுவே நைல் நதி. நதிகள் என்பன இங்கு சிந்தனைப் போக்குகள். புனிதம் என்பது உலகின் எந்த நதிக்குமான சொந்த உரிமையும் அல்ல.

அனைத்துக் கவிதைகளையும் வாசித்துச் செல்லும்போது, கவிஞரின் பரந்து பட்ட பார்வையின் தெளிவும் கூர்மையும் தெரிகிறது.

மனித உணர்வுகள் என்பன மதம் இனம் மொழி நிலப்பகுதி என்பனவற்றையும் கடந்து நிற்பன என்பதையும் கவிதைகள் நிறுவிச் செல்கின்றன.
‘அம்மா’ என்றொரு கவிதை அதற்கோர் எடுத்துக்காட்டு.

*குழந்தை மூசாவை
கூடைக்குள் கிடத்தி
நீரில் விட்டு
திரும்பியவளோ
கர்ணனை கங்கையில் விட்டு வந்தவளோ
ஈன்றவள் விழிகளில்
இடம் பெயர்ந்திருந்தன
நைலும் கங்கையும்’

என்றொரு கவிதை, விழிகளின் மூலம் மட்டுமே அல்லாத மிகச்சரியான அகப்பார்வையைத் தருகிறது. ஈன்ற தாய் என்பதோர் சக்தி வாய்ந்த சொல்லாட்சி. அதனால்தான் வள்ளுவன் ‘ஈன்ற தாய் பசி காண்பான் ஆயினும்’ என்று அழுத்தம் தந்து பேசினான்.

காதல், போர்கள், மதக்கலவரங்கள், துவக்குச் சூடுகள் குறித்த சில கவிதைகள் உண்டு நூல் நெடுக்க. வலி என்பது யாவர்க்குமாம்.

‘விரியும் சிறகுகள்’ எனும் நீண்ட கவிதை சொல்வதைப் போல –

‘பருந்தின் கால்களில்
சிக்கிய
பாம்பின் கண்களில்
தரிசனம் தந்து நெளிந்தது மண்புழு’

என்பதுதானே யதார்த்தம்.

‘புனிதப் பயணம்’ எனும் கவிதையில் கவிஞர் சிந்தாவின் பாடல் வரிகள் –

“அகந்தை மனது
தன் புழுதிகளை உதறிக் கொண்டே
புரண்டு சிரிக்கிறது”

என்பதும் இன்னொரு வகை யதார்த்தமே!

பெண்ணின் அவலங்களை மிகத்தீர்க்கமாக பேசுகிறார் கவிஞர்.
‘அவளுக்கே ஆன வனவாசம்’ என்ற கவிதையில்

“எவனோ ஒருவனின்
வார்த்தை எச்சத்திற்காய்
இரண்டாம் வனவாசத்தைத்
துவங்குகிறவள்
அசோகவனத்திலும் அதிகமாய்
அழுதிருக்கக் கூடும் அப்போது அவள்.

அடுதத கலவரத்தில்
யாரைப் புணரலாம்
என்றே
அலைந்து கொண்டிருக்கிறார்கள்
அன்றிலிருந்து’
என்ற கவிதை வரிகளின் அழல் எந்தக் குறிப்பிட்ட சமயத்தின், மொழியின், இனத்தின் பெண்களுக்கானவை மட்டுமே அல்ல. இதுவே கவிதைப் பண்பென்று உணர்கிறேன் நான். வார்த்தை எச்சம் என்பதொரு சிறந்த சொல்லாட்சி.

வேறொரு உண்மையை ‘நீரெழுதிய கவிதை உணர்த்தியது.

‘எந்த நதி என்று
யாருக்கும் தெரியாமல்
வந்து விழுந்தது மழைத்துளி’

என்பதது. மனித இரக்கம், காருண்யம், பரிவு என்பன தன்னாள் – வேற்றாள் பார்த்தா சுரக்கும்? அவையும் மழைத்துளிகள் போன்றவை அல்லவா?

‘பேயாட்டம் என்ற கவிதை நல்லதோர் சிறுகதைப் பண்பு கொண்டது. செய்னம்புவுக்கு பேய் பிடித்த கதையைப் பேசுகிறது கவிதை. ‘காராட்டு உதிரம் தூஉய் அன்னை களன் இழைத்து’ என்று தொடங்கும் முத்தொள்ளாயிரப் பாடலை நினைவுபடுத்தும்.

ஆதரவு இல்லம்’ ‘யாசிப்புகள்’, ‘கடவுளை விற்பவன்’, ‘பாவச் சுமைகள்’ எனப் பல, தொகுப்பின் குறிப்பிடத்தகுந்த கவிதைகள்.

மனிதநேயம் மிக்க கவிதை ஒன்று ‘மழை இரவு’ எனும் தலைப்பில்

‘‘தேநீர்க் கடைகளில
நாய்களுக்கும் மனிதனுக்கும் சமத்துவ தஞ்சம்
கூரை கிழிசல் வழி
ஒழுகும் நீரை
தடுத்துக் கொண்டிருக்கும்
குழந்தையின் கற்சிலேட்டு’

என்ற கவிதை வரிகள் அன்றும் இன்றும் ஊர்ப்புறங்களில் காட்சிபடுபவை.
ஆனா ஆவன்னாவும் வாய்ப்பாடும் எழுதிப் பயிலப் பயன்படும் பள்ளிக்கூட சிலேட்டு, மழைத்துளிகளுக்கும் மறைப்பு.
சாயாக் கடையின் ஒழுகும் சாய்ச்சிறக்கி மறைவில் நாயும்மனிதரும் பள்ளிச் சிறுமியும் தஞ்சமடைகிறார்கள்.

சிறுவயதில் நானும் மழைக்கு ஒதுங்கி இருக்கிறேன்.

ஊர்க்கோயில் கொடை என்பது கிராமங்களில் பிறந்து வளர்ந்தவர்களால் தோய்ந்து அனுபவிக்கப்படுவதொன்று. ஐம்பதாண்டு காலமாகப் புலம் பெயர்ந்து வாழ்பவன் நான். எம்மூர் முத்தாரம்மனுக்கு இந்த ஐம்பதாண்டு காலத்தில் இருபது கொடைகள் நடந்திருக்கும். அவற்றுள் குறைந்தது பதினெட்டு கொடைகளுக்கு நான் பம்பாயில் இருந்தும் கோவையில் இருந்தும் போயிருக்கிறேன். ஒரு கொடைக்கு போக வாய்க்காதபோது உணரும் ஏக்கமும் அறிவேன். புலம் பெயர்ந்து போன மகன் இந்த ஊர்க்கொடைக்காவது வருவான் என்று ஏக்கத்துடன் காத்திருந்த தகப்பனின் ஆவலாதியைப் புலப்படுத்துகிறது ‘ஊர்க்கொடை’ எனும் கவிதை.

‘’புலம் பெயர்ந்த மகன்
இம்முறையும் வரவேயில்லை
படையல் சோற்றை
காகம் மட்டுமே தின்றது’

என்பதன் வலி நமக்கு அர்த்தமாகிறது. அதுவும் படப்புச் சோறு என நாங்கள் கொண்டாடி உண்ணும் படையல் சோறும்கூட காத்திருந்து காகங்களுக்குப் போகும் சோகம். தூரா தொலைவுக்கு பிள்ளைகள் சம்பாதிக்கப் போய், அவர்கள் வரவு பார்த்திருக்கும் ஏக்கம் அது.

அதுபோலவே, ‘ஈரம்’ என்றொரு கவிதை

‘உணவுப் பொட்டலத்தைப் பிரித்து
நேசத்துடன் நோக்குகிறாள்
யாசிக்கும் சிறுமி
மன்னு சல்வா.

என்று தொடங்குவது. தொடர்ந்து –

‘இரண்டு சலாம்களுக்கு பதில் பெறாது
தொழுதுவிட்டு
பள்ளி வாசலைக் கடக்கையில்
ஏளனமாக சிரிக்கிறது பதிலளிக்காது
விட்டு வந்த
பக்கிரின் சலாமொன்று.’

என்று முடியும்போது நமக்குள்ளும் ஈரம் கசிகிறது. மனிதநேயம் இருந்தாலொழிய இவ்விதம் எழுத வராது.

ஊர்ப்பக்கம் வளர்ந்தவர்களுக்கு ஆறு, ஏரி, பொத்தை என்பன என்றுமே மறக்க இயலாத அனுபவங்களை தந்து நிற்கும். கவிஞர் சிந்தாவுக்கு அது நம்பியாறு.

திருக்குறுங்குடி மலையில் புறப்பட்டு திருமலை நம்பியின் கால் நனைத்து, சித்தூர் தென்கரை மகராஜா சாஸ்தாவுக்கும் வடக்குவாழ் செல்விக்கும் தாகம் தீர்த்து தொடரும் ஆறு அது. நம்பியாறு.பற்றி நிறையப் பேசுகிறார் கவிஞர்.

‘அத்தனை நினைவுகளையும்
ஆற்றோடு கொட்டிவிட்டேன்
என்ன செய்தாய் ஆற்றை என

என் பிள்ளைகள் கேட்கும் முன் என்று கவலும் வரிகள் நம் நிர்க்கதியை உணர்த்துகின்றன. மேலும்,

‘அத்தனைக் கள்ளக் குளியலுக்குப்
பின்னும்
பிரியாமல்
கால் சட்டைப்பைக்குள்
தங்கிப்போன மணல்துகள்தான்
மவுன சாட்சிகளாய்
அன்றும் இன்றும்

என்கிறார். ஆமாம் !மணல் துகள்களே இன்றெமக்கு அன்று பாய்ந்த யாறுகளை நினைவுபடுத்துகின்றன.

தொடர்ந்து நம் இயலாமைகளையும் உரைக்கிறார்.

‘அன்று

கட்டிய மணல் வீடுகளை

ஆறு கரைத்தது

இன்று கட்டிய வீடு

ஆற்றை கரைத்தது

என்று எவ்வளவு சீரழிந்த நிலைமையை கவிதை பேசுகிறது! மேலும் கடந்து தாண்டிப் போய் முறையிடுகிறார் –

‘அடுதத தேர்தல்வரை
ஆறிருக்கும் என
திண்ணமாய் நம்புகின்றன
மீன்கள்.

என்று. இங்கு நம்புவது மீன்கள் மட்டுமல்ல. பறவவகள், விலங்குகள், தாவரங்கள் அனைத்துமேதான்.

அஃதேபோல் ‘ஆற்று வழி’ என்ற கவிதையில் சொல்கிறார் –

‘எங்கோ பெற்றுக்கொண்ட தெங்கு ஒன்றை
யாரிடம் கொடுப்பதற்கென்றே தெரியாமல்
உருட்டிக் கொண்டே நகர்கின்றன அலைகள்

என்று. தெங்கு என்றால் தென்னை மரத்திலிருந்து முற்றிக் கழன்று விழுந்த தேங்காய். மேலும் சொல்கிறார் –

‘யாருடைய ஈமக் கடனையோ
பத்திரமாக எடுத்துச் செல்கிறது ஆறு’

என்று. எந்த நோக்கமும் திட்டமிடலும் இல்லாமல் கால்வாய் / ஓடை/ சிற்றாறு / ஆறு / நதி / பெருநதி என எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் நீரொழுக்கு தன் பணியை ஆற்றிக்கொண்டே நடக்கிறது. ஆறு போல் தானே அமைய வேண்டும் அரசியலும், மதமும், சமூகமும், ஆன்மீகமும், அவற்றின் கடமைகளும்! ஏன் அவ்வாறு இல்லை என அல்லாடுகிறது நம் மனம் அவ்வாறு இல்லை என்பதுகூட விடயமல்ல, ஏன் எதிற்மறையாக இருக்கிறது?

கவிஞரே ‘மழைத்தொழுகை’ எனும் கவிதையில் குறிப்பிஇருக்கிறது

வெட்டப்பட்டு பொட்டலாகி் போனத் திடலில்தான்
மழைக்காக சிறப்புத் தொழுகை
தொழுகை முடிந்தப்பின்
சுருட்டப்படுகின்றன
நதியைத் தொலைத்த
கோரைகளின் ஆன்மாக்கள்

என்ற உண்மை. ஏன் கோரை? இங்கு சுருட்டப்படுவது கோரம்பாய் என்பதனால். கோரம்பாய், கோரைத் தட்டி, கோரைப் படுதா, பன்றிகள் சேற்றில் தொடர்ந்து பறித்துத் தின்னும் கோரைக் கிழங்கு யாவுமே நம் நினைவுக்கு வருகின்றன. கூடவே கண்மணி குணசேகரன் இருபது ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய ‘கோரை’ எனும் சிறந்த நாவலும்.

கவிஞர் சிந்தா, தாம் கைக்கொள்ளும் கருப்பொருளுக்கும் உரிப்பொருளுக்கும் உண்மையாக இருக்கிறார். பாசாங்குகள் அற்ற மொழிப் பயன்பாடு, கவிச் செழுமையை மேம்படுத்த உதவுகின்றது. கவிதை என்பது மொழியின் உன்னதம். தமிழ்மொழியில் கவிதைக்கு ஏழாயிரம் ஆண்டுப் பாரம்பரியமும், தொன்மையும், அழகும், வளமும், நயமும் உண்டு. தமிழில் கவிதை எழுதிச் சாதிப்பது என்பது எளிவந்த காரியம் அல்ல.

