சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – பகுதி 5A

நாஞ்சில் நாடன்
முன் பகுதிகள்: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் 
சொல்வனம் பனுவல் போற்றுதும்
 
திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்
கடவுளர்களை, மற்றும் மக்களுள் மாண்புற்றவர்களைக் குழவிப் பருவத்தினராக்கி, அவர்தம் இளம் பருவத்தை, சுவைபடப் பாடுவது பிள்ளைத் தமிழ் என்றறிந்தோம். தமிழையே பிள்ளைத் தமிழ், காதல் தமிழ், வீரத் தமிழ், தத்துவத் தமிழ், முக்தித் தமிழ் எனப் பகுத்து விடலாம் போல. எவரோ ஒரு முறை சொன்னதைக் கேட்டேன்- தமிழ் எனும் புத்தகத்தில் பக்தி எனும் பக்கங்களை நீக்கி விட்டால் வெறும் இரண்டு அட்டைகள்தாம் மிஞ்சும் என. தமிழில் பக்தியை மட்டுமே கற்றவர் கூற்று எனத் தெரிந்து கொள்ள அப்போதே எனக்கு அறிவிருந்தது. என்றாலும், தமிழ் இலக்கியத்தில் பக்தியின் பங்கை மறைத்து விடுவதற்கும் இல்லை. பங்கென்று சும்மா சொல்லிவிட்டுப் போய் விடுவதற்கும் இல்லை அப்பெரும்பங்கை.
செம்பி நாட்டைச் சேர்ந்த சன்னாசிக் கிராமத்தில் வைணவப் பார்ப்பனக் குலத்தில் பிறந்தவர் பகழிக் கூத்தர். திருமால் மருகன் முருகையன் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் வாழ் செந்திலாதிபனின் மீது பாடப்பட்ட நூல் திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்.
தீபாவளி கழித்து கந்த சஷ்டி விரதம் இருந்து, முருகன் சூரபத்மனை வதம் செய்யும் நாளில் எனக்கிது எழுத நேர்கிறது. எங்களூரில் சூர சம்ஹாரம் என்று சொல்வதில்லை. சூரன் பாடு என்பார்கள். படுதல், படுகளம், பாடு என்றால் வதைப்படுதல். ‘பட்டனன் என்ற போதும் எளிதினிற் படுகிலேன் நான்’ என்பது கம்பன் மொழியில் இராவணன் கூற்று.
திருச்செந்தூரின் பெருமையை அருணகிரியாரின் மொழியில் சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் கேட்க வேண்டும்.

‘சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில்
தேங்கடம்பின்
மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம்
மாமயிலோன்
வேல்பட் டழிந்தது வேலையும் சூரனும்
வெற்பும் அவன்
கால்பட் டழிந்தது என்தலை மேலயன்
கையெழுத்தே’

‘செல்வம் என்பது சிந்தையின் நிறைவே’ என்று பாடிய குமரகுருபரர் பிள்ளைத் தமிழுக்கு சற்றும் குறைவில்லாதது பகழிக் கூத்தரின் திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ். இந்தப் பிள்ளைத் தமிழில் வேறு சில பருவங்களின் தமிழ் வளத்தைப் பார்க்கலாம். பகழிக் கூத்தரின் தமிழ் ஆளுமைக்கும் எடுத்துக் காட்டாக அமையும்.

1. ‘தார்கொண்ட மணிமார்ப செந்தில் வடிவேலனே
சப்பாணி கொட்டி அருளே
தரளம்எறி கரையில் வளைதவழ் செந்தில் வேலவா
சப்பாணி கொட்டி அருளே.
2. தவளமணி முத்தை அலை எரியும் நகர்க்கு அதிப
சப்பாணி கொட்டி அருளே’
3.. குறைகடல் அலையெறி திருநகர் அதிபதி
கொட்டுக சப்பாணி
4. சந்தப் பொறுப்பு இறைவ செந்தில் பதிக்குமர
சப்பாணி கொட்டி அருளே

