பிரபந்தங்கள் – சதகம் – பகுதி 15

நாஞ்சில் நாடன்
அறப்பளீசுர சதகம்
அம்பலவாணக் கவிராயரால் இயற்றப்பெற்ற அறப்பளீசுர சதகம், காப்புச் செய்யுள் நீங்கலாக நூறு பாடல்கள் கொண்டது. அறப்பள்ளி எனும் தளத்தில் எழுந்தருளிய சிவபெருமான் மீது பாடப்பெற்றது.
நல் மனைவி, நன் மகன், உடன் பிறந்தார், நல்லாசிரியர், நன்மாணாக்கன் என்பவர் எப்படி இருத்தல் வேண்டும் என விவரிக்கும் பாடல்கள். கஞ்சன், தீயவை, மக்கட்கு அழகு, சமூகத்தின் இயல்பு என போதித்துச் செல்லும் பாடல்கள்.
யாரெல்லாம் பயனற்றவர் என்று சொல்லும் ஒரு பாடலைப் பதம் பிரித்து எழுதுகிறேன்.
மாறாத கலை கற்றும் நிலை பெற்ற சபையிலே
வாய் இலாதவன் ஒரு பதர்;
வாள் பிடித்து எதிரி வரின் ஓடிப் பதுங்கிடும்
மனக் கோழை தான் ஒரு பதர்;
ஏறா வழக்கு உரைத்து அனைவரும் சீச்சி என்று
இகழ நிற்பான் ஒரு பதர்;
இல்லாள் புறம் செலச் சம்மதித்து அவளோடு
இணங்கி வாழ்பவன் ஒரு பதர்;
வேறொருவர் மெச்சாது தன்னையே தான் மெச்சி
வீண் பேசுவான் ஒரு பதர்;
வேசையர்கள் ஆசை கொண்டு உள்ளளவும் மனையாளை
விட்டு விடுவான் ஒரு பதர்;
ஆறாத் துயரையும் மிடியையும் தீர்த்து அருள்செய்
அமல! எமது அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுரகிரி வளர்
அறப்பளீசுர தேவனே!
ஏறா வழக்கு – எடுபடாத வழக்கு, மிடி – துன்பம்.
இளைஞர்களுக்கு, கற்க வேண்டிய முறைப்படி கல்வி கற்க அறிவுறுத்தும் பாடல் ஒன்று.
வாலிபம் தனில் வித்தை கற்க வேண்டும்; கற்ற
வழியிலே நிற்க வேண்டும்;
வளைகடல் திரிந்து பொருள் தேட வேண்டும்; தேடி
வளர் அறம் செய்ய வேண்டும்.
சீலம் உடையோர்களைச் சேரவேண்டும்; பிரிதல்
செய்யாது இருக்க வேண்டும்;
செந்தமிழ்ப் பாடல் பல கொள்ள வேண்டும்; கொண்டு
தியாகம் கொடுக்க வேண்டும்;
ஞாலமிசை பல தருமம் நாட்ட வேண்டும்; நாட்டி
நன்றாய் நடத்த வேண்டும்;
நம்பன் இணையடி பூசை பண்ண வேண்டும்; பண்ணி
னாலும் மிகு பத்தி வேண்டும்
ஆலமர் கண்டனே! பூதியணி முண்டனே
அனக எமது அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுரகிரி வளர்
அறப்பளீசுர தேவனே!
அறிவற்றவர்களைத் திருத்த இயலாது என்பதற்கும் ஒரு பாடல்.
நீர்மேல் நடக்கலாம் எட்டியும் தின்னலாம்
நெருப்பை நீர் போல் செய்யலாம்
நெடியபெரு வேங்கையைக் கட்டியே தழுவலாம்
நீள் அரவினைப் பூணலாம்
பார்மீது மணலைச் சமைக்கலாம் சோறெனப்
பட்சமுடனே உண்ணலாம்
பாணமொடு குண்டு விலகச் செய்யலாம் மரப்
பாவை பேசப் பண்ணலாம்
ஏர்மேவு காடியும் கடையுற்று வெண்ணெயும்
எடுக்கலாம்! புத்தி சற்றும்
இல்லாத மூடர்தம் மனத்தைத் திருப்பவே
எவருக்கும் முடியாது காண்!
ஆர்மேவு கொன்றை புனை வேணியா! சுரர் பரவும்
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதறு சதுரகிரி வளர்
அறப்பளீசுர தேவனே!
சான்றோர் சிறப்பும் பாடுகிறது ஒரு செய்யுள்-
துறிபட்ட சந்தனக் கட்டை பழுதாயினும்
சார்மணம் பழுதாகுமோ?
தக்கபால் சுவறிக் காய்ச்சினும் அதுகொண்டு
சார மதுரம் குறையுமோ?
நிறைபட்ட கதிர்மணி அழுக்கடைந்தாலும் அதில்
நீள் குணம் மழுங்கி விடுமோ!
