வண்ணதாசன் கடிதங்கள்- நாஞ்சிலுக்கு

வண்ணதாசன்
அன்புமிக்க நாஞ்சில் நாடன்,
வணக்கம்.
உங்களுக்கு மின்னஞ்சல் பெட்டியைத் திறந்துபார்க்கும்
‘சீக்கு’ உண்டா தெரியவில்லை. அது ஒருவிதமான
ஒட்டுவாரொட்டி. ஒருவிதமான சூது.  சொரிமணல்.
ஆளை உள்ளே இழுக்கும்.
ஆனால், நீங்கள் அப்படியெல்லாம் லேசில் ஆழம் தெரியாமல்
கசத்தில் இறங்குகிற ஆள் இல்லை.
*
நான் ‘இந்த என்னுடைய அறுபத்தாறு வயசில்,’இன்னியத் தேதி’
வரைக்கும் இவ்வளவு சந்தோஷமாக இருந்திருப்பேனா என்று
தெரியாது. அவ்வளவு சந்தோஷமாக இருந்தேன் , போன திங்கட்
கிழமை சாயுங்காலம் உங்கள் வீட்டில் இருந்தபோது,
மொத்தத்திலேயே உங்கள் வீடு அம்சமாக இருந்தது. ஒரு தலைப்
பிள்ளை சூலி இருக்கிற வீடு அப்படி நிறைந்துவிடும். அதுவும்
நம்முடைய பொம்பிளைப் பிள்ளைகள், ‘உண்டாகி’ பெத்துப் பிழைக்க
வந்திருக்கிற காலம் அருமையானது.
உங்கள் மகள் ( அவள் பெயர் கூட அயத்துப் போயிற்று. எது உங்கள்
வீட்டம்மா பெயர், எது உங்கள் மகளுடைய பெயர் என்று குழம்பி
விடும் எனக்கு) ஒரு செல்லப் பூனைக்குட்டி மாதிரி உங்கள் கூடவே
இருந்ததும், கொஞ்சம் எட்டி, குளித்து முழுகின களையோடு உங்கள்
துணைவியார் இருந்ததும், ரவி அவ்வப்போதில் அடுக்கடுக்காக
சிரிக்க, நீங்கள் பேசிக்கொண்டு இருந்ததும் எல்லாம் சொல்லவே
முடியாத வகையில், என்னை நிரப்பியிருந்தது. நிறைவுதான் என்
சந்தோஷம். உங்களை இத்தனை சந்தோஷமாகப் பார்ப்பதும்
உடனிருப்பதும் இன்னும் சந்தோஷம்.
வாழ்வின் ஒரு அருமையான பருவத்தில், இறையருள் கூடி, நீங்கள்
இருக்கிறீர்கள் நாஞ்சில். எல்லாம் நல்லதுவே நடக்கும் இனி.
சொந்த வீடு, மருமகள் என எல்லாம், அடுத்தடுத்து, அதனதன் காலத்தில்
இனிது அமையும்.
உடல் நலம் பேணிக்கொள்ளுங்கள். இன்னும் பேரும் புகழும் அடையுங்கள்.
என்னைப் போன்றவர்கள், அன்றும் இன்றும், ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு
அப்பாலிருந்து உங்களைப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருப்போம்.
உங்கள் பேரிலக்கியம், சிற்றிலக்கியம், பிரபந்தம், திரைப்படம் எல்லாம்
போல, என்னைப் போன்றவன் உங்களிடம் எதிர்பார்க்கும் நாவல், சிறு
கதைகளையும் எழுதுங்கள்.
உங்களுடன் சேர்ந்து, அடிக் கை பிடித்து நடுவதற்கு இன்னும் சில
நாற்றுகளை இந்த வாழ்வு எனக்குக் கொடுக்கட்டும்.
%
அன்புடன்,
கல்யாணி.சி.

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to வண்ணதாசன் கடிதங்கள்- நாஞ்சிலுக்கு

  1. rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமையான கடிதம்.
    நன்றி.

  2. சேக்காளி சொல்கிறார்:

    //என்னைப் போன்றவன் உங்களிடம் எதிர்பார்க்கும் நாவல், சிறு
    கதைகளையும் எழுதுங்கள்.//
    ctrl+c , ctrl+v

  3. சரவணன் சொல்கிறார்:

    முழுக்கவே தனிப்பட்ட செய்திகளைக் கொண்டிருக்கும் இவ்வகையான கடிதங்களை எதற்குப் பொதுவெளியில் வெளியிடவேண்டும் என்று புரியவில்லை. ஒரு எழுத்தாளர் தன் சக எழுத்தாளருக்கு எழுதிய கடிதமாகவே இருந்தாலும் அதில் பொது வாசகர்களுக்குரிய இலக்கிய விவாதங்கள் இருந்தால் மட்டுமே அதை இணையத்திலோ அல்லது புத்தகத்திலோ வெளியிட்டால் போதுமானது. சாதாரணமான நலம் விசாரிப்புக் கடிதங்கள், மின்னஞ்சல்களைத் தன் சொந்தப் பார்வைக்கு மட்டுமே (பெர்சனல்) வைத்துக்கொள்ளும் வழக்கத்தை இலக்கியவாதிகள் கைக்கொள்வது நல்லது. தமிழ் இலக்கிய – பதிப்புச் சூழலில் நிலவும் பல குழப்படிகளில் (மூன்றாம் நபருக்கு எவ்வித முக்கியத்துவமும் அற்ற) தனிப்பட்ட கடிதங்களைப் பதிப்பித்துக் கொள்வதும் ஒன்று. புதுமைப்பித்தன் தன் மனைவிக்கு எழுதிய கடிதங்களை ‘கண்மணி கமலாவுக்கு’ என்று (அவர் மறைவுந்துவிட்ட நிலையில்) காலச்சுவடு வெளியிட்டது இதன் உச்சம் என்று சொல்லலாம்.

  4. வண்ணதாசனின் கடிதத்தொகுப்பான ‘சில இறகுகள் சில பறவைகள்’ சமீபத்தில்தான் வாங்கி வாசித்தேன். நல்ல புத்தகம். அவரது ஒவ்வொரு கடிதங்களும் வாழ்க்கையை கற்றுக் கொள்ள உதவியாக இருந்தன.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s