மிகுந்த நம்பிக்கை தரும் இந்தக் கவிதைத் தொகுப்பை வழங்கியுள்ள கவிஞர் சிந்தா, மேலும் பயணிக்க, தடம்பல சமைக்க நமது வாழ்த்துகள். நம்பியாறும் வாழ்த்தும் என்பது நமது நம்பிக்கை.

மிக்க அன்புடன்

நாஞ்சில் நாடன்

கோயம்புத்தூர் – 641 042.
18 யூலை 2022

Posted in அனைத்தும் | 1 பின்னூட்டம்

நாஞ்சில் நாட ன் | சிறுகதை | “பாலம்” 

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டு..

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

காசில் கொற்றம்

எட்டுப் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, தமிழர்களின் தங்கத் தாமரை மலர் போன்ற செவ்விய இதயங்களைக் கவர்ந்த திரைப்பாடல் ஒன்று – ‘காசு பணம் துட்டு மணி மணி’ என்பது. எழுதியவர், இசையமைத்தவர், இயக்குநர், அபிநயித்தவர் போன்ற விடயங்களில் எமக்கு ஆர்வமில்லை.

நமது தேட்டம் காசு என்ற சொல்லில். ‘காசில்லாதவனுக்கு வராகன் பேச்சென்ன?’ என்றோர் பழஞ்சொல் இருப்பது தெரியும். எல்லாத் தமிழ்ச் சொல்லும் வராகன் மதிப்புடையது என்பதும் அறிவோம். ஆனால் இன்றைய தமிழர்களின் சொற் பயன்பாட்டு நிலை ‘காசுக் கூண்டு கரிக் கூண்டாய்ப் போச்சு’ என்றே கூறிவிடலாம். ஆனால் காசு எனும் சொல்லுக்கு சமூகத்தில் இன்றிருக்கும் மதிப்பு என்ன?

‘காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும், காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்’ என்றொரு பழமொழி உண்டு. ‘காசுக்கு ஒரு சேலை விற்றாலும், நாயின் சூத்து அம்மணம்’ என்றொரு சொலவமும் அறிவோம். சூத்து எனும் சொல் உடம்பில் தடிப்பும் அரிப்பும் ஏற்படுத்தலாம் உமக்கு. எம்மால் அதற்குக் களிம்பு பூச இயலாது.

‘காசேதான் கடவுளடா, அந்தக் கடவுளுக்கும் இது தெரியுமடா!’ என்றும் ஒரு சினிமாப்பாட்டு இருந்தது. எங்கள் ஊர்ப்பக்கம் சொல்வார்கள், ‘காசு பீயிலே கெடந்தாக் கூட எடுத்துத் தொடச்சு வச்சிக்கிடுவான்’ என்று.

‘CASH’ எனும் ஆங்கிலச் சொல்லின் தமிழ் தற்பவ வடிவமாக இருக்குமோ ‘காசு’ என்ற தமிழ்ச்சொல் என்று என்மனம் குதர்க்கமாகச் சிந்தித்தது. நூதனமான தமிழ்ச்சொல் ஒன்று பழந்தமிழ் இலக்கியங்களில் நமக்குத் தட்டுப்பட்டு, அதைக் குறிப்பிட்டு நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டால், அவருள் சிலர், உடனே அந்தச் சொல் சமற்கிருதம் என்று எடுத்துச் சாடி அழுத்தந் திருத்தமாகக் கருத்துரைப்பார்கள். எடுத்துக்காட்டு சொல்லப் புகுந்தால் அது தனிக்கட்டுரை ஆகிவிடும்.

சும்மாவா ‘மனோன்மணீயம்’ எழுதிய பெ. சுந்தரம்பிள்ளை, குடிலன் எனும் எதிர் நாயகன் மூலம் பேசினார், ‘‘நாஞ்சில் நாட்டான் நஞ்சிலும் கொடியோன்” என்று. என்னவோ தெரியவில்லை, நாஞ்சில் நாட்டார் எனில் உயர் தனிச் செம்மொழி மக்களுக்கு அத்தனை மூலக்கடுப்பு, காழ்ப்பு! மலையாளத்தில் சொல்வார்கள் அசூயைக்கும் கசண்டிக்கும் மருந்தில்லை என்று. அசூயை எனில் அழுக்காறு – பொறாமை. கசண்டி என்றால் தலை வழுக்கை.

‘சோறு கண்ட இடம் சொர்க்கம்’ என்பார்கள் எம்மூரில் சிலரை. இன்று சோறு எனும் சொல்லே இழிந்த சொல். எதுவுமானாலும் இன்று ‘காசு கண்ட இடம் கைலாயம்’ யாவர்க்கும். பணம் பாதாளம் வரை பாயும் என்றால் காசு கைலாயம் வரைக்கும் பாயாதா?

அதன் காரணமாகவோ என்னவோ, திருவள்ளுவருக்குக் காசு எனும் சொல்மீது அத்தனை வெறுப்பு! 1330 அறம் – பொருள் – காமத்துப் பாடல்கள் எவற்றிலும் காசு எனும் சொல் காணக்கிடைக்கவில்லை. உடனே தமிழறிஞர் – தமிழ்ச் செம்மல் விருது பெற்ற எவரும் கேட்கக் கூடும், திருவள்ளுவர் பணம் எனும் சொல்லையும்தான் ஆளவில்லை என்று.

பணம் என்ற சொல்லுக்குப் பாம்பு என்றும் பாம்பின் படம் என்றும் பொருள் தரப்பட்டுள்ளன. உண்மையில் பணம் என்பதும் நச்சரவம்தானே!

‘பாவி போன இடம் பாதாளம்’ என்பார்கள். பணமும் எவரையும் பாதாளம் வரை கொண்டு செலுத்தும் வலிமை உடையது. எவரின் உயிரையும் கவர்வதற்கு சுபாரி வாங்குபவர்கள் செய்யும் பேரம் பணத்தில்தானே. பிறகென்ன, காவல்துறை பத்துப் பதினைந்து ஆண்டுகள், புலன் விசாரணை, தீவிர விசாரணை, புலனாய்வுத் துறை சிறப்பு விசாரணை, மத்திய புலனாய்வுத்துறை விசாரணை என மாய்ந்து மாய்ந்து செய்து அல்லற்படுவார்கள்.

பணம் என்ற சொல்லைப் பாம்பின் படம் என்ற பொருளில்  கையாள்கிறது சம்பந்தர் தேவாரம். ‘பணம் கொள் நாகம்’ என்றும், ‘பணம் கொள் ஆடு அரவு’ என்றும் குறிப்பிடுகிறது. திருவாசகம் ‘பணம் கச்சைக் கடவுள்’ என்கிறது. நாகப்பாம்பை அரைக்கச்சையாக, வாராக அணிந்த திருநீலகண்டன் எனும் பொருளில்.

பணம் என்றால் பருமை, திரவியம், பொற்காசு, வியாபாரச் சரக்கு, வேலை, வீடு, பாம்பின் படம், பாம்பு, அங்குசம் எனப் பற்பல அர்த்தங்கள் தருகின்றன சூடாமணி நிகண்டு, யாழ்ப்பாண அகராதி, பேரகராதி முதலியன.

‘பாம்பென்றால் படையும் நடுங்கும்’ என்பது சொலவம். திருக்குறளில் எலி என்ற சொல் ஒரேயொரு குறளில் வருகிறது. படைமாட்சி அதிகாரம். பாடல் கீழ்வருமாறு –

‘ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை

நாகம் உயிர்ப்பக் கெடும்’

எலிப்பகையானது கடல்போல் உரத்து ஒலி எழுப்பிக் கொண்டிருந்தாலும் நாகம் ஒன்று படமெடுத்துச் சீறினால் சிதறியோடிக் காணாமற் போய்விடும் என்பது பொருள். அதாவது பாம்பென்றால் படையும் நடுங்கும்.

அதுபோலவே பணம் என்றாலும் படையும் நடுநடுங்கும். படை மட்டுமா நடுங்குகிறது? அறம், ஒழுக்கம், நீதி, சட்டம், அதிகாரம், நிர்வாகம், இறைவர் யாவருமே நடுங்குவார்கள். இன்றைய அரசியலை, நீதியை, சட்டத்தை, அதிகாரத்தை, ஆட்சியை, அறத்தை, ஒழுக்கத்தைத் தீர்மானிப்பது பணமே! பண்டு கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் பாடினார் ஏதோவொரு சினிமாவில், ‘எங்கே தேடுவேன்? பணத்தை எங்கே தேடுவேன்’ என்று.

காசு என்ற சொல்லையும் பணம், துட்டு, செல்வம் என்ற பொருளிலேயே ஆள்கிறோம். சென்னைப் பல்கலைக்கழகத்துப் பேரகராதி, காசு எனும் சொல்லுக்குத் தரும் முதற்பொருள் குற்றம். மேற்கோள் சிலப்பதிகாரத்தின் பாடல் வரிகள். கோவலன் கண்ணகியை வர்ணிக்கும் இடம்.

‘மாசறு பொன்னே! வலம்புரி முத்தே!
காசறு விரையே! கரும்பே! தேனே!’

என்று உருகுவான். காசறு என்றால் காசு+அறு= குற்றமற்ற என்று பொருள். விரை என்றால் வாசனை, நறும்புகை, ஐவகை வாசனைப் பண்டம், சந்தனக்கலவைச் சாந்து, மலர் எனப் பல பொருள்கள்.

இங்கு காசு என்றால் குற்றம் என்பது பொருள். திவாகர நிகண்டு காசு என்றால் சூதாடும் கருவி, Dice என்கிறது. காசு என்றால் பொன் என்றும் அச்சுத்தாலி என்றும் பொருள். ஆண்டாள் திருப்பாவை ஏழாவது பாடல்,

‘காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிரரவம் கேட்டிலையோ?’

என்று பேசும். இங்கு காசு என்றால் ஆய்ச்சியரின் பொன்னாபரணம். காசுக்கு பழைய பொன் நாணயம் என்றும், செப்புக்காசு என்றும் பொருள்.

நான் சிறுவனாக இருந்தபோது, நாணயம் என்பது ரூபாய், அணா, காசு – பை – சல்லி. ஒரு ரூபாய்க்குப் பதினாறு அணா, ஒரு அணாவுக்கு 12 காசு/பை/சல்லி. அதாவது ஒரு ரூபாய் என்பது பதினாறு அணா = 192 காசு/பை/சல்லி. மூன்று காசு, அதாவது காலணா என்பது ஒரு தம்பிடி. காலணா, அரையணா, ஓரணா, இரண்டு அணா, நான்கு அணா (கால் ரூபாய்), எட்டு அணா (அரை ரூபாய்), ஒரு ரூபாய்க்கு நாணயங்கள் இருந்தன. ஒரு அணா என்பது நான்கு தம்பிடி. இவை ஓரணாக் காசு, ரெண்டணாக் காசு, நாலணாக் காசு, எட்டணாக் காசு எனப்பட்டன. 1938-ம் ஆண்டில் இட்லி – 4 காசு, தோசை – 4 காசு, வடை – 4 காசு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்தக் கட்டுரை ஆசிரியன் 1947-ம் ஆண்டின் இறுதிநாள், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பிறந்தவன். 1956– நவம்பரில் செம்மொழியான தமிழ்மொழி பேசும் பகுதியோடு நாஞ்சில் நாடு இணைக்கப்பட்டது. இலாப நஷ்டக் கணக்கு பிறகு பார்ப்போம். இப்போது நாணயம் – காசு பற்றிப் பேசுவோம்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் நாணயங்கள்:

16 காசு – 1 சக்கரம்

28 சக்கரம் – 1 திருவிதாங்கூர் ரூபாய் (நாணயம் இல்லை)

28½ சக்கரம் – 1 பிரிட்டிஷ் ரூபாய் (நாணயம் உண்டு)

4 சக்கரம் – 1 பணம்

7 பணம் – 1 திருவிதாங்கூர் ரூபாய் (நாணயம் இல்லை)

7 சக்கரம் – ¼ ரூபாய் (வெள்ளி நாணயம்)

14 சக்கரம் – ½ ரூபாய்

1 காசு – செம்பு நாணயம்

4 காசு – செம்பு நாணயம்

8 காசு – செம்பு நாணயம்

1 சக்கரம் – செம்பு நாணயம்

¼ ரூபாய் – வெள்ளி நாணயம்

½ ரூபாய் – வெள்ளி நாணயம்

1 பணம் – வெள்ளி நாணயம்

7 பணம்+8காசு – 28½ சக்கரம் = ஒரு பிரிட்டிஷ் ரூபாய்.

இந்த காலணா, அரையணா, ஓரணா, இரண்டணா, நாலணா, எட்டணா, ஒரு ரூபாய் என்ற நாணயக் காசுகள் எல்லாம் மாறி 1960-க்குப் பிறகு ஒரு ரூபாய்க்கு நூறு நயா பைசா அல்லது நூறு புதிய காசுகள் என்று வந்தன. என் சேமிப்பில் இன்றும் ஒரு பைசா, இரண்டு பைசா, ஐந்து பைசா, பத்து பைசா, இருபது பைசா, 25 பைசா, 50 பைசா, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய், அண்மையில் வந்த இருபது ரூபாய் நாணயக் காசுகள் உண்டு. காலணா, அரையணா, ஓரணா, நாலணா, எட்டணாக்களும் உண்டு.

