பிரபந்தங்கள் – சதகம் – பகுதி 15 B

நாஞ்சில் நாடன்
முந்தைய பகுதிகள்:பனுவல் போற்றுதும்
கொங்கு மண்டல சதகம்
கொங்கு மண்டலத்தின் வரலாற்றை, சிறப்பை உரைப்பது இந்நூல். இயற்றியவர் கார்மேகக் கவிஞர். கார்மேகம் என்பது இன்றும் கொங்கு மண்டல ஆண்பாற் பெயர். அந்தப் பெயர் கொண்ட கொங்குப் பகுதி இளைஞர், புலவர் இரணியன் மருமகன், கோவையில் முதன்மைக் கல்வி அதிகாரியாக இருந்தார், சில ஆண்டுகள் முன்பு. முப்பது மாவட்டங்களிலும் அவரைப் போன்ற சேவை உள்ளம் கொண்டவர் கல்வி அதிகாரியாக இருந்தால் பள்ளிகளின் தரம் பெரிய அளவில் உயர்ந்து விடும். ஆனால் நஞ்சுதானே நாநாழி கிடைக்கிறது.
நிற்க. கார்மேகக் கவிஞர் காலம் பற்றியும் எனக்கு அறியக் கிடைக்கவில்லை. இந்நூலுக்கு தி.அ.முத்துசாமிக் கோனார் எழுதிய பழைய உரை ஒன்று இருக்கிறதாம். இதற்குப் புதிய உரை, முனைவர் ந.ஆனந்தி எழுதியுள்ளார்.
1923-ல் கொங்கு மண்டல சதகம் வெளிவந்துள்ளது. காப்பு, அவையடக்கம், ஆக்கியோன் நீங்கலாக நூறு பாடல்கள் கொண்ட சதகம் இது. கொங்கு மண்டலச் சிறப்பு, நலம், நதி, குடிவளம் எனப் பெருமைகள் பேசப்படுகின்றன.
திருமணி, தொப்பை, பூங்காவேரி, வானியும், செய்ய நதி,
தருமணி காஞ்சி, பொருனை நள்ளாறொடு நள்ளாறொடு சண்முகமும்
குருமணி பாலை நதி, வாழை, காரி, குடவன் நதி,
வருமணி சண்பகம் சிற்றாறு சூழ் கொங்கு மண்டலமே
என்பதொரு பாடல் நதி வளம் பேசுகிறது. இதில் பேசப்படும் நதிகள் – திருமணி முத்தாறு, தொப்பை ஆறு, காவேரி ஆறு, பவானி, செய்யாறு, நொய்யல், ஆன் பொருனை, நள்ளாறு, சண்முக நதி, பாலையாறு, வாழையாறு, பாரத்துவாச நதி, குடவன் ஆறு, சண்பக ஆறு, சிற்றாறு எனப் பதினைந்து நதிகள் பேசப்படுகின்றன.
கொங்கு மண்டலத்தின் திருத்தலங்கள் ஒவ்வொன்று பற்றியும் அழகான பாடல்கள் புனையப்பட்டுள்ளன. வேஞ்சமாக் கூடல், திரு ஆனிலை (கருவூர்), திருப்பாண்டிக் கொடுமுடி, திருச்செங்கோடு, திரு நண்ணாவூர், திருமுருகன் பூண்டி, அவிநாசி, பேரூர், துடியலூர், பழநி, குடக் கோட்டூர் எனும் பதினோரு திருத்தலங்கள் – இவற்றுள் ஒன்பதில் என் காலடி பட்டிருக்கிறது.
கொல்லிப் பாவையும் கொல்லி மாமலையும் அமைந்தது கொங்கு மண்டலம் என்று சிறப்பிக்கப் படுகிறது. கொங்கு மண்டலக் சித்தர்களான கருவூர்ச் சித்தர், கஞ்சமலைச் சித்தர், போகர், புலிப்பாணி, கொங்கணச் சித்தர், எனப்படுபவர்களின் புகழ் பேசப்படுகிறது. முத்தரசர், கோசர், குமணன், அதிகமான், ஓரி, வையவிக் கொப்பெரும் பேகன், எனும் மன்னர்கள் ஆண்ட நாடு கொங்கு மண்டலம் எனும் தகவல்கள் கிடைக்கின்றன.
நாட்டினைத் தம்பி கொளக் காடு சென்று நலிவு உறுநாள்
பாட்டிசைத்து ஓர் புலவன் வேண்ட, என் தலை பற்றி அறுத்து
ஈட்டி என் தம்பி இடத்தில் ஈயில், கோடிப் பொன் எய்துமென்று
வாட்டம் கைத் தருமக் குமணன் கொங்கு மண்டலமே
என குமணன் புகழ் பரவும் ஒரு பாடல். ஆணால் படைப்பிலக்கியவாதிக்கு என்றுமே ஒரு குதர்க்க புத்தி உண்டு. குமணன் தம்பியும் கொங்கு மண்டலம் தானே!
வள்ளல் குமணன் பற்றித் தனிப்பாடல் திரட்டில் இரண்டு நல்ல பாடல்கள் உண்டு. ஒப்பிலாமணிப் புலவர் பாடியது. அகவற்பா.
ஆடெரி படர்ந்த கோடுயர் அடுப்பில்
ஆம்பி பூப்பத் தீம்பசி உழல
இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை
சுவைதொறும் சுவை தொறும் பால் காணாமல்
குழவி தாய் முகம் நோக்க யாமும்
நின் முகம் நோக்கி வந்தனம் குமணா
பாடலின் விசேடம், வறுமைப்பட்ட புலவன் மன்னனைப் பெயர் சொல்லி அழைக்க முடிந்திருப்பது. ஆனால் இன்று நம்முடைய மன்னர்களைப் பெயர் சொன்னால் அது இந்தியன் பீனல் கோடு 301க்கு சமம். சரி, இனி, பாடலின் பொருள்.
குமண வள்ளலே, எனது வீட்டின் கோட்டை அடுப்பில் முன்பு தீச்சுவாலைகள் அசைந்து படர்ந்து எரியும். இன்று அந்த அடுப்பில் காளான் பூத்திருக்கிறது. கொடிய பசியினால் வாடிய என் மனைவியின் வறு முலையில் பால் சுரக்கும் துவாரங்கள் தூர்ந்து போய் விட்டன. அதையறியாமல் என் குழந்தை, மனைவியின் முலைகளை சுவைத்துப் பார்த்து, சுவைத்துப் பார்த்து, பால் சுரக்கக் காணாமல் தாயின் முகம் ஏறிட்டுப் பார்க்கும். தாய் என் முகம் பார்ப்பாள். நானும் உன் முகம் நோக்கி வந்தேன்.
குமணன் கூற்றாக, ஒப்பிலாமணிப் புலவர் பாடிய அடுத்த பாடல் :
அந்த நாள் வந்திலை அருந்தமிழ்ப் புலவோய்
இந்த நாள் வந்து நீ நொந்து எனை அடைந்தாய்
தலைதனைக் கொடு போய்த் தம்பி கைக் கொடுத்து அதன்
விலைதனைப் பெற்று உன் வெறுமை நோய் களையே
பொருளாவது, அந்த நாள் – நான் சீரும் சிறப்புமாக அரசு வீற்றிருந்தபோது வந்தாய் இல்லை அருந்தமிழ்ப் புலவன். இந்த நாள்- தம்பியால் வஞ்சிக்கப்பட்டு, நாடிழந்து, தலைக்கு விலை வைக்கப்பட்டு, காட்டில் ஒளிந்து வாழும்போது நீ நொந்து வந்து எனை அடைந்தாய். ஒன்றும் கெட்டுப் போகவில்லை இப்பொழுதும். என் தலைதனை வெட்டி எடுத்துக் கொண்டு போய் என் தம்பி கையில் கொடுத்து, அதற்கான விலையைப் பெற்று, உன் வறுமை நோயைத் தீர்த்துக் கொள்வாயாக. அத்தகைய குமணன் பிறந்தது கொங்கு மண்டலமே என்கிறது சதகம்.
ஔவையார் ‘அசதிக் கோவை’ பாடிப் பெருமைப்படுத்திய அசதி எனும் வள்ளலும், நன்னூல் எனும் இலக்கண நூலை எழுதுமாறு பவணந்தி முனிவரைப் பணிந்த அரசன் சீயகங்கனும் வாழ்ந்தது கொங்கு மண்டலமே எனப் பாடல்கள் சிறப்பிக்கின்றன.
குருவை உணர்ந்த இளங்கோவடிகள் உட்கொண்டு சொன்ன
தருவாய் நிகரும் சிலப்பதிகாரத் தனித் தமிழுக்கு
அருமை உரை செய் அடியார்க்கு நல்லார் அவதரித்து
அருமைப் பொழி நிரம்பைப் பதியும் கொங்கு மண்டலமே
என்னும் ஒரு பாடல்.
சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் தோன்றி வளர்ந்த நிரம்பை என்னும் ஊர் அமைந்துளதும் கொங்கு மண்டலமே என்பது பொருள்.
சோழ மண்டல சதகம்
(வேளூர்) வேலூர் ஆத்மநாத தேசிகர் என்ற புலவரால் எழுதப்பட்ட சோழ மண்டல சதகம் கி.பி. 1723-ம் ஆண்டு பாடப்பட்டுள்ளது. 108 செய்யுள்கள் அடங்கியது.
மாமன்னன் இராசராசன் காலம் முதல் (கி.பி. 986 – 1014) ஒரு நாட்டை மண்டலம் என்று கூறும் முறை பெரிதும் வழக்கத்தில் வந்தது என்கிறார் புலவர் செ. இராசு, சோழமண்டல சதகம் பதிப்புரையில். காவிரி, சுவாமிமலை முருகன், சிதம்பரம் நடராசன், திருவாரூர் தியாகராசன், திருவரங்கம் அரங்கநாதன் எனும் இவரை ஆதியில் பரவுகிறது இந்நூல்.
தேவாரத் தலங்கள் பற்றிய தகவலை ஒரு பாடல் விளம்பும். தொண்டை மண்டல சிவத்தலங்கள் – 30, பாண்டி மண்டலத்தில் – 14, ஈழ நாட்டில் = 2, கொங்கு மண்டலத்தில் – 7, துளு நாட்டில் ஒன்று. ஆனால் தேவாரப் பாடல் பெற்ற சோழ நாட்டுத் தலங்கள் 190. அதுபோல் ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த 108 திவ்ய தேசங்களில், 40 சோழ நாட்டில் உள்ளன.
குணக்கின் மலை போல் பதினாறு
கோடிச் செம்பொன் கொடுத்த விலை
இணக்கும் ஒரு பட்டினப் பாலை
எவரும் புகழ்தற்கு எளிதாமோ
என்கிறது ஒரு பாடல்.
பட்டினப் பாலை யாத்த கடியனூர் உருத்திரங்கண்ணனார் புகழ்ந்த காவிரிப்பூம் பட்டினம் வளம் சோழ மண்டலமே என்பது.
சோழியர்கள் எந்தக் களங்கமும் இலாதவர் என்று கூறும் ஒரு பாடல்.
செறிவான் மதிக்கும் மறு உண்டு
செய்யாள் இடத்தும் மறு உண்டு
பெறுமால் இடத்தும் மறு உண்டு
பெம்மான் இடத்தும் மறு உண்டு
குறியால் உயர்ந்த சொழியர் தம்
குலத்தில் கூற ஒருக்காலும்
மறுவே இல்லை எனும் நாடு
வளம் சேர் சோழ மண்டலமே
பொருள் – வான்மதி சந்திரனுக்கும் களங்கம் உண்டு. செய்யாள் ஆகிய திருமகளுக்கும் மறு உண்டு. பெறுமால் திருமாலுக்கும் மறு உண்டு. பெம்மான் சிவபெருமானுக்கும் கண்டத்தில் கறை உண்டு. ஆனால் சோழியருக்கு ஒருக்காலும் மறுவே இல்லை எனும் நாடு, வளம் சேர சோழ மண்டலமே!
இவ்வாறு பலப்பல பேசிச் சோழ நாட்டின் சிறப்பைப் போற்றுகிறது இந்நூல்.
எனக்குத் தெரியும், கொங்குமண்டலம், சோழ மண்டலம் தாண்டியும் இத்தொடருக்கு வாசகர் உண்டு என. என் செய? சேரமண்டல சதகம், பாண்டிய மண்டல சதகம், தொண்டை மண்டல சதகம், கார் மண்டல சதகம் எனக்குக் கிடைக்கவில்லை.
நாஞ்சில் மண்டல சதகம், ஒருவேளை நானே எழுதினால்தான் உண்டு போலும்!
(தொடரும்)
முழுக் கட்டுரையும் தொடர்ந்து படிக்க: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – சதகம் – பகுதி 15     பனுவல் போற்றுதும்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to பிரபந்தங்கள் – சதகம் – பகுதி 15 B

  1. விளக்கமாக பொருள் தந்தமைக்கு நன்றி ஐயா…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s