கலிஃபோர்னியாவில் நாஞ்சில் – 7

by 
நாள் 12 – ஜூன் 30, 2012

இன்று பெரிய நாள். பிறபகல் 2 மணிக்கு ஃப்ரீமாண்ட் லைப்ரரியில் பி.ஏ.கிருஷ்ணன், நாஞ்சில், இருவருக்கு பாராட்டுப் பொது கூட்டம். மதிய உணவு எங்கள் இல்லத்தில் முடித்துவிட்டு செல்வதாக ஏற்பாடு. பதட்டம் மனதை மெதுவாக ஆக்ரமிக்க தொடங்கியது.
காலையில் எழுந்து மிக சுறு சுறுப்பாக மனைவிக்கு “சொதி” என்ற ஒரு உணவு சமாச்சாரம் செய்ய உதவிகள் செய்யவும், கடைகளுக்கு ஓடும் எர்ரண்ட் பாயாக இருக்கவும், பெண்ணை வகுப்புகளுக்கு அழைத்துச் செல்லவும் நேரம் சரியாயிற்று. PA கிருஷ்ணன் குடுமபம் (திருமதி ரேவதி கிருஷணன், மகன் சித்தார்த், சித்தார்த்தின் மனைவி வினிதா) காலை 11:30க்கு வந்தார்கள். பிஏகே என் மினி கலெக்‌ஷனைப் பார்வையிட்டார். ’வேற தமிழ் புக்ஸ் வச்சிருக்கீங்களா?” என்றார். மிகக் குறைவு என்று நினைத்தார் போலும். அவருடைய வாசிப்பு வேகத்திற்கு இதெல்லாம் மைக்ரோபியல். “சார் மாடியிலே கொஞ்சம் புக்ஸ் இருக்குது”என்றேன். சரி இந்த முறை இந்திய பயணத்தின் பொழுது அள்ளிக் கொண்டு வரவேண்டியது தான். கோவையில் ஹரன்பிரசன்னா போன்ற நணபர்களை பார்க்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.
சாப்பிட்ட ஸூப்புடன் என் பதட்டமும் ஆவியாக ஆனது. தற்காலிக ரிலீஃப். புகைப்படங்களுக்கு அனைத்து பெர்ம்யூட்டேஷனையும் உபயோகித்தோம். ஆர்வி & குடுமபம், ராஜன் &  நாஞ்சில் மற்றும் திருமுடி, மணிராம் ஆகிய அனைவரும் சுமார் 12 மணிக்கு ஒரு காலிங் பெல்லில் இணைந்தார்கள். ஒருவித பரபரப்புடன் எல்லோரும் ஸூப்பிலிருந்து சாதம்  சொதி இஞ்சி சட்னி வழியாக பாயாசம் வந்தடைந்தார்கள். ராஜன் பரபரத்து திருமுடியை இழுத்துக் கொண்டு 1 மணிக்கு லைப்ரரியை நோக்கி ஓடினார். நானும் ஆர்வியும் எங்கள் பேச்சுகளை பிரிண்ட் எடுக்க மாடியை நோக்கி ஓடினோம். கிச்சனில் பெண்கள் எதற்கோ ஓடிக் கொண்டிருந்தார்கள். இதற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்பது போல் அமைதியாக பிஏகேயும் நாஞ்சிலும் இலக்கிய உலகில் சஞ்சரித்தனர். காலச்சுவடு கண்ணன், நீல பத்மநாபன், ஜெயமோகன் என்றெல்லாம் காதில் விழுந்தது. எல்லாம் நல்ல விஷயம் தான்.
1:50க்கு நாஞ்சில், பிஏகே, நான், ஆர்வி நால்வரும் ஆர்வியின் மெர்சேடிஸ் பென்ஸில் கிளம்பினோம். ராஜன் போனில் இன்னும் 15 நிமிடம் தாமதிக்கச் சொன்னார். ”கிளம்பியாச்சே”. ஒரு லெவல் கிராஸிங்கில் டென்ஷனுடன் காத்திருந்த நாங்கள் ரிலாக்ஸ் ஆனோம். ஒரு ஏரியை சுற்றிவிட்டு லைப்ரரி சென்றடைந்தோம். லைப்ரரியில் மைக் செட் அரெஞ்ச்மெண்டெல்லாம் செய்ய வேண்டியதில்லை. ஆங்காங்கே இருக்கும். ஒரு சில வேலைகள் மட்டுமே. வரிசையாக சேர் போடுவது, பேனர் ஒட்டுவது போன்ற சமாச்சாரங்கள். கூட்டம் பரவாயில்லை. பாரதி தமிழ் சங்கத்தின் விழா. இந்த ஆண்டின் தலைவர் இட்ஸ்டிஃப் ஸ்ரீகாந்த். அவர் அறிமுகம் செய்ய அடுத்த இரண்டரை மணி நேரம் நல்ல பொழுதாக அமைந்தது. அதன் வீடியோ வடிவம் இந்த சீரிஸ் முடிந்ததும் வெளியிடுகிறோம். பாலாஜி, விசு, ஆர்வி, சுந்தரேஷ் ஆகியோரின் உரைகளின் எழுத்து வடிவம் வெளியிடப்பட்டுள்ளது. காவேரி, என்னுடையது எல்லாம் வந்து கொண்டிருக்கிறது. பிஏகே முதலில் பேசினார். பின்னர் நாஞ்சில். வீடியோவில் பார்க்கலாம்- சிறிது நாட்களுக்குப் பிறகு.