ஒரு பொருள் மலிந்து போனால், இன்றும் மலையாளிகள் ‘காசினு எட்டு’ என்பார்கள். அதாவது அந்தப் பொருள் ‘காசுக்கு எட்டு’ என்ற அளவில் மலிந்துவிட்டது என்பது பொருள்.

உபயோகமில்லாத ஒருவனை, ‘அவன் பைசாவுக்குப் பிரயோசனம் இல்லப்பா’ அல்லது ‘அவன் காசுக்குப் பிரயோசனம் இல்லப்பா’ என்றனர் மேன்மக்கள்.

காசு என்றால் ரொக்கம் என்றும் பொருள் உண்டு. ‘அவன் காசுள்ள பார்ட்டிப்பா!’, ‘அவன்கிட்ட நல்ல கொழுத்த காசு பார்த்துக்கோ’ என்பார்கள். அரசியல்வாதிகளை, ‘நல்ல காசு அடிச்சு மாத்துகான்’ என்பது இன்றைய மக்கட் பயன்பாடு. காசு என்றால் இன்றைய கணக்கில் ஐம்பது கோடி முதல் ஐந்து லட்சம் கோடி வரை பொருள்படும்.

காசு எனும் சொல்லுக்கு மணி – GEM என்றும் மேகலாபரணம் என்றும் பொருள் உண்டு. கோழை – Phlegm என்கிறது பிங்கல நிகண்டு.

வெண்பா இலக்கணம், ஈற்றடியின் இறுதிச் சீர், நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்ப்பாட்டில் முடிய வேண்டும் என்பார்கள். எடுத்துக்காட்டுகள்:

  1. ‘உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றுங் 

கல்லா ரறிவிலா தார்’ – 140 ஒழுக்கமுடைமை அதிகாரம். 

இது நாள் வாய்ப்பாட்டில் முடியும் குறள்.

  1. ‘ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய

வழுக்கியும் வாயாற் சொலல்’ – 139, ஒழுக்கமுடைமை அதிகாரம்.

இது மலர் வாய்ப்பாட்டில் முடியும் குறள்.

  1. ‘பயனில பல்லார்முற் சொல்ல னயனில

நட்டார்கட் செய்தலிற் தீது’ – 192, பயனில சொல்லாமை அதிகாரம்.

இது காசு வாய்ப்பாட்டில் முடியும் குறள்.

  1. ‘எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்

பொய்யா விளக்கே விளக்கு’ – 299, வாய்மை அதிகாரம்.

இது பிறப்பு வாய்ப்பாட்டில் முடியும் குறள்.

குறள் வெண்பா, சிந்தடி வெண்பா, நேரசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, கலி வெண்பா எனக் கேட்டிருக்கிறேன். பயின்றேனில்லை. வெண்சீர் வெண்டளை, இயற்சீர் வெண்டளை எனச் செவிப்பட்டதுண்டு. நாள், மலர், காசு, பிறப்பு எனும் ஈற்றுச் சீர் வாய்ப்பாட்டுக்கு விதிவிலக்குகள் உண்டா என்றும் அறியேன்.

பல்லாங்குழி ஆட்டத்தில் காய்களைப் போட்டு வைக்கும் நடுக்குழிகள் இரண்டினையும் காசு என்பார்களாம்.

காசுக்கடை என்ற சொல் மலையாளத்தில் இன்றும் புழக்கத்தில் உண்டு. காசுக்கடை என்றால் பணம் மாற்றும் கடை. தங்கம் வெள்ளி விற்கும் கடை. பொன் வாணிபம் செய்தாரைக் காசுக்காரச் செட்டி என்றனர். பணக்காரனையும் காசுக்கடைக்காரனையும் காசுக்காரன் என்று குறித்துள்ளனர்.

செப்புக்காசு வைத்து விளையாடுபவரையும், பணம் வைத்து சூதாடுதலையும் – Gamling, Betting – காசு கட்டுதல் என்றனர். காசுக்காரர்கள் அங்கத்தினராக இருக்கும் கிளப்புகளில் நடக்கும் சீட்டு விளையாட்டுகள் பலவும் காசு வைத்துதான்.

Tax Payable in money (not in grains), காசு கடமை எனப்பட்டது. ரொக்க வரி எனலாம் எளிமையாக. நாமெல்லாம் பன், கடலை மிட்டாய், காராசேவு கூட இன்று ரொக்க வரி செலுத்தித்தானே வாங்குகிறோம். நம்மிடம் வாங்கப்படும் வரிப்பணத்தில் ஒரு பகுதியே அரசாங்கத்துக்குச் செல்லும் என்பதுவும் மறுபாதி மாற்றுக் கணக்கால் அபகரிக்கப்படும் என்பதும் நாம் அறியாததல்ல. நாம் அரசியல் தொழில் முனைவோரை மட்டுமே குற்றப்படுத்திக் கொண்டிருக்கிறோம். கள்ளன் பெரிதா, காப்பான் பெரிதா?

நகைகளை எடை போடும் கற்களை காசுகல் அல்லது நிறைகல் என்றனர். எண்ணெயில் அல்லது நீரில் உரைத்து நெற்றியில் பூசும் காவிக்கல்லையும் காசுமண் என்றனர்.

காசுமாலை என்பது அன்று கீர்த்தி பெற்ற பொன்னாபரணம். பொற்காசு கோர்த்த மாலை என்கிறது பேரகராதி. அதாவது Necklace of gold coins worn by women. திருவாசகத்தில், திருப்பொற்சுண்ணம் பகுதியில், மாணிக்கவாசகர், “காசணிமின்கள்” என்பார். பொற்காசுகளை கோர்த்து வடம் அணியுங்கள் என்று பொருள். அவருக்கென்ன?

‘கிடக்கிறது ஒட்டுத் திண்ணை, கனாக் காண்கிறது மச்சுவீடு!’ என்பது நம்ம வீச்சாக இருக்கிறது.

அன்று மணப்பெண்ணுக்கு காசுமாலைபோடுவது செல்வச் செழிப்பின் அடையாளம். இன்று ஆடியோ – வீடியோ போட்டோ ஷுட்டுக்கு முப்பது கோடி செலவு செய்கிறார்கள் கலைவாணிக்கு சேவை செய்கிறவர்கள். ஊடகங்கள் யாவுமே அந்தச் செய்திகளை மெய் வருத்தம் பாராமல், ஊணுறக்கம் கொள்ளாமல் மாய்ந்து மாய்ந்து கூவிக் கூவிச் சொல்கிறார்கள்.

காசு என்ற சொல்லைப் பழந்தமிழ் இலக்கியங்களில் எப்பொருளில் ஆண்டார் புலவர் என்று பார்ப்போம்.

அகநானூற்றில் மதுரை பொன்செய் கொல்லன் வெண்ணாகனாரின் பாலைத்திணைப் பாடல் –

“புல் இலை நெல்லிப் புகர் இல் பசுங்காய்
கல் அதர் மருங்கில் கடுவளி உதிர்ப்பப்
பொலம் செய் காசின் பொற் பத்தா அம்”

என்று உவமை சொல்கிறது.
புல்போன்ற இலைகளை உடைய நெல்லிமரத்தின் வடுக்கள் இல்லாத பசுமையான காய்கள், கல் நிறைந்த வழியெங்கும் கடுங்காற்றால் உதிர்க்கப் பெற்று, பொன்னால் செய்யப்பட்ட காசுகள் போலப் பரவிக் கிடக்கும் – என்பது பொருள். முற்றி, முதிர்ந்து, விளைந்து, பச்சை மங்கி மஞ்சள் பூத்து மினுமினுப்புடன் கிடக்கும் உருண்டு திரண்ட காட்டு நெல்லிக்காய்கள் இங்கே பொற்காசுகளுக்கு உவமை.
குறுந்தொகையில் இளங்கீரந்தையாரின் முல்லைத்திணைப் பாடல் –

“செல்வச் சிறாஅர் சீறடிப் பொலிந்த
தவளை வாஅய பொலம் செய் கிண்கிணிக்
காசின் அன்ன போதுஈன் கொன்றை
குருந்தொடு அலம் வரும்”

என்கிறது. செல்வர் வீட்டுச் சிறுவரின் சீறடிகளில் பொலிந்த ஆபரணத்தின் தவளை வாய் போன்று பொற்காசுகளால் செய்த கிண்கிணிகள் குருந்த மரத்துடன் அசைந்தாடும் கொன்றை மர மொட்டுக்கள் போலிருந்தன என்கிறார் புலவர்.

நற்றிணையில் காவன் முல்லைப் பூதனாரின் பாலைத்திணைப் பாடல், குமிழ் மரங்கள் பொன்னால் செய்த காசு போன்று பழங்களை உதிர்க்கும் என்கிறது.

எனவே காசு எனும் சொல் Cash என்ற  சொல்லின் மொழிமாற்றமோ, தற்பவமோ அல்ல என்பது தெளிவாகிறது. ஒருவேளை இங்கிருந்து அங்கே போயிருக்கலாம்.

ஐங்குறுநூறு நூலில், பாலை பாடிய ஓதலாந்தையார், ‘பொலம் பசும் பாண்டில் காசு நிரை அல்குல்’ என்பார். பொன்னாலான பசுமையான வட்ட வடிவக் காசுகளைக் கோர்த்து அணியாகப் பூணப்பெற்ற அடிவயிறு என்பது பொருள். நற்றிணையில் இனி சந்த நாகனார் பாடல், ‘காழ் பெயல் அல்குல் காசு முறை திரியினும்’ என்கிறது. அடிவயிற்றின் மேல் அணிந்துள்ள எட்டுக்கொத்துக்களை உடைய அரைப் பட்டிகையான காஞ்சி மாலையின் காசுகள் மாறிப் புரண்டு கிடந்தாலும் – என்று உரை சொல்கிறார்கள்.

குறுந்தொகையில் அள்ளூர் நன்முல்லையின் பாலைத்திணைப் பாடல் –

“உள்ளார் கொல்லோ தோழி! கிள்ளை
வளைவாய்க் கொண்ட வேப்ப ஒண்பழம்
புது நாண் நுழைப்பான் நுதிமாண் வள்உகிர்ப்
பொலங்கல ஒரு காசு ஏய்க்கும்
நிலம் கரி கள்ளி அம் காடு இறந்தோரே!’’

என்னும். பிரிவு ஆற்றாத தலைவி தோழிக்குக் கூறியது.

கிளி தனது வளைந்த அலகில் வைத்திருக்கும், மஞ்சளாய் ஒளிரும் வேப்பம்பழமானது, பொற் கம்பியினுள் காசு நுழைத்து காசுமாலை செய்யும் பொற்கொல்லனின் விரல் நகங்கள் பற்றியிருக்கும் பொற்காசு போலக் காட்சி தரும். வெப்பத்தால் நிலம் கரிந்து கிடக்கும் கள்ளிக் காட்டைக் கடந்து செல்லும்போது தலைவன் என்னை நினைத்துப் பார்க்க மாட்டாரா தோழி! – என்று உரை சொல்லலாம்.

புறநானூற்றில் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடலும்,

“ஆசு இல் கம்மியன் மாசறப் புனைந்த
பொலம் செய் பல்காசு அணிந்த அல்குல்”

என்று பேசும். தொழில் நேர்த்தியுள்ள பொற்கொல்லன், மாசில்லாமல் புனைந்த பொன்னால் செய்த பல் காசு மாலை அணிந்த அல்குல் என்பது பொருள்.

மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடிய திருமுருகாற்றுப்படை, ‘பல்காசு நிரைத்த சில் காழ் அல்குல்’ என்கிறது. பல மணிகளால் கோர்க்கப்பட்ட சில வடங்களை உடைய அணியை அணிந்த அல்குல் என்பது பொருள்.
கம்பன் எல்லாக் காண்டங்களிலும் சில பாடல்களில் காசு வாரி இறைக்கிறான். ‘காசடை’ என்றொரு சொல் பயன்படுத்துவான். அடை காசு, அடியில் தங்கிய மணி முதலியன என்பது பொருள். கிட்கிந்தா காண்டத்தில், பம்பைப் படலத்தில் ஒரு பாடலில், ‘காசின் கல்’ என்றொரு சொல் கிடக்கிறது. இரத்தினக்கல் என்று பொருள்.
காசு என்ற சொல்லைக் குற்றம் எனும் பொருளிலும் ஆள்கிறான். சுந்தர காண்டத்தில், காட்சிப் படலத்தில், அனுமனின் காட்சியாகப் பாடல்:

“கூசி ஆவி குலைவுறுவாளையும்
ஆசையால் உயிர் ஆசு அழிவானையும்
காசு இல் கண் இணை சான்று எனக்கண்டான் –
ஊசல் அடி உளையும் உளத்தினான்”

என்கிறது.

