சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்- பகுதி 8A

நாஞ்சில்நாடன்
முன் பகுதிகள்: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்
சொல்வனம் பனுவல் போற்றுதும்
நந்திக் கலம்பகம்
தெள்ளாற்றுப் போர் வென்ற நந்திவர்ம பல்லவனைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது இது. பாடியவர் பெயர் அறியப்படவில்லை. 88 பாடல்கள் கொண்டது. அரசர்க்குத் தொண்ணூறு எனும் இலக்கணத்தைக் கொண்டு பார்த்தால், 2 பாடல்கள் இறந்து விட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.
அற்புதமான கடவுள் வணக்கச் செய்யுள்.
“மண்டலம் ஆம், அம்பமும் ஆம்…”
கொன்றை அழித்தவனே என்றும் வெள்ளெருக்கம் சடை முடியன் என்றும், கங்கை ஆற்றைப் புனைந்தவன் என்றும், வெண்ணீற்றைப் பூசியவன் என்றும், வேன்மதிக் கொழுந்தைச் சூடியவன் என்றும் பாடப்பட்ட சிவனை, புலவர் நினைத்துப் பாடுகிறார்.
“திசை நடுங்கத் தோன்றிற்று, நீ உண்ட திறம் நஞ்சம்
உயிர் நடுங்கத் தோன்றிற்று, நீ உதைத்த பெருங் கூற்றம்”
என்பது புலவரின் வியங்கோள்.
பெரும்பாலும் சிற்றிலக்கியங்கள் இயற்கை அழகும் தலைவனின் வீரம், அவன் மார்மேல் கொங்கை சேர்க்கத் தலைவி ஏங்கிக் கொள்ளும் காமம் எனப் பாடிச் செல்பவை. தமிழும் கவிதையும் காமமும் துளிர்த்து நிற்பவை. இங்கு தலைவி கூற்றாக ஒரு பாடல்:
மலர்க்கும் மாதவி தன்மேல் வண்டு ஆர்க்கும் காலம்
வரிக்குயில்கள் மாவில் இளந்தளிர் கோதும் காலம்
சிலர்க்கு எல்லாம் செழுந்தென்றல் அமுது அளிக்கும் காலம்
தீவினையேற்கு அத்தென்றல் தீவீசும் காலம்
பலர்க்கு எல்லாம் கோன் நந்தி பல்மாடக் கச்சிப்
பனிக் கண்ணன் பகுமுத்தம் பார்த்தாரும் காலம்
அவர்க்கு எல்லாம் ஐங்கணை வேள் அலர்தூற்றும் காலம்
அகன்று போனவர் நம்மை அயர்த்துவிட்ட காலம்”
நந்தியைப் பற்றிய பல பாடல்கள் தனிப் பாடல்களாகக் கலம்பகப் படிகளில் ஒரு சேரக் கிடைத்திருக்கின்றன. அவற்றுள் 27 பாடல்கள் தொகுக்கப் பட்டுள்ளன. மிகவும் சுவாரசியமான பாடல்கள் பலவுண்டு. அவற்றுள்,
செந்தழலின் சாற்றைப் பிழிந்து, செழுஞ்சீரச்
சந்தனம் என்று யாரோ தடவினார் – பைந்தமிழை
ஆய்கின்ற கோன்நந்தி ஆகம் தழுவாமல்
வேகின்ற பாவியேன் மேல்!”
என்றொரு பாடல்.
“பைந்தமிழை ஆய்கின்ற நந்திவர்ம பல்லவனின் மார்பினைத் தழுவ மாட்டாமல் வேகின்ற பாவியாகிய என்மீது செந்தழலின் சாற்றைப் பிழிந்து, செழுமையான குளிர்ச்சியான சந்தானம் என்று யாரோ தடவிப் போனார்,” என்பது எனது உரை.
பொருள் எழுத வேண்டாத பல செழுமையுள்ள பாடல்கள்.
மங்கையர் கண் புனல் பொழிய, மழை பொழியும் காலம்;
