உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே

ryanhewett-1உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே!
நாஞ்சில் நாடன்
———————————————-
எம்.எல்.ஏ. மகனா?
முந்திச் சென்ற எந்தப் பயலையும்
சுட்டுக் கொல்லலாம்
சினிமா நடிகனா?
நடைபாதை துயிலும் நலிந்த மனிதனை
நசுக்கிப்போகலாம்!
சின்னத் தலைவனா?
எதிர் தொழிற்கூடம் ஊழியரோடும்
எரித்து அழிக்கலாம்!
கோடிகள் குவித்த அமைச்சன் ஊழலா?
நாற்பத்தெட்டாண்டுகள் விசாரணை நடக்கும்!
பதினாயிரம் கோடி அரசை ஏய்த்தால்
எந்த நாட்டிலும் குடிமகன் ஆகலாம்!
சொந்தக் கப்பலில் சுற்றி வரலாம்!
புதுப்பட வழக்கா?
ஆறே நாளில் அமுங்கிப்போகும் !
பேரறிவாளனோ முப்பதாண்டுகள் முடிந்த பின்னும்
கொடிய சிறையில் குறுகிக்கிடப்பான்!
அரசு மருந்தகமா ?
ஏழையான் நோய்க்கு மாத்திரை இராது!
சோதனைக் கருவி பழுதாய்க் கிடைக்கும்!
சமோசா பேடா வாங்கிய வகையில்
அமைச்சரவைக்கு அறுபது கோடி!
நகைக்கடை துணிக்கடை கதவு திறக்க
கவர்னர் என்றோரு பதவி உண்டிங்கு!
குத்து விளக்கு குனிந்து ஏற்ற
குலுங்கும் கவர்ச்சி நடிகை வருவாள்!
வாரக் கடனா?
காவலர் உதவ உழவு இயந்திரம்
வழிப்பறியாகும்!
கல்விக்கடனா?
தண்டல் செய்ய பண்பறியாத காலிகள் வருவார்!
பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவியைப்
பத்துக் கோடிக்கு ஏலம் எடுக்கலாம்!
ஆசிரியப் பணிக்கு நாற்பது இலக்கம்
நயந்து தரனும்!
ஐந்து லட்சம் அன்பாய்த் தந்தால்
முனைவர் பட்ட ஆய்வடங்கல் வாங்கலாம்
பட்டன் வாங்கவோ
குனிந்து கொடுக்கணும் எடுபிடி செய்யனும்
கூட்டிக் கொடுக்கணும் கூடப் படுக்கனும்!
அதிகாரத்தின் அண்டையில் நின்றால்
புத்தகம் எழுத மானியம் கிடைக்கும்!
மூன்றே நாளில் முதன்மை நாளிதழ்
மாய்ந்தும் மயங்கியும் மதிப்புரை எழுதும்!
ஐ.நா.சபையின் உறுப்பு நாடெல்லாம்
கருத்தரங்குக்கு அழைப்பு அனுப்பும்
அயல் தேசத்தவர் அவார்டும் தருவார்!
புலம்பு என்னாம்? பொருமி என்னாம்?
புகைச்சல் இருமல் பூமியைக் குலுக்குமோ?
ஆதலினால் அறிக நீ ஒன்று!
உலம் என்பது உயர்ந்தார் மாட்டே!
  • உயிர் எழுத்து , டிசம்பர் 2016.
  • தட்டச்சு: ஆனந்த் குமார்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கவிதைகள் and tagged , , , , , , . Bookmark the permalink.

2 Responses to உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே

  1. ப்ரேம் சொல்கிறார்:

    சிறப்பு

  2. harikarthikeyanramasamy சொல்கிறார்:

    நல்ல பகிர்வு திரு. நாஞ்சில்நாடன், சமுதாயத்தில் இன்று நடக்கும் அவலங்களை அப்பட்டமாக பதிவிட்டுள்ளீர்கள், நன்றி

பின்னூட்டமொன்றை இடுக