அருவருத்து உயிர் குலைகின்ற சீதையையும், காமத்தால் உயிருக்கு ஆதாரமான ஒழுக்கம் சிதைய நின்ற இராவணனையும், குற்றமற்ற இரு கண்களாலும் சாட்சியாக நின்று கண்ட அனுமன், தடுமாற்றம் அடைந்து உளைச்சல் அடையும் உளத்தினன் ஆனான் – என்பது பாடலின் பொருள்.

காசினம் – காசு+இனம் = மணி வகை எனும் பொருளில் கையாள்கிறான். காசு எனும் சொல்லை அழுக்கு எனும் பொருளில் பயன்படுத்துகிறான். சுந்தர காண்டத்தில், காட்சிப் படலத்தில், சீதையைத் தேடி அலைந்து கண்ட அனுமனின் மகிழ்ச்சியைச் சொல்லும் பாடல்:

“மாசுண்ட மணி அனாள், வயங்கு வெங்கதிர்த்
தேசுண்ட திங்களும் என்னத் தேய்ந்துளாள்;
காசுண்ட கூந்தலாள் கற்பும் காதலும்
ஏசுண்டது இல்லையால்; அறத்துக்கு ஈறு உண்டோ?”

என்று விளம்பும்.

மாசால் மூடப்பெற்ற மணி போன்றவள், பிரகாசமான வெம்மையான கதிரோனின் ஒளியால் ஒளி குறைந்த திங்கள் போலத் தேய்ந்துள்ளாள். அழுக்குப் படிந்த கூந்தலை உடைய சீதையின் உறுதிப்பாடும் இராமர் பால் அவள் கொண்ட காதலும் தாழ்ச்சி உறவில்லை. அறத்துக்கு அழிவு உண்டா? – இது பாடலின் பொருள்.

பால காண்டத்தில், தாடகை வதைப் படலத்தில், ‘காசு உலாம் கனகப் பைம்பூண் காகுத்தன்’ என்பான். நவமணிகள் கிடந்து அசைகின்ற பொன்னாலாகிய அணிகள் தரித்த இராமன் என்பது பொருள். இங்கு காசு என்றால் நவமணிகள்.

கம்பன், இராமாவதாரம் தொடங்கும்போது, பாயிரம் என்றழைக்கப்படும் நூல் முகமாகப் பாடிய பாடல்கள் மிகச் சிறப்பானவை. அவற்றுள் ஒன்று –

“ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையலுற்றேன் மற்று இக்
காசில் கொற்றத்து இராமன் கதை அரோ!”

என்பது முழுப்பாடல்.

ஓசைப்படும்படி அலையடிக்கும் பாற்கடலை அடைந்து, ஒரு பூனை இதனை முழுமையாக நக்கிக் குடித்து விடுவேன் என்று துணிந்து புகுந்ததைப் போல, ஆசையின் காரணமாக – இராம காதையை – குற்றமற்ற ஆட்சியைத் தரும் இராமனின் கதையை நான் கூறவந்தேன் – என்பது உரை.

காசில் கொற்றம் என்றால் காசில்லாத – கஜானா காலியான – அரசு என்பதல்ல பொருள். குற்றமும் மாசு மறுவும் இல்லாத அரசு என்று பொருள். கூற்றம் என்றால் யமன், கொற்றம் என்றால் ஆட்சி. கம்பனுக்கு கொற்றம் என்றால், அரசு என்றால், அது குற்றமற்று, இருத்தல் வேண்டும்.

மலையாளத்தில் கடுமையாக இலஞ்சம் வாங்குகிறவனைக் கோழை வீரன் என்பர். ஆம், அங்கு கோழை என்றால் Phlegm  ஒரு பொருள், கோழைத்தனம் கொண்டவன் இரண்டாம் பொருள், இலஞ்சம் மூன்றாம் பொருள். எனவே கோழை வீரன் என்றால் காசு வீரனும் ஆகும்.

ஆனால் கம்பளி விற்ற பணத்தில் மயிர் முளைக்குமா என்று கருதி ஆறுதல்படுகிறார்கள். அதாவது நாம் கேட்கிறோம் அல்லவா, நாய் விற்ற காசு குரைக்குமா என்று, அதுபோல!

மேலும் உபசார வார்த்தை காசாகாது!

உண்டால் ஒழிய பசி ஆறாது!

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டு… – நாஞ்சில் நாடன் குரல்: சுதா கிருஷ்ணமூர்த்தி

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

மற்றொரு வெளியேற்றத்தின் கதை

 

எட்டுத்திக்கும் மதயானை நாவலை முன்வைத்து

 

சுரேஷ் பிரதீப்

எட்டுத்திக்கும் மதயானை நாவலை வாசித்தபோது தி ஜானகிராமனும் அசோகமித்திரனும் இணையாக நினைவுக்கு வந்தபடியே இருந்தனர். தி ஜானகிராமனின் புனைவுலகம் தஞ்சைக் காவிரிக்கரையைத் தாண்டாதது. நகரங்கள் சித்தரிக்கப்பட்டாலும் அவை ஒரு கிராமத்து மனிதரின் அசூயையும் விலக்கமும் பிரம்மிப்பும் கலந்த சித்தரிப்புகளாகவே இருக்கின்றன. சிவஞானம், அடி போன்ற குறுநாவல்களை உதாரணமாகச் சொல்லலாம். அசோகமித்திரனுடையது முழுக்கவும் நகர்ப்புற மத்தியத்தர வர்க்க உலகம். பதற்றமும் நிலையின்மையும் அவசரமும் அந்த அவசரகதியிலேயே உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயமும் நிறைந்தவர்களால் ஆனது. தி ஜானகிராமனின் புனைவுலகில் வரும் மனிதர்களுக்குத் திட்டவட்டமான மண் சார்ந்த அடையாளம் உண்டு. அம்மனிதர்களின் உணர்வுகளைத் தீர்மானிப்பதில் அவர்களுடைய மரபுக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கிறது. ஒரு வகையில் மரபும் ஆசையும் மோதிக்கொள்ளும் வெளியாகவே திஜாவுடைய பாத்திரங்களின் அகம் கட்டமைக்கப்படுகிறது. மறுமுனையில் அமியின் பாத்திரங்கள் அடையாளமற்றவர்களாகத் தெரிகின்றனர். அவர்களை நினைவு மீட்டும்போது அவசரகதியில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு மனிதனின் முகத்தில் எதை நம்மால் அவதானிக்க முடியுமோ அது மட்டுமே நினைவுக்கு வருகிறது. தூக்கிட்டுக்கொள்ள முனைந்து தோற்றவளுக்கு ஆறுதல் சொல்லும் பெண்ணுக்குக்கூட அவளைத் தேற்றிவிட்டு எழுந்து சென்று பார்க்க உடனே ஒரு வேலை இருக்கிறது.

தமிழ்ச்சூழலில் நகர்ப்புற மற்றும் கிராமியச் சித்தரிப்புகள் தெளிவான வேறுபாடுகளைக் கொண்டவை. மேற்சொன்ன இரு முன்னோடி படைப்பாளிகளுடைய கதையுலகங்களும் இந்த வேறுபாட்டினையே அடையாளப்படுத்துகின்றன. இன்று எழுதும் படைப்பாளிகள் பலரிடமும் இந்த ‘மனநிலை வேறுபாடு’ தொனிப்பதை நம்மால் அவதானிக்க முடிகிறது. சோ தர்மன் நாவலில் வரும் ஒரு மூதாட்டி உணவைக் காசுக்கு விற்பதை எண்ணி மனம் குமைகிறார். லஷ்மி சரவணக்குமாரின் உப்பு நாய்கள் நாவலில் நாய் இறைச்சியை ஆட்டிறைச்சி என்று ஏமாற்றி விற்பது சொல்லப்படுகிறது. நேர்மாறான உதாரணங்களையும் சொல்ல முடியும். இந்த மனநிலை சார்ந்த வேறுபாடு என்பது வாழ்க்கைச்சூழலால் உருவாகிறது என்று நினைக்கிறேன். நகர்புற வாழ்வியலை எழுதும் படைப்பாளிகளுக்குக் கிராமம் ‘வந்துசெல்லும்’ இடமாகவே இருந்து வந்துள்ளது. கிராம வாழ்வியலை எழுதுகிறவர்களும் நகரத்தை அவ்வாறே அணுகுகின்றனர்.

நாஞ்சில் நாடன் இரண்டு வாழ்க்கையையும் அறிந்தவர். ஒரு வாழ்க்கையின் மதிப்பீடு இன்னொரு வாழ்வுடன் உக்கிரமாக மோதிக்கொள்வதை இந்த நாவலின் வழியே நாம் காண்கிறோம். எட்டுத்திக்கும் மதயானை நாவலின் இன்றைய பொறுத்தப்பாடு இந்த மோதலினாலேயே உருவாகிறது.

ஊரில் ஏற்பட்ட ஒரு தகராறினால் அங்கிருந்து பூலிங்கம் என்ற இருபது வயது இளைஞன் வெளியேறுகிறான். நிர்கதியாய் வெளியேறிச் செல்கிறவர்களின் கதைகள் தமிழில் நிறையவே சொல்லப்பட்டுள்ளன. கநாசுவின் பொய்த்தேவு ஓர் ஆரம்பகால உதாரணம். அநாதையான சிறுவன் சோமு மெல்லக்காலூன்றி வளர்ந்து வெற்றிபெற்று அனைத்தையும் விட்டுச்செல்வதைப் பேசும் நாவல் அது. குடும்பத்தில் இருந்து வெளியேறும் இத்தகைய மனிதர்களிடம் ஓர் அடிப்படை ஒற்றுமை உள்ளது. அவர்களுக்கு வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகள் குறித்துதான் அதிகக் கவலைகள் உள்ளன. அடுத்தவேளை எங்கு உறங்குவது என்ன உண்பது என்பதுதான் வெளியேறிச் செல்கிறவர்களின் அன்றாடத்தை இயக்கும் விசையாக உள்ளது. இந்த நாவலிலும் பூலிங்கம் ரயிலேறியது முதல் உண்பதையும் உறங்குவதையும் பற்றியுமே அதிகம் சிந்திக்கிறான். நாவலின் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் அடுத்த மூன்று பக்கங்களில் உண்பதோ சமைப்பதோ இடம்பெறுகிறது. இணையாகக் காமமும் குற்றங்களும்.

இது ஏன் எனக் கேட்டுப்பார்க்கலாம். நாஞ்சில் நாடன் இந்த நாவலில் சித்தரிக்கும் உலகம் உண்மையில் நம்மில் பலருக்கு அந்நியமான ஒன்று. குற்றங்கள் புழங்கும் வெளி. ஆனால் அது பூலிங்கத்தின் வழியாக ‘இயல்பானது’ என்பது போலக் காண்பிக்கப்படுகிறது. பூலிங்கம் வீட்டிலிருந்தும் ஊரிலிருந்தும் வெளியேறியவன். இப்படி வெளியேறுகிறவர்கள் அல்லது வெளியேற்றப்படுகிறவர்கள் உடனே இழப்பது இல்லம் அளிக்கும் பாதுகாப்பையும் ஊர் அளிக்கும் அடையாளத்தையும்தான். பெற்றுக்கொள்வது இல்லமும் ஊரும் அளித்த மதிப்பீடுகளைச் சுமப்பதில் இருந்து விடுதலை பெறுவது. இத்தகையவர்கள் நம்மிடம் சொல்லக்கூடிய கதையில் இல்லத்தில் இருப்பவர்களின் மதிப்பீடுகளும் நம்பிக்கைகளும் செல்லுபடியாவதில்லை. பொதுவாக ஒத்துக்கொள்ளப்பட்ட நியதிகள் ஏற்கத்தக்கதாகத் தெரியவில்லை. உயிர்வாழ்தற்காக மட்டுமே தினமும் உயிர்வாழ்வது உண்மையில் துன்பம் நிறைந்தது. இலக்குகள் கனவுகள் போன்ற எந்தக் கற்பிதமும் இன்றி அடுத்தவேளை உணவு குறித்து மட்டுமே சிந்திக்க விதிக்கப்பட்ட மனிதனுக்கு அவனுக்கு அடுத்த அடுக்கில் இருக்கும் மனிதர்களின் நெறிகளுடன் எப்போதுமே முரண்பாடு இருந்து கொண்டுதான் இருக்கும். பூலிங்கம் இந்த நாவல் முழுக்க அந்த முரண்பாட்டைத்தான் சிந்தித்துப் பார்த்துக்கொண்டே இருக்கிறான். அவனுடைய சிந்தனையும் ஆசிரியர் கூற்றும் பல சமயம் பிரித்தறிய முடியாத ஒத்திசைவைக் கொண்டிருப்பதால் ஆசிரியர் கூற்றாக வரும் பெரும்பாலான வரிகளை பூலிங்கத்தினுடையதாகவே எடுத்துக்கொள்ளலாம்.