கூட்டம் முடிந்த பின்னர் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த நாஞ்சில், பிஏகே புத்தகங்கள் காணாமல் போயிருந்தது. டீ விநியோகிக்கப்பட்டது. ஒரு சமோசா, கட்லட் என்று போயிருந்தால் அரங்கு நிறைந்திருக்கும். வெளியில் வந்து எல்லோரும் எழுத்தாளர்களுடன் கூட்டத்திற்கு வந்தவர்கள் உரையாடினர். பிஏகே குடும்பத்தினர் விடை பெற்றனர். ராஜனும் நாஞ்சிலும் ஓய்வெடுக்கச் சென்றனர். விசு, அருண், பாலாஜி, நான், ஆர்வி வீட்டில் குழுமினோம். ராஜன், நாஞ்சில் 7 மணிக்கு வந்தார்கள். நாஞ்சில் என் உரை நன்றாக இருந்ததாகவும் நுணுக்கங்களுடன் இருந்ததாகவும் கூறினார். ஆனால் மெஸேஜ் ஆடியன்ஸை சென்று சேர்ந்திருக்கமா என்பதில் ஐயப்பட்டார். ஒரு மூன்று மணி ”மகிழ்ச்சி” கலந்த அரட்டை நண்பர்களிடையே. எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். சுந்தரேஷ் மிக மகிழ்ச்சியாக இருந்தார். ஹேப்பி ஹவர்ஸ்….!
நாள் 13 – ஜூலை 1, 2012
கிரேட்டர் லேக், மவுண்ட் சாஸ்தா
புதிய மாதம். பிஏகே தம்பதியினர், நாஞ்சில், ராஜன், சுந்தரேஷ் ஆகியோர் கட்டுச்ச்சோற்றுடன் ஹோண்டா வேனில் வடக்கு நோக்கி பயணம் செய்தனர். இரண்டு நாள் டூர். கிரேட்டர் லேக், மவுண்ட் ஷாஸ்தா. ராஜனிடமிருந்து கட்டுரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். (நேற்று ஜூலை 13) ”நீங்களே எழுதிவிடுங்கள், பரபரப்பாகவும், சுறுசுறுப்பாகவும், விறுவிறுப்பாகவும் எழுதிகிறீர்கள்” என்று ஐஸ் வைத்ததால் குளிர்ச்சி தாள முடியாமல் சில புகைப்படங்கள் மட்டும் இங்கே. சுந்தரேஷ், இந்தஇடங்களெல்லாம் ”அனுபவிக்கணும், எழுதக்கூடாது” என்று ரேஞ்சில் பேசினார். வழியில்லை.
நாள் 14 – ஜூலை 2, 2012
இரவு 12க்கு திரும்பினார்கள். பாவம் நாஞ்சில். தூங்குவதற்கு கூட அவருக்கு அவகாசம் அளிக்கப்படவில்லை. அவருடைய வயதில் அவர் சலிக்காதது ஆச்சரியம்தான். மறுநாள் அதிகாலையில் துயில் எழவேண்டும்.
 நாள் 15 – ஜூலை 3, 2012
லாஸ் ஏஞ்சலீஸ் – டிஸ்னிலாண்ட், யுனிவேர்ஸல் ஸ்டுடியோ
காலையில் 4:45க்கு கிளம்பி ராஜன் வீடு சென்றேன். நாஞ்சில் கிளம்பி காஃபி அருந்திக் கொண்டிருந்தார். முடித்ததும் 5:05 கிளம்பி சான் பிரான்ஸிஸ்கோ ஏர்போர்ட் சென்றோம். “தூங்க முடிந்ததா?” என்று கேட்டதற்கு ”ஒரு மணி நேரம்” என்றார். அசாத்தியம். விர்ஜின் அமெரிக்கவில் செக்கின் செய்து செக்யூரிட்டி செக் கடந்து கையசைத்தபின் ஆறரை மணி பக்கம் வீடு வந்து சேர்ந்தேன். ராஜேஷ் ஏர்போர்டிலிருந்து அப்படியே அவரை டிஸ்னிலாண்டுக்கு அழைத்துச் சென்றார். ஏற்கனவே டிஸ்னிலாண்ட் ஒரு ”டிரீம்லேண்ட்”. நாஞ்சில் தூக்கமினமை டிஸ்னிலாண்டை கனவுலகா நினைவுலகா என்று அறிந்துகொள்ளாதபடி செய்ய வாய்ப்பிருக்கிறது.