மாரவேள் சிலை குனிக்க மயில் குனிக்கும் காலம்;
கொங்கைகளும் கொன்றைகளும் போன் சொரியும் காலம்;
கோகனகம் நகை முல்லை முகை நகைக்கும் காலம்;
செங்கை முகில் அனைய கோட்டைச் செம்பொன் பெய்மேகத்
தியாகபரன் நந்தி அருள் சேராதார் போல
அங்கு உயிரும் இங்கு உடலும் ஆன மழைக் காலம்
அவர் ஒருவர் நாம் ஒருவர் ஆன கொடுங் காலம்”
அற்புதமான உவமைகள் பல உண்டு.
“பெண் இலா ஊரில் பிறந்தாரைப் போல வரும் வெண்ணிலாவே, இந்த வேகம் உனக்கு ஆகாது” என்று ஒரு பாடல் குறிக்கும். “இரும்பு உழுத புண்ணுக்கு இடு மருந்தோ” என இன்னொரு பாடல் வினவும். “கார் ஊர் குழலிக்கு காது அளவு ஊரும் கடைக்கண்களே” என மற்றொரு பாடல் வியக்கும்.
அனுபவித்து வாசிக்க அகத்துறைப் பாடல்களும் உண்டு.
“கைக்குடம் இரண்டும், கனக கும்பக் குடமும்
இக்குடமும் கொண்டாள் முறியாதே? – மிக்க புகழ்
வெய்க் காற்றினால் விளங்கும் வீருநந்தி மா கிரியில்
ஈக்காற்றுக்கு ஆற்றா இடை?”
என்றொரு பாடல்.
“மிக்க புகழ் மூங்கில் காற்றினால் விளங்கும் வீரநந்தியின் பெருமலையின் சிறுகாற்றுக்கும் ஆற்றாத பெண்ணின் இடை, கைக்குடம் இரண்டும் போற்கும்பத் தலைக்குடமும் கொண்டு நடந்தால் முறியாதா?” என்பது பொருள்.
கோன் நந்தியின் வெற்றிச் சிறப்பைப் பாடும் ஒரு பாடலுடன் இந்தக் கலம்பகப் பகுதியை நிறைவு செய்யலாம்:
திருவின் செம்மையும், நிலமகள் உரிமையும்,
பொது இன்றி ஆண்ட பொலம் பூண் பல்லவ!
தோள் துணை ஆக, மா வெள்ளாற்று
மேவலர்க் கடந்த அண்ணாய்! நந்தி! நின்
திருவரு நெடுங்கண் சிவக்கும் ஆகின்,
நெடுநர் சேரும் பதி சிவக்கும்மே;
நிறம் கிளர் புருவம் துடிக்கின், நின் கழல்
இறைஞ்சா மன்னர்க்கு இடம் துடிக்கும்மே;
மை இல் வாள் உரை கழிக்கும் ஆகின்
அடங்கார் பெண்டிர்
பூண் முலை முத்தப் பூண் கழிக்கும்மே;
கருவாய் போல் வளை அதிர, நின்னொடு
மருவா மன்னர் மனம் துடிக்கும்மே;
மாமத யானை பண்ணின்
உதிரம் மன்னும், நின்எதிர் மலைத்தோர்க்கே.
1957-ல் மர்ரே எஸ். ராஜம் ஐயர் வெளியிட்டதன் மறுபதிப்பாக நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் 1985-ல் வெளியிட்ட நந்திக் கலம்பகத்தின் மறுபதிப்புப் படிகள் இன்றும் கிடைக்கின்றன.
நந்திக்கலம்பகத்தை இணையத்தில் இங்கே படிக்கலாம்.
(தொடரும்)
முழுதும் படிக்கhttp://solvanam.com/?p=19153

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்- பகுதி 8A

  1. rathnavelnatarajan சொல்கிறார்:

    நன்றி ஐயா.
    உங்கள் பதிவினால் நிறைய செய்திகள் தெரிந்து கொண்டேன்.
    மிக்க மகிழ்ச்சி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s