நெருப்பிடை உருக்கினும் அடிக்கினும் தங்கத்தின்
நிறையும் மாற்றுக் குறையுமோ?
கறைபட்ட பைம்புயல் மறைந்தாலும் அது கொண்டு
கதிர்மதி கனம் போகுமோ?
கற்ற பெரியோர் மகிமை அற்பர் அறிகிலரேனும்
காசினி தனிற் போகுமோ?
அறிவுற்ற பேரை விட்டு அகலாத மூர்த்தியே
ஐயனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுரகிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
அற்புதமான தர்க்கங்கள் வைக்கிறார் நூலாசிரியர்.
வெறிகொண்ட மற்கடம் பேய்கொண்டு, கள் உண்டு
வெங்காஞ் சொறிப் புதரிலே
வீழ்ந்து, தேள் கொட்டிடச் சன்மார்க்கம் எள்ளளவும்
மேவுமோ?
வெறிகொண்ட குரங்கு, பேய் பிடித்து, கள் குடித்து, வெங்காஞ்சொறிப் புதரில் வீழ்ந்து, தேளும் கொட்டினால் அது எள்ளளவும் சன்மார்க்கம் மேவுமோ?
புத்தாடை அணியும் நளன், பயணம் செய்ய ஏற்ற நாட்கள், சகுனம், பயண காலப் பலன், ஒழுக்கம் உடையவர் விலக்க வேண்டியவை, புது மனை புக ஏற்ற காலம், விருந்துக்கு ஏற்ற நாட்கள், பூப்பு எய்தும் நாட்பலன், பூப்படையும் ராசியின் பலன், என நீள்கிறது நூல்.
எந்த இலையில் உணவு உண்ணலாம், எதில் உண்ணத் தகாது என அடுக்குகிறது ஒரு பாடல்.
வாழை இலை, புன்னை, புரசு, உடன் நற் குருக்கத்தி
மா, பலா, தெங்கு, பன்னீர்
மாசில் அமுது உண்ணலாம்; உண்ணாதவோ அரசு,
வனசம், செழும் பாடலம்
தாழை இலை, அத்தி, ஆல், ஏரண்ட பத்திரம்
சாக்கு இவை அன்றி வெண்பால் எருக்கு, எச்சில் இலை
வாழை இலை, புன்னை இலை, புரசு இலை, குருக்கத்தி இலை, மாவிலை, பலா இலை, தென்னை இலை, பன்னீர் இலை ஆகியவற்றில் உணவு உண்ணலாம் என்கிறார் புலவர். புன்னை மரம் சூழ்ந்த ஊரில் பிறந்து வளர்ந்தவன் நான். அதில் எங்கள் பக்கம் எவரும் உண்டதில்லை இன்றுவரை. மாவிலை, பலா இலை தொன்னை பிடித்துக் கஞ்சி குடித்ததுண்டு. குருக்கத்தி மரம் என்னால் இனங்காண முடியவில்லை. கேட்டதோடு சரி. பன்னீர் மரம் என நான் தெரிந்து வைத்திருக்கும் இலையில் உண்ணத் தோது கிடையாது. புலவர் கூறும் பன்னீர் வேறாக இருக்கலாம். தென்னை ஓலை முடிந்த கொட்டான்களில் வடியாத உணவுப் பொருட்கள் வைப்பதுண்டு.
உண்ணத் தகாத இலைகளில் பாடலம், ஏரண்ட பத்திரம் இரண்டும் எனக்கு எதுவெனத் தெரியாது. எருக்கு விடம். தாழை மடல் முட்கள் கொண்டது. அத்தி, ஆல் பால்மரங்கள். வனசம் எனில் தாமரை. தாமரை இலையைத் திருப்பிப் போட்டு உண்பதுண்டு. எச்சில் இலையில் உண்ணக் கூடாது என்பதை சுகாதார நோக்கில் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் காலம் காலமாக, கணவன் உண்ட இலையில் உண்ட தமிழ் நாட்டுத் தாய்மார்கள் ஏற்றுக் கொண்டதே இல்லை. நான் கவனித்தவரை, இந்தத் தலைமுறையோடு அந்த வழக்கம் காணாமற் போய் விடும்.
அம்பல வாணக் கவிராயர் மிகவும் பிற்காலத்தவர் என்று அவர் பாடல்களே சான்று பகரும். எனினும் அவரது ஊர், காலம் பற்றி எந்தத் தகவலையும் உரையாசிரியர் டாக்டர் கதிர்முருகு நமக்குத் தரவில்லை. அது உரையாசிரியர் ஆய்வு வளம்.
கொங்கு மண்டல சதகம்……………..
முழுக் கட்டுரையும் தொடர்ந்து படிக்க: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – சதகம் – பகுதி 15     பனுவல் போற்றுதும்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s