நாள் 16 – ஜூலை 4, 2012
இண்டிபெண்டன்ஸ் டே. விசுவும், அருணும் காரில் கிளம்பிச் சென்றார்கள். மறுநாள் யுனிவர்ஸல் ஸ்டுடியோஸ். விசு நீண்ட அறிக்கை தயார் செய்கிறேன் என்றார். இல்லை அவரும் இரட்டை கிளவிகளை தேடிக்கொண்டிருக்கிறாரா தெரியவில்லை.

நாள் 17 – ஜூலை 5, 2012

அன்று மாலை பாலாஜி வீட்டில் பிஏகே குடும்பத்தினருக்கும் நாஞ்சிலுக்கும் டின்னர் ஏற்பாடு. அதன் பொருள் கூத்து, கொண்டாட்டம், ”மகிழ்ச்சி”. விசுவும் அருணும் நாஞ்சிலை அழைத்துக் கொண்டு லாஸ் ஏஞ்சலீஸிலிருந்து சான் பிரான்ஸிஸ்கோவை நோக்கி கிளம்பியதுமே கார் டயர் பஞ்சர். பயணத்தில் அவரை மதியம் பட்னி போட்டு மாலையில் பேலோ ஆல்டோ வரை வந்து ஒரு க்ரேப் (crepe) ஜாயிண்டில் சாப்பாடு கொடுத்திருந்தார்கள். ஒரு வழியாக மாலை 5.45 க்கு வந்து என்னை பிக்-அப் செய்து கொண்டு ராஜன் வீட்டிற்கு சென்றோம். அவருக்கு லாஸ் ஏஞ்சலிஸ் பயணம் திருப்திகரமாக இருந்ததாகக் கூறினார். பொதுவாக குழந்தைகளை அவருக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதை வைத்து அவர் டிஸ்னிலாண்டை மிகவும் விரும்புவார் என்று நினைத்திருந்தேன். ஆனால் யுனிவேர்ஸல் ஸ்டுடியோஸ் அதை காட்டிலும் பிடித்திருந்தது என்றார்.
ஓய்வுக்கு பிறகு பாலாஜி வீட்டிற்கு படையெடுப்பு. பிஏகே குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் மீண்டும் சந்தித்தார்கள். அனேகமாக கடைசி கூட்டம் என்று நினைத்து வந்திருந்தார்கள். பிறகென்ன பாலாஜி வீடு ”மகிழ்ச்சி”புரம் தான். சரி பேசியதில் போனால் போகட்டும் என்று ஒரு விஷயத்தை சொல்கிறேன்.
ராஜீவ் கொலை வழக்கு பற்றி ஒரு விவாதம் வந்தது. முன்னாள் CBI இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் (நெல்லை ஜெபமனியின் மகன்) ரகோத்மன் காசு பண்ணுவதற்க்காக அந்த நூலை எழுதியிருக்கிறார், அவர் அந்த நூலில் இன்னும் சில உண்மைகள் வந்திருக்க வேண்டும் என்று கூறுகிறார். ரகோத்மன் கார்த்திகேயன் மேல் இன்னும் கடுமையாகவும், உறுதியாகவும் வந்திருக்கலாம் என்பது அவரது தரப்பு. ரகோத்மன் ஒரு எல்லைக்குள் செயல்பட்டிருந்தாலும் சிறந்த ஆவணம் என்று நான் நினைக்கிறேன். ரகோத்மனின்  தரப்புபடி சிவராசனே இந்த சதியை உருவாக்கி செயல்படுத்தியவர் என்பதும் அனுமதிக்கு மட்டும் தான் பிரபாகரனிடம் சென்றார் என்றும் பிரபாகரன் விரைவிலேயே (தீர்க்கமாக பின்விளைவுகளை சிந்திக்காமல்) சதி திட்டத்திற்குக்கு பச்சைக்கொடி காட்டினார் என்பதும் என் புரிதல். அப்படி தான் தெளிவாக ரகோத்மன் முன் வைப்பதாக என் நினைவு. அதை பேசிக் கொண்டிருந்த பொழுது நாஞ்சில் பிஏகே போன்றவர்களின் விவேகமான பதில்களும், அதன் பின்னர் சில வாக்குவாதங்களும் எழுந்தன. மொத்தத்தில் தரமான நேரம்.
ஃபோட்டோ செஷன்ஸ் முடிந்து விடைப்பெற்ற பொழுது சுமார் 11 மணி.