நிலையான வாழ்க்கையில் உறவுகளும் நட்புகளும் வரையறை செய்யப்பட்டதாக இருக்கின்றன. அதே அளவு சுவாரஸ்யமற்றவையாகவும். ஆனால் பூலிங்கம் இந்த நாவல் முழுக்கப் பயணித்துக்கொண்டே இருக்கிறான். அவனுக்குக் கிடைக்கும் உறவுகளும் நட்புகளும் யூகிக்க முடியாத சுவாரஸ்யம் கொண்டவை. உதாரணமாக பானுமதி மற்றும் கோமதியுடனான பூலிங்கத்தின் உறவு. பானுமதி அவனை ஈர்க்க முயன்றுகொண்டே இருக்கிறாள். ஆனால் அவள்பால் அவன் மனம் சாய்வதே இல்லை. அவளைத் தேடித் தன்னிச்சையாகக் கால்கள் நகரும்போதுகூட மனம் அவளிடமிருந்து விலகுகிறது. மாறாக, கோமதியின் இயல்பான ஆதூரம் அவளுடன் பூலிங்கத்தை ஒன்றச் செய்கிறது.

வீட்டைவிட்டுப் புறப்படும்போது /தேடிப்பார்த்தால் அவனவன் உள்ளே ஓர் அநாதை ஒளிந்திருப்பான் போலும்/ என்று எண்ணும் பூலிங்கம்தான் நாவல் முடியும்போது /வீடெதற்கு? வீடென்பது கடுமையானதோர் ஒழுக்கத்தின் பாற்பட்டது/ என்றும் எண்ணுகிறேன். இந்த அகநகர்வை அவன் அடையும் இடைவெளியில் நாஞ்சில் நாடன் துரிதமாக நகரும் நவீன வாழ்வின் மீதான தனது அத்தனை விமர்சனங்களையும் வெளிப்படுத்திவிடுகிறார். நவீனத்துவத்தின் இருண்மையை நெருங்க அனைத்து வாய்ப்புகளையும் கொண்டிருந்தும் இந்த நாவல் ஒரு தனித்துவம்வாய்த்த பிரதியாக மாறுவது இத்தனை துயரங்களுக்கு மத்தியிலும் எத்தனையோ சமரசங்களைச் செய்து கொண்டும் வாழ்க்கையின் மீதான தேசத்தைக் கைவிடாத மனிதர்களைச் சித்தரிப்பதனால்தான்.

பூலிங்கம் தன்னுடைய கிராமத்தையும் தன்னுடைய நகர் வாழ்க்கையையும் ஒப்பிட்டுக்கொண்டே இருக்கிறான். நாவலில் இப்படி ஒரு பத்தி வருகிறது.

/நகரம் மனிதனின் வெட்கம், மானம், ரோஷம் எல்லாவற்றையும் சாயம் போகச் செய்துவிடும் போலும். ஊரானால், தான் செய்யும் குற்றங்களை எண்ணிப் பார்த்திருக்க முடியுமா? ரகசியமாய்க் குற்றம் செய்வதைப் பற்றி மனிதனுக்குப் பெரிய மனச்சாட்சிக் குத்தல்கள் இல்லை. காரியம் எல்லாம் அடுத்தவன் தெரிந்துகொள்வதில்தான். வாழ்வின் மதிப்பீடு என்பது பழகிய தெருவிலும் ஊரிலும் உறவுகளிலும் மட்டும் பயிராகும் செடி போலும்./

கிராமம் சமூக உறுப்பினர்களால் ஆனது என்றால் நகரம் தனிமனிதர்களால் ஆனது. கிராமம் தொடர்ந்து தன்னுடைய உறுப்பினனைக் கண்காணித்துக்கொண்டே இருக்கிறது. நகரில் அதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. பெற்றோருடன் வசித்த ஒரு சிறுவனின் பதின்பருவத்தில் கல்லூரி விடுதியில் கொண்டு சென்றுவிடும்போது அவன் அடையும் திகைப்பும் பரவசமும்தான் ஊர்க் கண்காணிப்பில் வாழ்ந்த ஒரு மனிதன் நகருக்குள் வரும்போது அடைகிறான். அதுவரை அவன் நம்பிய கடைபிடித்த சில மதிப்பீடுகள் நொடித்து இல்லாமல் ஆவதைக் கண்முன்னே காண்கிறான். ஊரை விட்டு வெளியேறிய கொஞ்ச நாளிலேயே பூலிங்கம் கடத்தல்காரனாகிறான். ஒரு சமயம் கொலைகாரனாகக்கூட மாறுகிறான். ஊருக்குத் திரும்பிச்செல்ல வேண்டும் என்ற ஏக்கம் தன்னிடம் இருப்பதாக அவன் நம்பிக்கொண்டிருந்தாலும் நகரத்தின் கவர்ச்சி அவனை மீண்டும் மீண்டும் அமிழ்த்துகிறது. குற்றச்செயல்கள் தரும் பணத்தில் திளைக்கிறான். அவன் செய்யும் குற்றங்கள் அனைத்தும் பூலிங்கம் என்ற ‘அடையாளமற்றவனின்’ குற்றங்களே.

/பிடிபட்டபின்தான் திருடன், கொலையாளி, விபச்சாரி எல்லாம். பிடிபடாதிருப்பது முக்கியம்/

இந்தத் தர்க்கம் நாவலின் பல பக்கங்களில் வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லப்படுகிறது.

/யோக்கியமாக இருத்தல்கூட அவ்வளவு முக்கியமில்லை. யோக்கியமாகத் தென்படுதல் முக்கியம்/

/பணம் வேணும் எல்லாத்துக்கும். பணம் எல்லாக் கறையையும் கழுவிப்போடும். கழுவாட்டாக்கூட பெயிண்டாவது அடிச்சிரும்/

நியதிகளால் வகுக்கப்பட்ட ஒரு பழைய வாழ்வுக்கும் வெல்வதும் வெல்லப்படுவதுமே நோக்கமென மாறிவிட்ட ஒரு நவீன வாழ்வுக்கும் இடையே நிற்கும் அல்லது இடையே சிக்கிக்கொண்ட மனிதனாக இந்த நாவலில் பூலிங்கம் வெளிப்படுகிறான். அவன் வழியே ஒட்டுமொத்தமாக வாழ்க்கையின் பெறுமானம் என்ன என்று இந்த நாவல் தேட முயல்கிறது. எந்தக் கணத்திலும் அறம் என்று சொல்லப்பட்ட ஒன்றைப் பேணிக்கொள்ள அனுமதிக்காத வாழ்க்கையின் சித்தரிப்புகளால் மட்டுமே கட்டமைக்கப்பட்டது போன்ற ஒரு தோற்றத்தை நாவல் ஏற்படுத்துகிறது. நாவலின் தரிசனம் என்றும் இதையே சொல்லத் தோன்றுகிறது. திஜாவின் மோகமுள் நாவல் குறித்து எழுதிய கட்டுரையில் பாபு வாழ்வு குறித்துக் கற்பிக்கப்பட்ட புனைவுகளிலிருந்து வெளியேறுகிறான் என்று எழுதியிருந்தேன். பூலிங்கத்தினுடையதும் அத்தகையதொரு வெளியேற்றமே. இந்த வெளியேற்றம் மேலும் உக்கிரமானதாக இருக்கிறது.

நாவலின் தொடக்கத்தில் உயர்ஜாதிப் பெண்ணான செண்பகத்துடன் பூலிங்கத்துக்குத் தொடர்பிருப்பதாக பரவிய வதந்தியால்தான் அவன் ஊரைவிட்டு வெளியேறுகிறான்.நாவல் பூலிங்கத்துடன் செண்பகம் வெளியேறும் இடத்தில் முடிவது ஒரு நல்ல நகைமுரண். நாவலின் இறுதி அத்தியாயங்களில் செண்பகத்தின் மறுவருகையும் அவளுக்கு ஏற்படும் சிக்கல்களும் சற்று செயற்கையானதாக, நாவலின் அதுவரையிலான இயல்பான ஒழுக்குடன் இசையாததுபோலத் தெரிகின்றன. வலிந்து நுழைக்கப்பட்டது போலத்தெரியும் அவ்வத்தியாயங்களைத் தவிர்த்துப் பார்த்தால் எட்டுத்திக்கும் மதயானை ஒரு கச்சிதமான நாவல்.

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!

பாரதியின் அந்தப் பாடலை யதுகுல காம்போதி ராகத்தில் பாடுவார்கள். எட்டே வரிகள்தான் பாடலுக்கு.

“காக்கைச் சிறகினிலே நந்தலாலா – நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா!”

என்பன முதலிரண்டு வரிகள். இறுதி இரண்டு வரிகள் இறையனுபவத்தின் உன்மத்த நிலையைச் சுட்டிக்காட்டுவது-

“தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா – நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதையே நந்தலாலா!”

என்பன. பாரதிக்கு இவை சாத்தியப்பட்டிருக்கின்றன.

 “நச்சை வாயிலே கொணர்ந்து நண்பர் ஊட்டு போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!”

என்பன அத்தனை இலகுவான வரிகள் அல்ல!

இஃதோர் ஆன்மீகக் கட்டுரை இல்லை என்பதாலும், அதற்கான முற்பிறப்பின் வரமும் முன்னோர் செய் தவமும் அருளப் பெறாததாலும், கவிதை நயத்துக்காகவே மேற்சொன்ன பாடல் வரிகளை எடுத்தாண்டேன். உ.வே.சாமிநாதைய்யர் திருவண்ணாமலை இரமண மகரிஷியிடம் கூறியதைப் போல தமிழனுபவமே நமக்கும் இறையனுபவம்!

காக்கையின் சிறகின் நிறத்தில் நந்தலாலாவின் நிறத்தைக் காண்கிறான் பாரதி. அது அண்டங்காக்கை. கருங்காகம், ஊர்க்காகம் என்றாலும் இறகின் நிறம் கருப்புதானே! கார்மேகத்தில் அவன் நிறம் கண்டு கார்மேக வண்ணன், கருமுகில் வண்ணன், மழை வண்ணன், நீல மேகச் சியாமள வண்ணன் என்றனர். அடர்ந்து செறிந்த கரிய மயிர்க்கற்றையின் வண்ணத்தால் ஈர்க்கப்பட்டு கார்குழல் வண்ணன் என்றனர். “மையோ, மரகதமோ, மழை முகிலோ, மறிகடலோ!” என்பார் கம்பர். தொண்டரடிப் பொடி ஆழ்வார், “பச்சை மாமலை போல் மேனி! பவளவாய், கமலச் செங்கண்” என்றார். கரிய செம்மல், அஞ்சன வண்ணன் என்பார் மேலும் கம்பர். அஞ்சனம் என்றாலும் மைதான். எல்லாரும் இந்த வண்ணங்களில் குறிப்பிடுவதையே காக்கைச் சிறகின் நிறத்துக்கு உவமை சொல்கிறார் பாரதி. காக்கை சங்க இலக்கியங்களில் அகநானூற்றிலும், ஐங்குறுநூறிலும், குறுந்தொகையிலும், நற்றிணையிலும், பரிபாடலிலும், புறநானூற்றிலும், பதிற்றுப் பத்திலும் பேசப்பட்ட பறவை.

எனக்குத் தோன்றுகிறது கண்ணனின் நிறத்துக்குக் காக்கையின் நிறத்தை உவமை சொன்ன புலவன் பாரதியாகவே இருக்க வேண்டும். நம்முடன் குடும்ப உறுப்பினர் போலக் கூடிக் கிடப்பதாலேயே காகம் மலிவான பறவையாக ஆகி விடாதல்லவா! சீதையின் முலையைக் கொத்த வந்த வீரமும் துணிவும் காக்காசுரனுக்குத்தான் இருந்தது என்றால் அது இராவணனின் மறம் அல்லவா!

பாரதி நந்தலாலாவின் நிறத்தைக் காக்கையின் கரிய நிறத்துக்கு உவமை சொல்கிறார். கருடனையும், செண்பகத்தையும், குயிலையும், மயிலையும், மைனாவையும், வால் நீண்ட கருங்குருவியையும், கிள்ளையையும் அவன் பேசவில்லை இந்த சந்தர்ப்பத்தில்.

பாரதியின் நந்தலாலாவைப் பரிச்சயம் கொண்டோம். நந்தன் எனும் சொல் சமற்கிருதம் என்கின்றன அகராதிகள். ஒலி அமைப்பில், எழுத்து அமைதியில் தமிழ்ச் சொல்லே போல ஒலிக்கும் சொல் அது. நந்தன் எனும் சொல்லின் பொருள் – கண்ணன், நந்த கோபாலன், இடையன்.

பாடலிபுத்திரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்ட அரச வம்சத்தினர் எனும் குறிப்பு தரப்பட்டுள்ளது. நந்தன் என்றால் மகன், புத்திரன் எனும் பொருள் தருகிறது இலக்கண அகராதி. நந்தன் எனும் சொல்லுக்குப் புத்திரன், கண்ணனின் பிதா என்கிறது இலக்கியச் சொல்லகராதி.

திரு நாளைப் போவார் நாயனாரின் இயற்பெயர் நந்தன். எளிய பாரதப் பிரதமராக இருந்த குல்ஜாரிலால் நந்தா என்பவரின் பெயர் யாருக்காவது நினைவிருக்குமா? திருநாளைப் போவாரின் வேறு நிலைப்பாட்டுப் பெயரே நந்தனார் என்பது. இசை முரசு எம். எம். தண்டபாணி தேசிகர் நடித்த ‘நந்தனார்’ எனும் திரைப்படத்தின் பாடல் கேட்டுப் பயனடையலாம்.

