நாஞ்சில்நாடன்
முன் பகுதிகள்: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்
சொல்வனம் பனுவல் போற்றுதும்
கலம்பகம்
ஐம்பதுக்கும் மேற்பட்ட கலம்பகங்கள் தமிழில் உண்டென்பர். சத்தியமாக, மாணவப் பருவம் தொட்டு இன்றுவரை நான் கேள்விப்பட்டது நந்திக் கலம்பகம் ஒன்று மட்டுமே! பெருந்தொகை ஊதியமாகப் பெற்று தமிழ் கற்பிக்கும் பேராசிரியர் எவரேனும் மேலும் சில கலம்பகன்களை அறிந்திருக்கக்கூடும். இந்த ஐம்பதுக்கும் அச்சு வடிவம் உண்டா, தமிழ் முதுகலைப் படிப்பில் பாடத் திட்டமாக உளதா, இலதா என்றெமக்குத் தெரியாது. ஆனால் செம்மொழியான தமிழ்மொழி ஏ.ஆர்.ரகுமான் இசை வடிவிலாவது வாழ்ந்திருக்கும்.
மதுரைக் கலம்பகம், கைலாயக் கலம்பகம், கச்சிக் கலம்பகம் எனச் சில குறிப்பாகப் பேசப்படுகின்றன. தேடினால் கிடைக்கும். ஆனால் வேலை மெனக்கெட்டு எதற்குத் தேடனும் என்பதுதானே நமது மனப்போக்கு!
கலம்பகங்கள் அகம், புறம் என இரு பிரிவுகளிலும் பாடப்பெறும். புயவகுப்பு, அம்மானை, ஊசல் முதலிய பதினெட்டு உறுப்புகள் கொண்டது அந்தாதியாக அமைக்கப் பெறும். தேவர், அரசர் இவரைத் தலைவராகக் கொண்டு பாடப்பெறுவது. இன்று தேவர் எங்கு கறந்து உறைகின்றனரோ? அரசர் இனமும் அழிந்து போயிற்று. இனமானத் தலைவர்கள் மீது பாடலாம் எனில் கலம்பகம் பாடுவது எளிய யாப்பு முறையும் அன்று.
எடுத்துக்காட்டுக்கு, பன்னிரு சைவத் திருமுறைகளையும் தொகுத்த நம்பியாண்டார் நம்பி, பதினோராம் திருமுறையில் உள்ளடக்கிய நாற்பது நூற்களில் ஒரேயொரு கலம்பகம்தான். அது அவரே திருஞான சம்பந்தர் மீது பாடியது. திருஞான சம்பந்தரின் இன்னொரு பெயர் ஆளுடைய பிள்ளை. பதினோராம் திருமுறையின் இறுதில் நூலாக இருப்பது ‘ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்’.
இந்தக் கலம்பகத்தில் கையாளப்பட்ட பாக்கள், பாவினங்களின் பட்டியலே மலைக்க வைக்கின்றன. அவைபற்றி அதிகம் தகவல் அறிய விரும்புபவர் ‘சிதம்பரப் பாட்டியல்’ கண்ணுறலாம்.
இனி பாக்கள், பாவினங்களின் பட்டியலைப் பார்க்கலாம். பயன்படுத்தப்பட்டன-
1. ஒரு போகு கொச்சகக் கலிப்பா
2. நான்கடித் தாழிசை
3. அராகம்
4. இரண்டடித் தாழிசை
5. இருசீர் ஓரடி அம்போதரங்கம்
6. முச்சீர் ஓரடி அம்போதரங்கம்
7. நாற்சீர் ஓரடி அம்போதரங்கம்
8. வெண்பா
9. கட்டளைக் கலித்துறை
10. அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
11. எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
12. எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
13. பதின்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
14. பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
15. பதினான்குசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
16. கலிவிருத்தம்
17. சம்பிரதம்
18. மறம்
19. ஈற்றடி மிக்கு வந்த நான்கடிக் கலித்தாழிசை
20. நேரசை ஆசிரியப்பா
21. வஞ்சித் துறை
22. ஆசிரியத் துறை
23. கட்டளைக் கலிப்பா
24. கைக்கிளை மருட்பா
25. இன்னிசை வெண்பா
தமிழின் அனைத்துப் பாக்கள், பாவினங்கள் பற்றிய இலக்கணம், எடுத்துக்காட்டுச் செய்யுள் என எளிய தமிழில் புலவர் பெருமக்களில் எவரேனும் நூலொன்று எழுதலாம். காலமும் கடந்து கொண்டிருக்கிறது. ஏனெனில் தகுதியும் திறமையும் உடைய தமிழ்ப் புலவர்களின் சராசரி அகவை இன்று எண்பது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
வெறும் 57 பாடல்களே கொண்ட ‘ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பக’த்தில் இத்தனை பாக்கள், பாவினங்கள் ஆளப்பட்டிருப்பது அதிசயமாகப் படுகிறது. மேலும், தமிழில் புதுக்கவிதை, நவீன கவிதை செழித்து, படர்ந்து ஓங்கி வளருவது அதிசயமாகப் படவில்லை.
செஞ்சடை வெண்மதி அணிந்த சிவன் எந்தை திருவருளால்…”
என ஞான சம்பந்தரைப் பாடுகிறார் நம்பியாண்டார் நம்பி. பாடலை நான் பிரித்து எழுதியுள்ளேன். இந்தப் பாடலின் வகை, “ஒரு பொகு கொச்சகக் கலிப்பா”. அதன் இலக்கணம் என்ன என்று என்னைக் கேட்காதீர்கள். “இழவுக்கு வந்தவள் தலை அறுக்க மாட்டாள்”.
இந்தக் கலம்பகத்தின் செய்யுட்களின் கிடப்பைக் கண்ணுறுகிறபோது, இதை சைவர்களேனும் கற்றல் நன்றெனப்படுகிறது. எந்த சைவப் புலவரும் இந்தக் கலம்பகத்தி விரிவுரையாற்றியோ மேற்கோள் காட்டியோ பேசியதுண்டா என்பதை எவரும் உறுதி செய்யலாம். இது போன்ற நூல்கள் தொழில் செய்ய உதவாது என்று எனக்குத் தோன்றுகிறது.
நந்திக் கலம்பகம்
இக்கட்டுரையின் தொடர்ச்சியை முழுதும் படிக்க: http://solvanam.com/?p=19153
நல்ல பதிவு.
நன்றி.