நாள் 18 – ஜூலை 6, 2012
இன்று நாஞ்சில், ராஜன், நான் மூவரும் ரோகில் 17-மைல் டிரைவ் என்ற மாண்ட்ரே பகுதி கடற்கரைக்குச் சென்றோம். செல்லும் பொழுது பாஸ்டன் பாலாவை ராஜன் தொலைபேசியில் அழைத்து பேசினார். பாலா நாஞ்சிலிடமும் என்னிடமும் பேசினார். இந்த ”கலிஃபோர்னியாவில் நாஞ்சில்” கட்டுரை தொடர் நன்றாக வருகிறது என்றார். ItsDiff ரேடியோ நிகழ்ச்சியும் அருமையாக இருந்தது என்றார்.

வாயிலில் நுழைவுசீட்டு கொடுத்தவன் முறைத்தான். பேச மறுத்தான். பொதுவாக தங்கள் விருந்தினர்களை அன்பு வார்த்தைகளால் வரவேற்கும் இது போன்ற பொது சுற்றுலா ஈர்ப்புகளில் இந்த அனுபவம் புதிதாக இருந்தது. டிக்கட்டை வாங்கிக் கொண்டு நுழைந்தோம்.

”சார், நம் நாட்டில் பகுதியில் இன்முகத்தோடு வரவேற்ப்பார்களா?” என்றேன்.
”ஏண்டா இங்கெல்லாம் வரீங்கன்னுதான் நினைப்பாங்க”
கடற்கரையிலே அமர்ந்து கொண்டு (முன்னர் ராஜன், ஆர்வி, அருணா, ஜெயமோகன் மற்றும் நான் உட்கார்ந்து சாப்பிட்ட அதே இடத்தில்) பழங்கள் மட்டுமே புசித்தோம். டேஜா வூ (Teja vu).
பின்னர் ஒரு ப்யோம் (Marine Biome) பகுதியை பார்வையிட்டோம். பல உயிரினங்கள். அந்த இடத்தில் தான் பல தளங்களில் பலர் இன்று ஜெயமோகனை வசை பொழிய உபயோகப்படுத்தும் அந்த பைனாக்குலர் புகைப்படத்தை நான் மூன்று வருடங்களுக்கு முன் எடுத்திருந்தேன். ராஜன் நினைவு படுத்தினார். அந்த பாக்கியத்தை நாஞ்சில் வசையாளர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்ற பெருந்தன்மையில் அதே பைனாக்குலர் குளோஸப்.
இரண்டு மணிக்கெல்லாம் அங்கே சுற்றி விட்டு திரும்பினோம்.
”சார் ஒரு பாராட்டுக்கூட்டம் என்று ஒரு இலக்கியவாதியை அழைத்து வந்து அவரை பாராட்டி விட்டு சந்தடி சாக்கில் அவரின் குறைகளை மேடையில் சொல்லலாமா? ஒரு புத்தக மீட்டிங்கில் சொல்லலாம் என்று தெரிகிறது”
”அது மரபல்ல. ஆனால் சிலர் செய்கிறார்கள்.”
3:30க்கு சாண்டா கிளாராவில் காஸ்ட்கோ அருகில் இருக்கும் ”ஸ்வீட் டொமேடோ”வில் லஞ்ச் பஃபே. ராஜன் ஐடியா அது.  நுழையும் பொழுது இரண்டு தட்டில் காய்கறிகள் எடுத்துக் கொண்டு உள்ளே நுழையவேண்டும். சாலட் பாருக்கு திரும்ப முடியாது. உள்ளே இருக்கும் பல வகை ஸூப், ஃபொக்கேஷியா, கார்ன் கேக், பாயில்ட் பொடேடோ, இத்யாதிகள்…ஐஸ்கீரிம், போன்றவைகள் – எத்தனை முறை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். எடுத்துக் கொண்டு போய் உட்கார்ந்தோம். பெரிய ட்ரே நிறைய சூடாக குக்கிகளை (பிஸ்கட் போன்றது ஆனால் சிறிது தடித்தது) எடுத்துக் கொண்டு அன்புடன் ஒரு பணிப்பெண் பரிமாறினாள். எங்கள் சோர்வுக்கு அது இதமளித்தது.
