சிற்றிலக்கியங்கள் 6(1) -அந்தாதி

நாஞ்சில் நாடன்
முன் பகுதிகள்: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்
சொல்வனம் பனுவல் போற்றுதும்
அந்தாதி
சிற்றிலக்கிய நூல்கள் வரிசையில் அந்தாதி சிறப்பானதோர் வகை. அந்தம் + ஆதி = அந்தாதி. அந்தாதி எனப்படுவது ஒரு பாடலில் முடியும் சொல்லை அடுத்த பாடலின் முதற்சொல்லாக வைத்துப் பாடுவது. எடுத்துக் காட்டாக, ஒரு பாடல் ‘வையத்தே’ என முடிந்தால் அடுத்த பாடல் வையம் என்றோ, வையத்தே என்றோ, வையத்தோர் என்றோ, வையத்துள் என்றோ தொடங்கும். அந்தம் எனில் இறுதி, ஆதி எனில் தொடக்கம்.
‘ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்’
என்று தொடங்கியது மாணிக்க வாசகரின் திருவெம்பாவை.
பதிற்றுப் பத்து எனும் சங்க இலக்கிய நூலே அந்தாதியில் பாடப் பெற்றது தான் என்றும் இடையில் ஒரு பத்தில் தொடர்ச்சி அறுவதால் அதை அந்தாதி வகையில் கொள்வதில்லை என்றும் அறிஞர்கள் கருதுகிறார்கள்.
அபிராமப் பட்டர் எழுதிய ‘அபிராமி அந்தாதி’, நக்கீர தேவ நாயனார் பாடிய ‘கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி’. சேரமான் பெருமாள் நாயனார் அருளிய ‘பொன் வண்ணத்து அந்தாதி’ என்பன சிறப்பாகக் குறிப்பிடப் படுவன. மேலும் ‘திருப்பெருந்துறைக் கலித்துறை அந்தாதி’, திருவரங்கத்து அமுதனார் இயற்றிய ‘இராமானுசர் நூற்றந்தாதி’ என்று மேலும் சில கேள்விப் படுகிறோம். பெரும்பாலும் அந்தாதிகள் வெண்பா, விருத்தம், கலித்துறை எனும் பாவினங்களில் பாடப்பெற்றுள்ளன.
அபிராமி அந்தாதி
அபிராமிப் பட்டர் எழுதிய அபிராமி அந்தாதி பெரிதும் வாசிக்கப் படுவது, பாராயணம் செய்யப்படுவது, ஓதப்படுவது, பூசையறையில் வைத்துப் பூசிக்கவும் படுவது. இசை வடிவமாக பாடப்படுவதும் அபிராமி அந்தாதி பரவலானதன் காரணங்களில் ஒன்று. இங்கு, வாசகர்களுக்கு சீர்காழி கோவிந்தராஜனின் இசைப்பேழைகளை அல்லது குறுவட்டுக்களை நான் பரிந்துரைக்கிறேன். அதுபோன்றே தமிழின் சிறந்த பாவை நூற்களான திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களையும் இசை வடிவமாகக் கேட்டல் சிறப்பு. எம்.எல்.வசந்தகுமாரி, வேதவல்லி முதலானோர் பாடியிருக்கிறார்கள். அபிராமி அந்தாதி அல்லது திருப்பாவை, திருவெம்பாவை, கே.ஜே.யேசுதாஸ் பாடியிருப்பதாகவும் நினைவு. என்னிடம் இருக்கலாம், தேடிப் பார்க்க வேண்டும்.
நான் வாசிக்க நேர்ந்த சிற்றிலக்கியங்களில், கிண்கிணி ஆர்ப்ப போலும், சிலம்பின் சிலம்பல் போலும், புலர்காலைப் புள்ளின அலம்பல் போலும், சிற்றருவித் துள்ளல் போலும், பெருங்கடல் ஓதை போலும், வண்டின் ரீங்காரம் போலும் ஒலிக்கும் பாடல்களைக் கொண்டது அபிராமி அந்தாதி.
முதலில் கள்ள வாரணப் பிள்ளையார் காப்பு, இறுதியில் நூற்பயன் எனும் இரு செய்யுட்கள் நீங்கலாக, நூறு விருத்தப் பாக்கள். முதல் பாடலில் ‘உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம்’ என்று தொடங்கி இறுதிப்பாடல், ‘நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே’ என்று முடிவது. அதாவது ஆதிச் சொல் அந்தமாக முடிகிறது.
திருக்கடையூர் என்று இன்று வழங்கப் பெறும் திருக்கடவூர் வதியும் அபிராமி அம்மையின் மீது அபிராமிப் பட்டர் என்றும் அந்தணர் எழுதிய நூல் இது. ஏறத்தாழ முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய நூல். எல்லா வகையிலும் சிற்றிலக்கிய சிறப்புக் கொண்டது. தஞ்சை சரபோஜி மன்னர் காலம். அது பற்றிக் செவி வழிக் கதைகள் உண்டு.
அபிராமி பட்டர், அபிராமி அந்தாதி தவிரவும் ‘அபிராமி அம்மைப் பதிகம்’ என்று பதினாங்கு சீர் ஆசிரிய விருத்தத்தில் 11 பாடல்களும் யாத்தவர். ஒரு காலத்தில் திருப்பாவை, திருவெம்பாவை போல, அபிராமி அந்தாதி நூறுபாடல்களும் எனக்கு மனப்பாடமாக இருந்தது. அது நான் இறை மறுப்பாளனாகத் திரிந்த காலம். இன்றும் எனக்குப் பெரிய பற்று ஒன்றும் இல்லை. இன்று பல்லும் போயிற்று, சொல்லும் போயிற்று, காலக்குப்பை கனத்து அமுக சினைவும் போயிற்று.
அபிராமி அந்தாதியின் நூறு பாடல்களும் நூறு வகையில் சிறப்புடையன. அபிராமி அம்மையைத் தமிழ்ப் பாக்கள் கொஞ்சிக் கொஞ்சிப் பாடுகின்றன :
‘நின்றும் இருந்தும் கிடந்தும்
நடந்தும் நினைப்பது உன்னை
என்றும் வணங்குவது உன்மலர்த்
தாள் எழுதா மறையின்
ஒன்றும் அரும்பொருளே அரு
