நாஞ்சிலின் நறும்புனல்

சுனில் கிருஷ்ணன்

நன்றி: பதாகை

நாஞ்சிலின் நறும்புனல்

மூன்று அல்லது நான்காண்டுகளுக்கு முன், முதன்முறையாக விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் நடத்திய ஊட்டி முகாமில்தான் திரு நாஞ்சில் நாடன் அவர்களைச் சந்தித்தேன். தமிழினி ‘வெளியிட்ட நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’ எனும் ஒரேயொரு கட்டுரை தொகுப்பு மட்டுமே அப்போது வாசித்திருந்தேன். பள்ளியில் தமிழ் பயிலாதவன். ஆகவே மரபிலக்கியம் வாசிக்கும் அடிப்படை பயிற்சியற்றவன். எனவே, அவருடைய கம்ப ராமாயான உரையை முழுவதுமாக உள்வாங்குவது அத்தனை எளிதாக இருக்கவில்லை.
ஐம்பது அறுபது பேர் இணைந்திருக்கும் கூடுகையில் பிற அனைவரும் அவருடன் இயல்பாக பேசிக்கொண்டிருந்தபோது, அவரிடம் உரையாட தகுதியற்றவனாக என்னை மட்டும் கற்பிதம் செய்துகொண்டேன் (என்னைத் தவிர பிற அனைவருமே அவரை வாசித்தவர்கள், அதனாலேயே இயல்பாக உரையாடுகிறார்கள் என்றொரு அசைக்கமுடியாத நம்பிக்கை). மேலும், நாஞ்சில் எளிதில் அறச்சீற்றம் கொள்பவர் எனும் மனப்பதிவு வேறு இருந்ததால், அவரை வாசிக்கவில்லை என்பது பாதுகாப்பான சமாதானமாகவும் இருந்தது. அடுத்தமுறை சந்திக்கும்போதாவது ஒழுங்காக வாசித்துவிட்டு உரையாட வேண்டும் என உறுதி பூண்டவனாய், சம்பிரதாய வணக்கங்களுக்கு அப்பால் எதுவுமே உரையாடாமல் புறப்பட்டுவிட்டேன்.
அடுத்த கூட்டத்திற்குதான் இன்னும் காலமிருக்கிறதே என்றிருந்தேன். ஆனால் அதற்கு முன்னரே காரைக்குடி புத்தககண்காட்சி சிறப்பு விருந்தினராக நாஞ்சில் அழைக்கப்பட்டிருந்தார். அழைப்பில் அவர் பெயர் பார்த்தவுடன் மனம் பரபரக்க, நண்பர்களிடமிருந்து அவருடைய எண்ணைப் பெற்று அழைத்தேன். ஆச்சரியமாக, நான் எப்படியோ அவருடைய நினைவில் இருந்தேன். முன்அனுமதி பெற்று, அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்றேன். மிக இயல்பாக அரசியல், இலக்கியம், பயணம், அனுபவம் என உரையாடத் துவங்கினார். அந்த இரண்டாம் சந்திப்பிற்கு பின்னர் கம்பன் விழா, எனது திருமணம் என இந்த மூன்று நான்கு ஆண்டுகளில் குறைந்தது பத்து முறைகளாவது அவரைச் சந்தித்திருக்கிறேன்.
நாஞ்சிலுக்கு அபார உணவு ரசனை உண்டு என்பது எல்லாருக்கும் தெரியும். நாஞ்சில் நாட்டு உணவு வகைகளைப் பற்றி பேசும் அவருடைய கட்டுரைகள் மட்டுமின்றி அவருடைய புனைவுகளிலும் அவை வெளிப்படும். மும்பை சேரியில் கிடைக்கும் வடா பாவ் துவங்கி நாஞ்சில் நாட்டு தீயல்கள் வரை உணவின் வாசனையை நாம் அவரது எழுத்தில் உணர முடியும். ஒருமுறை, செட்டிநாடு பலகார கடைக்கு ஒரு நாள் மாலை சென்றோம். அதற்கடுத்த முறையிலிருந்து மதிய உணவை தவிர்த்து நேராக மாலை பலகாரம்தான். ஒவ்வொருமுறை இங்கு வந்துவிட்டு ஊர் திரும்பும்போதும் அக்கம்பக்கத்தினருக்கும் சேர்த்து சீப்பு சீடை, முறுக்கு போன்ற செட்டிநாட்டு தின்பண்டங்களை வாங்கிக்கொண்டு போவார். ‘செட்டிநாட்டு சாப்பாடக் காட்டிலும் நாஞ்சில் நாட்டு சாப்பாடு பிரமாதமா இருக்கும், ஆனா பாருங்க, எப்படியோ வியாபாரம் பாக்க போன இடத்துல பிரபலமாகிட்டாங்க… செட்டிநாடுன்னு போட்டு கேரளாகாரங்ககூட ஹோட்டல் நடத்துறாங்க’, என்பார்.
மறைந்த தமிழறிஞர் பா.நமசிவாயம் மீது நாஞ்சிலுக்கு பெருமதிப்பு உண்டு. அவர் காரைக்குடிக்கு வரும்போதெல்லாம் அங்கு சென்றுவருவோம். நாளுக்கொரு முறை டயாலிசிஸ் செய்துகொள்ளும் எண்பது வயதிற்கு மேலான நமசிவாயம் அவர்கள் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்க,  நாஞ்சில் அவருடன் உரையாடக் கேட்பது அபாரமான அனுபவம்.
நாஞ்சில் காரைக்குடி கம்பன் கழகத்திற்காக கம்பனின் அம்பறாதூணி எனும் சொற்பொழிவாற்றினார். அந்தச் சொற்பொழிவை விரித்து நூலாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தபோது இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். மிக முக்கியமான சொல்லாய்வு நூல் அது. ஒவ்வொரு சொல்லாகப் பகுத்து நுணுக்கி அதன் அத்தனை சாத்தியங்களையும் ஆராயும்போது மொழியின் வீச்சை உணர்ந்துகொள்ள முடியும். பொதுவாக, குருடர்கள் துழாவிய வேழமாகத்தான் நாம் மொழியை உணர்ந்து கொள்கிறோம் என்று நினைத்துக் கொள்கிறேன்.
தமிழ் மெல்லச் செத்துவிடுமோ எனும் அச்சம் அவருக்குண்டு. ‘மொழி சுருங்கிகிட்டு இருக்கு. கொஞ்சம் கொஞ்சமா செத்துக்கிட்டு கிடக்கு’ என்பதே அவருடைய தலையாய கவலை. மேடைகளிலும், நேர்ப்பேச்சிலும் அவர் இந்த அச்சத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார். ஒரு நவீன எழுத்தாளனாக மரபிலக்கியங்களில் அவர் எதை தேடுகிறார் என்பதற்கான விடை இதிலுண்டு. வழக்கொழிந்த சில சொற்களை தன் வாழ்நாளில் மீண்டும் கவனப்படுத்தி நிலைநிறுத்துவதை தனது கடமை எனக் கருதுகிறாரோ என்றுகூட எண்ணுவதுண்டு.
உணர்ச்சி மிகுந்த ஆளுமை என்றாலும் அவர் நேருக்கு நேராக எவரையும் நோகடித்து நான் கண்டதில்லை. ஆனால் மேடைகளில் அவரை இருக்கையில் இருத்திவிட்டு கும்பமுனி உரையாற்றும் தருணங்களும் உண்டு. ‘நானும் எத்தனையோ மேடைகள்ல பேசிட்டேன். ஆனா இன்னிக்கும் எனக்கு கொஞ்சம் கலக்கம் உண்டு’, என்று சொல்லியிருக்கிறார். ஆம், மேடைப் பேச்சுக்கு முன்பான அரைமணிநேரம் கொஞ்சம் நிலையிழந்து காணப்படுவார். ஆனால் அது தன்னம்பிக்கை குறைப்பாட்டால் விளைந்ததல்ல என்பதையும் நான் நன்கறிவேன். திட்டமிட்ட தலைப்புகளில் தயாரித்த உரைகளைத் தவிர்த்து பிறவற்றுக்கு அவர் சென்றுவிடும் தருணங்களுமுண்டு. மேடையில் அமரச்செய்து அவருடைய பொறுமையைச் சோதித்த காரைக்குடி புத்தக கண்காட்சியில் நாற்பது நிமிடங்களுக்கு மேல் எவ்வித தயாரிப்புமின்றி மிகக் கூர்மையாய்ச் சீண்டும் உரையை ஆற்றி முடித்தார்.
நாஞ்சில் அபாரமான உரையாடல்காரர். அவருடைய புனைவுகளை வாசித்திருந்தாலும், ஒன்றிரண்டு வரிகளுக்கு மேல் அவரிடம் அவைகளைப் பற்றி பேசியதில்லை. தன் படைப்புகள் குறித்து நேரடியாகப் பேசுவதில் அவருக்கு ஏதோ ஒரு தயக்கம் எப்போதும் உண்டு. உரையாடல் அது காட்டும் வாழ்க்கைக்கும், அது சார்ந்த வாழ்க்கை அனுபவங்களுக்கும் இடம்பெயர்ந்து விடும்.
நாஞ்சில் தனது பணி நிமித்தமாக நாடெங்கும் பயணித்திருக்கிறார். கூடவே ஒவ்வொரு ஊரின் உணவு சிறப்புகளைப் பற்றியும் கச்சிதமாகச் சொல்வார். அவர் இங்கு வந்திருந்தபோது அவர் பணியாற்றிய பரதேசி திரைப்படத்தை ஒருநாள் இரவு சென்று பார்த்தோம். அப்போது தன் சினிமா அனுபவங்களை அவ்வப்போது சொல்லி வந்தார். ‘அந்த டான்ஸ் மாஸ்டர் பன்ன பாதிரியார் ரோல் நான் பண்ணியிருக்க வேண்டியது… பாலாகிட்ட முடியாதுன்னு சொல்லிட்டேன். இந்த டான்செல்லாம் நான் ஆடியிருந்தா?… நெனைச்சே பார்க்க முடியல”, எனச் சொல்லி சிரித்தார்.
ஒருமுறை உறவினர் ஒருவரின் திருமணம் நின்றுபோன கதையை அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். சொல்லி முடிப்பதற்குள் அவரது கண்கள் சிவந்து நீர்த்துளிகள் உருண்டோடின. ‘என்ன சார்?’ “பாவமுள்ள’ என்று சொல்லிவிட்டு வேறேதும் பேசவில்லை. சக மனிதர்களின் மீது அவருக்கு இருக்கும் பரிவு, அதுவே நாஞ்சிலின் உலகம். நெடுந்தூர பேருந்து பயணங்களில் மூத்திரத்தை அடக்கும் சர்க்கரை நோயாளிகளுக்காகவும், பெண்களுக்காகவும் அவரால் கவலைகொள்ள முடிகிறது. அசோகமித்திரனை எண்ணும்போதும் எனக்கு இதே உணர்வு ஏற்படுவதுண்டு. ஆனால் வெளிப்பாட்டின் அளவில் இருவரும் வேறானவர்கள்.
ஒரு படைப்பாளி என்பதைத் தாண்டி அவர் மீது ஒரு தந்தைக்குரிய நேசம் எனக்குண்டு. எனது திருமணம், சகோதரனின் திருமணம் ஆகியவற்றில் முழுமையாக பங்கெடுத்து ஆசியளித்தவர். இவ்வகையான உணர்வுகளுக்கும் நினைவுகளுக்கும் அவற்றுக்குரிய இடமுண்டு என்றுதான் நினைக்கிறேன். இது இலக்கிய மதிப்பீடோ விமர்சனமோ அல்ல, அந்தரங்கமான ஒரு நினைவோடை மட்டுமே. இத்தகைய ஆளுமையின் அண்மை வாழ்வின் கணங்களை ஏதோ ஒருவகையில் செறிவாக்குகிறது. அவ்வகையில் எழுத்திலும், அணுக்கத்திலும் அளித்த எல்லாவற்றிற்கும் பிரியத்துக்குரிய நாஞ்சிலுக்கு நன்றிகள்.
……..

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , . Bookmark the permalink.

1 Response to நாஞ்சிலின் நறும்புனல்

  1. Nagarajan சொல்கிறார்:

    நன்றி! அருமை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s