யானை லொத்தி
நாஞ்சில் நாடன்
———————
பிரம்மாண்டமான கல்யாணம். பிரம்மாண்டம் என்பதற்கு என்ன அளவு? எத்தனை கன அடி? பிரம்மாண்டமான கூட்டம், பிரம்மாண்டமான படம், பிரம்மாண்டமான ஊழல். பெரிய என்று கொள்ளலாமா? எதையும் ஒப்பீட்டு அளவில் தானே அனுமானிக்க இயலும்? எருமையை விட யானை பெரிது எனில், யானை பார்த்திராதவனுக்கு உத்தேசமான ஒரு மதிப்பீடு கிடைக்கும்..
இப்படிச் சொல்லலாமா?
பெருந்துறை கோழிப் பண்ணையில் இருந்து மூவாயிரம் கோழிக்கால்கள் வந்தன என்று. கோழிக்கால் எனில் லெக் பீஸ்,
மேலும் சொல்லலாமா, வாணியம்பாடியில் இருந்து மட்டன் பிரியாணி செய்வதற்கு மூன்று திரு நம்பி அணிகள் வந்தன என்று.
இன்னும் சொல்லலாமா, விருதுநகர் பரோட்டா பதினைந்தாயிரம் எண்ணங்கள் போடுவதற்கு மாஸ்டர்கள் தவிர்த்து கொத்தனார்களும் சித்தாள்களும் கமட்டுக்காரர்களும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள் என.
கந்தரப்பமும் பால்பணியாரமும் செய்வதற்கு என கானாடுகாத்தானில் இருந்து சமையல்காரர்கள் வந்திருந்தார்கள் எனலாமா?
நாஞ்சில் நாட்டு அவியலுக்கென்றே தாழக்குடியில் இருந்து மூன்று பேர் வந்திருத்தனர் எனலாமா?
திருநெல்வேலி இருட்டுக்கடையில் இருந்து வெண்ணெய்த் தாளில் சுருட்டப்பட்டு 25 கிராம் அல்வாப் பொட்டலங்கள் பத்தாயிரம் வந்தன எனலாமா?
அதென்ன கணக்கு, கோழிக்கால்கள் 3000, அல்வாப் பொட்டல சுருட்டு 10000 எனக் கேட்பது புரிகிறது. எல்லாவற்றுக்கும் கணக்கு இருக்கு! கவிதை என்பதும் காலக்கணக்குதான்!
கல்யாண விருந்தில் மூன்று தரப் பிரிவுகள். சிறைச்சாலைகளில் இருப்பது போல, A வகுப்பு, B வகுப்பு, C வகுப்பு. குற்றவாளிகளின் அரசியல் – சமூக-பொருளாதார சமச்சீரின்படி. மூன்று தனித்தனிப் பந்திகள்.
மன்னர்கள், சிற்றரசுகள், குறுநில மன்னர்கள், ஜமீந்தார்கள், பாளையப்பட்டுக்காரர்கள், பெரும் பண்ணையார்கள் A பிரிவு. அவர்தம் தளகர்த்தர்கள், மந்திரிகள், மதகுருக்கள், அவைப் புலவர்கள், அரண்மனை மருத்துவர்கள், பொருநர்கள், பாணர்கள் B பிரிவு. தேரோட்டிகள், தரகர்கள், வாயிற்காவலர், அடப்பம் தாங்கிகள், வெண்சாமரம் வீசுவோர், கொற்றக்குடை பிடிப்போர், மேளக்காரர்களின் உதவிகள், ஆபத்துதவிகள், தலைவா என்றும் அண்ணே என்றும் விளிப்பவர்கள், தாசர்கள், தாசிகள் C பிரிவு.
வரும் விருந்தினர் எப்படி அவர்தம் பந்திகளை அடையாளம் கண்டு நுழைவார்கள். ஆநிரைகளா அவர்கள், வழக்கமாகச் சென்று அடையும் தொழுவத்தினுள் புகுந்து கொள ?
இதெல்லாம் அழைப்பிதழ் அச்சிடுவதில் கால்கொள்கின்றன. A பிரிவுக்கு 2000 அழைப்பிதழ்கள். ஒரு அழைப்பிதழின் பெறுமதி ரூ. 340. முகப்பில் இருக்கும் கடவுள் படத்தைப் பிசிறின்றிக் கத்தரித்துத் தொழுகை இடத்தில் வைக்கலாம். அப்பம், அரவணை படைக்கலாம். B பிரிவுக்கு 7000 அழைப்பிதழ் கள். இதன் அடக்கவிலை ரூ. 210 தேவியர் மூவரும் வெற்றிலை பாக்கு பழம் பூவுடன் நேரில் அழைப்பதைப் போல, C பிரிவுக்கு 3000 அழைப்பிதழ்கள், அடக்கவிலை ரூ. 70. அதை மோசம் என்றிட இயலாது. யானை படுத்தக் கிடந்தாலும் நிற்கும் எருமை உயரம் இருக்குமல்லவா? A பிரிவு மும்பையிலும் B பிரிவு சென்னையிலும் C பிரிவு கோவையிலும் அச்சானது.
எல்லா அழைப்பிதழ்களிலும் Admit Two என அச்சிடப்பட்ட அஞ்சலட்டை அளவிலான குறிப்பு இணைக்கப்பட்டிருந்தது. A பிரிவுக்கு தங்க நிற அட்டை, Hall I எனும் குறிப்புடன், B பிரிவுக்கு வெள்ளி நிற அட்டை, Hall II எனும் குறிப்புடன் C பிரிவுக்கு செம்பவழ நிற அட்டை, Hall III எனும் குறிப்புடன்.
நேரில் சென்று அழைப்பு வைக்கையில், A பிரிவினருக்கு வெள்ளித் தாலத்தில் வெற்றிலை, பாக்கு, பாதாம், முந்திரி, அக்ரூட், கிஸ்மிஸ் பொட்டலங்களுடன் அழைப்பிதழும் நிகர மதிப்பு நாற்பதினாயிரம் B பிரிவினருக்க நிறுவனங்களின்