ளே உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே அழி
யாமுத்தி ஆனந்தமே’
என்றும்,
‘கண்ணிய துன்புகழ் கற்பதுன்
நாமம் கசிந்து பத்தி
பண்ணிய துள்ளிரு பாதாம்
புயத்தில் பகல் இரவா
நண்ணிய துன்னை நயந்தோர்
அவையத்து நான்முன் செய்த
புண்ணிய மேதுஎன் அம்மே புவி
வழையும் பூத்தவளே!’
என்றும் பாய்ந்து செல்லும் பக்தி வெள்ளம்.
சின்னப் புத்தகம் கையிடக்கமாக முன்பெல்லாம் இரண்டு ரூபாய்க்குக் கிடைத்தது. இன்று பத்து ரூபாய் இருக்கலாம். உரை அவசியமே இல்லை. காதில் ஒலிக்கும் கவிதையின் சந்தம். பயண காலங்களில் குறுஞ்செய்தி குத்துவதை விடுத்து திருப்பாவை, திருவெம்பாவை, அபிராமி அந்தாதி என்று வாசிக்கலாம் போல.
மீனாட்சியின் நிறம் கறுப்பு என்பார்கள். மரகதப் பச்சை என்பார்கள். ஆனால் அபிராமியின் நிறம் கருஞ் சிவப்பு. எண்ணற்ற பாடல்களில் பட்டர் புலப்படுத்திச் செல்கிறார்.
’சிந்துர வண்ணப் பெண்ணே’ – என்றும்
‘மங்கலை செங்கலசம் முலையாள்
மலையாள் வருணச்
சங்கலை செங்கைச் சகல
கலா மயில்’ – என்றும்
‘பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும்’ – என்றும்
‘செப்பும் கனக கலசமும்
போலும் திருமுலை மேல்
அப்பும் களப அபிராம வல்லி’ – என்றும்
‘மாதுளம் பூ நிறத்தாளை’ – என்றும்
பக்தி மயமாகத் தென்படும் பாடல்கள் கொண்ட நூல் இது.
‘உமையும் உமையொரு பாகனும்
ஏக உருவில் வந்து இங்கு
எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தான்
இனி எண்ணுதற்குச்
சமயங்களும் இல்லை ஈன்றெடுப்பாள்
ஒரு தாயும் இல்லை’
என்று இனிமேல் தனக்குப் பிறவியே இல்லை என உறுதி கொள்ளும் பாடல்கள்.
‘ஆசைக் கடலில் அகப்பட்டு
அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லல் பட இருந்த
எனை நின் பாதம் என்றும்
வாசக்கமலம் தலைமேல்
வலிய வைத்து ஆண்டுகொண்ட
நேசத்தை என் சொல்லு வேன் ஈசர்
பாகத்து நேரிழையே’
என வாசிக்க வாசிக்கத் திகட்டாத தமிழ். நூறு பாட்டையும் சொல்லலாம் தான். எமக்குப் பொறுதி இல்லை. ஏதோ பக்தி என்ற நினைப்பில் புறக்கணித்து விடாமல் தமிழுக்காகத் திரும்பத் திரும்ப வாசிக்கப்பட வேண்டிய நூல் இது.
-o00o-
திருமுறைகள் பன்னிரெண்டு என வரையறை செய்து தொகுக்கப் பெற்றவற்றினுள், பதினோராம் திருமுறையில் சில அந்தாதிகள் அடங்கும். திருமுறைகள் என அடக்கப் பட்ட காணத்தினால், அவற்றை எவரும் சிற்றிலக்கியங்கள் எனும் பிரபந்தங்களாகக் கொள்வதில்லை. என்றாலும் அந்தாதி எனும் பகுப்பினுள் நாம் இங்கு குறித்துச் செல்வதில் தவறில்லை என்று கருதிகிறேன்.
சைவத் திருமுறைகள் பன்னிரண்டின் உள்ளும் ஒரேயொரு பெண்பாற் புலவர்தான். அவர் காரைக்கால் அம்மையார். அதுபோன்று பன்னிரு ஆழ்வார்களிலும் ஒரேயொரு பெண்பாற் புலவர் தான் ஆண்டாள். அதுவும் பொறுக்கவில்லை, வைணவ அறிஞர்கட்கு. ஆண்டாள் என்பவர் பெண் அல்ல, பெரியாழ்வாரின் பெண் பாவனை என்கிறார்கள். இங்கும் ஒரு பெண் இருந்து விட்டுப் போகட்டுமே என்ற பெரிய மனதில்லை.
காரைக்கால் அம்மையார் அருளிய மூத்த திருப்பதிகங்களும் திரு இரட்டை மணிமாலையும் அற்புதத் திருவந்தாதியும் தமிழுக்கு அவரது கொடைகள்.
பெண்கவிதை, பெண்மொழி எனத் தீவிரமாகச் செயல்படும் இளம் படைப்பாளிகள், காரைக்கால் அம்மையார், திருவில்லிபுத்தூர் ஆண்டாள், சங்க காலத்தும் பிந்திய காலத்தும் தோன்றிய ஒளவைகள். காக்கைப்பாடினியார், நச்செள்ளையார், வெள்ளிவீதி, நப்பின்னை, அள்ளூர் நன்முல்லை, ஆதிமந்தி, ஊண்பித்தையார், ஒக்கூர் மாசாத்தியார், காமக் கணிப் பசலையார் எனும் நப்பசலையார், காவற்பெண்டு, குமிழி ஞாழலார் நப்பசைலயார், குறமகள் இளவெயினி, தாயங்கண்ணியார், நக்கண்ணையார், நாமகள், பாரி மகளிர், நெடும்பல்லியத்தை, பெருங்கோப பெண்டு, பேய் மகள் இளவெயினி, பொன்மணியார், பொன் முடியார், மதுரை நல்வெள்ளியார், மாற்பித்தியார், மாறோக்கத்து நப்பசலையார், மூடத்தாமக் கண்ணியார், வருமுலையாரித்தி, வெண்ணிக் குயத்தியார், வெறி பாடிய காமக் கண்ணியார் போன்ற கவிஞர்களை வாசித்துப் பார்க்கலாம். இது ஒரு பரிந்துரையே அன்றி, இதற்கு உட்பொருள் ஏதும் இல்லை.
அற்புதத்திரு அந்தாதி
(தொடரும்)
அனைத்து பனுவல் போற்றுதும் கட்டுரைகளையும் படிக்க:பனுவல் போற்றுதும்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to சிற்றிலக்கியங்கள் 6(1) -அந்தாதி

