சதகம் -சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் -2

நாஞ்சில் நாடன்
முந்தைய பகுதிகள்:https://nanjilnadan.com/category/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/
எனக்கு வடமொழி தெரியாது. எனினும் ஆறாம் நூற்றாண்டு வடமொழிக்கும் தமிழ் போலவே, கவிதைக்கு என, வடிவ- சந்த – ஒழுங்கமைதி இருந்திருக்க வேண்டும். அதிலும் பர்த்ருஹரி எனும் மாக்கவிஞன் கவிதை எனில் கேட்க வேண்டுமா? காலம் மாறிவிட்டது, கவிதை நவீனமாகி விட்டது, இலக்கணம் பழைய தினத்தாள் கட்டு ஆகிவிட்டது என்பன எல்லாம் நாம் அறிவோம். எனினும் வான்மீகிக்கு கம்பன் செய்தது போல் பெரியதொரு சேவையை பர்த்ருஹரிக்கு தமிழ் ஆற்றவில்லை. ஏன், காளிதாசனுக்கும் கூட.
சுபாஷிதத்தின் மூன்று சதகங்களும் பத்துப் பத்தென கொத்துக்களாய் ஆனவை. அந்த வகையில், சங்க இலக்கியமான பதிற்றுப் பத்தும் – 10 x 10 = 100 – ஒரு சதக இலக்கிய முன்னோடி என்று கருதுகிறார்கள்.
நிற்க. இனி, பர்த்ருஹரியின் சதக நூல்களில் இருந்து, மொழிபெயர்ப்பின் சில மேற்கோள்களைப் பார்ப்போம். நவீன கவிதை என்பதால் நான் உரை எழுதி மெனக்கெடவும் அவசியம் இல்லை.
நீதி சதகத்தில் இருந்து சில சுவையான கவி வரிகள்:

மெல்லிய தாமரைத் தண்டினால்
மதம் பிடித்த யானையைக் கட்ட
நினைப்பதும்
அனிச்ச மலரின் மெல்லிதழால்
வைரத்தை அறுக்க
முயல்வதும்
கடல் நீரின்
உப்புக் கருப்பை
தேன் துளிகளாய்
இனிப்பாக மாற்ற நினைப்பதும்
அமிர்தமான
நற்சொல்லினால்
முட்டாளை
நல்வழிப்படுத்த விரும்புவதும்
வீண் வேலை
எனது அதிகப் பிரசங்கித்தனமான உரையாக, வேண்டுமானால், இலங்கை அரசை இந்திய அரசு மனித உரிமை போதித்து நல்வழிப்படுத்த முயல்வதும், என்றும் சேர்த்துக் கொள்ளலாம்.

புழுக்கள் நெளியும்
எச்சிலில் நனைந்த
துர்நாற்றமுள்ள
அருவருக்கத்தக்க
மாமிசமில்லாத
கழுதை எலும்பை
நாய்
ஒப்பில்லாத ருசியுள்ளது போல்
ஆவலுடன் சுவைத்து உண்ணும் பொழுது
அருகில் இருந்து
தேவர்களின் தலைவன்
இந்திரன்
பார்த்துக் கொண்டிருப்பது
தெரிந்தாலும்
கொஞ்சமும் வெட்கப்படுவதில்லை
இழிந்த உயிர்கள் தாம்
அடைந்த பொருள்கள்
இழிவானதா இல்லையா என
அறிவதில்லை

நீதி சதகம் பல நீதிகளை மொழிகின்றது.
1. கிணற்றில் நீர் எடுத்தாலும், கடலில் நீர் எடுத்தாலும்
குடம் சம அளவு நீரையே எடுக்கும்
2. அபகீர்த்தி வந்து விட்டதால்
மரணம் வரத் தேவையில்லை
3. உலகில் ஒரு காரணமும் இல்லாமல்
பகையுடன் இருக்கின்றனர்
என்பன போன்று.
நீதி சதகத்துக்கும் வைராக்கிய சதகத்துக்கும் இடையே சிருங்கார சதகம் எனும் வைப்பு முறை எனக்குப் புரியவில்லை. ஏதேனும் காரணம் இல்லாமல் இருக்காது.

தீபம் உண்டு
நெருப்பு உண்டு
சூரிய சந்திர
நட்சத்திரங்கள் உள்ளன
 ஆனால்
மலர்விழியாள் இல்லாது
இவ்வுலகில்
இருள் சூழ்ந்துள்ளது
என்கிறது ஒரு பாடல். மற்றொரு பாடலோ

பாபம் போக்குவதற்கு
கங்கை நதிக்கரையில்
வசிக்க வேண்டும்
அல்லது
மனத்தைக் கொள்ளை கொள்ளும்
மாலையணிந்த மங்கையின்
மார்பகங்களில்
வசிக்க வேண்டும்
என்கிறது.

அழகிய பிருஷ்டங்களையுடைய
அவளை விடுத்து
அமிர்தமோ விஷமோ இல்லை
இணைந்திருக்கையில்
அமிர்தக்கொடி அவளே
விலகியவுடன்
விஷக்கொடியும் அவளே!
எனும் ஒரு பாடல்.
மங்கையின் தேகம்
அடர்ந்த வனம்
அதில் அலையாதே
மன வழிப்போக்கனே
அங்கே
 மார்பக மலைக் கோட்டையில்
மன்மத திருடன் உள்ளான்!

என்றும் எச்சரிப்பது ஒரு கவிதை.

குளிர் காலத் தென்றல்
காமமிக்க காதலனைப் போல்
அழகிய பெண்களிடம் விளையாடுகிறது
எனப் பற்பல வரிகள் மேற்கோள் காட்டலாம்.
ஒன்றெனக்குப் புரிகிறது. சிற்றிலக்கியத் தமிழ்ப் புலவனுக்குப் பெருமுலை மீது தணியாக் காமம் எனில் பர்த்ருஹரிக்குப் பெரும் புட்டங்கள். மேலும் எம்மொழிக் கவிஞன் ஆனாலும் பெண் அவனுக்கு மதுக்குடமாகவே தெரிகிறாள். மாந்தி மாந்தித் தீரவில்லை, போதையும் தெளியவில்லை.
மூன்றாம் பகுதி வைராக்கிய சதகம்.

முகத்தில்
சுருக்கங்கள்
நரைகண்ட தலைமுடி
நடுங்கும் உடல்
ஆசைமட்டும்
இன்னும்
ஓயவில்லை
என்றும்
புலியைப் போல்
பயமுறுத்துகிறது முதுமை
விரோதியைப் போல்
உடலைத் தாக்குகிறது வியாதி
உடைந்த பானையிலிருந்து
வழியும் நீர்போல்
ஒழுகுகிறது ஆயுள்
 இருந்தும் மனிதன்
நற்செயல்கள் செய்யாதிருக்கிறான்
இது அதிசயமே!

என்றும் நிலையாமை பற்றிப் பேசுகிறது.
எனினும் வடமொழிச் சதகதுக்கும் தமிழிலுள்ள சதகதுக்கும் பெயரன்றிப் பிற ஒப்புமை இல்லை என்கிறார்கள்.
தமிழில் சைவக்குரவர் நால்வரில் திருச்சதகம் பாடிய மாணிக்க வாசகர்தான் தசகம் எனும் சொல்லை ஆதியில் ஆண்டிருக்கிறார். திருவாசகத்தின் ஒரு பகுதி திருச் சதகம். திரு என்பது அடைமொழி. திருச் சதகம் நூறு பாக்களால் ஆனது.
(தொடரும்)
முழுக் கட்டுரையையும் படிக்க: http://solvanam.com/?p=20705

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s