கற்பனவும் இனி அமையும் 3

கற்பனவும் இனி அமையும் – நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்

நேர்காணல்: த கண்ணன்,  வெ.சுரேஷ், அன்பழகன், செந்தில்
முன்பகுதிகள்:  கற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்1
கற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்2
சுரேஷ்: நண்பர்கள் சில கேள்விகளை அனுப்பியிருக்காங்க. அதையும் பார்க்கறீங்களா?
நாஞ்சில் நாடன்: அப்படியே கேட்டுருங்கேன். பேசிடுவோம்.
(ஸ்ரீதர் நாராயணன்): உங்கள் எழுத்து பயணத்திற்கான தொடக்கமாக, தனிமையைப் போக்கிக் கொள்ளும் வடிகாலாக எழுதத் தொடங்கியதை குறிப்பிட்டிருக்கிறீர்கள்.  சதுரங்கக் குதிரை நாராயணன் போல. இந்த நாற்பதாண்டுகால பயணத்தில் அந்த ஆரம்பகால தனிமையை தவறிவிட்டுவிட்டோம் என்று எண்ணியதுண்டா?  அந்த உந்துதலின் பலத்தை இப்போதைய அங்கீகாரங்களும், புகழுரைகளும் மழுங்கடிக்காமல் பார்த்துக் கொள்வது சவாலானதா?
நாஞ்சில் நாடன்: அதாவது தனிமைங்கிறது இன்னுமே நான் உணரக்கூடிய ஒன்றுதான். எந்தக் கூட்டத்தில் இருந்தாலும். அதுக்காக அவங்கள நேசிக்கலங்கிறதெல்லாம் இல்லை. உறவுகள் நண்பர்கள் எல்லாம் இருக்காங்க. இருந்தாலும், சமயங்கள்ல அவங்களோட நாம இல்லாம இருக்கிற மாதிரித்தான் தோணுது. இது ஒருவிதமான மானசீகமான அவஸ்தையாக்கூட இருக்கலாம். ஒரு சைக்கிக் ப்ராப்ளமாக்கூட இருக்கலாம். ஆனா, ஒரு மேடைல உட்கார்ந்திருக்கேன்னா, சீப்ஃ கெஸ்டா, அந்த ரோல நான் முடிச்சிட்டு வர்ற வரைக்கும் நான் ரெஸ்ட்லெஸ்ஸாத்தான் இருப்பேன். தப்பான காரியம் பண்ணிட்டிருக்கமோ, நமக்கு இங்க என்ன வேலை? நான் மாணவர்களுக்கு 1000 பேருக்குப் பேசறேன். அவங்கள்ல பத்து பேருக்காவது ஏதாவது கிடைக்கும். நல்ல தயை உள்ள நிர்வாகம் ஐயாயிரம் ருபாய் பணம்கூடத் தந்து அனுப்பலாம். ஆனாலும், நான் ரொம்ப அலூஃபாத்தான்(aloof) உணர்வேன். இது என்னுடைய இடம் இல்லை. இதுதான் எல்லா இடத்திலயும் பெருங்கூட்டங்களைப் பார்க்கிறபோது எனக்கு இருக்கிற உணர்வு. சபரி மலைல என்னன்னா – நான் ஏழு முறை சபரி மலை போயிருக்கேன் – நான் இங்க என்ன செஞ்சிட்டிருக்கேன்னுதான் தோன்றும். சர்ச்க்குள்ள இருந்தாலும் நான் ஒரு இந்துவா ஃபீல் பண்றேன். ஒரு இஸ்லாமியப் பள்ளிக்குள்ள இருந்தாலும் ஒரு கிருஸ்தவனா ஃபீல் பண்றேன். ஒரு இந்து கோயில்ல இருந்தா நான் முஸல்மானா ஃபீல் பண்றேன். இந்த அந்நியப்படுதல்…இது ஒருவகையான தனிமையினுடைய வெளிப்பாடு. இந்தத் தனிமையை எப்படி வெற்றி கொள்றேன்னா, என்னுடைய எழுத்தின் மூலமாக, என்னுடைய வாசிப்பின் மூலமாக. எந்தப் பயன் கருதியும் நான் எதையும் தேடுகிற முயற்சில இல்ல. இது என்னுடைய pleasure. செத்துப்போனவனுக்கு நோன்பிருக்காங்கய்யானு ஒரு வரி. அதை நான் கோட் பண்ணினேன். அப்படித்தான் தோணுது நமக்கு. இது ஒரு எழுத்தானுடைய uniqueஆன அனுபவமா இருக்கலாம். இந்த உணர்ச்சி இருக்கறதனாலயே கூட அவன் எழுத்தாளனா ஆகலாம். எனக்கு எந்தவிதமான அங்கீகாரமும் தேவையில்லை. நான் அதைப்பத்தி கர்வப்பட்டதே இல்லை. எந்த இடத்திலயும் நான் கலைமாமணிங்கிற நான் பிரஸ்தாபிச்சதே கிடையாது. லெட்டர்ஹெட்லயோ இன்விட்டேஷன்லயோ கலைமாமணி நாஞ்சில் நாடன்னு எந்த இடத்திலயும் நீங்க பார்த்திருக்கமாட்டீங்க.
சில இடங்கள்ல சாகித்ய அகாதெமி விருதுபெற்றேன்னு போடுவாங்க. அது ஒரு பெரிய விஷயமா எனக்குத் தெரியல. ஒருவேளை இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி கிடைச்சிருந்தா பெரிய விஷயமாப் பட்டிருக்கலாம். இது ஒன்னும் பெரிய அடைய முடியாத இலக்கு அல்ல. ஞான பீடம் கிடைச்சாக்கூட நான் அப்படித்தான் ஃபீல் பண்ணப்போறேன். ஆனா ஒரு உண்மையான ரசிகன் சொல்லக் கேட்கிறபோது…உங்க கதை படிச்சேன், பிரமாதமா இருந்ததுனு சொன்னாக்கூட, நான் அந்த சென்டென்ஸக் கடந்துபோகத்தான் பிரியப் படறேன். சஸ்டெய்ன் (Sustain) பண்ணமாட்டேன்.
சுரேஷ்: இதை ரொம்ப கவனிச்சிருக்கிறேன்.
நாஞ்சில் நாடன்: எனக்கு நானே யோசிச்சுப் பார்ப்பேன். இது கர்வமடையற, சந்தோஷப்படுகிற ஏரியா தானே…அப்பநான் என்ன நினைக்கிறேன்னா இது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல. ஒரு முறை நானும் ஜெயமோகனும் சென்னை புத்தகக் கண்காட்சியில நடந்துகிட்டிருந்தபோது, ‘நாஞ்சில், இவ்வளவு புத்தகங்களுக்கு இடையிலே நாமும் சில புத்தகங்கள் எழுதியிருக்கோம்கிறத நினைக்கிறபோது கர்வமா இல்லையா,’ அப்படினு கேட்டார். ‘ஆமா ஜெயமோகன், ப்ரவ்டாத்தான் (proud) இருக்கு.’ அதுமாதிரி கர்வமாக உணர்கிற தருணங்கள் இருந்தாலும் கூட, நிரந்தரமா இதுல ஒரு பெரிய கர்வம் இருக்கிற மாதிரியெல்லாம் நான் நெனைச்சதேயில்ல. நான் எப்பவுமே பஸ் பயணத்தின் போது, ஓட்டல்ல சாப்பிடும்போது, சாதாரண மனுஷனாத்தான் இருக்கேன். இதை நான் சுமந்து திரியறதில்லை. என்னுடைய இந்தப் பெயர், புகழ், விருதுகள், எழுத்து – இதை நான் ஒருபோதும் சுமந்துட்டு திரிவதில்லை. ஆகவே, இது எனக்கு இலகுவா இருக்கு. என்னோட எழுத ஆரம்பிச்ச, எனக்கு முன்னாடி ஓட ஆரம்பிச்ச பலபேரு ஓட்டத்தை நிறுத்தியாச்சு. நான் ஓட்டத்தை நிறுத்தல.  எனக்கு ஓடாம இருக்கமுடியலை. சிலர் வேகமா ஓடுவாங்க. நான் நார்மல் ஸ்பீட்ல ஓடிட்டு இருப்பேன். இன்னிக்குக் காலைலகூட ஒருத்தர்கிட்டப் பேசினேன், ஒரு பத்து வருஷம் எனக்குக் கிடைக்குமானால், ஹெல்த்தி மைன்டோட, எனக்குச் சில விஷயங்கள் செய்யறதுக்கு ஒரு ஆசை இருக்கு. அப்படித்தான் நான் யோசிக்கிறேன். எதிர்காலத்துல என்ன என்னால செய்யமுடியும். பலர் சொல்றாங்க, நீங்க நாவல் எழுதிப் பதினைஞ்சு வருஷம் ஆச்சு. எனக்கு அது ஒரு பெரிய விஷயமாப் படல. நாவல் எழுதலைனா என்ன? நாவல் மூலம் சொல்கிற விஷயத்தைத்தான் நான் கட்டுரை மூலம் சொல்றேன். எனது கட்டுரைகளும் சுவாரசியமா வாசிக்கப்படுது.
சுரேஷ்: இந்த இடத்தில, நாங்க கேட்க நினைச்ச ஒரு கேள்வி கேட்கிறோம். ஆரம்பக் கதைகள்ல சம்பவங்களச் சொல்லிட்டு, உணர்ச்சிகளை ஊகிக்கிறதும், அதன் விளைவுகளை ஊகிக்கிறதையும் வாசகர்கள்கிட்ட விட்டுருவீங்க…விரதம் எடுத்துக்கங்க, மொகித்தே, பிசிறு, பாலம், போன்ற கதைகள் எல்லாமே அப்படித்தான் இருந்துச்சு. சமீபமாக, கும்பமுனி தொடங்கினதுக்கு அப்புறம், நீங்க கொஞ்சம் உரத்த குரலெடுத்துச் சொல்லத் தொடங்கிட்டீங்களோ?
நாஞ்சில் நாடன்: எனக்கு சில விஷயங்களைப் பேசுகிறபோது, மொழியில ஒரு vehemence வந்துருது. அப்படிச் சொன்னாத்தான் இவனுக்கு உறைக்கும்னு நினைக்கிறேன். நாசூக்கா சொல்லிட்டுப் போக முடியாது. ரெண்டாவது, அந்த மாதிரியான கதைகள் திட்டவட்டமான கதைகள். சங்கீதம் ட்யூசன் வாத்தியார்கிட்ட கத்துகிட்டு, வாத்தியார் சொல்லிக்கொடுத்த அதே பாணியில கீர்த்தனைகள் பாடுகிற மாதிரியான பருவமது. அது தப்பில்ல. இப்ப நான் ஒரு மகாவித்வான். தோடியை மூணே முக்கால் மணிநேரம் பாடுவேன். அதற்குண்டான கற்பனை எனக்கிருக்கு. அந்த சுதந்திரத்தை நான் பயன்படுத்திக்கிறேன். முன்னமாதிரி பதிமூணு மினிட்ல தோடி பாடுங்கன்னா என்னால முடியாமக்கூட போகும். என்னுடைய மைண்ட்செட்டும் மாறிப்போச்சு, எனக்கு வயசாயிடுச்சு, நானும் மெச்சூர்(mature) ஆயிட்டிருக்கேன். இந்த இடத்தில கொஞ்சம் நின்னு சொல்லுவமேனு தோணும். சகாயத்தைப் பற்றிப் பேச வேண்டிய அவசியமோ கட்டாயமோ நெருக்கடியோ இல்லைனாக்கூட இதை இங்க சொல்லிருவோமே, அப்புறம் இதைச் சொல்வதற்கு இன்னொரு வாய்ப்பு எனக்கு வராமப் போயிடும். சாதாரணமா முருங்கைமரம் இருந்ததுனு சொல்லிரலாம். முருங்கைமரத்தைப் பேசுறபோது இன்னொரு இருபத்தஞ்சு மரத்தைக் கூடுதலாப் பேசுவோம். தெரிஞ்சிட்டுப் போகட்டும். ஒன்னும் இல்ல. பற பற. கொக்கு பற. குருவி பற. இது ஒரு சாதாரணமான கிராமிய சமாச்சாரம் இல்ல. இதுல கவனம் இல்லாதவன் மொதல்ல அவுட் ஆயிடுவான்….தவளை பற, குதிரை பற. இதன்மூலம் கொக்கு பறக்கும், குருவி பறக்கும், மயில் பறக்கும், நாரை பறக்கும், கிளி பறக்கும், காக்கா பறக்கும், மைனா பறக்கும், அப்படினு ஒரு பத்துப் பறவைகளோட பெயர்களைக் குழந்தைகள் கத்துக்குது. இதொரு பாமரத்தனமான விளையாட்டுனு நம்ம கல்வி மேதாவிகள் நினைச்சுட்டு இருக்காங்க. குழந்தைகளுக்கு இது concentration கற்றுக்கொடுக்குது. It also teaches them so many birds’ names. இதுமாதிரியான ஒரு வாய்ப்பு ஃபிக்சன் ரைட்டிங்ல வரும்போது, எனக்கு மட்டுமில்ல, உலக அளவில, சிறுகதைகள் இந்த மாற்றத்துக்குள்ள வந்தாச்சு. முப்பது வருஷத்துக்கு முன்னாடி மார்க்வெஸ் எழுதினமாதிரி இப்ப எவனும் எழுதறதில்லை. அல்லது, எல்லாரும் சொல்றாங்கில்ல…போர்ஹே..அந்த ஸ்டைல் பழசாகிப் போச்சு. இப்ப வேறொரு மாதிரி கதை சொல்றாங்க. நான் என்ன சொல்றேனா…இந்தக் கதைல இந்தத் தகவலச் சொல்லாட்டாலும், அது கதைதான். அவன் பசியாக் கிடந்தான். சோறு போட்டான். சாப்பிட்டு கைகழுவிட்டுப் போனான்கிறது கதையில்லை. அதில அதுக்கு எவ்வளவு atmosphere சொல்றீங்க. எவ்வளவு எமோஷன்ஸ் சொல்றீங்க. இத நான் வேறவிதமாச் சொல்றேன். இது உங்களுக்குச் சுவாரசியம் இல்லாம இருக்கான்னா, I will take care of it. இது ஒரு துறுத்தலா இருக்குன்னாலும் நான் யோசிப்பேன். இதுல traditional readers உடைய குரலை நான் பொருட்படுத்த விரும்பல. என்னுடைய ரசிகன் இத ஒரு குறையாச் சொல்றானா?
எனக்கு முந்தாநாள் கண்மணி போன் பண்ணி, ‘இந்த ஆனந்த விகடன் கதைல ஏன்னே தேவையில்லாம திருக்குறள் எல்லாம் கோட் பண்றீங்க’ அப்படிங்கிறாரு. (அன்றும் கொல்லாது, நின்றும் கொல்லாது). நான் வேறு ஒரு டெக்னிக்குக்காகப் பயன்படுத்தறேன். ஏன்னா புலைமாடன் இருந்தானா இல்லையாங்கிறதே எனக்குத் தெரியாது. அதை இன்னிக்கு நடக்கிற கதையாச் சொல்றேன். அங்க ஒரு கம்பன் வரியைக் கோட் பண்றேன். என்ன சோத்துக்கா பஞ்சம்னு கேட்றலாம். நான் அதை, ‘எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே’ங்கிறேன். நீ எப்ப இதைப் படிச்சேனு இவன் கேட்கிறான். அதை வேறொரு விதமான காலத்துக்குக் கொண்டுபோக முயற்சி பண்றேன். இது வாசகனை interfere பண்ணுது, கட்டுரைத்தன்மை வந்துருது அப்படிங்கிறாங்க. நான் கதை எழுதினா, கட்டுரைத்தன்மை வருது, கட்டுரை எழுதினா கதைத்தன்மை வருது…கட்டுரைல வசனம் எழுதற ஒரே எழுத்தாளர் நான்தான்.
சுரேஷ்: முன்ன அசோகமித்திரன்கூடச் சொன்னார் சார். Spanக்கு இரண்டு கட்டுரைகள் எழுதி அனுப்பிச்சேன். அவங்க சிறுகதைனு பிரசுரிச்சாங்க.
நாஞ்சில் நாடன்: அடிப்படைல எழுத்துல எனக்கொரு சுகம் கிடைக்கணும் இல்லையா. அந்த சுகம் கிடைக்காம தொடரமுடியாது என்னால. எனக்கு அந்த pleasure கிடைக்கிறனாலதான், என்னோட சாமார்த்தியத்தையும் அறிவையும் புலப்படுத்தறதுக்காக நான் ஒரு லைனப் போடுவேன். சில சமயம் கோட் பண்ணுவேன். இங்க ஒரு பாட்டு சொன்னா நல்லா இருக்குமே. அது கட்டுரை எழுதறபோது தோணும். இந்த எடத்தில ஔவை ஏதோ சொல்லியிருக்கா…அந்த பாட்டு நினைவுல வரலங்கிறபோது, கொஞ்சம் முயற்சி எடுத்து செய்வேன். இது craft சம்பந்தமான ஒரு விஷயந்தான். ஃபர்ஸ்ட் ட்ராப்ட்ல புள்ளி வைச்சிட்டு, செகண்ட் ட்ராஃப்ட்ல தேடியெடுத்து fill up கூட பண்ணுவேன்.
சுரேஷ்: அது நிச்சயமா வெற்றிதான். கும்பமுனி கதைகள் சிறப்பாவே கவனிக்கப்படுது.
நாஞ்சில் நாடன்: நான் கடைசியா கும்பமுனி எழுதி ஆறு மாசம் இருக்கும். என்னுடைய நூத்து முப்பத்தியிரண்டு கதைகள்ல பத்தொன்பது கதைகள்லதான் கும்பமுனி எழுதியிருக்கேன். அதுல மாடன் கதைல கும்பமுனி சும்மா உட்கார்ந்துட்டு, ‘சரிதான்வோய் ரைட்டரே, கதைக்காயிடும்’னு சொல்லிட்டு அவர் போயிடுவார்.
சுரேஷ்: அதுக்குனு ஒரு iconic place வந்துடுச்சு. இது சம்பந்தமா இன்னொரு கேள்வி – நீங்க பொதுவா உலக இலக்கியங்கள்ல இருந்து யாரையும் மேற்கோள் காட்டறது இல்ல. உங்க பழைய பேட்டில நீங்க சொன்ன ஒன்று எனக்கு ரொம்பப் பிடிக்கும்…செத்துப்போன பக்கத்து வீட்டுக்காரன் பல்செட்டை நான் இரவல் வாங்க மாட்டேன்.
நாஞ்சில் நாடன்: நான் வெளிநாட்டு புத்தகங்கள் ரொம்ப, அளவுகடந்து படிச்சவனல்ல. ஆனா முக்கியமான புத்தகங்கள் படிச்சிருக்கேன். இப்பக்கூட ஒரு இருநூறு புத்தகம் கண்டிப்பா எங்கிட்ட இருக்கும். ஜாய்சுடைய டப்ளினர்ஸ் நான் வைச்சிருக்கேன். தேர்தெடுத்துப் படித்திருப்பேன். போர்ஹே முழுக்க நான் படிச்சிருக்க மாட்டேன். மார்க்வெஸூம் முழுக்கப் படிச்சிருக்க மாட்டேன். மார்கவெஸுடைய மொத்த கலெக்சனும் எங்கிட்ட இருக்கு. ஆனா கட்டுரைகள்ல கோட் பண்றது…எனக்குத் தேவையாப் படலை. அதே சமயத்துல எனக்கு இதைக் கைவிட முடியாது. வாய்ப்பு கிடைச்சா…இப்ப சாணி மெழுகின மண்தரை. சாப்பாடு போடுவதற்கு முன்னாடி அதுலதான் இலை போடுவாங்க. அந்த அம்மா மொதல்ல அதுல தண்ணி தெளிக்கிறா. கண்ணகி. தண்ணி தெளிச்சு கையினால துடைக்கிறா. என்ன சொல்றார்னா – பூமாதேவி மயக்கத்துல கிடக்கிறாளாம்.
மண்ணக மடந்தையை மயக்கு ஒழிப்பனள்போல்,
தண்ணீர் தெளித்து, தன்கையால் தடவி,
குமரி வாழையின் குருத்தகம் விரித்து…ஈங்கு (கன்னி தலைவாழை இலை…)
அமுதம் உண்க அடிகள் ஈங்கென
எனக்கு வாய்ப்பு கிடைச்சா, இத நான் கோட் பண்ணாமப் போக மாட்டேன்.
சுரேஷ்: பார்க்கப் போனா, நமக்கு அந்த Last Supper தெரியும் இந்த Last Supper தெரியாது.
நாஞ்சில் நாடன்: இது Last Supper தான். எனக்கு idea, presentation மாதிரி விஷயங்கள்ல பெரிய பிரேமை உண்டு. போயட்ரி பார்த்தீங்கன்னா, அவன் போயட்ரீ பெரிய போயட்ரீயா இருக்கலாம். ஆனா எனக்கு இந்தாள் போதும். எனக்கு அவனைவிடவும் இவன் எப்படியும்…சமீபத்துல மௌனியுடைய ஒரு பேட்டி, ஜே.வி.நாதன் போட்டிருக்கார் – அவர் என்ன சொல்றார்னா, ஒரு கட்டுரைல இதை நான் எழுதியாச்சு – என்னுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு இந்த மொழி போதுமானதாக இல்லை. என்னுடைய ரியேக்சன்…திருநாவுக்கரசர், நம்மாழ்வார்க்கொல்லாம் இந்த மொழி போதுமானதா இருக்கு…அப்ப நீ இந்த மொழியை சரியாப் படிக்கலைனு தானே அர்த்தம். அதுபோல, திருக்குறள் – அவர் சொல்றார் இன்னொரு இடத்தில…திருக்குறள் நீதிநூல், அது இலக்கியம் ஆகாது.
வேறொரு இடத்தில குறிப்பாகச் சொல்லியிருக்கேன். இந்த இரவு ஒரு பெண். அது சகல ஜீவராசிகளையும் சாப்பாடு கொடுத்து, உறக்காட்டி, நிம்மதியாப் பார்த்துகிட்டுத் தான் விழிச்சிருக்கு. அந்த இரவுக்குத் துணையா நான் இருக்கேன்.
மன்னுயி ரெல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்ல தில்லை துணை.
இது நீதிநூல்னு சொல்லுவியா இலக்கியம்னு சொல்லுவியா. அப்ப நீ திருக்குறள் படிக்கல. அப்புறம், இதுக்குள்ள கம்யூனிட்டி சார்ந்த, ஒரு மொழிமீது விருப்போ, அதிவிருப்போ, அதிவெறுப்போ  இருக்க வாய்ப்புகள் – அந்த சைக்காலஜி நமக்குத் தெரியும். அந்தக் கருவியை நான் உபயோகம் பண்ணி அடிக்கமாட்டேன். பிரிதல் பொருட்டு தொல்காப்பியர் அஞ்சு இலக்கணம் சொல்றார். எதன் காரணமாக ஒருத்தன் பிரியறான். துபாய்க்குப் போறான். கல்விக்குப் போறான். போருக்குப் போறான். தூதுவனாப் போறான். அமைச்சனாப் போறான். ஐந்து காரணங்கள் இருக்கு. ஒருத்தன் சொல்றான், தன்னுடைய பொண்டாட்டிகிட்ட. பொருள்தேடிப் போறேன். அடுத்த கார்காலத்துக்குள்ள  வந்துருவேன். விரைந்து வந்திடுவேன். அவ சொல்றா – இங்க உள்ள வேலையப் பார்த்துட்டு, உள்ள சோத்தத் தின்னுட்டு, இங்கனயே கிடப்பேன்னா எங்கிட்ட சொல்லு. அங்க போயி நாற்பதினாயிரம் ரூபா உண்டாக்கிட்டுத் திரும்பி வர்றேங்கிற சமாச்சாரம், எவளோ ஒருத்தி நீ வரக்கூடிய காலத்தில உயிரோட இருப்பா இல்ல, அவகிட்ட சொல்லு.
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.
வல்வரவுல வல்னா விரைவுனு போட்டுக்கலாம். திருக்குறள் ஏழு சீர்ல – படிச்சுப்பார்த்தாத்தான் தெரியும் அதுக்குள்ள அவன் போற height.
கண்ணன்: நீங்க வல்வரவு பற்றி எழுதியிருந்ததை திருக்குறள் பற்றி நடந்த நீயா நானாவில நான் கோட் செய்தேன்.
நாஞ்சில் நாடன்: வல்வரவுங்கிறத நல்வரவுக்கு எதிர்ப்பதமா நான் பயன்படுத்தறேன். எல்லா உரையாசிரியனும் வல்வரவுன்னா கடிது வருதல், விரைந்து வருதல்னுதான் சொல்றான். நான் இப்படிப் பார்க்கிறேன். நீ ஆறு மாசங்கழிச்சு வரக்கூடியது வல்வரவுதான், நல்வரவு இல்ல. ஒரு பொண்ணு என்ன திராணியாப் பேசறா. ஆனா பொருள்வயிற் பிரிதல்ங்கிறது இன்னிக்கும் நடக்கத்தானே செய்யுது. துபாய்க்குப் போனா ரெண்டு வருஷத்துக்கு ஒருக்காத்தான் வீட்டுக்கு வருவான். பெரிய பொசிசன்ல இருக்கிறவன்தான் ஆறு மாசத்துக்கு ஒருதரம் வருவான். அமெரிக்கால இருக்கவன் மட்டும் என்ன வாழுதாம் – ரெண்டு வருஷத்துக்கு ஒரு முறைதான் வர்றான்.
நானே ஒரு கதை எழுதியிருப்பேன் (பேச்சியம்மை). ஏழு வருஷம் ஆச்சு, மகன் ஊருக்கு வந்து. அவன் பார்த்த பொண்ணுகெல்லாம் கல்யாணம் ஆகிப் பேரம்பேத்தி எடுத்தாச்சு. பேங்க்குக்கு பணம் ட்ரான்ஸ்பர் ஆயிடும். ஒரு நாள் இந்தக் கிழவி போய் பாங்க்ல சொல்லுவா, பணம் இனிமே வந்ததுன்னா திருப்பி அனுப்பிச்சிடுங்க. பாங்க் மேனேஜர், ‘அதெப்படிம்மா அனுப்பமுடியும்.’ ‘அப்ப, நாளைக்கு உம்ம நடைல ஒரு பிணம் கிடக்கும்.’ எப்படி வேணாலும் டீல் பண்ணுக்கங்கன்னு சவால் விடறா. மேனேஜர் அரண்டு போயிடறார். வாசல்ல காலைல பாங்க்க திறக்க வர்றபோது பிணம் கிடந்தா, இந்தியாவுல ஒரு நிகழ்ச்சியே அப்படி நடந்ததுகிடையாது. ‘சரிம்மா, நான் எழுதிடறேன்.’ அவளுக்குண்டான ஒரு கோபம் இருக்கு. அவ கோயில்ல விளக்கு வெளக்கி வைக்கிறா. தண்ணி எடுத்துக்கொடுக்கறா. பூப்பறிச்சுத் தர்றா.  பூசை செய்யக்கூடிவர் கேட்கிறாரு, ‘நீ செத்துப்போனா யாரு கொள்ளி வைப்பா?’ ‘பெருமாள் வைப்பாருய்யா. ஏன் நீர் போட மாட்டீரா.’  அப்ப அவளுடைய கோபம் என்ன…ஏழு வருஷம் ஆச்சு, பெத்து வளர்த்து, பால் குடுத்து, படிக்க வைச்சு, நகையை அடகு வைச்சு…இவனுக்கு ஏழு வருஷம் பெத்த அம்மையை வந்து பார்க்கணும்னு தோணலையே.  இவன் பணம் எனக்கு எதுக்கு? இது மரபுசார்ந்த ஒரு தாய்க்கு வரக்கூடிய கோபம். இந்த மாதிரி ஒரு ஸ்டோரிய நான் எழுதற போது, அனாவசியமா பரிமேலழகர கோட் பண்ண மாட்டேன். ஏன்னா எனக்குத் தெரியும், இந்த இடத்துல நான் ஒருவதிமான emotional crisisகுள்ள கொண்டுபோகப் போறேன். வாசகனை டைவர்ட் பண்ணக் கூடாது. அவனுடைய wholehearted attendance, நூறு சதம் concentration எனக்கு வேணுங்கிறபோது, நான் ஒழுங்கு மரியாதையாக் கதை சொல்லிட்டுப் போயிடுவேன். சில சமயம் ஆடிப் பார்க்கலாம்னு தோணும். ஆடியன்சைப் பொறுத்த விஷயம்தானே. நாட்டைக் குறிஞ்சி ஒரு செலக்டட் ஆடியன்ஸ்க்கு, ராம்நகர்ல, கோதண்ட ராமன் கோயில்ல, மூணேகால் மணிநேரம் பாடறார் சேஷகோபாலன். அதை கண்டிப்பா ஒரு சபாவுலையோ, ஒரு கல்யாணத்திலையோ அவர் செய்யமுடியாது.
சுரேஷ்: அது ஒரு முக்கியமான விஷயத்துக்கு அழைத்துப் போகுது. உங்க இசை ரசனை. அதனோட ஊற்று எங்க சார் இருக்கு? கோயில் கச்சேரிகள்ல கேட்டதா?
நாஞ்சில் நாடன்: கோயில்தான் எங்களுக்கு ஆதாரம். ரெண்டாவது, எந்த சிறுதெய்வ வழிபாட்டிலேயும் தாளம் அடிச்சாகணும். அவன் அடிக்கிற முரசு, தம்பை, உடுக்கு, கிராமிய தப்பட்டை, மகுடம் – மகுடம்னு சொன்னா பலபேருக்குப் புரியாது. சுப்புடு எழுதறாரு, ஒரு முறை ம்யூசிக் அகாதெமில யாருடைய ஏற்பாட்டிலயோ தப்பட்டை, மகுடம் வாசிச்சுக் காட்டினபோது, ‘நம்முடைய பிரசித்திபெற்ற  சிகாமணி, சங்கீதப் புலிகளெல்லாம் இவனுடைய கால்ல விழுந்து சாஷ்டாங்கமா நமஸ்காரம் பண்ணா இந்தத் தாளத்தில கொஞ்சம் அவர்களுக்குக் கிடைக்கக்கூடும்’னு எழுதறார். சுப்புடு எழுதியிருக்கார் – நான் படிச்சிருக்கேன். தாளம் அங்கிருந்துதான் நமக்குக் கிடைக்குது. தாளத்தைத் தானே லயங்கறீங்க?
சுரேஷ்: ஆமாம். சுருதி மாதா, லயம் பிதா அப்படீம்போம்.
நாஞ்சில் நாடன்: எனக்கு முறையான சங்கீதம் தெரியாது.
சுரேஷ்: எப்படி ராகங்களை identify பண்றீங்க.
நாஞ்சில் நாடன்: ‘தாயே யசோதா’ ராகம் தானே இது. இப்படித்தான் நான் identify பண்றேன். மற்றபடி இதுல நாலு ஸ்வரம் இருக்கு, மோகனம் அஞ்சு ஸ்வரம் இருக்கும், இப்படி அந்த grammar வழியா நான் அந்த முடிவுக்கு வர்றதில்லை. எனக்குக் கேட்டுகிட்டு இருக்கப் பிடிக்கும்.
சுரேஷ்: சின்ன வயசிலேயே உங்களுக்கு கர்னாடக இசைப் பழக்கமுண்டா?
நாஞ்சில் நாடன்: எங்க அப்பா அஞ்சாங்கிளாஸ் பெயில்ங்க. ஆனா அவர் எல்லாக் கோயில்லயும் போயி இசைக் கச்சேரி கேட்பாரு. நான் ஒரு ஆறு ஏழு படிக்கிறபோதே, சாயங்காலம் ஒரு அஞ்சு மணிக்கு, கொள்ளு மட்டும் சோறு தின்றது. பசிக்காம இருக்கணுமில்ல? அவருகூடவே நடந்து, ஏழு மைல், சுசீந்திரம். அங்கதான் நான் ராஜரத்தினம் பிள்ளைல இருந்து, காருக்குறிச்சி அருணாச்சலம், ஏகேசி நடராஜன், சூலமங்கலம் சிஸ்டர்ஸ், கேபி சுந்தராம்பாள், எம்.எல்.வசந்தகுமாரி, எம்.எஸ்.சுப்புலட்சுமி இதெல்லாம்…அப்ப எனக்கு இன்டரெஸ்ட் கடைசில அவங்க பாடக்கூடிய துக்கடாதான்.
சுரேஷ்: தமிழ்ப்பாடல்களத் துக்கடான்னு சொல்வாங்க.
நாஞ்சில் நாடன்: நான் ஒறங்கனாக்கூட அப்பா என்ன எழுப்பிவிட்றுவார். அந்தப் பாட்டுக்காக காத்திட்டிருப்பேன். சில சமயம், தில்லானா பிடிக்கும். இந்த ராக ஆலாபனை சுத்தமா பிடிக்காது. அப்ப. 27 வருஷத்துக்கு முன்னாடி நான் பாம்பேல இருந்து, ம்யூசிக் அகாதெமி வந்து, ஸ்டால்ல எம்.டி.ராமநாதன் டபுள் ஆல்பம் வாங்கி, ஒருக்கா கேட்டுப் பார்த்தேன்..ஒன்னுமே அர்த்தமாகல. எம்.எஸ்கிட்ட கொடுத்தேன், சார் இது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும். இப்ப என்கிட்ட, எம்.டி.ராமநாதன் ஏழு சிடி வைச்சிருக்கேன். இது கேட்டுகேட்டுப் பழகிட்டதுதான். எனக்குக்  கீர்த்தனை முக்கியமில்லை. நான் அருணா சாய்ராம ஒரு இண்டர்வ்யூ பண்ணினேன். அது என்னோட தொகுப்புல வரப்போகுது. மொத்தம் ரெண்டு மணிநேரம் பாடறீங்கம்மா. ஒரு தமிழ் கீர்த்தனை எடுத்தவுடனே, மொத்த ஹாலும் எந்திருச்சு உட்காருதே, அப்ப மொழிக்கு அதில் ஏதோவொரு இடமிருக்கேன்னேன். ‘நீங்க சொல்றது ரொம்ப சரிதான். இசைக்கு மொழி இல்லைங்கறது உலகறிந்த ஒரு உண்மை. ஆனா இசை மூலமா ஒரு கீர்த்தனை, ஒரு பாடலை பாரதியாரோ, அருணகிரியோ, ஒரு தூரனோ கொடுக்கிறபோது, அதனுடைய பவர் தனியாத்தான் இருக்கு. அதை இசை இலக்கணம் தெரிஞ்சவனும் எஞ்சாய் பண்றான், தெரியாதவனும் எஞ்சாய் பண்றான்.’ இது ஒரு நீண்ட இன்டர்வ்யூ. நான் நேரடியாக் கேட்டேன்.
‘ஏம்மா, இந்த இலக்கணமெல்லாம்…?’
’அது எங்க கவலைங்க. நீங்க எதுக்கு அதைப்பத்திக் கவலைப் படறீங்க. கேட்க சுகமா இருக்கா, சௌக்கியமா இருக்கா, அது போதும் உங்களுக்கு. இலக்கணமெல்லாம் எங்களுடைய கவலை-இப்படித் தாளம் போடறது, அப்படித் தாளம் போடறது எல்லாம்.’
சமீபத்துல ம்யூசிக் அகாதெமில இன்னொருத்தரோட பெர்பார்மென்ஸ் பார்த்தேன். ரெண்டு கைலையும் வேற வேற தாளம் போடறாங்க. ஆமா, அதுக்கொரு இலக்கணம் இருக்குதாம். அந்தம்மா…பாடசாலை பொன்னம்மாவுடைய சிஷ்யை..பயிற்சிபெற்று வந்து பண்றாங்க. எனக்கு அது குழப்பமாத்தான் இருந்தது. விசாரிச்சதுல – எனக்கு வைத்தியநாதன்னு ஒரு நண்பர் இருக்காரு – அது உண்மைதான்னார்.
சுரேஷ்: இந்துஸ்தானி நீங்க பாம்பேல இருக்கிறப்போ அறிமுகமாச்சா?
நாஞ்சில் நாடன்: நான் ஏழு ரூபா சம்பளத்துக்கு வேலை பார்த்திட்டிருந்தபோது, எங்கூட ஏழு ருபா சம்பளத்துக்கு வேலை பார்த்தவன், பாலக்காட்டுல இருந்து ராமன்னு ஒரு பையன்…அவன் பார்ட்-டைம் வொர்க்கா சண்முகானந்தாவுல வாலண்டியர். கேட்ல டிக்கெட் கொடுக்கக்கூடிய வேலை. நல்ல கச்சேரி நடந்தா, ஆள் வராத சீட்ல என்னை உட்கார்த்தி வைச்சுருவான். சில சமயம், அவஞ்செலவுல டிபன் கூட வாங்கித்தருவான். அப்படித்தான் நான் இந்துஸ்தானி கேட்க ஆரம்பிச்சேன். எல்லாமே கேட்டேன். இந்துஸ்தானியும், ஆரம்பத்தில repulsiveஆத்தான் இருந்தது. அது உங்கள உள்ள இழுத்திருச்சுனா நதியோட கொண்டுபோயிடும். இந்துஸ்தானி கேட்டுட்டு நீங்க கர்னாடிக் கேட்கிற போது – இது வேற ரகமான இசை, அது வேற ரகமான இசை – எங்கிட்ட பாயின்டடா கேட்டீங்கன்னா, which one is most attractiveனு கேட்டீங்கன்னா, இந்துஸ்தானினுதான் சொல்லுவேன். ஏன்னா, ஒரு ராகத்தைக் கட்டியெழுப்பறதுக்கு ரெண்டரை மணிநேரம் எடுத்துக்கறான். அந்த ராகத்தினுடைய வடிவம் நம்ம காது உணரதுக்கு, அது அவம்பாடறது என்ன தோடியாவும் இருக்கட்டும், எழுப்பிக் கொண்டுவந்து நிறுத்தறான் பாருங்க…பயங்கரமான வேலைங்க. அதான் இசை. ஆனா அருணா சாய்ராம் சொல்றாங்க, பாதி Western Classicsலயே நம்முடைய கர்நாட்டிக் இசையினுடைய தன்மைகள் இருந்ததுன்றாங்க. இப்ப அவங்களும் fast beatக்கு போயிட்டாங்க.
கீர்த்தனை பாடுறபோது சுவாரசியமா இருந்தாக்கூட, பிஸ்மில்லா கான் என்ன கீர்த்தனை பாடறாரு? ஆனா அவருடைய பர்டிக்குலர் பாட்டு எப்பக் கேட்டாலும் எனக்குக் கண்ணு நிறையாம இருக்காது. அப்படி வாசிப்பாரு மனுஷன். அவருடையதே ஒரு ஏழெட்டு வைச்சிருக்கேன். ஷெனாய். முதல்முதல்ல அதுக்கு ஒரு சபை அந்தஸ்து கொடுத்தவன் பிஸ்மில்லா கான்.
சுரேஷ்: ஷெனாயை முதல்தரம் கேட்கும்போது, என்னடா நாதசுரத்துக்கு கீ போச்சான்னு தோனும் நமக்கு.
நாஞ்சில் நாடன்: போன மாசம், கி.ரா.வை பார்த்தபோது, ஒரு விஷயம் சொன்னார். ராஜரத்தினம் பிள்ளை பிஸ்மில்லாக் கானை பார்க்க போயிருக்கார். பேசிட்டிருந்த உடனே – அவரும் இவரைக் கேள்விப் பட்டிருக்காரு – ‘சரி, உம்ம ஆயுதத்தை எடும்’ அப்படிங்கிறாரு ராஜரத்தினம் பிள்ளை. அவர் ஷெனாய் எடுத்துக் கொடுத்திருகார். இவரு கொஞ்சம் முயற்சி பண்ணிட்டு லகுவா வாசிக்க ஆரம்பிச்சுட்டாரு. அப்புறம், உம்ம ஆயுதத்தை நீர் எடும்கிறாரு. ஊதறாரு ஊதறாரு காத்துதான் வருது வாசிக்க முடியலை. உண்மையோ பொய்யோ, கி.ரா. என்கிட்ட சொன்ன விஷயம் – பத்து நாளைக்கு முன்னாடி. அவங்க ஒருத்தரை ஒருத்தர் அறிஞ்சிருக்காங்க.
அப்புறம் அவன் என்ன சொல்றான்னா, சுருதி நிக்கலைனா மூணு வருஷம் ஆகும்றான். காந்தாரம் செட் ஆகலைனா மூணு வருஷம் அங்கயே கெடன்றான். நம்முடைய system, கொஞ்சம் affluence, ஆகவே இசை வகுப்பு, ஆகவே பதிமூணாம் வயசுல அரங்கேற்றம், ஆகவே பிரமுகர்களைக் கூப்பிட்டு அரங்கேற்றத்துல பாராட்டு விழா, அந்த சிஸ்டம் இல்ல அவனுக்கு. அவன் அதை ஒரு devotionalஆன விஷயமாப் பார்க்கிறான். அவன் எந்த மதத்தைச் சார்ந்தவனா இருக்கட்டும். எனக்கு ரொம்பப் பிடிச்ச ஆளு அந்த பாகிஸ்தானி சிங்கர் – நஸ்ரத் ஃபதே அலி கான். உருது எனக்கு என்னத்தத் தெரியும். அந்த ராகம் எனக்கு என்ன தெரியும். அந்த பாவம் இருக்கில்ல. இசைல மிகமிக முக்கியமான விஷயம் பாவம். அந்த பாவம் எம்.எல்.வி.கிட்ட இருந்த பாவமோ, பட்டம்மாள்கிட்ட இருந்த பாவமோ, கே.பி.சுந்தராம்பாள்கிட்ட இருந்த பாவமோ, சோமு கிட்டியோ மணி ஐயர்ட்டியோ இருந்த பாவமோ, இப்ப இவங்ககிட்ட இல்லை. ‘பாவம்’தான் இருக்கு. சஞ்சய் சுப்பிரமணியம்,  I am very comfortable. கிருஷ்ணாவும் முயற்சி பண்றாரு. உன்னிக்கிரூஷ்ணன் எவ்வளவோ இம்ப்ரூவ் ஆகியிருக்கார்.
(ஸ்ரீதர் நாராயணன்): நீங்க நிறையப் பேரை அங்கீகாரம் கொடுத்து அறிமுகப்படுத்தி வைக்கறீங்க. நீங்க வரும்போது உங்களுக்கு எப்படிப்பட்ட அங்கீகாரம் கிடைத்தது? என்னமாதிரி எதிர்கொள்ளப்பட்டீர்கள்?
நாஞ்சில் நாடன்: எனக்கு முதல் சிறுகதை வெளியான உடனே வண்ணதாசன் ஒரு கடிதம் எழுதினார். நான் வேறயாரோனு நினைச்சுட்டு இருந்தேன். திருப்பதிசாரம் கோலப்பப் பிள்ளையா இருக்கும்னுட்டு.  புதிசா இருந்தது. அந்தக் கடிதம்கூட நான் வைச்சிருக்கேன். என்னுடைய நாவல் வந்தபோது என்னை appreciate பண்ணி எழுதனவங்க வெங்கட் சாமிநாதன். ஆனானப்பட்ட வெங்கட் சாமிநாதன். க,நா.சு. தி.க.சி. வல்லிக்கண்ணன். நெகடிவ்வா இருந்தாக்கூட சுந்தர ராமசாமி.
சுரேஷ்: க.நா.சு., வெங்கட் சாமிநாதன் எழுதினதெல்லாம் எங்கியாவது இருக்கா சார்?
நாஞ்சில் நாடன்: இல்லை நான் அதுக்கு வேறு ஒரு திட்டம் வைச்சிருக்கேன் – இந்த வருஷமோ அடுத்த வருஷமோ செய்யணும். வெங்கட் சாமிநாதன் எழுதின போது சில முரண்களையும் சுட்டிக்காட்டி அப்பளத்தில் கல் அப்படின்னு முடிச்சிருப்பார். அது கொஞ்சம் loudஆ இருந்திருக்கலாம். மொதல் நாவல் எழுதற போதெல்லாம், எனக்குத் தெரிஞ்சதெல்லாம் அதுல சொல்லிரணும்கிற வேகம் இருந்தது. பின்னாடிதான், அதை வேற ஒரு இடத்திலையுங்கூட சொல்லலாமே. எப்பவுமே ஒரு எழுத்தாளனுக்கு எல்லாமே சொல்லித் தீராது. இப்ப நான் பல விஷயங்கள் சொல்கிறபோது repetition வருவதை நானே ஃபீல் பண்றேன். சில அடிப்படை விஷயங்களை – ஊழல் கெட்ட விஷயங்கிறதை எத்தனை முறை சொன்னாலும் சொல்லித்தானே ஆகணும். எந்த வடிவத்துல ஆனாலும். அவங்கெல்லாம் என்னை முன்பின் அறிமுகமில்லாத போதே ஆதரிச்சிருக்காங்க. முதல் சிறுகதை. முதல் நாவல்.
சுரேஷ்: முதல் சிறுகதை விரதம் தான், இல்லையா.
நாஞ்சில் நாடன்: விரதம். தீபத்தில வந்தபோது, அந்த மாதத்தினுடைய சிறந்த சிறுகதையா தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனா வருஷத்துல சிறந்த சிறுகதையா என்னுடைய சிறுகதை ஒன்றுகூட தேர்ந்தெடுக்க்படலை. அந்த முதல் மூணு சிறுகதை தேர்ந்தெடுக்கப்பட்டதுக்கு அப்புறம், நான் எழுதின எந்த சிறுகதையுமே மாதத்தின் சிறந்த சிறுகதையா வரலை. என்னன்னே தெரியலை எனக்கு. ஒருவேளை அவங்க சீனியர் ரைட்டர், கன்சிடர் பண்ணவேணான்னுகூட விட்டுருக்கலாம். ஆனா இவங்க எதையும் எதிர்பார்த்து என்னை ஊக்குவிக்கலை. க.நா.சு.வோ, வெங்கட் சாமிநாதனோ, நகுலனோ, திகசி வல்லிக்கண்ணனோகூட. என்னுடைய சில பேராசிரியர்கள் எழுதியிருக்காங்க. நெகட்டிவ்வாவும் வந்திருக்கு. ரெண்டு மூணு நாள் அப்செட் ஆகியிருக்கும்..பிறகு சரியாயிடுவேன்.
சுரேஷ்: உங்களுடைய படைப்புகளை யாரிடமாவது காண்பிப்பீர்களா?
நாஞ்சில் நாடன்: என்னுடைய நாவலை, எழுதி முடிச்சபிறகு என்னுடைய நண்பர்கள் படிப்பாங்களேதவிர, நான் க்ரிட்டிக்கலா யார்கிட்டயும் கொடுத்து அபிப்ராயம் கேட்டதில்லை, எந்த நாவலுக்கும். மிதவைக்கு மாத்திரம் நான் நகுலன்ட்ட கொடுத்தேன். அவர் ஒரு எட்டு பக்கத்துக்கு முன்னாடி பென்சில்ல கோடு போட்டுட்டார்…நாவல் இங்க முடியுதுன்னு. அதுக்கான காரணங்களும் சொல்றாரு. இப்ப அந்த நாவல் இருக்கிற வடிவம் அவர் சொன்ன வடிவம்தான். நான் அந்த மிச்ச எட்டுப் பக்கத்தை என்ன பண்றதுன்னு கேட்டேன். என்னவேணாலும் பண்ணு, எடையில எங்கவேணாலும் சொருகிக்க…இந்த form of writingல எதை எங்க வேணாலும் வைக்கலாம். அப்படின்னார்.
மிதவைக்கு, ஆங்கிலத்தில ஒரு நல்ல ரெவ்யூ எழுதினார் நகுலன். Illustrated Weeklyல. ஒன்னு அவங்க பாராட்டினது. இரண்டாவது, என்னைப் பொருட்படுத்தி அவங்க பேசினது. சுந்தர ராமசாமி, க.நா.சு, வெங்கட் சாமிநாதன், நகுலன் – one to one என்னோட பேசினாங்க. என்னை ஒரு ஆளா நினைச்சு உட்கார்த்தி வைச்சி நான் கேட்கிற முட்டாள்த்தனமான கேள்வியா இருந்தாக்கூட அதுக்குப் பதில் சொல்லி, இலக்கியம் சார்ந்த தெளிவுகளை எனக்கு ஏற்படுத்தினாங்க. நான் சுந்தர ராமசாமிகட்டயே கேட்கிறேன் – என்ன சார், அகிலன பத்து லட்சம் பேர் படிக்கிறாங்க. உங்கள மூவாயிரம் பேர் படிக்கிறாங்க. பத்து லட்சம் பெரிசா, மூவாயிரம் பெரிசா. அவர் எனக்குப் பதில் சொன்னார். அந்தப் பதில்கள்ல இருந்து நான் எனக்கான தெளிவை அடைஞ்சேன், நம்ம இதை நோக்கிப் பயணம் பண்றோம். அப்பத்தான் எனக்குத் தெரியுது, பாட புத்தகங்கள் எட்டாம் வகுப்புக்கும் எழுதுவாங்க, ப்ளஸ் டூவுக்கும் எழுதுவாங்க, பிஏக்கும் எழுதுவாங்க, எம்.ஏக்கும் எழுதுவாங்க, பிஎச்டிக்கும் எழுதுவாங்க, இதுல ப்ளஸ் டூ பாடப்புத்தகம் கீழானதென்றோ, எம்.ஏ. பாடப்புத்தகம் மேலானதென்றோ கருதவேண்டிய அவசியமில்லை. எட்டு லட்சம் பேர் படிக்கிறான் இதை. ஆனா பிஏ இங்கிலிஷ் அல்லது தமிழ் இலக்கியம் படிக்கிறவன் ஒரு முப்பதினாயிரம் பேர்தான் படிப்பான். இப்ப நான் எதை நோக்கி நகர்வது..பிச்சமூர்த்தி நல்லா சொல்வார்…எல்லாம் ராஜபாட்டைல போவாங்க, நான் காட்டுக்குள்ள தடம்போட்டுகிட்டு இருக்கேம்பாரு. காட்டுக்குள்ள செடிய வெட்டி அதுல வழியை ஏற்படுத்திட்டு போறது இருக்கில்லையா, சீரியஸ் லிட்ரேச்சர்ங்கிறது அந்த மாதிரி தடமில்லாக் காட்டுக்குள்ள தடம்போட்டுகிட்டுப் போற முயற்சிதான். அப்படி எழுதினாத்தான் அந்த லிட்ரேச்சர் ஃப்ரெஷ்ஷா இருக்கும். நாம் விரும்பி, திட்டமிட்டு, agendaகுள்ள வைச்சு செய்கிற விஷயமா நான் கருதாட்டாலும் கூட, ஒரு மொழியை அடுத்த கட்டத்துக்கு, அடுத்த நூற்றாண்டுக்கு நகர்த்தறவன் க்ரியேட்டிவ் ரைட்டர்தான். அவன்தான் இந்த மொழியை இருபத்தியொன்றாம் நூற்றாண்டுக்கும் இருபத்தியிரண்டுக்கும், பாரதி கடத்தினமாதிரி…காலங்காலமா…இளங்கோ அடிகள், மணிமேகலை ஆசிரியர்ல இருந்து, தொடர்ந்து கம்பன், ஆழ்வார், நாயன்மார், சேக்கிழார், பாரதி பாரதிதாசன் வரைக்கும் அப்படியே தொடர்ந்திட்டிருக்கும். இந்த மொழியை நகர்த்திகிட்டே, தேர் இழுக்கிற மாதிரி இழுத்துட்டுப் போறாங்க இல்லையா, இந்த க்ரியேட்டிவ் ரைட்டிங்கினுடைய effort குறைஞ்சுதுன்னா மொழி தேங்கிப் போகும். நல்ல வேளையா, நம்ம மொழில அது stagnate ஆகாம இருக்கக் காரணம்…in spite of all these negative processes…english medium, படிக்க ஆள் கிடையாது, இருநூத்தியைம்பது காப்பிதான் ப்ரின்ட் பண்றாங்க, எல்லாம் இருந்தாலும்கூட, I won’t say that the language has come to a standstill. மொழி நகர்ந்துகிட்டு இருக்கு. இது பத்து கோடி பேர் பேசுகிற ஒரு மொழியில்லையா? பத்துக்கோடி பேர் பேசுகிற மொழி உலகத்திலயே பத்து மொழிதான் இருக்கும். ஆனா அதற்குண்டான இடம் கிடைச்சுதா இல்லையாங்கறது, அரசியலின்பாற்பட்ட கேள்வி. இந்த மொழியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதல்ல என்னுடைய நோக்கம். ஆனா என்னுடைய எழுத்தினுடைய பை-ப்ராடக்ட் அது. நல்லா எழுதுகிற போது எம் மொழி அடுத்த நூற்றாண்டுக்குப் போகும். நான் சமீபத்தில ஆய்வுக் கட்டுரைகள் எழுதின பேராசிரியர்களிடம் உரையாற்றின போது, ஒன்றரைப் பக்க ஆய்வுக்கட்டுரைகளைப் படிச்சுட்டு சொன்னேன், க்ரியேட்டிவிட்டியே இல்லையேமா உங்க மொழியில. நீங்க எழுதின மாதிரி உங்க கைட் எழுதினாரு, அவருக்கு கைட் எழுதினாரு. க்ரியேட்டிவ் லிட்டரேச்சர் படிச்சாலொழிய உங்களுக்கு மொழியின் மீது கட்டுப்பாடு வராது. சுட்டிச்செல்கிறார், சுட்டிச்செல்கிறார்னு ஒரு பாராவில அஞ்சு இடத்திலயா எழுதுவீங்க? வெட்கமா இல்லையான்னு கேட்டேன். பிஎச்டி ப்ரொபசருக்குக் கோவம் வந்துடுச்சு. வந்தா வரட்டும், அது வேற கதை.
சுரேஷ்: உங்களுடைய கதைகளப் பற்றி சில ஆய்வுகள் நடந்திருக்கில்லையா, அவங்க என்ன மாதிரி பண்ணியிருக்காங்க.
நாஞ்சில் நாடன்: ஆய்வுங்கிறது ரொம்ப unfortunateஆன விஷயம் சார். அவங்களுக்குத் தேவை பிஎச்டி பட்டம், அதுசார்ந்து ஒரு வேலை, ரெண்டுமூணு இன்க்ரிமென்ட்டு. இப்ப என்னை ஆய்வு செய்யணுமானா, என்னுடைய சமகாலத்து ரைட்டர் எல்லாரைப் பற்றியும் ஒரு அறிவிருக்கணும். அவன் பூமணியைப் படிச்சிருக்கணும், வண்ணதாசன், வண்ணநிலவன், கலாப்ரியா, ராஜேந்திர சோழன், அத்தனை பேரையும் படிச்சிருக்கணும். Straight away, guide சொன்னார்னு…அவர் நல்லா ஒத்துழைப்பார், எளிமையா இருக்கும், நாஞ்சில் நாடனின் பெண்ணியம்னு எடுத்துக்கோ, அப்படின்னு ஒரு தலைப்பப் போட்டு விட்ருவாங்க..அதைத் தாண்டிப் படிக்கமாட்டாங்க. புஸ்தகமே நம்மகிட்ட வந்து கேட்பாங்க..சார் உங்க புஸ்தகம் எங்க சார் கிடைக்கும்பாங்க…என் வேலையா அது? நீயில்ல தேடிக் கண்டுபிடிக்கணும்?
அன்பழகன்: சுஜாதாகூட உங்கள நிறைய கோட் பண்ணியிருக்கார்.
நாஞ்சில் நாடன்: அவங்களால பொருட்படுத்தப்பட்ட ஒரு ரைட்டரா நான் இருந்தேங்கிறது எனக்கு சந்தோஷந்தான். இந்த கல்லூரிப் பேராசிரியர்களுடைய மொழியை வைச்சுகிட்டு இந்த மொழி ஒரு இன்ச் கூட நகராது. வா.மு.கோமு, சாரு யார் எழுதினாலும் சர்தான்…he is contributing to the language.
சுரேஷ்: உங்க பார்வைல ஜெயமோகன், ராமகிருஷ்ணன், சாரு தலைமுறை தாண்டி அடுத்த மேஜர் ரைட்டர்ஸ் வந்துட்டாங்கன்னு நினைக்கிறீங்களா?
நாஞ்சில் நாடன்: வந்திருவாங்க. கண்மணி வந்திடுவார். கண்மணியோட வந்தாரங்குடி மீது நிறைய விமர்சனம் இருந்தாலும்கூட, he is a good writer. ஜாகீர் மீது எனக்கு நம்பிக்கை இருக்கு. அழகிய பெரியவன் மீது நம்பிக்கை இருக்கு. சு.வேணுகோபால் எழுதறார். சின்ன பையங்க நிறையப்பேர் எழுதறாங்க. என்.ஸ்ரீராம்னு ஒரு பையன் கரூர்ல இருந்து எழுதறான்…அற்புதமான சிறுகதைகள் எழுதறான்.
அன்பழகன்: இணையத்துல தொடர்ந்து எழுதறதால சில எழுத்தாளர்கள் கவனிக்கப்படறாங்களா? எழுதாதவர்கள் கவனிக்கப்படுவதில்லையா?
நாஞ்சில் நாடன்: இவர்களெல்லாம் ஒரே ஆட்களாலதான் கவனிக்கப்படறாங்க. இணையத்துல இதைப் படிக்கிறவன் எத்தனைபேர் இருப்பான். பத்தாயிரம் பேர் இருப்பாங்களா? இந்த பத்தாயிரம் பேர் அல்ல வாசகர்கள். சந்திச்சே இராத ஆட்கள். இன்னிக்கு நான் பஸ்ஸை விட்டு இறங்கி, பசிக்குதுன்னு கம்பங்கூழ் குடிச்சிட்டு அடுத்த பஸ் ஏறலாம்னு போறேன்…ஒரு பொண்ணு பார்த்துட்டு இருந்தது…‘சார், நாஞ்சில் நாடன்தானே’. ஆமான்னேன். ‘நான் சென்னைல அட்வகேட்டா இருக்கேன். ஈரோடு சொந்த ஊரு.’ ‘ஈரோடு போறியா, சென்னை போறியா’ ‘ஈரோடு’. இவ்வளவுதான். பில்லைக்குடுத்துட்டு வெளில வர்றேன், ஒரு ஆள் ஓடிவந்து, சார் சார்ன்னதும் திரும்பிப் பார்த்தேன்…வெள்ளியங்கிரி மலைக்குப் போய்ட்டுத் திரும்பிகிட்டிருக்கான். கையில கம்பு இருக்கு…‘வெள்ளியங்கிரிக்குப் போயிட்டு வர்றீங்களா தம்பி?’, ‘ஆமாங்க’, ‘சாப்டீங்களா’, ‘சாப்பிட்டேன்’, ‘உங்களை சென்னை புக் ஃபேர்ல பார்த்திருக்கேன் சார்.’ இவனெல்லாம் நெட் மூலமா என்கிட்ட வரலை. அது வேற உலகம். அந்த உலகம் இல்லாட்டாக்கூட நான் ஒரு ரைட்டர் தான். நான் இதையெல்லாம் பொருட்படுத்திக்கிறதில்லை. கண்மணி குணசேகரன் பத்து நாளைக்கு மாய்ஞ்சு மாய்ஞ்சு ப்ளாக் எழுதினான். ‘என்னடான்னு?’ கேட்டேன். ‘அண்ணா இந்த திசையே வேண்டாம்னா, விட்டு ஓடியே வந்துட்டேன்.’ ஜாகீர் ராஜா எழுதறாரான்னு தெரியல. அதுலயும் நல்ல எழுத்துகள் வருது. வாசிக்கறாங்க. நல்ல entertainment இருக்கு. அந்த ப்ளாக் மூலமா வாசிக்கிற வாசகர்கள் வேற சார். நம்ம புத்தகக் கண்காட்சில சந்திக்கிறவங்க, பொது இடங்கள்ல சந்திக்கிறவங்க – இவங்க வேற. நான் அதுக்கும் ஆசைப் படல. இதுக்கும் ஆசைப்படல. நான் எனக்குத் தெரிஞ்சதை என்னோட அளவுல எழுதறேன். அதுக்குக் கிடைக்கிற ஆராதனையோ போஷனையோ, இதைப் பத்தியெல்லாம் கவனிக்கிறதில்லை.
சுரேஷ்: உங்களுக்கான வாசகனை நீங்க அடைஞ்சுட்டேதான் இருக்கீங்க.
நாஞ்சில் நாடன்: புதுப்புது வாசகனை அடைஞ்சுகிட்டிருக்கேன். என் கடன் பணி செய்து கிடப்பதே. திருநாவுக்கரசரை கோட் பண்ணினேன். என் வேலை எழுதுவது. நிறைய யங்க் ரைட்டிர்ஸுக்கு நான் சொல்ற ஒரே அட்வைஸ், நீங்க எழுதுங்கப்பா. எழுதினா உன்னைத் திரும்பிப் பார்ப்பான். சும்மா ஃபேஸ்புக்ல போஸ்டிங் போட்டுட்டு, ஒரு கவிஞர்கிட்ட சொன்னேன்…கவிதாயினினு சொல்லணும்…ஏம்மா ஒரு கவிதைக்குப் பத்து போட்டோ போடறீங்க. குறைச்சுக்கங்கம்மா, வேறவிதமாப் பேசறாங்க வெளியுலகத்தில. ஒரு போட்டோகூட எதுக்குப் போடணும். என்னுடைய போட்டோக்கள் எல்லாமே நெட்ல இருந்து எடுத்துப் போடுகிறவைதான்.
சுரேஷ்: ஆரம்ப காலத்தில உங்களப் படிக்கிற போது, நாஞ்சில் நாடன் எப்படி இருப்பார்ங்கறதே தெரியாது.
நாஞ்சில் நாடன்: நான் உ.வே.சாமிநாதய்யருக்கு ஒரு புஸ்தகம் டெடிக்கேட் பண்றதாலே, எனக்கெதாவது லாபம் உண்டா. அவர் செத்துப்போய் எவ்வளவு வருஷம் ஆச்சு. இது என்னுடைய கடப்பாடுன்னு நான் செய்யறேன். அப்ப ஒரு சீரியஸ் ரைட்டர், இதைப் படிக்கிற ஒரு சீரியஸ் ரீடர்…மகாமகோபாத்யாய தாக்ஷனாய கலாநிதி டாக்டர். உ.வே.சாமிநாதய்யர்க்கு…சொல்கிறபோது கண்டிப்பா அந்தப் பக்கத்தைப் படிக்காமப் போகமாட்டான்ல? உ.வே.சா மேல சிலர் செய்கிற விமர்சனம் – பாரதியார் அவர்கிட்ட ஏதோ முன்னுரை கேட்டாராம். அவர் கொடுக்கலைனு சொல்லிட்டாராம். ‘சரி, கொடுக்கலைனு சொல்லிட்டார். இது ஒரு தகவல். அவ்வளவுதானே. I won’t infer anything out of this. பாரதியை அவர் மதிக்காம இருந்ததால கொடுக்கலையா, பிடிக்கலையா…இதுக்கெல்லாம் ஏன் நீ அர்த்தம் கண்டுபிடிச்சுக்கிற…?
சுரேஷ்: பாரதி சாமிநாதய்யரை வாழ்த்தி ஒரு பாட்டே பாடியிருக்கார்.
நாஞ்சில் நாடன்: ஆமா. அவர் ஆயிரத்தெட்டு preoccupationல இருந்திருப்பார். ஒரு செய்யுள் உடைஞ்சு கிடக்குது. பாதி சொற்களைக் காணோம். தேடிக் கண்டுபிடிக்கிறாரு. முன்னுரை எழுதறதுக்கு நேரமில்லாம இருந்திருக்கலாம். அல்லது, I am inferior to him to write a prefaceனு நினைச்சிருக்கலாம். நினைக்கக்கூடியவர் தானே அவரு? அதுக்குள்ள நீங்க பாலிடிக்ஸ் பண்ணப் பார்த்தீங்கன்னா. இப்ப நான் இத நினைச்சுட்டு இல்லை. எனக்கு ஆத்மார்த்தமா சாமிநாதனுக்கு சமர்ப்பணம் பண்ணனும்னு தோணுது. இது தோன்றுவதன் மூலம், என்னை பத்தாயிரம் பேர் படிச்சான்னா, பத்தாயிரம் பேருக்கு நான் சாமிநாதன ஞாபகப்படுத்தறேன். அவர் என் கண்டுபிடிப்பல்ல. நாஞ்சில நாடன் மதிக்கிற ஒரு ஆள் இருக்கானே…அப்படீன்னு இருக்கில்ல.  இணையத்துல நான் இல்லாததால நான் எதையும் இழந்ததாத் தெரியல. எனக்கு வந்துசேர வேண்டிய செய்திகள் வந்து சேருது. எல்லா ரைட்டரும் டைப் அடிச்சு அனுப்புங்கன்றான்.  குங்குமத்தில நான் கையால தான் எழுதி அனுப்புவேன்னு சொன்னேன். நீங்க எப்படி வேணா அனுப்புங்கன்றாங்க. எனக்கு இதுக்குமேல அதுக்குள்ள போயி, அதுக்கு நேரமில்லை.
அதவிட என்னோட சந்தோஷம் – ஈண்டுனு தமிழ்ல ஒரு சொல் இருக்கு. இங்கேனு பொருள். ஈண்டயான் அப்படினு ஒரு சொல் இருக்கு. இதுதான் நேத்து அறிந்துகொண்ட சொல். கண்டுபிடிச்ச சொல்னு சொல்ல முடியாது. ஈண்டயான்னா இங்கே இருப்பவன். நான் கண்டிப்பா, வாய்ப்பு கிடைக்கிற சமயத்தில ஈண்டயான்னு போட்ருவேன். தெரிஞ்சுட்டுப் போறான். பனுவல் போற்றுதும்னு சொல்வனத்துக்குத் தொடர் எழுதினேன். அந்தத் தலைப்பிலயே என்னுடைய புத்தகம் வருது. நிறையப் பேர் பனுவல்னா என்ன சார் அப்படிங்கிறாங்க. தமிழ் இலக்கியத்துக்குள்ள புத்தகங்கிற சொல் வந்திருக்கு, நூல்ங்கிற சொல் வந்திருக்கு, பனுவல்ங்கிற சொல் வந்திருக்கு, கித்தாப்ங்கிற சொல்லே பயன்படுத்தியிருக்காங்க, ஆயிரம் முகத்தான் அகன்றதாயினும் பாயிரம் இன்றேல் பனுவல் அன்றே, அப்படினு பாட்டு இருக்கு. நான் பனுவல் போற்றுதும்னு துணிஞ்சு புஸ்தகத்துக்குத் தலைப்பு வைச்சாச்சு. சென்னைல ஒரு புஸ்தகக் கடைக்குப் பனுவல்னு பேர் வைச்சிருக்காங்க. அப்ப இந்த சொல்லை நான் நூறு வருஷத்துக்கு வாழ வைச்சிருக்கேன். இல்லைனா, எவ்வளவோ அழிஞ்சு போயிடுதில்லையா. நான் கல்லூரிகளுக்குப் போகிற போது, யானைங்கிற சொல் எல்லாருக்கும் பொருள் விளங்கும்பா. யானைனா elephantனு சொல்லிருவோம். ஆனா இருபத்திநாலு சொல் அகராதில கிடக்கு. கம்பனுக்குத் தேவையா இருக்கு…யானை – நேர்நேர். வாரணம் – நேர்நிரை. களிறு – நிரைநேர். வித்தியாசத்தைப் பாருங்க. கோதகம் – நேர்நிரை. போயட்ரிக்கு ஓசைக்காக இது தேவைப்படுது. ப்ரோசுக்கும் இப்படி வேணும். ப்ரோசுக்கும் போயட்ரிக்கும் சின்ன வேறுபாடுதான். ப்ரோசையும் இனிமையா muscialஆ, புணர்ச்சியினல வரக்கூடிய சுகத்தைக் காட்டணும்னா வேறவேற சொல் போட்டுத்தான் ஆகணும்.
செந்தில்: நீங்க ஏற்கனவே எழுதியிருக்கீங்க. தமிழ்ல சொற்களின் பயன்பாடு அறுகிட்டு வருதுன்னு.
சுரேஷ்: சோத்துக்கு செத்தாலும் சொல்லுக்குச் சாகாதேனு கவிதைகூட எழுதியிருக்கார்.
செந்தில்: ஆனா உலகம் முழுக்க அப்படித்தானே இருக்கு. ஆங்கிலத்திலயே, புதுப்புது சொற்கள் எல்லாமே மற்ற மொழிகள்ல இருந்து சேர்றதுதான். அங்கயும் core language 500-1000 சொற்கள்தான் இருக்கு.
நாஞ்சில் நாடன்: பத்தாம் நூற்றாண்டுல தமிழ்ல முதல் நிகண்டு தொகுக்கப்பட்டது. நிகண்டுனா அகராதி. பிங்கல நிகண்டு. அவர் பதினைந்தாயிரம் சொல்தான் தொகுக்கிறார். பின்னாடி அவருடைய பேரன் – அவரு முப்பதினாயிரம் சொல் தொகுக்கிறார். 1927ல சென்னைப் பல்கலைக்கழகம் பேரகராதி போடுது – அதுல ஒரு லட்சத்து இருப்பத்தி நான்காயிரம் சொற்கள் இருக்கு. இதுல ரெண்டு காரணம் புலப்படுது. முதல் நிகண்டு தொகுத்தவருக்கு இந்த சொற்கள் அறிமுகம் ஆகாம இருந்திருக்கலாம். அவருடைய பிரதேசத்துக்கும் விஸ்தீரனத்துக்கும் எல்லை. பின்னாடி வரவர அறிமுகமாகலாம். அல்லது மொழிக்குள்ள புது சொற்கள் வந்து சேர்ந்துகிட்டே இருக்கலாம். நீங்க சொன்ன அதே பாய்ன்ட் தான். ஆங்கில இலக்கியத்துல ஆதில இருந்த சொற்கள் எத்தனை, இன்னிக்கு அதுல இருக்க சொற்கள் எத்தனைனு பார்தோம்னா, உள்ளே வந்து சேர்ந்துகிட்டு இருக்கு. சேர்ந்துகிட்டு இருக்கிறபோதே அது புழங்கிகிட்டும் இருக்கு. இங்க புழக்கத்துக்கே வராம – இப்ப வீட்ல என்ன பண்ணுவாங்கன்னா அன்றாட வாழ்க்கைக்குப் பாத்திரங்க வைச்சிருப்பாங்க. பத்துப் பேருக்கு ஒரு விஷேசம் வருதுன்னா மேல இருந்து அந்த சட்டி இந்த சட்டினு இறக்குவாங்க. அப்ப விஷேச நாட்களிலாவது அதை புழக்கம் பண்ணனுமில்லையா…இல்லைனா அந்த பாத்திரத்தை வைச்சுட்டு என்ன பயன்? குண்டா அண்டானு எதுக்காக இடத்தை அடைச்சுட்டு துலக்கித்துலக்கி வைச்சுகிட்டு இருக்கணும்? சொல் வாழணுமானால், அது புழங்கணும். இந்தப் புழங்குதலை யார் செய்வாங்க? அன்றாட மனிதன் செய்யமாட்டான். அன்றாட மனிதனுடைய வாழ்க்கைக்கு- ஒரு விவசாயி இருக்கான்னா, அவனுக்கு மழை, களை, ஏர், கலப்பை, பருவம், விதை – இந்தமாதிரி சொற்கள் போதும். மொழிக்குள்ள செயல்படுகிறவன் – எழுத்தாளன், இவன் தொடர்ந்து சொற்களை வாழ்வைச்சுகிட்டே இருப்பான். அப்படி வாழவைச்சதுனாலேதான் கம்பன் என்னோட estimateல ஒரு லட்சம் சொற்களுக்கு மேல பயன்படுத்தியிருக்கான். திருவள்ளுவருக்கு அதற்கான தேவை வரலை…அளவில சின்ன வொர்க் தானே. சேக்ஸ்பியர் எவ்வளவு சொல் கையாண்டார் – 25000 இருக்கலாம். பின்னாடி வந்த மேஜர் ரைட்டர்ஸ் 35000 சொல் கையாண்டிருப்பாங்க. ஆனா ஆங்கில அகராதில அவ்வளவு தானா இருக்கு?எவ்வளவோ இருக்கில்லையா. ரைட்டருக்கு இதுக்கான தேவை எதனால வருதுன்னா – நானும் காமத்தைத்தான் பேசறேன், பசியைத்தான் பேசறேன், அநியாயத்தையும், அக்கறையையும், ஊழலையும் தான் பேசறேன். அடிப்படையான உணர்ச்சிகள் இவ்வளவுதான். இன்னொரு ரைட்டர்ல இருந்து நான் எப்படி வித்தியாசப் படறேன். ரெண்டு மூணு விஷயம் இருக்கு. என்னோட யுக்தியின் மூலம் நான் வேறுபடறேன். என்னுடைய தொணியின் மூலம் வேறுபடுகிறேன். என்னுடைய தாபத்தின் மூலம் வேறுபடுகிறேன். இதை எதன் மூலம் எய்துகிறேன்னா, சொற்கள் மூலம் எய்துகிறேன். இவ்வளவு பெரிய கல்லைத் தூக்கிட்டு மாங்காய் எறிய முடியாது. பாம்பு வருதுன்னா இந்தக் கல்லைப் போட்றலாம். ஏன்னா தூரம், குறி எல்லாம் முக்கியம். சொல்லுக்கும் அந்த பர்பஸ் முக்கியம். இது ஒலி மாத்திரம் இல்லை..பர்பஸ் முக்கியம். மந்திரங்கிறது என்னது – பவர்புல்லா ஓசையுடன் effectiveஆ சொல்லப் பயன்படுத்தறது. சொல்லுனாலே மந்திரம்தான். அதனாலதான் பாரதி மந்திரம் போல் வேண்டுமடா சொல்லாட்சிங்கிறான். ஊழச்சதை இருக்கக்கூடாதுங்கிறான். கட்டிடம் கட்டற மேஸ்திரி, ஒரு பாந்த அடைக்கறதுக்கு, ஒரு செங்கல எடுத்து ரெண்டு தட்டுதட்டறான், கரைஞ்சிருச்சி..கரெக்டா அது பொருந்துது. காக்கல்லு, அரைக்கல்லு, முக்காக்கல்லுங்கிறான் அவன். நான் வழக்கமாக் கல்லூரிகள்ல சொல்ற உவமானம், டென்னிஸ் ப்ளேயர் செரீனா வில்லயம்ஸ் எடுத்துக்கங்க – அந்தம்மா பேன்ட் பாக்கெட்டுல பின்னால மூணு பால் வைச்சிருப்பாங்க. எல்லா பாலும் ஒரே கலர்தான், ஒரே எடைதான், ஒரே அளவுதான், ஒரே காற்றழுத்தம்தான், but still she is having a choice. ஒன்னு எடுத்து தூரப்போட்டுட்டு, இன்னும் ரெண்டு வாங்கிக்கறா. அப்ப ஏதோ ஒரு force கொடுக்கப் போறா, ஏதோ ஒரு உயரத்துக்கு குதிக்கப்போறா, ஏதோ ஒரு பாய்ன்ட குறிவைக்கறா, கோணம் தேர்ந்தெடுக்கறா. ஒரு சொல் மீது ஒரு எழுத்தாளனுக்கு ஒரு feel வரணுமில்லையா. இந்த இடத்தில எனக்கு வாரணம் தான்யா, வடமொழியா தென்மொழியான்னு எனக்குக் கவலையில்ல. தொல்காப்பியன் இலக்கணம் சொல்றான் – திசைச்சொல், திரிசொல், வடசொல், இதுமாதிரி தமிழ் இலக்கணத்துக்கு உட்பட்டு நீங்க பயன்படுத்தலாம். முளரினு ஒரு சொல் இருக்கு. கம்பராமாயணத்துல. நான் ஏற்கனவே எழுதுனதுதான். முளரிங்கறது தாமரைக்கான சொல். சங்க இலக்கியம் முழுக்க முளரி பயன்படுத்தப்பட்டிருக்கு. ஆனா தாமரைங்கற பொருள்ல பயன்படுத்தப்படல. தாமரை பயன்படுத்தப்பட்டிருக்கு. இந்த இரண்டுதான் தமிழ் இலக்கண சுத்தப்படி பார்த்தீங்கன்னா தமிழ்ச்சொல். கம்பன் கஞ்சம்னு ஒரு சொல் பயன்படுத்தறான். கமலம், நளினம், பங்கஜம், பத்மம், அரவிந்தம், புண்டரிகம்னு பல சொற்கள் பயன்படுத்தறான். அவனுக்கென்ன தேவை. தாமரைங்கிறது எளிதுதானே. எல்லாருக்கும் விளங்குமே. அரவிந்த மலருள் நீங்கி, திரு இவள்னு சூர்ப்பநகை சீதையைப் பார்த்துச் சொல்றா.
(அரவிந்த மலருள் நீங்கி, அடி இணை படியில் தோய,
திரு இங்கு வருவாள் கொல்லோ? என்று அகம் திகைத்து நின்றாள்.)
அரவிந்த மலர்ல இருக்கக்கூடியவள் எப்படி அங்கிருந்து புறப்பட்டு இங்கவந்து சேர்ந்தா. அந்த இடத்தில அரவிந்தம் சொல்றான். பங்கஜாக்ஷன்ங்கிறதை தாமரைக்கண்ணன்னு மொழிபெயர்க்கிறான். இதுதான் சொற்காமுறுதல்னு சொல்றோம். எப்படி ஒரு மைசருக்கு பணம்மீது காமம் இருக்குமோ, அதுமாதிரி ஒரு எழுத்தாளனுக்குச் சொல்மீது காமம் இல்லைனா அவன் சரியான வகையில present பண்ணமுடியாது. I definitely want to differ from your writing or his writing. என்னை எப்படி நான் வேறுபடுத்திக்க முடியும். சொல் சேர்கிற விதம் இருக்கு. தமிழ்ல புணர்ச்சி விதிகள் தான் இலக்கணம்னு சொல்லி, அறுவது வருஷத்துக்கு முன்னால வந்த தமிழாசிரியர்கள் எல்லாம் சாகடிச்சுட்டான். அதெல்லாம் அவ்வளவு கஷ்டமான விஷயமே அல்ல. மாத்திரைகள் இருக்கு. ‘அ’ அப்படின்னா ஒரு மாத்திரை. ‘ஆ’ன்னா இரண்டு மாத்திரை. ஃனா அரை மாத்திரை. கால் மாத்திரை இருக்கு. ஐகார குறுக்கம், மகர குறுக்கம் இருக்கு. மாத்திரைனா time. Timeனா என்ன – ஓசை. எதுக்காக அளபெடுக்கணும். ஓசைக்காக. எதுக்காக குறுகணும். முறுக்குனு நாம உச்சரிக்கிறதில்லை. முறுக்குன்னா ஒரு மாத்திரை. முறுக்குனா அரை மாத்திரை. ரெண்டுமே உகரம்தான். இது குற்றியலுகரம். இதுக்கு முழுக்க இலக்கணம் தெரியணும்னு அவசியமில்லை. இசை மாதிரிதான் இந்த சமாச்சாரம். நான் என் மனசுக்குள்ள போட்டு சொல்லிப் பார்க்கிறேன். உருட்டிப் பார்க்கிறேன். இப்படிச் சொன்னா நல்லாயிருக்குமா. இப்படிச் சொன்னா நல்லாயிருக்குமா. இது ஒவ்வொரு சொல்லுக்கும் நம்ம செய்யறதில்லை. நான் செய்யமாட்டேன். ஜெயமோகனும் செய்ய மாட்டார். இது இந்த writing processல automaticஆ வந்துரும்.
சுரேஷ்: கைப்பழக்கமா வந்துரும்.
நாஞ்சில் நாடன்: அப்படித்தான் வரும். பின்னாடி fine editing போகும்போது வேணா நாம சில சொற்களை நீக்குவமே தவிர, நாக்குல போட்டு உருட்டுகிற போது, அந்த perfectஆன tone கிடைக்கலேனே எழுத வராது. சில நொடிகள்ல நடந்து முடிஞ்சுரும். ஒரு நிமிஷத்துல நாற்பது வரிகளை எழுதி முடிச்சுருவேன். இது பயிற்சியின் மூலம், வாசிப்பின் மூலம், எனக்கு கிடைக்கிறது. ஏன் அவன் கறங்கு கால்புகா – கு ஒரு குறில், கா ஒரு நெடில் – கறங்கு நிரைநேர் –  ஒரு ஓசை வருதில்லையா – கறங்கு கால்புகா கதிரவன் ஒளிபுகா மறலி மரம்புகா – இதை நீங்க மொத்த சொல்லிட்டு வரும்போது ஒரு ஓசையின்பம் இருக்கில்லையா, இதுதான் மொழியினுடைய ஒரு உச்சம். இதை ஒரு ரைட்டர் ஃபீல் பண்ணனும். வாசிக்கிறவன் ஃபீல் பண்ணனும். என்ன சார் கல் கடலையா வறுக்கிறீங்கனு கேட்பாங்க. நான் எழுதினேன் – பேராசிரியர்கள் எல்லாம் கல்கடலையை வறுக்கிறார்கள். அப்புறம் திருத்தி எழுதினேன். பேராசிரியர்கள் எல்லாம் கல்கடலையை நெய்யூற்றி வறுக்கிறார்கள். ரெண்டுக்கும் வித்தாயசம் இருக்கு. இதுவே நக்கல்தான். நெய்யூற்றி வறுத்தல்னா கொஞ்சம் அதிகப்படியா போறது. இது திட்டமிட்டு வராது. creativityங்கிறது ஒரு சின்ன தீ. அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் அதை ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன். வெந்து தணிந்தது காடு. சின்ன குஞ்சு. இத்துணூண்டு தீ. creative powerங்கிறது ஒரு சின்ன தீதான்.
கண்ணன்: ஆனா, மகாபாரதம் மாதிரியான ஒரு படைப்புல, இந்த மொழியைப் பயன்படுத்தறது ஒன்னு. நீங்க, ஒரு சமகால யதார்த்தக் கதையை எழுதும் போது, ஈண்டு மாதிரியான யாருமே பயன்படுத்தாத சொல்லை எடுத்துப் போடறது, அதை எப்படி நீங்க செய்யமுடியுது?
நாஞ்சில் நாடன்: அதை முழுக்கப் பண்ணமாட்டேன். ஒரு கட்டுரைல ஒரு பத்து சொல் அப்படி முடியுமானாப் போட்டுறவேன். நம்ம சொல்லிட்டுப் போற விதத்தில அந்த சொல் டூயூன் ஆகி வந்திரும். என்ன தவம் செய்தனை. இது ஒரு கீர்த்தனையினுடைய ஒரு வரி. போற போக்குல என்ன தவம் செய்தனைனா அது வாசகனுக்குப் புரியாமப் போகாது. ஏன்னா அதுக்கு ஒரு extra power இருக்குது. அதைச்செய்யற போது, முதல்ல என்னுடைய pleasure எனக்கு முக்கியமில்ல? என்னுடைய சாமர்த்தியத்தைக் காட்டறதுங்கறது ரெண்டாவது விஷயம். இனிமேல் போயெல்லாம் யாருக்கும் என்னை நிரூபிச்சுட்டு இருக்கவேண்டியதில்லை. என்னுடைய இயல்புன்னு ஒன்னு இருக்கில்லையா. ஈண்டுங்கிறத பல இடத்தில நான் பயன்படுத்தறேன். அப்படி ஓங்கிச் சொல்கிறபோது அதுக்கொரு ஓசை இன்பம் இருக்கு. கம்பீரம் இருக்கு.
சுரேஷ்: நீங்க சொல்லும்போது லா.ச.ரா.தான் ஞாபகம் வர்றாரு. நெருப்புன்னா வாய் வெந்துறணும்பாரே.
நாஞ்சில் நாடன்: அவர் சொல்றாரு, தண்ணி குடிச்சா தண்ணி இறங்குறது தெரியுமாம். இது லா.ச.ரா.  crystal மாதிரி transparentஆ இருக்குதாம் தொண்டை. தண்ணியே transparent.
சுரேஷ்: ஆனா உங்களுக்கு தமிழ் படைப்பாளிகள் மேல நம்பிக்கை இருக்கு. படைப்பாளிகள் வராங்கங்கிறதில உங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை.
நாஞ்சில் நாடன்: வராங்க. நாம கூடுமான வரைக்கும் ஆதரிக்கணும். சமீபத்தில அம்மாவின் தேன்குழல்னு ஒரு கதை – இன்னொரு இணைய இதழ். மாசம்  ஒரு கதை வெங்கட் சாமிநாதன் தேர்ந்தெடுத்து, பன்னிரண்டு கதை எனக்கு அனுப்பிச்சு, நல்ல வேளை என்ன உச்சநீதிமன்ற நீதிபதியாக்கிட்டாங்க. அதுல ஒன்னு தேர்ந்தெடுக்கச்சொன்னாங்க. அம்மாவின் தேன்குழல் எழுதினவர் இப்ப ஒரு தொகுப்பு போட்டிருக்கார். ஐரோப்பாவில் இருக்காரு. கொஞ்சம் நெட் ரைட்டிங் வாசனை இருக்கு. காப்பியை பித்தளை டம்ளர்ல குடிக்கிறதுக்கும் ப்ளாஸ்டிக் டம்ளர்ல குடிக்கிறதுக்கு வித்தியாசம் இருக்கு. இந்த வித்தியாசம் எங்கிருந்து சார் வருது. ஒரு கல்யாண வீட்ல பேப்பர் கப்ல காப்பி குடுத்தா …இது ப்ளாஸ்டிக்கினுடைய தன்மையா, மூச்சு உணர்றதா, பித்தளைக்கு வாசனை கிடையாது. செம்புக்கு வாசனை கிடையாது. இதுக்கு வாசனை இருக்கு. இதன் வாசனை ஏதோ ஒரு விதத்துல காப்பில கலங்குது. இந்த நெட் ரைட்டிங் க்ரியேட்டிவ் ரைட்டிங்க்கு உள்ள வரும்போது ப்ளாஸ்டிக் கப்பினுடைய வாசனை அதுல வந்துருது. இது குற்றச்சாட்டுனு சொல்லமுடியாது.
யங் ரைட்டஸ் பெரிய அளவில படிக்கணும்னு ஆசைப்படறேன். படிக்கணும்னா offensiveஆ எடுத்துக்கிறாங்க. ஒரு மொழியில ஏற்கனவே என்ன நடந்திருக்குங்கிறது எதுக்கு எனக்குத் தெரியணும்னு கேட்கிறாங்க. நான் அது உனக்குத் தெரியணும்னு சொல்றேன். மொழிக்குள்ள என்ன நடந்தது, ஏற்கனவே என்ன நடந்தது. புதுமைப்பித்தன் என்ன பண்ணியிருக்கான், கு.ப.ரா. என்ன பண்ணியிருக்கார், லா.ச.ரா. என்ன பண்ணியிருக்காரு, தெரிஞ்சிருக்கணும். இதுதானே ஆரம்பக் கல்வி. ஒரு கம்ப்யூட்டர் எஞ்சினியர் தமிழ் இலக்கணம் எதுக்காகக் கத்துக்கணும்?
சுரேஷ்: We need not reinvent the wheel.
நாஞ்சில் நாடன்: புணர்ச்சி விதிகள் எல்லாம் ஒரு கம்ப்யூட்டர் எஞ்சினியர் கற்றுக்கொண்டு என்ன ஆகப்போகுது? அப்படிக் கேட்டீங்கன்னா எதுவும் ஆகப்போறதில்லை. ஆனா, ஒன்றை உருவாக்குவதில் இதற்கெல்லாம் பெரும் பங்குண்டு. இசைக்குப் பங்குண்டு. எதையுமே நெகட்டிவ்வாப் பார்க்காதீங்கன்னு சொல்றேன். அதனுடைய அளவில அதனைப் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க. Pre-conceived notionsஓட இலக்கியத்தைப் பார்க்காதீங்க. எனக்குக் குமரகுருபரர் படிக்கிறபோதுதான் இந்தத் தெளிவு கிடைச்சுது. சைவ இலக்கியம், சைவ இலக்கியம்னு மூணு வருஷம் வரைக்கும் குமரகுருபரர்ல ஒரு பாட்டு நான் படிச்சவனில்லை. சிற்றிலக்கியங்களுக்காகப் படிக்க ஆரம்பிச்சதுக்கப்புறம் அவன் எவ்வளவு பெரிய giantனு தெரிஞ்சது. அவன் சைவம் எழுதறான்னா எழுதிட்டுப் போறான். இஸ்லாம் எழுதறானா, கிருஸ்தவம் எழுதறானா எழுதிட்டுப் போறான். குமரகுரபரன் ஒரு மகாபெரும் கவிஞன். அற்புதங்களில் ஒன்னு. மேடைப் பேச்சாளர்கள், சுகிசிவம் எங்கியாவது குமரகுருபரர் பேசியிருக்காறா. பட்டிமன்றங்களில் கம்பன்தான் comfortable. மனப்பாடம் பன்றதுக்கு, சொல்றதுக்கு அதுதான் எளிமையாயிருக்கும். ஒரு இசைப் பாடகர் எதுக்காக வீணை கத்துக்கறான். You can excel only in one. எதுக்காக அவன்…ராஜரத்தினம் பிள்ளை அற்புதமாப் பாடுவாராம். சேஷகோபாலன் அற்புதமா வீணை வாசிக்கிறார். மதுரை சோமு தாளக்கட்டு சொல்றார். தனியாவர்த்தனத்துலே..அவர் சொல்றதக் கேட்டா அற்புதமா இருக்கு. மனுஷன் என்ன வித்தையெல்லாம் காட்டறான். எல்லாமே connected தானே சார். ஒரு painterக்கு ஓவியத்தின் கூறுகளைத் தெரிஞ்சுகிட்டாப் போறும். ஒரு ரைட்டருக்கு அப்படியில்ல. Geography, history, medicine, world politics,  கூடுமானா music, கூடுமானா சிற்பம், at least அதுனுடைய knowledge base ஆவது இருக்கணுமில்லையா? படத்தைப் பார்த்து அழகா சிரிக்குதான்னாவது கண்டுபிடிக்கத்தெரியணுமில்லையா? ஒரு பெரிய பொறுப்பு இவருக்கு இருக்கு. இவனுடைய சமூகப் பொறுப்பும் அதிகம். எழுதுவது என்பது ஒரு இடத்தைப் பிடிப்பதற்கான முயற்சி அல்ல. இடத்தையோ விருதையோ பிடிப்பதற்கான முயற்சி இல்லை. முதல்ல எனக்கு அது சந்தோஷமா இருக்கணும். என்னை வாசிக்கிற பத்துபேருக்கு சந்தோஷமா இருக்கணும். பத்து பேருமே நல்லாயில்லைனு சொல்லிட்டா, எழுதப்பட்டு என்ன பிரயோஜனம்? வாசிக்கப்படாத ஒரு எழுத்துனாலே என்ன பிரயோஜனம்? பத்து வயசுல கல்யாணமாகி, பதினோறு வயசில புருஷன் செத்து, எம்பத்தியாறு வயசு வரைக்கு வைதவ்யம் காத்து இருந்தமாதிரி ஆயிடக்கூடாதில்லையா? எழுதுவது வாசிக்கப்படணும். வாசிக்கப்படுவதற்கு அடிப்படையான ஒரு விஷயம் வாசிப்புத்தன்மை. Readability. Young writers நிறையப்பேர் அதைப் புரிஞ்சிக்கணும். உணவுக்கு வாசனையால் விளையக்கூடிய நன்மை என்ன? வாசனை ஒரு appetizer. கலர். அதுக்கு மேல ஏன் முந்திரிப் பருப்பு, கொத்தமல்லிக்கீரை, it is an appetizer.
சுரேஷ்: பத்து பக்கம் திருப்பணுமில்லையா?
நாஞ்சில் நாடன்: பத்து பக்கத்துக்குள்ள வாசகன ஒரு புஸ்தகத்துக்குள்ள கொண்டுவர முடியலைனா, நீ நூறு பக்கத்திலையும் கொண்டுவர முடியாது. ஏன் 1200 பக்க நாவல்கள் வாசிக்கப்படாம கிடக்கு? என்ன பிரயோஜனம் அப்ப? பேர் சொல்ல விரும்பல. 85 பக்கம் 86 பக்கம் தாண்ட முடியலை. மாங்குமாங்குன்னு எழுதறாங்க. மூணு வருஷமா எழுதியிருக்கான். ஒரு பையன் எங்கிட்ட அடிக்கடி பேசுவான். என்ன சொல்றதுங்க, படிச்சே முடிக்க முடியலை, அப்புறம் என்ன காமெண்ட் சொல்றது? பாவமா இருக்கு. நிறைய எழுதி சாதிச்சு, நல்ல platformல நிற்கறவங்க இந்த மாதிரி முயற்சிகள் செய்யலாம். யங் ரைட்டர்ஸ் போயி, எடுத்த எடுப்பில, கண ராகத்தை எடுத்து மூணேமுக்கால் மணிநேரம் பாட ஆரம்பிச்சா, என்ன பண்றது? அதனுடைய எடையிலயே அவன் விழுந்திருவான். அதை இவங்க புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க. குறிப்பா தமிழ்க் கவிதைங்கிறது கஷ்டமா இருக்கு. ஒரு prose writerக்கு இவ்வளவு கவலை இருக்கணும்னா, ஒரு கவிஞனுக்கு இதைவிடப் பத்துமடங்கு அக்கறை இருக்கணுமில்லையா? இலக்கியங்கிறதும், கவிதைங்கிறதும் என்னுடைய சொந்த score settle பண்ணுவதற்கான விஷயமில்லை. எனக்கு உங்க பேர்ல கோபங்கிறதுக்காக ஒரு கும்பமுனி கதை எழுதமாட்டேன். சமூகத்தின் மீது இருக்கிற கோவத்துக்காகத் தான் நான் எழுதறனே தவிர…
ரிச்சர்ட் பாக் இப்ப தமிழ்ல வந்திருக்கு. ஜொனாத்தன் லவிங்ஸ்டன் எனும் ஞானப் பறவை. அது ரிச்சர்ட் பாக்குக்கு சொல்லத் தெரியாதா? Red Tea எப்படி எரியும் பனிக்காடு ஆகும்? டேனியல் medically qualified, estate வாழ்க்கையை தெரிஞ்சுகிட்டவர். அதனுடைய பாலிடிக்ஸையும் ப்ளஸ் அண்ட மைனஸையும் தெரிஞ்சிட்டு Red Teaனு பேர் வைக்கறார். அதனுடைய அர்த்தம் தெரியாமலா அந்த பேர் வைப்பான். அவனொரு professional writer. அது எப்படி நீங்க மார்க்சிஸ்ட் பிலாசபியோ பிஜேபி பிலாசபியோ நம்பிட்டு உங்க தத்துவத்துக்குத் தகுந்த மாதிரி அந்தத் தலைப்பை மாத்த முடியும். சில தலைப்புகள் மாத்தாம முடியாது. தாய்ங்கிறது தாய் தான். எரியும் பனிக்காடுன்னா –  you are romanticizing that. You believe in a particular ideology. அதுக்குத்தகுந்த மாதிரி நீங்க டேனியலைப் பயன்படுத்திட்டீங்கன்னா?
செந்தில்: Jonathan Livingston Seagull  –  இங்கிலிஷ்ல ரொம்ப சுருக்கமா எழுப்பட்ட படைப்பு. ஒரு வார்த்த கூட அதிகமாப் பயன்படுத்தாம எழுதியிருப்பார். ஞானப்பறவைங்கிற போதே அது ஒரு திசையை நோக்கித் தள்ளுது.
நாஞ்சில் நாடன்: தர்பூசணில சிவப்பு இஞ்சக்சன் கொடுக்கிற மாதிரித்தான். ஞானப்பறவைனா. அது வாசகனுக்குத் தெரியாதா.
சுரேஷ்: ஆரம்பத்தில் இறைமறுப்பாளரா இருந்த நீங்க, இப்ப மாறிட்டீங்களோ?
நாஞ்சில் நாடன்: இப்பவும் நான் தீவிரமான பக்தனெல்லாம் இல்லை. ஆனா எல்லாத்தையும் அதனதனுடைய மரியாதையோட அணுகணும்.
சுரேஷ்: தீவர இறைமறுப்புங்கிறது தேவை இல்லையோ?
நாஞ்சில் நாடன்: திருநெல்வேலி ஒருமுறை போயிருந்தப்போ…எங்கயோ எழுதியிருக்கேன்…பேஸ்ட் தீர்ந்துபோச்சு. லாட்ஜ்க்கு வெளியிலே ஒரு சாயுபு கடை வைச்சிருக்காரு. ஒரு பேஸ்ட் குடுங்கன்னேன். குடுத்தாரு. நல்ல பெர்ஃப்யூம் இருக்கு பார்க்கிறீங்களான்னாரு. நான் வேண்டாங்கனுட்டு, அப்புறம் கேட்கிறேன். ஏன் இஸ்லாமியர்கள் பெர்ஃப்யூம் அதிகம் பயன்படுத்தறாங்க. வாசனை இறைவடிவம் இல்லையா? இசை இறைவடிவம்னா, வாசனை இறைவடிவம்தானே? சரியாத்தானே சொல்றாரு. அழகு இறைவடிவம் தானே? அழகுங்கிறது என்னங்கிறது நம்முடைய தீர்மானம்.
கண்ணன்: சிற்றிலக்கியங்கள் பற்றிய முயற்சியை இன்னும் தொடர்ந்துகிட்டிருக்கீங்களா?
நாஞ்சில் நாடன்: செய்யணும்னுதான் நினைக்கிறேன். புத்தகம் எழுதி முடிச்சதுக்கு அப்புறம், மறுபடியும் ஒரு முப்பது புத்தகங்கள் சேமிச்சிருக்கேன். அதுல இறங்கினேன்னா இன்னும் ஒரு ரெண்டு வருஷம் வேணும். நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை இன்னொரு 150 பக்கம் எழுதலாம். அம்பறாத் தூணி இன்னொரு 150 பக்கம் எழுதலாம். கம்பனின் உவமைகள்னு புதுசா ஒரு புத்தகம் எழுதலாம்னு இருக்கேன்.
சுரேஷ்: அப்புறம் உங்க நாவல் இருக்கு.
நாஞ்சில் நாடன்: எழுத எழுத எழுதுவோம்.
சுரேஷ்: வாசக இடைவெளிங்கிறது என்ன சார், உங்க பார்வையிலே?
நாஞ்சில் நாடன்: ஒரு ரைட்டருக்கும் வாசகனுக்குமான இடைவெளியா?
சுரேஷ்: ஒரு படைப்புல வாசகனுக்கான இடைவெளி.
நாஞ்சில் நாடன்: அத கேட்கறீங்களா. ஒரு எழுத்தாளனைவிட எந்த அளவுக்கும் தகுதிக் குறைவானவன் அல்ல ஒரு வாசகன். இவன் எழுதறான். அவன் எழுதலை. ஆகவே எங்களுக்கு ரெண்டு கொம்பு, அப்படியெல்லாம் கிடையாது. ஒரு நல்ல வொர்க் வாசகனுடைய further imaginationஐ தூண்டும். புரிதலை, அறிவைத் தூண்டிட்டே இருக்கும். நீங்க திருநாவுக்கரசர் பாட்டை எடுத்துகிட்டீங்கன்னா, ஆழ்வார்ல ஒரு பாடல் எடுத்திட்டீங்கன்னா, ஒரு நாலு வரிப் பாட்டை யோசனை பண்ணிட்டே போனீங்கன்னா, ஒரு நாற்பது பக்கத்துக்கு அதில மேட்டர் இருக்கும். சொல்லிகிட்டே இருக்கலாம். அதைத்தான் நான் வாசக இடைவெளினு நினைக்கிறேன். அவனுக்குண்டான ரூம். அதில்லைனா தட்டையா இருக்கும். அவன் cerebrally அதை வாசிச்சு, உணர்ந்து, enjoy பண்ணனும் இல்லையா. அந்த enjoyment இல்லைனா, அந்த படைப்புடனான உறவு துரித காலத்துல முடிஞ்சுரும்.
அன்பழகன்: வாசக இடைவெளினு சொல்லும் போது, உங்க பாலம் சிறுகதை..நிறைய இடைவெளி இருக்கு…ஈஸ்வரமூர்த்திப் பாட்டா அரைபோதைல நடந்துட்டே வருவாரு…அங்க பாலத்துக்கிட்ட ஒரு சண்டை நடக்க இருக்கு. ஒரு வரிதான் கேட்பாரு. அந்த சண்டையை தீர்த்து வைப்பாரு…அது எப்படிங்கிறத வாசகர் அனுமானத்துக்கே விட்ருவீங்க.
நாஞ்சில் நாடன்: பொருள் புரிஞ்சக்கிறதிலையே வாசகனுடைய capacity work ஆகுது. மாணிக்கவாசகருக்கு உரை எழுதறவங்க, உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன் பேர்வேண்டேன் கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனிஅமையும் – இந்த கற்பனவும் இனிஅமையும் – உற்றார் வேண்டாம், ஊர் வேண்டாம், புகழ் வேண்டாம், கற்றார் வேண்டாம், படிச்சதெல்லாம் போதும்…இதுதான் சம்பிரதாயமான உரை. தண்டபானி தேசிகர்ல இருந்து, கந்தசாமிப் பிள்ளை உரைல இருந்து எல்லாரும் இப்படித்தான் சொல்வாங்க. நான் அவங்களைவிடப் பெரிய ஆள் இல்லை. அவங்களுடைய தமிழறிவுக்கு கால்தூசிக்குப் பெறமாட்டேன். நான் எப்படி அதை உணர்றேன்னா,  கற்பனவும் இனி அமையும் – இதுவரைக்கும் படிச்சதெல்லாம் வீண், இனிமேல்தான் கல்வி அமையப் போகுது. அது சிவனைப் பற்றிய கல்வியோ பக்தி பற்றிய கல்வியோ எதுவேணா இருக்கலாம். இது எனக்குக் கிடைக்கிற இடைவெளி. ஆனா சம்பிரதாயமான எந்த சைவ சித்தாந்த அறிஞர்கிட்ட நீங்க கேட்டாலும், கற்றதெல்லாம் போதும்னு சொல்றார் அப்படீம்பாங்க. நான் இப்படிப் பார்க்கிறேன். இது தப்பானு எங்கிட்ட கேட்டீங்கன்னா – இது சரியாத்தானே இருக்கு?
நம்மாழ்வார் எழுதிய ஒருபாடுழல்வேனை – பிரபந்தத்துக்கு உரை எழுதுகிற எல்லாரும், ஒரு பாடு உழல்வேனை – பாடுன்னா படுதல், துன்பம். நான் திருப்பித்திருப்பிப் படிக்கிறேன். உழல்தல்னாலே சொன்னாலே துன்பம்னுதான் பொருள், ஒரு பாடு உழல்வேனை – நிறைய துன்பம் உழல்வேனை – நம்மாழ்வாருடைய செறிவுக்கு – இன்னொரு திசைல என்னுடைய சிந்தனை எப்படிப் போகுதுன்னா – எங்க ஊர்ல ஒருவாடுன்னு ஒரு சொல் இருக்கு. அதாவது பக்கத்துவீட்ல தேங்காய் கொடுக்க வர்றாங்க. ‘எங்க வீட்லயே ஒருவாடு தேங்காய் கிடக்கு’.
கண்ணன்: இங்கேயும் சொல்றதுதாங்க. ஒருபாடு. அளவுக்கு அதிகமானங்கிற அர்த்தத்தில்.
நாஞ்சில் நாடன்: நான் யோசிக்கிறேன். ஒருபாடு உழல்வேனைங்கிறது, நிறைய உழன்றவனை – இப்படி ஏன் பொருள் கொள்ளக்கூடாது? இது என்னுடைய வாசக இடைவெளி. சம்பிரதாய உரையாசிரியர்கள் கிட்டப்போனீங்கன்னா, அடிச்சு மிதிச்சுருவாங்க. அதையெல்லாம் விட்டுட்டு நேரடியாப் பாடலுக்குள்ள போனீங்கன்னா பாடல் உங்களுக்கு வெளிச்சங்கள் தந்துகிட்டே இருக்கும். திறந்திடு சீசேம் மாதிரி, it goes on opening its doors.
கண்ணன்: நீங்க இன்னொன்னும் சொல்றீங்க – கம்ப ராமாயணம் நூறு பாடல்களுக்கு மேல யாரும் சொல்றதில்லைனு.
நாஞ்சில் நாடன்: பயன்படுத்துறதில்லை. தேவையில்லைனு நினைக்கறாங்க. கம்பன்ல அவங்க தொழிற்படறாங்க. அந்தத் தொழிலுக்கு அந்த நூறு பாட்டு போதும். அந்த நூறு பாட்டுதான் எல்லாரும் சொல்றான். அற்புதமான பாட்டுகள் இருக்கு. எந்தப் பாட்டையும் நீங்க சுண்டிப் பார்த்தீங்கன்னா கணீர் கணீர்ங்கும். விராதன் துதி பற்றி 15 பாட்டு எழுதறாரு. அந்தப் படலத்துக்கே அவசியம் கிடையாது. ஆனால், முழுக்கமுழுக்க பெருமாள் துதி.  எல்லாம் பக்திப் பாடல்கள். விராதன் மூலமா நம்மாழ்வார் ரேஞ்சுக்குப் போறார். அவருக்கு ஏதோவொரு காரணகாரியம் இருந்திருக்கு. எங்கேயாவது சொல்ல முடியலை. இங்க சொல்லுவோம். சொல்றதுக்கு உண்டான இடங்களும் அவன் தேர்ந்தெடுத்துக்கிறானில்ல. ஒரு very great creative mindகுள்ளதான் இது நடக்கும். சாதாரணமா ஒரு அஞ்சாந்தரக் கவிதை வாசிக்கிறதையே கவிதை நிகழ்வுங்கிறாங்க. கவிதை வாசிப்பு இல்லை, கவிதை நிகழ்வு. அப்ப கம்பனுக்குள்ள என்ன நிகழ்ந்திருக்கணும்.
கண்ணன்: உங்கள் இன்னொரு பரிமாணம் மேடை பேச்சு. அங்க இதெல்லாம் பேசறதுக்கான scope கிடைக்குதுங்களா?
நாஞ்சில் நாடன்: கிடைக்கிற வாய்ப்புகளை நான் பயன்படுத்திப்பேன். பெரும்பாலும் மாணவர்கள்கிட்டத்தான் பேசறேன். அங்க பேசினத இங்ககூடப் பேசிருவேன். புதுசா புதுசாவும் தோணிகிட்டிருக்கு. சமீபத்துல சித்தூர்ல சங்க இலக்கியத்தில் மலர்களின் பயன்பாடுனு மூன்று நாள் கருத்தரங்கு. அனிச்ச மலர்ங்கறது எந்த மலர்ங்கற கேள்விக்குப் போவேன். இது என்னுடைய வாசிப்புத்தான். திருவள்ளுவர் நாலு இடத்துல சொல்றாரு. சங்க இலக்கியங்கள்ல அனிச்சம் சொல்றது. இது என்ன மலர். யாராவது பார்த்திருக்கீங்களா? அந்த மலர் எங்க போச்சு? அதனுடைய அங்கலட்சணங்கள் என்ன? நிறமுடையதா, வெண்மையா? காட்டில் பூக்குமா, கோட்டுத் தாவரமா, கொடிப் பூவா? நான் creative writerஆ இருக்கனாலதான் இந்த மாதிரி கேள்விகளுக்குள்ள போக முடியும். இந்த வெளிச்சத்தை நம்ம அங்க அடிச்சிட்டு வந்துருவோம். ஆசிரியர்கள் இதைப் பத்தித் தீர்மானமா யோசிக்க மாட்டாங்க. கோயமுத்தூர்ல இருந்து கோவைப்புதூர் வர மூணு பாதை இருக்கு. அதைப் பற்றிய அறிதல் இருக்கவனுக்குத் தான் எந்தப் பாதை எடுக்கறதுங்கறதப் பற்றி யோசிக்க முடியும். இது இலக்கிய வாசிப்புல ரொம்ப முக்கியம். புறநானூற்றுப் பாடலை ஒரு பேராசிரியர் சொல்றதுக்கும் நான் சொல்றதுக்கும் வித்தியாசம் இருக்கு. நான் பேச்சுத் தமிழ்ல கொண்டுவந்து வேறவிதமாப் பேசுவேன். அவங்ககிட்ட அறிவிருக்கும், emotions இருக்காது. நம்மகிட்ட அறிவில்லேன்னாக்கூட emotions இருக்கும். உணர்ச்சிகரமா அளிக்கிற போது, வேறு சான்றுகளும் தருகிற போது, அது அவங்களுக்கு வித்தியாசமாத் தெரியும். I enjoy doing it and it gives me some income.
அன்பழகன்: எழுத்தாளர்கள் ஏன் அரசியல் பற்றி அதிகம் எழுதுவதில்லை?
நாஞ்சில் நாடன்: ஒரு கருத்தைச் சொல்றபோது நாளைக்கு அவங்ககிட்டப் போய் நிற்கவேண்டியிருக்குமோ. அவனால ஏதோ நடக்கும். அதை எதுக்கு இப்பக் கெடுத்தக்கணும். இப்படி யோசிக்கறாங்க. ஏதாவது ஒரு சின்ன வேலைக்கும் அவங்ககிட்ட போகவேண்டியிருக்கும். அதை இப்படிப் பேசி எதுக்குக் கெடுத்துக்கணும். ஆகவே அதையும் சொல்லமாட்டாங்க, இதையும் சொல்லமாட்டாங்க. என்னைப் பொருத்தவரைக்கும், என்கிட்ட அப்படியொரு கோரிக்கை பாக்கெட்ல இல்லை. எனக்குத் தேவைகள் இருக்கு, நெருக்கடிகள் இருக்கு. நான் நினைச்சா மேயரைப் பார்க்க முடியும். கமிஷனரைப் பார்க்க முடியும். தண்ணி கனெக்சன் அப்ளை பண்ணி நாலு மாசம் ஆச்சு. இந்தத் தொடர்பு இருந்தும் கூட நான் அவங்ககிட்டப் போகலை. ஒரு மாசம் அதிகம் எடுக்கப்போகுது. எடுத்துட்டுப் போகட்டுமே. வாழ்வா சாவா போராட்டமில்ல. எதுக்கு இவங்ககிட்டப் போய் நிற்கணும்.
****
தனிவாழ்வில் தென்படும் நேர்மையும், நாங்கள் நேரடியாக உணர்ந்த பரிவும், சொற்களின் மீதும் மொழியின் மீதும் அவர் கொண்ட குன்றாக் காமமுமே அவரது எழுத்துகளில் தொடர்ந்து பரிமளித்து வருகின்றன என்பது இந்த நேர்காணலுக்குப் பின் உறுதிப்பட்டது. பேசித் தீராதவை ஏராளம் என்ற ஏக்கம் எஞ்சிய போதும், தொடர்ந்து உரையாட நாஞ்சில் நாடன் தயாராகவே இருந்தபோதும், மூன்று மணிநேரத்துக்கும் மேல் அவரை ஓய்வின்றிப் பேச வைப்பது முறையாகாது என்பதால், அவரது அரிய புத்தகங்களைப் பார்வையிட்டுவிட்டு, புகைப்படங்கள் எடுத்து, நன்றிகள் நவின்று விடைபெற்றோம்.
நேர்காணல் முடிந்துவிட்டாலும், அவருடன் பேசுவதற்கு முன்பும் பின்னரும், கற்பனவும் இனி அமையும் என்று அரும்பிய புதிய ஆர்வத்தோடு படித்துக்கொண்டிருக்கும் அவரது படைப்புகளின் வழியே இன்னமும் புதிதாய் இயம்பிக் கொண்டுதானிருக்கிறார்.
அவர் எழுத எழுத எழுதட்டும். நாமும் படிக்கப் படிக்கப் படிப்போம்.

************

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s