  1. N.Rathna Vel சொல்கிறார்:

    அருமை ஐயா.
    உங்களது எழுத்துகளை படிக்கும்போது நிறைய கற்றுக் கொள்கிறேன்.
    நன்றி ஐயா.

  2. இந்தக் கட்டுரையை வாசிக்கும் யாவரும் நாஞ்சில்நாடனை தமிழாசிரியர் என்றே நினைப்பார்கள். அந்தளவு அற்புதமாக எழுதியிருக்கிறார். ஆனால், சில தமிழாசிரியர்களைத் தவிர மற்றவர்கள் தமிழுக்கு என்ன செய்திருக்கிறார்கள் என்று தான் யாருக்கும் தெரியவில்லை. நானும் இளமையில் அபிராமி அந்தாதியின் நூறுபாடல்களையும் வாசித்திருக்கிறேன். சில பாடல்கள் மனப்பாடமாகத் தெரியும். மதுரை நல்வெள்ளியார், வெள்ளி வீதியார் போல நானும் மதுரை வீதிகளையே பெயராக சூடிக்கொண்டேன்.
    -சித்திரவீதிக்காரன்.

  3. jeyajothi சொல்கிறார்:

    தாங்கள் சூலமங்கலம் சகோதரிகள் பாடியுள்ள அபிராமி அந்தாதியை மறந்தீர்களோ என்று நினைக்கிறேன் .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s