அக நானூற்றில் மாமூலனார் பாடலில் நந்தன் எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. நந்தன் வட நாட்டில் இருந்து படை கொண்டு தென்னாட்டுக்கு வந்த மௌரிய மன்னன் என்று உரை சொல்கிறார்கள். அகநானூற்றில் மற்றொரு பாடல் மாமூலனார் பாடியது, ‘பல் புகழ் நிறைந்த வெல் போர் நந்தர்’ என்கிறது. அந்தப் பாடலிலேயே பாடலி எனும் சொல் பாடலிபுரம் எனும் பொருளில் குறிக்கப்பட்டுள்ளது.

இப்படித்தான் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய வரலாற்றுக் குறிப்புகள் இலக்கியங்கள் மூலமாகவும் இன்று சான்றுரைக்கின்றன. காழ்ப்பற்ற, வஞ்சமும் சூதுமற்ற, வெளிப்படையான, தமிழ்ப்புலவன் வழி நெடு வரலாற்றை, மரபை, புராணங்களை விதைத்துச் செல்கிறான். அவனது அனுபவமும், ஞானமும், தெளிவும், படைப்பு ஆற்றலும் புரிதலும் வியப்பேற்படுத்துகின்றன.

சித்திரையில் பிறக்கும் புத்தாண்டின் வரிசையில் அறுபதனுள், நந்தன என்பது இருபத்தி ஆறாவது. நந்தனன் என்றால் குமரன் என்று பொருள் தருகிறது சூடாமணி நிகண்டு.

நந்தனின் பெண்பால் பெயர் நந்தினி. மகள் என்றும், தெய்வ ஆக் கன்று என்றும் பொருள் தரப்பட்டுள்ளது. ஆக் கன்று என்றால் பசுங்கன்று என்று பொருள். ஆ – பசு, ஆவினம் – பசுவினம், ஆவின் பால் – பசுவின் பால். பால்வள நிறுவனங்கள் எதைக் கலக்கித் தருகின்றன என்பதை நாம் அறிய மாட்டோம். குழந்தைகள் முதல் முதியோர் வரை வாங்கிக் குடிக்கும் பாலிலும் ஊழல் செய்யும் பண்பாடு நம் தேசத்தவர்க்கு. நந்தனோ, நந்தினியோ வந்து காத்தருள்வர் என்ற நம்பிக்கையும் செத்து விட்டது.

நிறுவனங்கள் மூலம் பால் பண்ணை வைத்து மக்களுக்குப் பால் விநியோகம் செய்யும் அமைப்புக்களின் பெயர்கள் – அமுல், மில்மா, நந்தினி, ஆவின்….

சென்ற கிழமையில் குடியிருக்கும் பகுதியில் நடைப் பயிற்சி போனபோது, புகழ் பெற்ற இந்தியப் பால் நிறுவனத்தின் முகவர் கடைக்குள் நுழைந்தேன். அந்த நிறுவனத்தின் மோர் பாக்கெட் கண்ணில் பட்டது. வடநாட்டில் சாஸ் என்றழைக்கும், நாம் வழக்கமாகப் பயன்படுத்தாத மசால் பொடி தூவிய மோர் மணக்க மணக்க இருக்கும். என் கண்ணில் பட்ட மோர் அந்த வகைப்பட்டது. ஆசைப்பட்டு இரண்டு பாக்கெட் வாங்கினேன். ஒரு லிட்டர் பாக்கெட் மோரின் விலை ஐம்பது பணம். வீட்டில் வந்து பார்த்தபோது, தயாரிப்பு மாதம் மார்ச் 2021 என்றிருந்தது. ஆகஸ்ட் மாதம் ஆகி விட்டதே எனும் பதற்றத்தில் பாக்கெட்டைத் திருப்பித் திருப்பிப் பார்த்தபோது ஆறு மாதத்திற்குள் பயன்படுத்துவது சிறப்பு என்ற தகவல் இருந்தது. எல்லாரும் குடித்தாலும், மனதிற்குள் ஒரு முணுமுணுப்பு, ஆறுமாதம் முன்பு கலக்கிய மோரைக் குடிக்கிறோமே என்று! நம்மையே நாம் நொந்து கொள்ளலாம்.

பாற்கடல் கடைந்தபோது வந்த காமதேனுப் பசுவின் மகள் நந்தினி என்பது புராணம். எந்தப் பசு எவர் உடைமை என்பது வேறு சங்கதி. ஆகவே நந்தினி என்ற சொல்லுக்கு தெய்வ ஆக் கன்று என்று பொருள்.

புதல்வி என்று பொருள் தரும் நந்தனை என்றும் ஒரு சொல்லுண்டு. யாழ்ப்பாண அகராதி, நந்தினி என்ற சொல்லுக்கு நந்தனை என்றே பொருள் தருகிறது. நந்தனன் என்றால் குமரன், மகன் என்று பொருள். யாழ்ப்பாணத்து சுன்னாகம் அ. குமாரசாமிப் பிள்ளை 1914 இல் வெளியிட்ட இலக்கியச் சொல்லகராதி, நந்தனன் என்றால் புத்திரன், மகிழ்விப்பவன் எனப் பொருள் தருகிறது.

நந்தன் எனும் பெயரிலேயே சில இசைப்பாடல் நூல்கள் உண்டு. நந்தனார் சரித்திரக் கீர்த்தனை என்று கோபாலகிருஷ்ணையர் 1915 இல் வெளியிட்ட நூலொன்று உளதாக அறிகிறேன். 19ஆம் நூற்றாண்டு நூலாகிய ‘நந்தன் கீர்த்தனை’ எனும் நூல் கோபால கிருஷ்ண பாரதி இயற்றியது. அது நாமறிந்த தகவல். நந்தன் கீர்த்தனை வரலாறு என்றொரு நூலும் இருந்ததாகத் தகவல். தமிழ் இலக்கிய அகராதி, 1953 ஆம் ஆண்டில் ந. சி. கந்தையா பிள்ளை தொகுத்தது, அந்த நூலை ஆக்கியோர் பெயர், வெளியான ஆண்டு போன்ற தகவல்களை அறியத் தரவில்லை.

ஆனால் அவர் 1894 ஆண்டு, ‘நந்த மண்டல சதகம்’ எனும் நூல் பற்றிக் குறிப்பிடுகிறார். நந்தன் எனும் அரசன் மீது பாடப் பெற்றது. ஆசிரியர் பெயர் அறியேம். பிரமபுரி திருவேங்கடம் பிள்ளை அந்த நூலுக்கு உரை எழுதியுள்ளார். எங்காவது நூலகங்களில் தேடினால் கிடைக்கக் கூடும்.

நந்த கோபாலன் குமரன் என்றால் கண்ணன் என்பதறிவோம். ஆண்டாள் அருளிய திருப்பாவை முப்பதின் முதற் பாடல் ‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்’ என்று தொடங்கும். இந்த முப்பது பாடல்களையும் எம். எல். வசந்த குமாரி பாடிய பதிவைப் பல முறை கேட்டிருக்கிறேன். முதல் திருப்பாவையின் இரண்டு அடிகள்,

“கூர்வேல் கொடுந்தொழிலன் நந்த கோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்”

என்று வரும்.

நந்த கோபாலன் என்றால் கண்ணன் என்றும், கண்ணனின் வளர்ப்புத் தந்தை என்றும் பொருள் தரப்பட்டுள்ளன. 18-ஆவது திருப்பாவையில் ஆண்டாள்,

“உந்து மதக் களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்த கோபாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடை திறவாய்!”

என்று பாடுவாள்.

எதற்கு இவனுக்கு இப்போது நந்தன் பற்றிய சிந்தனையும் தேடலும் என்று எவர்க்கேனும் தோன்றலாம். சொல்வனம் 249 ஆவது இதழில் எனது ‘எதிர்ப் பை!’ எனும் கட்டுரைக்கு எதிர்வினையாக திரு. இலட்சுமி நாராயணன் ஒரு வினா எழுப்பி இருந்தார்.

‘நந்தவனம் என்ற சொல்லின் பொருள் பூக்காடு, பூந்தோட்டம் என்பது சரி! ஆனால் நந்தவனம் எனும் சொல்லை நந்தம்+ வனம் என்று பிரித்தால், நந்தம் என்ற சொல்லின் பொருள் என்ன? நந்தம் எனும் சொல்லுக்கு நந்து, சங்கு, நாரத்தை, சவ்வாது, கஸ்தூரி, காக்கை, பெருமுயற்சி, குபேரனின் பெரு நிதியங்களில் ஒன்று என்பன. நந்தா விளக்கு என்றால் அணையா விளக்கு! நந்துதல் என்றால் மெதுவாகச் செல்லுதல்!’ இது அவரது ஐயம் அல்லது தெளிவு.

நந்தவனம் எனும் சொல் நந்தம்+ வனம் என்று பகுபடுமா அல்லது நந்த+வனம் எனப் பகுபடுமா என்பது அறித்திருப்பேன் எனில் ஓய்வூதியமாக மாதம் 1418 பணம் பெற்றுக் கொண்டிருக்க மாட்டேன் பதினேழு ஆண்டுகளாக!

நந்தவனம் எனும் சொல் இருபெயரொட்டு எனும் பிரிவில் வரும் என்கிறார்கள். எடுத்துக் காட்டு – உபவனம், பூங்கா, உபவாசம் எனும் சொற்கள். கோயில் அல்லது அரண்மனை சார்ந்த பூந்தோட்டம், நந்தவனம் என்று வழங்கப் பெற்றது என்றும் சொன்னார்கள்.

பழைய ராஜா-ராணி சினிமாக்களில் கையில் பூங்கொத்து வைத்துக் கொண்டு காமம் பெருக்கும் பாடல்கள் பாடி, வரைவின் மகளோ என எண்ணும்படி உடலுறுப்புகளை அசைத்துக் காட்டி நாயகனும் நாயகியும் காதல் செய்த இடம் நந்தவனம்.

நந்தவனம் என்றால் பூந்தோட்டம் என்றும், அஃதோர் வட சொல்லின் தமிழ்ப் பிறப்பென்றும் கூறுகின்றன அகராதிகள். நந்தவனம் எனும் சொல் பத்துப்பாட்டு, எட்டுத் தொகை நூல்களில் இல்லை. திருக்குறளில் இல்லை, நாலடியாரில் இல்லை, திருவாசகத்தில் இல்லை.

நந்தனம் என்பது மற்றுமோர் சமற்கிருதச் சொல்லின் தமிழ் வடிவம். தற்சமம்- தற்பவம் இலக்கணங்களுக்குள் வரையறுக்கப்பட்டு, வட எழுத்து ஓரீ இ, தமிழில் புழங்குகிறது. பொருள் பூந்தோட்டம், நந்தவனம், மகிழ்ச்சி என்பன. தமிழ் நாட்டின் அரசியல் – அதிகாரம் – தரகு – சினிமா இவற்றின் தலைநகரமான சென்னையில் ஒரு பகுதி நந்தனம் என்று வழங்கப் பெறும். மகிழ்ச்சி! (மகிழ்ச்சி எனுமிந்தச் சொல் பல்லுலக நாயகன், இந்திய அரசால் பத்ம விபூஷன் விருதளித்துச் சிறப்புச் செய்யப்பட்ட நடிகர், பஞ்ச் டயலாக்காகப் பயன்படுத்திய சொல்.)

நந்தனம் எனும் சொல் வேறு பொருள்களில் வழங்கப் பெறும் தமிழ்ச் சொல்லுமாம்! நந்தனம் என்றால் நந்து, நத்தை என்கிறது சங்க அகராதி. தவளை என்கிறது யாழ்ப்பாண அகராதி. நண்பர் எதிர்வினையில் குறிப்பிட்டது போல, நந்தனம் என்றால் நாரத்தையும் ஆகும்.

நந்தனவனம் என்றொரு சொல்லும் கிடைக்கிறது. வடசொல் பிறப்பு. பொருள் தேவர்கோன் அதாவது இந்திரனது பூங்காவனம் அல்லது பூந்தோட்டம். சோலை என்று பொருள் சொல்லும் பிங்கல நிகண்டு, 

நந்தாவனம் என்ற சொல் ஒன்றும் கண்டேன். பொருள் நந்தவனமேதான். ‘நறுமலர் பொய்கையும் நந்தாவனமும்’ என்று பெருங்கதையின் பாடல்வரி மேற்கோளாகத் தரப்பட்டுள்ளது.

நந்தனுடைய வனம் எனவே நந்தவனம் என்றும் பொருள் சொல்கின்றனர். நந்தன் யாரென முன்பே பார்த்தோம். பிருந்தாவனம் என்றுமோர் சொல்லுண்டு. ‘பிருந்தாவனமும் நந்தகுமாரனும்’ என்பது அந்த காலத்தில் புகழ் பெற்றதோர் சினிமாப்பாட்டு. பிருந்தம் என்ற சொல்லுக்குத் துழாய் – துளசி என்று பொருள். பிருந்தா என நாமம் தரித்தவரின் பெயர்ப்பொருள் – துழாயம்மை, துளசியம்மை. பிருந்தை என்றாலும் துழாய்தான் பொருள். மற்றொரு பொருள் நெருஞ்சி. எனவே பிருந்தாவனம் என்றால் துழாய்க்காடு, துளசிக்காடு என்று கொள்ளலாம் – நெருஞ்சிக்காடு என்பதைத் தவிர்த்து விடலாம்.