என்பன சப்பாணி பருவத்து சில பாடல் வரிகள்.
முத்தம் எனில் முத்து எனும் பொருள் உண்டு. முத்து எனில் முத்தமிழ் என்றும் பொருள் உண்டு. பிள்ளைத் தமிழ் நூல்களின் ஐந்தாம் பருவம் முத்தப் பருவம். திருச்செந்தூர் முருகனின் முத்தத்துக்கு விலையில்லை, மற்ற எல்லா முத்துக்களுக்கும் விலையுண்டு எனப் பகழிக் கூத்தரின் பாடல் ஒன்று.

‘கத்தும் தரங்கம் எடுத்தெறியக்
கடுஞ்சூல் உளைந்து வலம்புரிகள்
கரையில் தவழ்ந்து வாலுகத்திற்
கான்ற மணிக்கு விலையுண்டு
தத்தும் கரட விகடதட
தத்திப் பிறைக்கூன் மருப்பில்விளை
தரளம் தனக்கு விலையுண்டு
தழைத்துக் கருத்து வளைந்தமணிக்
கொத்தும் சுமந்த பசுஞ்சாலிக்
குளிர்முத் தினுக்கு விலையுண்டு
கொண்டல் தகுநித் திலம்தனக்கு
கூறும் தரமுண் டுன்கனிவாய்
முத்தம் தனக்கு விலையில்லை
முருகா முத்தம் தருகவே
முத்தம் சொரியும் கடலலைவாய்
முதல்வா முத்தம் தருகவே.

கத்தும் கடலலை எடுத்தெறியும் கடும் சூல் உளைந்த வலம்புரிச் சங்குகள், கரையில் தவழ்ந்து, மணலில் சொரிந்த முத்துக்கு விலை உண்டு. தத்தி நடை பயிலும் மலை போன்ற மதம் பிடித்த யானையின், உன்மத்தம் பிடித்து விகடக் கூத்து ஆடும் யானையின், பிறைச் சந்திரன் போல் வளைந்திருக்கும் தந்தத்தில் விளையும் முத்துக்கு விலை உண்டு. தழைத்து, அழுந்தி வளைந்து, மணிக் கொத்தும் சுமந்த, பசிய நெல்லின் குனித்த முத்தினுக்கு விலை உண்டு. மேகம் தரும் நித்திலம் தனக்குக் கூறும் தரம் உண்டு. உன் கனிவாய் முத்தம் தனக்கு விலை இல்லை. முருகா முத்தம் தருகவே. முத்துக்களைச் சொரியும் கடல் அலைவாய் முதல்வா முத்தம் தருகவே!
பெரும்பாலும் முத்தைச் சொரியும், ஈனும் சங்குகளின் பேறுகால வலி பேசப்படுகின்றது, இத்தகு பாடல்களில். ‘கடும் சூல் உளைந்து வலம்புரிகள் கரையில் தவழ்ந்து வாலுகத்தில் கான்ற மணி’ எனும் போலும், ‘குவளைத் தடத்தின் மடை வாயில் குடக்கூன் சிறுமுள் பணிலம் ஒரு கோடி கோடி ஈற்று உளைந்து முத்தம் சொரியும்’ எனும் போதும் பகழிக் கூத்தர் சங்கினங்களின் பேறு வலியை உணர்ந்து பேசுகிறார்.
‘செத்துப் பிறக்கின்ற தெய்வங்கள் மணவாள’ என்று குமரகுருபரர் முத்துக் குமாரசாமிப் பிள்ளைத் தமிழில் முருகனை ஏற்றுவது போல, பகழிக் கூத்தர் ஏற்றும் பாடல்கள் பல உண்டு இதனுள். தமிழைக் காதலிக்கும் எவரும் பகழிக் கூத்தரின் தமிழில் மெய்மறந்து போவார்கள்.