நாஞ்சில் “இங்கே சாப்பிடறதையும் பார்க்கிறதையும் வைத்து ஒரு புத்தகமே எழுதலாம்” என்றார்.
இது போன்று “ஃப்ரெஷ் சாய்ஸ்” என்று ஒரு உணவு சங்கிலியும் இருக்கிறது. முடித்து விட்டு வெளியே வந்தோம். பக்கத்திலிருந்த காஸ்கோவில் நுழைந்தோம். ஒவ்வொரு பகுதியில் உள்ள பொருட்களையும் அவை அடுக்கப்பட்டிருந்த நேர்த்தியையும் பார்வையிட்டார் நாஞ்சில். மதுபான பிரிவில் அடுக்கபட்டிருந்தவற்றை “ஒரு கலைகூடம் மாதிரியில்ல இருக்கு” என்றார். ஒரு சுற்று சுற்றிவிட்டு வீட்டிற்கு திரும்பினோம்.
மாலை 7:30 மணி
ராஜனும், நாஞ்சிலும் வீட்டிற்கு வந்தார்கள். பெரும் டின்னர் ஏற்பாட்டெல்லாம் இல்லை. என் மனைவி குடும்பமாக ஆசி வாங்கவேண்டும் என்ற விருப்பபட்டாள். அப்படியே உணவிற்கு ஏற்பாடும் செய்தாள். நாஞ்சிலுக்கு பிடித்த டோக்ளாவும், பெசரட்டும் (அடை போன்றது). பாலாஜியும் அவர் மனைவி அருணாவுடன் நாஞ்சிலின் ஐடச்சை (iTouch) தயார் செய்து கொண்டு வந்தார். விசுவும், அருணும் புத்தகம் ஒன்றை பரிசளிக்க வந்தார்கள். அனைவரும் உணவு அருந்தினோம். சுக்கு வென்னீர் குடித்த பிறகு விடைப் பெற்றார்கள்.
நாள் 19 – ஜூலை 7, 2012
காலை 3:45க் கண் விழித்து ராஜனின் வீடு நோக்கி சென்றேன். எல்லோரும் கிளம்பியிருந்தார்கள். ஹ்யூஸ்டன் ஃப்ளைட் 6:50க்கு. பாலாஜியின் மினி வேனில் சான் பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையம் நோக்கி கிளமிபினோம். முன்னர் சிக்கல் ஒன்றை பற்றி சொல்லியிருந்தார் நாஞ்சில். ஒரு நாள் முழுவதும் மண்டையை குழப்பியபிறகு அதற்கு எனக்கு ஒரு யோசனை தோன்றியிருந்தது. அவர் ஷூ அணிந்துக் கொண்டிருந்த பொழுது அவசரமாக அதை கூறினேன். அதைப் பற்றி சிந்திப்பதாக சொன்னார்.
வீட்டிலிருந்து கிளம்பி ஒரு நூறு மீட்டர் சென்ற பொழுது “ராஜன் கேமிராவை எடுத்து கொண்டீர்களா?” என்றேன்.
“இல்லை எடுத்துட்டு வந்திடவா?”
“அதல்லாம் வேண்டாம், போகலாம்” மெல்லிய படபடப்புடனும் இனம் புரியாத உணர்ச்சிகளுடனும் நாஞ்சில். ஏதோ புரிந்தது. என் மனதில் ஒரு பாரம் ஏறத் தொடங்கியிருந்தது. பொது விஷயங்கள் சிலவற்றை பேசி விமான நிலையத்தை அடைந்து ”யுனைட்டட்” வரிசையில் சென்று நின்றோம். பாலாஜி இருபதைந்து டாலர்கள் கொடுத்து பெட்டியை செக்கின் செய்து விட்டு வெளியே வந்த பொழுது 45 நிமிடங்களே இருந்தன. வேகமாக செக்யூரிட்டி செக்கினுள் சென்று அவர் கணிபொறி, பெல்ட், ஷூ இவற்றை எக்ஸ்ரே மெஷின் பெல்ட்டில் வைத்துவிட்டு ஃப்ரிஸ்க் செய்ய உடன்பட்டார். மீண்டும் அனைத்தையும் மாட்டிகொண்டு எங்களைப் பார்த்து கையை அசைத்தார்.
கண்ணாடியை கழற்றி முகத்தை துடைப்பது போலிருந்தது. இல்லை என் பிரம்மையா?
எங்கள் மனதில் வெறுமையை நிரப்பிவிட்டு விமானத்தின் கேட்டை நோக்கிச் செல்லும் கூட்டத்தில் கரைந்தார் நாஞ்சில் நாடன் என்ற சுப்ரமணியன்.
(முற்றும்)
பின்குறிப்பு – நான் முதலில் சொன்னது போல் என்ன பேசினோம் என்பதை நினைவு வைத்து எழுதுவது ஒரு பக்கம், எல்லாவற்றையும் பிரசுரிக்க முடியுமா என்ற அரசியல் காரணம் இன்னொரு பக்கம் – சரி அப்படியே எழுதினாலும் அது சாத்தியமா? பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் பிரசுரித்தால் இன்னும் 50 அத்தியாயங்கள் ஓடியிருக்கும்.
மேலும் ஒரு முழு நேர எழுத்தாளன் வேண்டுமானால் ஸ்வாரஸ்யம் குறையாமல் இதை செய்யமுடியும்.  நான் எழுத்தாளனும் இல்லை. அதற்கு உண்டான திறமையும், திராணியும் அட்லீஸ்ட் இன்றைய நிலைமையில் இல்லை. ”இதெல்லாம் எவன் கேட்டான், இதை எதற்கு எழுதுகிறீர்கள்” என்பவர்களுக்காக எழுதியதல்ல இது. நுன்னுணர்வுகள் எஞ்சியிருப்பவர்களுக்காக எழுதப்பட்டது இது.
பின் குறிப்பிற்கு பின் குறிப்பு – என்ன பேசினோம் என்பதை எழுத சொன்ன பலருக்கு – ”சட்டியில் இருந்தால் தானே ஆபிஸில் வரும்” என்று நான் சொன்னால் அது ஜெயமோகனின் ”பேடபாதம்”. ஆம், ஆஃபீஸில் அல்லது ஆஃபிஸ் டைமில் வைத்து அவசரமாக எழுதினால் இப்படி அரைகுறைதான். என்றாலும் முடிந்த அளவிற்கு எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறேன். என்னுடைய நோக்கம் என்ன நடந்தது என்பதை ஆவணப்படுத்துவதே தவிர நாஞ்சிலாகட்டும் பிஏகேயாகட்டும் – அவர்கள் பேசியதை ஆவணப்படுத்துவதல்ல.
ஒரு அனுபவத்தை கொடுத்த மனத்திருப்தியுடன் முடித்துக் கொள்கிறேன்.
முழுத்தொகுப்பையும் படிக்க:http://siliconshelf.wordpress.com/category/nanjil-nadan/

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், அமெரிக்கா, எழுத்தாளர்களின் நிலை, நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to கலிஃபோர்னியாவில் நாஞ்சில் – 7

  1. VINOTHKUMAR (@forvino) சொல்கிறார்:

    deja vu?

  2. jeyakumar72 சொல்கிறார்:

    நாஞ்சில் நாடனின் வாசகனான எனக்கு அவரது பயணக் கட்டுரை மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. சொல்லவந்ததை முடிந்தவரை சிறப்பாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

    நன்றி.

    ஜெயக்குமார்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s