சில தாவரங்களின் பெயர் நந்த என்று தொடங்குகிறது.

நந்தகாரி    – சிறுதேக்கு

நந்தமாலம்  – புன்கு  (திவாகர நிகண்டு)

நந்தகி      – திப்பிலி, சிறுதேக்கு  (யாழ்ப்பாண அகராதி)

நந்தாமணி  – வேலிப்பருத்தி

நந்திபத்தரி  – நந்தியாவட்டம்

நந்தியாவர்த்தம் – நந்தியாவட்டம் (திவாகர நிகண்டு)

நந்திவட்டம், நந்தியாவர்த்த தாமன் என்றால் நந்தியாவட்ட மாலை அணிந்தவன் – துரியோதனன் என்கிறது சூடாமணி நிகண்டு.

நந்திவட்டம்    – நந்தியாவட்டம் – ‘நந்திவட்டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே!’ – தேவாரம்

நந்தி எனும் சொல்லுக்கு வழங்கப்பெறும் பத்து பொருள்களில் ஒன்று நந்தியாவட்டம். கபிலர் இயற்றிய குறிஞ்சிப்பாட்டு,

“வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்
தும்பை, துழாய், சுடர்பூந்தோன்றி
நந்தி, நறவம், நறும் புன்னாகம்
பாரம், பீரம், பைங்குருக்கத்தி ‘

எனும் வரிகளில் குறிப்பிடப்படும் நந்தி எனும்சொல்லுக்கு நந்தியாவட்டம் என்றே உரை எழுதுகிறர்கள். குறிஞ்சிப்பாட்டில் பாடப்பெற்றுள்ள மலர்களை மனப்பாடம் செய்து மேடை தோறும் சொல்லிக் கரவொலி வாங்கி அமைச்சரான ஆட்கள் இருந்தனர்.

நந்தி என்றால் மதகரி வேம்பு என்றும் நன்றாக விளையாத பூசணிக்காய் என்றும் பொருள் தரப்பட்டுள்ளன. சாம்பல் பூசணிக்காயை மலையாளம் நீற்றுப் பூசணி என்னும். அதன் இன்னொரு பெயர் நந்திப் பூசணி. பரங்கிக்காயை நாஞ்சில் நாட்டில் பூசணிக்காய் என்பர். கொங்குநாட்டில் அரசாணிக்காய், நாங்கள் இளவன்காய் அல்லது தடியன்காய் என்பதை மலையாளம் மத்தன்காய் என்பதை தமிழ்நாட்டின் பிறபகுதிகளில் பூசணிக்காய் என்பர். அதற்காக நாங்கள் தனிநாடு கோர இயலுமா?

நந்தகம் என்றொரு சொல் கேள்விப்பட்டதுண்டா? வாள் என்று பொருள் தருகிறது யாழ்ப்பாண அகராதி. திருமாலின் வாள் நந்தகம் எனும் பெயரில் வழங்கப் பெற்றுள்ளது. தெய்வங்களின் சங்குகளுக்கு, வில்களுக்குப் பெயர் இருப்பதைப் போன்று, நந்தகம் வாளின் பெயர்.

நந்தகன் என்றுமோர் சொல் உண்டு. பொருள் நந்தகோபன். பூந்தோட்டம் அமைத்தலை நந்தவனம் பிரதிஷ்டை என்று வழங்கியுள்ளனர்.

நந்தாவிளக்கு என்பது யாவரும் அறிந்த சொற்றொடர். கோவில் கருவறையின் அவியா விளக்கு, அணையா விளக்கு, வாடா விளக்கு, தூண்டா விளக்கு. திருத்தக்க தேவரின் சீவகசிந்தாமணி ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று. அதன் முத்தி இலம்பகப் பாடலொன்று:

செந்தாமரைக்கு செழுநாற்றம் கொடுத்த தேங்கொள்
அந்தாமரையாள கலத்தவன் பாதம்  ஏந்திச் 
சிந்தாமணியின் சரிதம் சிதர்ந்தேன் தெருண்டார்
நந்தாவிளக்குச் சுடர் நன்மணி நாட்டப் பெற்றே’

என்பது. 

சீவகசிந்தாமணியில் 13 இலம்பகங்கள், 3145 பாடல்கள், அவற்றுள் மேற்சொன்ன பாடல் என்பது 3144-வது பாடல்.

சீவகசிந்தாமணியின் முதற்பதிப்பு, நச்சினார்க்கினியர் உரையுடன், உ.வே.சாமிநாதையர் பல சுவடிகளை ஒப்பு நோக்கி, 1887-ம் ஆண்டில் வெளியிட்டார். தமிழ்ப் பல்கலைக்கழகம் 1986-ல் ஒரு பதிப்பு வெளியிட்டது. அதெல்லாம் பொருட்டில்லை நமக்கு. ஆனால் உ.வே.சா வின் முழுப்பெயரை வசதிபோல் திருத்துவோம். சரி உரையைப் பார்ப்போம் – ‘செந்தாமரைக்கு நாற்றம் கொடுத்த அந்தாமரையென்றது, இறைவன் திருவடிகளை. அந்தாமரையை ஆளுகின்ற விரிந்த ஞானத்தை உடையவனென்றது சீவகனை. சிதர்ந்தேன் என்றது பரக்கக் கூறினேனென்றவாறு. அவியாத விளக்கு உள்ளே நின்று எரிகின்ற நன்மணி என்றது, குருக்களை.’

நந்தாவிளக்கு எனும் சொற்றொடரை ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று ஆண்டுள்ளது என்பதைக் குறிக்கவே இத்தனை அதிகப்பிரசங்கம். ஆனால் தேடிக்கொண்டு போனபோது, பட்டினப்பாலை, நந்தாவிளக்கு எனும் சொற்றொடரை ஆள்வதை அறிந்தேன். கண்ணதாசன் ஒரு கவிதையில் சொல்வார் ‘நம்பிக்கை என்னும் நந்தாவிளக்கு உள்ள வரையில் உலகம் நமக்கு’ என்று. சின்னஞ்சிறுவயதில் வீரநாராயண மங்கலத்தின் தெக்கூரில், வேதக்கோயிலில், ஞாயிறு காலையில் ஒலிபெருக்கியில் கேட்கும் பாடல் –

‘தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும்
தேடுங்கள் கிடைக்கும் என்றார் – ஏசு
தேடுங்கள் கிடைக்கும் என்றார்’

என்பது. ஆயிரம் முறை கேட்டிருப்பேன். சும்மா கதைக்கிறேன் எனக் கருதல் வேண்டா. அந்து வயதில் இருந்து, ஊரில் வாழ்ந்த இருபத்தைந்து வயது வரை இருபதாண்டுகள் எனக் கணக்கில் கொண்டு பாருங்கள். 52 × 20 = 1040 ஞாயிற்றுக்கிழமைகள் வரும் உத்தேசமாக, அன்று கேட்டபாடல் ‘இளமையில் கல்’ எனப் பாரதியை நினைவு படுத்தும். அதுவே நம்பிக்கை என்னும் நந்தாவிளக்கு.

பட்டினப்பாலை பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று. சோழன் கரிகால் பெருவளத்தானை கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது. அந்த நூலில்,

நீரின் வந்த நிமிர்ப் பரிப்புரவியும்,
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலை பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்,
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்”

என்று காவிரிப்பூம்பட்டினம் வந்தடைந்த பல்பொருள் வளங்கள் பேசும் பாடல் அடிகள் இவை. பொருளும் சொன்னால் பாடலின் அருமை அர்ததமாகும் என்பதால் அரங்கின்றி வட்டாடுகிறேன்.

கடல்மார்க்கமாக நிமிர்வும் விரைவும் உடைய குதிரைகள் வந்தன. நிலத்தின் வழி காளைமாட்டு வண்டிகளில் கரிய மிளகு மூடைகள் வந்தன. வடமலையில் தோன்றிய மாணிக்கங்களும் பொன்னும் வந்தன.குடகுமலை பிறந்த சந்தனமும் அகிலும் வந்தன. தென்கடல் கொற்கையில் பிறந்த முத்துக்கள் வந்தன. கிழக்குக் கடலில் இருந்து பவளங்கள் வந்தன. கங்கையாற்று வளத்தால் விளைந்தவையும் காவிரியாற்றுப் பயனும் வந்தன. ஈழத்தின் , கடாரத்தின் பண்டங்கள் வந்தன.

எத்திசையிலும் இருந்து தமிழ்நாட்டுக்குத் திரவியங்கள் வந்தது போலவே, 27 மொழிகளின் 20,000 க்கும் மேற்பட்ட சொற்களும் வந்தன. அவை போற்றப் பெற்றன, புழங்கப் பெற்றன, இதனையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

சரி! நந்தா விளக்குக்கு வருவோம்!

“கொண்டிமகளிர் உன்துறை மூழ்கி
அந்தி மாட்டிய நந்தாவிளக்கின்
மலரணி மெழுக்கும் ஏறிப் பலர் தொழ”

என்பன பட்டினப்பாலையின் பாடல்வரிகள்.

பகை நாட்டவரைப் போரில் வென்று சிறைப்பிடித்து வரப்பட்ட பெண்டிரைக் கொண்டி மகளிர் என்றனர். அவர்கள் திருக்கோயில்களில் பணிசெய்ய விடப்பட்டனர். அவர்கள் நீர் உண்டு கிடக்கும் துறைகளில் நீராடி, மாலைப்பொழுதுகளில் கோயில்களில் அணையாத விளக்குகளை ஏற்றினர். அவை இரவு முழுக்க எரிந்து கொண்டிருந்தன. தரை மெழுகி, மலர் தூவி இடப்பெற்ற அம்பலத்தில் ஏறிப் பலரும் தொழுதனர். இது பாடல் வரிகளுக்குப் பொருள்.

நந்தவனம் எனும் சொல் நந்தனின் வனம் என வடமொழிப் பொருள் சொல்லும்போது நந்துதல் என்றால் வளர்தல் எனத் தமிழ்மொழிப் பொருளில்  நந்தவனம் என்றால் செழித்து வளரும் வனம் என்று பொருள் தருகிறார்கள்.

நந்தம் என்ற சொல்லுக்கு சங்கு என்றும், பெருமகிழ்ச்சி என்று பொருளுரைக்கும் இலக்கியச் சொல்லகராதி. அதனைத் தொகுத்தவர் யாழ்ப்பாணத்து சுன்னாகம் எனும் ஊரினர், அ.குமாரசாமிப் பிள்ளை (1855-1922). இந்த அகராதி முதற்பதிப்பு கண்டது 1914-ல். மீள்பதிப்பை எந்த பல்கலைக் கழகமோ, உலகாய்வு உயராய்வு தமிழாய்வு மையமோ, மொழி வளர்ச்சிக் கழகங்களோ, பண்டார சந்நிதிகளோ செய்யவில்லை. ஆனால் பெரும் கரிசனத்துடன் 2009-ம் ஆண்டு சந்தியா பதிப்பகம் செய்தது. 

நந்துதல் எனும் சொல்லுக்கு இரு எதிர்மறைப் பொருள்கள். நந்துதல் என்றால் கெடுதல், சாதல், அவிதல், மறைதல், நிந்திக்கப்படுதல் என்பது ஒருவகை. நந்துதல் என்றால் வளர்தல், தழைத்தல், விளங்குதல், செருக்குதல், தூண்டுதல் என்பன இரண்டாம் வகை. விளக்கை நந்து என்றால் விளக்கைத் தூண்டு என்று பொருள். எனவே நந்தா விளக்கு என்றால் தூண்டாத விளக்கு என்று பொருள்.

நாலடியாரில் இல்லறவியல் பாடல் ஒன்று

“பெரியவர் கேண்மை பிறைபோல் நாளும்
வரிசை வரிசையா நந்தும்- வரிசையால்
வானூர் மதியம் போல் வைகலும் தேயுமே
தானே சிறியார் தொடர்பு”

என்பது முழுப்பாடல்.

பதுமனார் உரை எழுதினார், “பெரியோர் பிறரொடு கொண்ட நட்பு பிறை போல நாடொறும் முறைமுறையாக வளரும். சிறியார் பிறரோடு கொண்ட நட்பு விசும்பின் கண் செல்லும் மதியம் போல நாடோறும் முறைமுறையாய் ஓர் காரணமும் இன்றித் தானே குறையும்” என்று (காண்க: நாலடியார் உரைவளம், மூலமும் மூன்று பழைய உரைகளும் அடங்கியது. தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு, 1953.)

காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார்மகனார் நப்பூதனார் பாடிய பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான முல்லைப் பாட்டு, ‘கானம் நந்திய செந்நிலப் பெருவழி’ என்கிறது. சிவந்த நிலமாகிய பெருவழியில் காடுகள் தழைத்துச் செறிந்திருந்தன என்பது பொருள்.

பதிற்றுப் பத்து நூலில் ஏழாம் பத்து பாடியவர் கபிலர். அதிலொரு பாடல் வரி, “நால் வேறு நனந்தலை ஓராங்கு நந்த” என்கிறது. நால்வேறு திசைகளிலும் ஒன்றுபோல விளங்கிப் பெருக என்பது பொருள்.