வயலும் செறிந்த கதலிவன
மாடம் செறிந்த கதலிவள
மலர்க்கால் எங்கும் தேனின் நிரை
மாலை தோறும் தேனின் நிரை
புயலும் செறிந்த கனக வெயில்
புடையே பரந்த கனக வெயில்
பொதும்பர் தோறும் ஓதிமம் என்
புளினம் தோறும் ஓதிமம் செங்
கயலும் செறிந்த கண் கடையார்
கலவி தரும் போர்க் கண் கடையார்
கருணை புரியும் அடியாருள்
காதல் புரியும் அடியார் சீர்
முயலும் படிவாழ் திருச்செந்தூர்
முருகா முத்தம் தருகவே
மொழியும் சமயம் அனைத்தினுக்கு
முதல்வா முத்தம் தருகவே’

முதலில் அருஞ்சொற் பொருள் :
கதலிவனம் – 1. வாழை வனம்
2. கொடிக் கூட்டம்
தேனின் நிரை – 1. மது வரிசை
2. வண்டு இனம்
கனக வெயில் – 1. கல் நக எயில்
2. பொன் வெயில்
பொதும்பர் – சோலை
புளினம் – மணற்குன்று
கட்கடையார் – கடைக் கண் காட்டும் பெண்டிர்.
கலவி தரும் போர்க் கட்கடையார் – கலவி தரும் போரின் கண் பின்வாங்காதவர்.
சீர் – புகழ், கீர்த்தி.
இனி எனக்குத் தெரிந்த வகையில் பொருள் கூறுகிறேன்.
வயல்கள் எல்லாம் வாழை வனமாகச் செறிந்துளது. மாடங்களில் எல்லாம் கொடிகள் கூட்டமாகச் செறிந்துள்ளன. கொடி என்பதற்குப் பெண்கொடி எனவும் பொருள். மலர்க்கால்களில் எல்லாம் தேனின் வரிசை. மாலைகளில் எல்லாம் வண்டினம். புயல் மோதுகின்ற கற்கோட்டைகளின் இடையே பரந்த கனக வெயில். மென்மணற் குன்று எங்கும் அன்னப் பறவை, பொதும்பர் எனில் சோலை, சோலை தோறும் அன்னப் பறவை. செங்கயல் போன்ற கடைக்கண் பார்வை உடைய பெண்கள். அவர்கள் கலவி எனும் போர்களில் பின்னடைய மாட்டார்கள். இங்கு செங்கயல் என்பது காமத்தினால் சிவந்த கயல் போன்ற கண்கள் எனப்படும். கருணை புரியும் உன் அடியாரும் உன்மேல் காதல் புரியும் அடியாரும் புகழையும் கீர்த்தியையும் முயன்று வாழும் திருச்செந்தூர் முருகா, முத்தம் தருகவே! மொழியும் சமயம் அனைத்தினுக்கும் முதல்வா முத்தம் தருகவே! பேசப்படும், பயிலப்படும், ஒழுகப்படும் அத்தனை சமயத்துக்கும் முதல்வனே என்பது ‘செத்துப் பிறக்கின்ற தெய்வங்கள் மணவாள’ எனும் குமரகுருபரரின் வரியை நினைவுபடுத்தவில்லையா?
வாரானைப் பருவத்துப் பாடல்களில் மிகுந்த நயம் உடையவை ‘வளரும் களபக் குரும்பை முளை வள்ளிக் கணவா வருகவே’ என முடியும் பாடல்கள்.
இறைவனைக் காதலியாகவும் காதலனாகவும் பெண்பிள்ளையாகவும் ஆண்பிள்ளையாகவும் பாடுவது ஒரு மரபு. முன்பு, இஸ்லாமிய சுஃபி மரபுச் சித்தரான குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்களைப் பற்றி எழுதும்போது இத்தன்மை பற்றிப் பார்த்தோம். ஆண்மகவாக, பெண் மகவாக உருவகித்துப் பாடும்போது, கவிதையில் நேர்த்தியாகத் தொனிக்கும் பாவங்களும் மொழி அழகும் சிறப்புற அமைந்து விடுகின்றன.
வாரானைப் பருவத்துப் பாடல் ஒன்று, பாடலின் பருவம் பார்ப்பதற்காக:

‘இறுகும் அரைஞாண் இனிப் பூட்டேன்,
இலங்கு மகரக் குண்டலத்தை
எடுத்துக் குழியின் மீது அணியேன்
இனியன் முகத்துக் கேற்ப ஒரு
சிறுகும் திலதம தினித் தீட்டேன்
திருக்கண் மலர்க்கு மையெழுதேன்
செம்பொற் கமலச் சீறடிக்குச்
சிலம்பு திருத்தேன் நெரித்து விம்பி
முறுகு முலைப்பால் இனிது ஊட்டேன்
முகம் பார்த்திருந்து மொழி பகரேன்
முருகா வருக சிவசமய
முதல்வா வருக திரை கொழித்து
மறுகு மலைவாய்க் கறை சேர்ந்த
மழலைச் சிறுவா வருகவே
வளரும் களபக் குரும்பை முலை
வள்ளிக் கணவா வருகவே’

இதில் சில நயங்கள் சொல்வதற்கு உண்டு. வளரும் குழந்தைக்கு வளர வளர அரைஞாண் இறுகும். அதனைத் தளர்த்தி மறுபடி பூட்டுவது தாயின் வேலை. ‘இறுகும். அதனைத் தளர்த்தி மறுபடி பூட்டேன்,” என்றுரைக்கும் நயம். உன் முகத்துக்கு ஏற்ப சிறு குங்கும திலகம் தீட்டேன் என்பதன் நயம், ஓரோர் முகத்துக்கு ஏற்ப தாயார் கோவிப் போட்டோ, சிறு புள்ளிப் பொட்டோ, அர்த்த சந்திர வடிவத் திலகமா, நெடிதாய்த் தீட்டும் வரையோ வைப்பார்கள். திலகத்தின் வடிவம் முகத்தின் வடிவத்துக்கு ஏற்ப அமைவது. பால் முறுகுவது அதனைக் காய்ச்ச அடுப்பில் ஏற்றிச் சூடாக்கும்போது மட்டுமே என நினைத்திருந்தோம். ஆனால் இங்கு ‘நெறித்து, விம்மி, முறுகு முலைப்பால்’என்கிறார் புலவர். குழந்தைக்கு பாலூட்டும் நேரம் நெருங்க, பால் சுரக்க, முலைகள் நெறிந்து, விம்மி, உடற்சூட்டில் முலைப்பால் முறுகுகிறது என்பது நயம். குரும்பை என்பது தெங்கின் இளம்பருவத்துக் காய். கொச்சங்காய் என்போம் நாஞ்சில் நாட்டில். கொச்சு எனில் சிறிய எனப் பொருள். இளநீர் பிடிப்பதற்கும் முந்திய பருவம். எலுமிச்சை அளவிலான காய். அது குரும்பை. ‘வாரிய தெங்கின் குரும்பை’ என்பது முற்றுப் பெற்ற வடிவம் அல்ல. வளரும் தன்மை கொண்டது. எனவே, ‘வளரும் களபக் குரும்பை முலை வள்ளிக் கணவா’ என்கிறார் புலவர்.
மருதாசலக் கடவுள் பிள்ளைத் தமிழ்
தொடர்ந்து கட்டுரையை படிக்க : http://solvanam.com/?p=17651

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – பகுதி 5A

  1. rathnavel சொல்கிறார்:

    அருமை ஐயா.
    மிக்க நன்றி.

  2. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    மாண்புற்றவர்களைக் குழவிப் பருவத்தினராக்கி, அவர்தம் இளம் பருவத்தை, சுவைபடப் பாடுவது பிள்ளைத் தமிழ்—என்ன ஒரு இனிமை கற்பனை ,தமிழில் …கொஞ்சும் அழகு தமிழ் கேட்க, கடவுள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்..அற்புதமான பதிவு..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s