நந்த என்றால் பொலிவிழக்க எனும் பொருளில் ஐங்குறு நூலும், தழைக்க எனும் பொருளிலும் செழிக்க எனும் பொருளிலும் கலித்தொகையும், பெருக எனும் பொருளில் பரிபாடலும் கையாண்டுள்ளன.

நந்தி எனும் சொல்லைப் பெருகி எனும் பொருளில் அகநானூறும், நிறைவு பெற்று எனும் பொருளில் கலித்தொகையும், மிகுதியாகி எனும் பொருளில் குறிஞ்சிப்பாட்டும், விளங்கி எனும் பொருளில் புறநானூற்றில் கபிலரும் ஆண்டுள்ளனர். நந்திய என்றால் பெருகிய என்ற பொருளில் கலித்தொகையும் பரிபாடலும், செழித்த எனும் பொருளில் பதிற்றுப்பத்தும் பயன்படுத்தியுள்ளன. நந்தியான் என்றல் மகிழ்ந்தான் என்று பொருள் உரைக்கின்றனர் கலித்தொகைப் பயன்பாட்டுக்கு. நந்தின் என்றால் குறைவுபட்டால் எனும் பொருளில் புறநானூறு கையாண்டுள்ளது.

நந்து எனில் சங்கு எனும் பொருளில் அகநானூறும், நத்தை எனும் பொருளில் புறநானூறும் பயன்படுத்தியுள்ளன. செம்மையான சங்கு எனும் பொருளில் பதிற்றுப்பத்து ஆண்டுள்ளது. முல்லைப்பாட்டு “நந்து தொறும்” என்கிறது. அவியும் பொழுதெல்லாம் என்பது பொருள். நந்தும் என்றால் அழியும் என்ற பொருளிலும், சிறந்து விளங்கும் என்ற பொருளிலும் இருவேறு பாடல்களில் புறநானூறு பேசுகிறது. பெருகும் என்ற பொருளில் ஆள்கிறது கலித்தொகை.

நந்துவள் என்றொரு சொல் கிடைக்கிறது நற்றிணையில், பொருள் உயிர்த்து இருப்பவள் என்பதாகும். நந்தல் என்ற சொல்லுக்கும் எதிர்ப்பதப் பொருளாக கேடு என்கிறது சூடாமணி நிகண்டு. கம்பராமாயணத்தில், பாலகாண்டத்தில், கோலங்காண் படலத்தில் சீதை மன்னர் வீற்றிருக்கும் மண்டபம் சேரும் காட்சியைச் சொல்லும் கம்பன், ‘நந்தல் இல் விளக்கம் அன்ன நங்கையும்’ என்பார். அணையாத விளக்குப் போன்ற நங்கையாகிய சீதையும் என்று பொருள்.

நந்தல் எனும் சொல்லுக்கு நிந்தனை என்று பொருள் தரும் யாழ்ப்பாண அகராதி. அதாவது நந்தல் என்றால்  scorn, disdain. எனவே நிந்தனைப்படாத, அணையாத, கேடற்ற விளக்குப் போன்றவள் நங்கை சீதை என்று கம்பன் உணர்த்துவதாகக் கொள்ளலாம்.

நந்தல் எனும் சொல்லுக்கு ஆக்கம் என்ற பொருள் தரப்பட்டுள்ளது. அதாவது increase, prosperity  என்ற பொருள். கலித்தொகையில் முல்லைக்கவி பாடும் சோழன் நல்லுருத்திரன்,

“முத்து உறழ் மணல் எக்கர் அளித்தக்கால், முன் ஆயம்
பத்துருவம் பெற்றவள் மனம் போல நந்தியாள்”

என்கிறார். முத்துப் போன்ற வெண் மணற் பரப்பின் சோலையில் தலைவனுடன் முயங்கியபோது, சூதில் ஈரைந்து தாயம் பெற்றவள் போல மனம் மகிழ்ந்தாள் என்பது பொருள்.

நந்து என்ற சொல்லின் முதற்பொருள் ஆக்கம். சங்கு என்று பொருள் தரும் திவாகர நிகண்டு. நத்தை என்கிறது பிங்கல நிகண்டு. பிங்கலமே, பறவை என்றும் வேறொரு பொருள் சொல்கிறது.

பதினெண்கீழ்கணக்குகளில் ஏழாவது ஆசாரக்கோவை. நூறு பாடல்கள். இய்ற்றியவர் பெருவாயின் முள்ளியார். அதன் 96-வது பாடல்

 “நந்து, எறும்பு, தூக்கணாம்புள், காக்கை என்றிவை போல்
தங்கருமம் நல்ல கடைபிடித்து, தம் கருமம் 
அப்பெற்றியாக முயல்பவர்க்கு ஆசாரம்
எப்பொறியானும் படும்.”

என்று உரைக்கும், நத்தை, எறும்பு, தூக்கணாங்குருவி, காக்கை எனும் இவற்றைப் போல தத்தம் கருமம் நன்றாகக் கடைப்பிடித்து, தமது கருமமே பெற்றியாகக் கருதி முயல்பவர்களுக்கு ஒழுக்கம், நெறி-முறை-வழி என்பன எந்த வகையினேனும் அமையும். இது பாடலின் பொருள்.

ஆசாரம் என்ற சொல்லின் முதற்பொருள் ஒழுக்கம். “அச்சமே கீழ்களது ஆசாரம்” என்பார் திருவள்ளுவர். கீழ்கள் என்று அவர் இனத்தைக் குறிக்ககவில்லை. கீழ்மையான குணம் உடையவர்களைக் குறிக்கிறார். “ஆசாரம் என்பது கல்வி” என்கிறது நான்மணிக்கடிகை. “அறியாத் தேயத்து ஆசாரம் பழியார்” என அறிவுறுத்தும் முதுமொழிக் காஞ்சி.

நந்துருணி என்றொரு சொல்லும் கண்டேன். புறங்கூறுவோன் என்பது பொருள். எங்களூரில் குண்டுணி என்பர். கோள் சொல்பவன், குண்டாமுட்டி சொல்பவன், குறளை சொல்பவன் என்னுமிவரை நந்துருணி எனலாம். “தீக்குறளை சென்றோதோம்” என்றார் ஆண்டாள், திருப்பாவையின் இரண்டாம் பாடலில். தீயதான புறங்கூறல் சொல்ல மாட்டோம் என்பது பொருள். ஆனால் பென்னம்பெரிய முனிவர் ஒருவர் தீக்குறளை என்பதற்கு திருக்குறள் என்று உரை சொன்னார்.

நந்துருணி என்றால் மதியீனன், அற்பன் என்றும் பொருள்.

நந்தை எனும் சொல்லுக்குப் பொருள் – 1. கலப்பையும், நுகமும் தொடுக்கும் கயிறு. 2. இலைகளற்ற ஒட்டுண்ணித் தாவரம். 3. கொற்றான் (மலையாளம்). 4. தேற்றா எனும் மரம். கலங்கிய நீரைத் தெளிய வைக்க செட்டி நாட்டில் தேற்றாங்கொட்டை போடுவார்கள். வழக்கில் அதனைத் தேத்தாங்கொட்டை என்பர்.

நந்தை என்பது வடமொழிச் சொல்லும் ஆகும். பொருள் –

1, பிரதமை, சஷ்டி, ஏகாதசி என்னும் திதிகள் (பிங்கல நிகண்டு)

2. கபிலை நிறப்பசு          

3. அருகக் கடவுளது சமவச் சரணத்தின் கீழ்திசையிலுள்ள தடாகம்.

நந்தையைத் தொடர்ந்து நந்திக்கும் போகலாம். வாய்க்கும்போது தனிக் கட்டுரையாக எழுத முயல்வோம்.

ஆக, நந்தவனம் என்றால் இருவகையான பொருள் கொள்ளலாம். கோயில் பக்கமுள்ள வனம் போன்று செழித்த பூந்தோட்டம். கோயில் என்றால் அது இறைவன் உறையும் இடம், மன்னர் வாழும் இடம். இரண்டாவது பொருள் நந்தனின் வனம்.

இன்று மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அரசு அலுவலங்களால் பேணிப் பராமரிக்கப் படுவதாகச் செலவெழுதப்படும் புதரும் குப்பையும் மண்டிய பூங்கா எனப் பெயரிய இடங்களையும் நந்தவனம் என்று சொல்லலாம்.

வீரநாராயணமங்கலம் ஊரின் வடபக்கம் தேரேகால் தாண்டி இருக்கும் வயற்காட்டை நாங்கள் வடபத்து என்போம். வடக்குப் பத்தில் நாங்கள் பாட்டம் பயிர் செய்த வயலின் பெயர் நந்தவனத்தடி. வழக்கில் நந்தானத்தடி என்போம். தேரடி, கிணற்றடி என்பது போல நந்தவனத்தடி. ஒரு காலத்தில் அந்த வயலைத் தொட்டு நந்தவனம் இருந்திருக்கலாம். ஏனெனில் அந்த வயலுக்கு இரண்டு வயல்கள் வடக்கே சிறியதோர் பூவத்தான் கோவில் இன்றும் நிற்கிறது.

பாடல் ஒன்றுடன் இந்தக் கட்டுரையை நிறைவு செய்யலாம்!

“நந்தவனத்தில் ஓர் ஆண்டி அவன்

               நாலாறு மாதமாய் குயவனை வேண்டி – கொண்டு

வந்தான் ஒரு தோண்டி – அதைக்

               கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி!”

என்பது பாடல்.

ஆமாம்! நாமும் நந்தவனத்து ஆண்டியைப் போல, பல காலம் தவம் செய்து பெற்ற மொழியை, மரபை, இசையை, பண்பாட்டை, அறங்களை, ஒழுக்கத்தை, நெறிகளை, நீதியை, கலைகளைக் கூத்தாடிக் கூத்தாடி, போட்டு உடைத்துக் கொண்டிருக்கிறோம்!

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!!
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!!!

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

கை இரண்டு போதாது காண்!

This gallery contains 8 photos.

More Galleries | பின்னூட்டமொன்றை இடுக

வியர்வையும் கூலியும்

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

நெஞ்சோடு கிளர்த்தல்

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் “சிவனணைந்த பெருமாளின் சிக்கல்கள்”

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் சிறுகதை “வந்தான்,வருவான்,வாராநின்றான்.ஒலி வடிவம், காணொளி: சரஸ்வதி தியாகராஜன்

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

உழவாரப் படையாளி | எழுத்தாளர் நாஞ்சில் நாடன் | சிறுகதை | வாசிப்பவர் மதுமிதா

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

பூனைக்கண்ணன் கடத்திய அம்மன்- ஆசிரியர்: நாஞ்சில்நாடன்

நாஞ்சில்நாடன் அவர்கள் எழுதி ஆனந்தவிகடன் இதழில் வெளி வந்த சிறுகதை: பூனைக்கண்ணன் கடத்திய அம்மன்

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

அரூ – இடமோ வலமோ – நாஞ்சில் நாடன்

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

ஆன்மாவும் புறத்தடங்களும்..

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

நீலம், நீலன், நீலி! | நாஞ்சில் நாடன் ஒலிக் கதை

https://anchor.fm/thaiveedu/embed/episodes/Dec-2021-e1bjks0

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

நாட்டுப் பற்று

நாஞ்சில் நாடன்

சினிமா சேவைக்கு எவரெலாம் வாங்கினர்
மாண்பமை பல்கலை மதிப்புறு முனைவர்?
பத்ம கலைமணி போர்த்தப் பெறாத
தாரகை உண்டா நம் தேயத்து?
சாகித்யக் குழுமம் நஞ்சென ஒதுக்கிப்
பகையெனச் செற்றுக் கொழு முறிபட்ட
முன்னேர் எத்தனை?
கலையும் மொழியும் உறவும் பெருக்கப்
பன்னாடு சென்ற அறிஞரும் கலைஞரும்
அரசியலாரின் அடிப்பொடி தானோ?
நாட்டை நடத்தும் மேன்மையர் மக்களில்
காவலர் எழுத்தர் அஞ்சல் ஊழியர்
பூ காய் கனியெனக் கூவி விற்பவர்
தள்ளு வண்டியில் சிற்றுண்டி செய்பவர்
புவனத்துண்டா?
இளமையின் வறுமையை மேடையில் பரப்பி
முட்டி உயர்த்தி முக்கிப் பேசி
இராப்பகலாகக் கடின உழைப்பால்
வியர்வை பெருக்கி மூத்திரம் சிந்தி
ஈட்டிய விமானம் கப்பல் மலைகள்
சுரங்கம் தீவு கடற்கரை காடு
சோலை அருவி பொன்னின் குவியல்
என்பனவற்றின் ஐந்தொகை என்ன?
அறம் ஒழுக்கம் பண்பு நேர்மை
உண்மை மரபென மொழியும்
மாட்சிமை யாவும் கனவில் வந்து
விந்து பீய்ச்சும் திரைக் காவியக்
காதல் காட்சியா?
வந்தே மாதரம் தேசீய கீதம்
ஜெய்ஹிந்த் மொழித்தாய் வாழ்த்து
சுதந்திரம் குடியரசுத் தினம்
என்பன எல்லாம் எம்மனோர் மட்டும்
நாட்டுப் பற்றைத் திறந்து காட்டவா?
02/02/2022

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக