சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்

நாஞ்சில் நாடன்
செந்தமிழ்க் காப்பியங்கள் எனும் எனது முதற் கட்டுரையைத் தொடர்ந்து எழுதப்படுவது இது. இக்கட்டுரைகளின் மூலம், நான் பழந்தமிழ் இலக்கியங்களை எல்லாம் எழுத்தெண்ணிப் படித்தவன் எனும் தீர்மானத்திற்கு வந்து விட வேண்டாம். நான் கற்ற அல்லது கற்கும் சிலவற்றை, ஒரு அறிமுகம் என்ற அளவில் எடுத்துக் கொண்டால் போதுமானது. மேலும் எனது தகவல்கள் முழுமையற்றவை. தமிழில் இவையெலாம் உள என்பதற்கான கட்டுரைகளே இவை.
தமிழில் பிரபந்தங்களைத் தொண்ணூற்றாறு வகையாகப் பிரிக்கிறார்கள். இந்தத் தொண்ணூற்றாறுக்கும் வகை மாதிரிக்கான பிரபந்தங்கள் எழுதப்பட்டனவா, இன்னும் இருக்கின்றனவா எனும் தகவல்கள்கூட என்னிடம் இல்லை. நான் அறிந்து வைத்திருக்கும் வகைகள் ஆவன: கோவை, தூது, உலா, பரணி, கலம்பகம், காதல், மடல், பள்ளு, குறவஞ்சி, பிள்ளைத் தமிழ், அந்தாதி முதலானவை.
அவற்றுள்ளும் கோவை எனில் பல, தூது எனில் பற்பல நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. அவையெல்லாம் இன்று நூல் வடிவில் உள்ளனவா, மறுபதிப்புக் கண்டனவா, காணப் பெறுமா, வாசிக்கப்படுகின்றனவா, பாடத்திட்டங்களில் உண்டா என்பதெல்லாம் தமிழன்னைக்கே தெரிந்த மர்மம்.  என்றாலும் நான் கேள்விப்பட்ட, வாசித்த, அனுபவித்த சிலவற்றை மட்டும்- சாம்பிள் சர்வே போல- உங்களுக்கு அறிமுகப்படுத்துவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். எங்கோ ஒரு புள்ளியில் இருந்து நாம் நம் வாசிப்பை என்றேனும் தொடங்கித்தானே ஆக வேண்டும்!
கோவை
கோவை எனில் கோயம்புத்தூரின் சுருக்கம் அல்ல- கோர்க்கப்படுவதால் கோவை. இஃதோர் அகத்துறை இலக்கியம். காதலன், காதலி இருவரின் உள்ளத்தில் கிளைத்து ஓங்கி வளரும் இன்ப இலக்கியம் இது. கட்டளைக் கலித்துறைப் பாடல்களால் அமைவது. 400 பாடல்கள் இருக்க வேண்டும்.
“இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்போடு புணர்ந்த ஐந்திணை’
எனும் தொல்காப்பிய சூத்திரத்துக்கு இயைந்து எழுதப்பட்டது கோவை.
கோவை நூல்களில் தலைசிறந்தது மாணிக்கவாசகர் யாத்த திருச்சிற்றம்பலக் கோவை எனும் திருக்கோவையார் என்றும் இதற்கு மட்டும்தான் உயர்வு குறித்த ‘ஆர்’ விகுதி என்றும் சொல்கிறார்கள். கொட்டீச்சுரக் கோவை, திருவாரூர்க் கோவை, திருவெங்கைக் கோவை, என வேறு சில கோவை நூல்களையும் குறிப்பிடுகிறார்கள். குறிப்பாகச் சில கோவை நூல்களை மட்டும் பார்ப்போம்.
அம்பிகாபதிக் கோவை
இதன் பாட்டுடைத் தலைவர் இறைவன். அரசன் அல்லன். ஆசிரியர் பெயர் அறியப் பெற்றிலோம். 564 பாடல்கள் கொண்ட இந்த கோவை நூலுக்கு வித்வான் மீ. பொன். இராமநாதன் செட்டியார் உரை எழுதியுள்ளார். கம்பர் மகன் அம்பிகாபதி எழுதிய கோவை என்பதால் இதனை அம்பிகாபதிக் கோவை என்பாருளர். ஆனால் அதற்கு ஆதாரம் இல்லை என்கிறார்கள். அம்பிகாபதி என்ற பெயருள்ள ஒருவர் 17-ம் நூற்றாண்டுக்கு முன்பு பாடி இருக்கலாம் என்கிறார்கள். கம்பரின் காலமோ 9-ம் நூற்றாண்டின் பிற்பகுதியாகும்.
என்னிடம் இருப்பது சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரின் 1952-ம் ஆண்டுப் பதிப்பு. பதம் பிரித்து எழுதப்படாத பல்லுடைக்கும் பாடல்கள்.
இன்று மேற்கத்திய நாடுகளிலும், ஏன் பாரதப் பழம்பெரும் நாட்டிலும்கூட, ஆடவரும் பெண்டிரும், வெற்றுடம்பில் மார்பு, முதுகு, தோள், இடுப்பு, வயிறு, தொடை என விலங்குகள், மீன்கள் பாம்புகள், பூக்கள், கோடிகள் என சாயத்தால் வரைந்து கொள்ளும் வழக்கம் உளது. ஆடைபோல் அவற்றை மாத்திரமே வரைந்து முழு நிர்வாணம் காட்டி மேல்நாட்டில் நடமாடுவது போல் இங்கும் நடமாட அதிகக் காலம் காத்திருக்கத் தேவையில்லை. என் காலத்திலேயே கண்ணாரக் கண்டு குளிர்ந்து அடங்கலாம். இவ்விதம் மேனியில் பெண்கள் வரைவதைத் தொய்யில் எழுதுவது என்கின்றனர். இதனை சங்க இலக்கியம் பேசுகிறது. அம்பிகாபதிக் கோவை, பாடல் – 444, “தோளில் கரும்பு, முலையில் கொடி விடு தொய்யிலும்’ என்கிறது. மகளிர் தம் தோளிலும் கொங்கைகளிலும் கரும்பு வில் போன்றும் பூங்கொடி போன்றும் குங்குமக் குழம்பில் தொய்யில் எழுதி இருந்தனர் என்பது பொருள்.
அம்பிகாபதி கோவையின் காலம் 17-ம் நூற்றாண்டுக்கு முந்தியது என்று சொல்லப்பட்டாலும் மொழியின் செறிவு, தன்மை, தொன்மை நோக்கினால் பத்தாம் நூற்றாண்டுச் செய்யுட்களே என மலைக்க வைக்கின்றன.
சில உவமைகள் புதிதாக நமக்குப் புலப்படுகின்றன. “வல்லினும் நல்ல வன முலையாள்’ என்று ஒரு வரி. உரையாசிரியர் எழுதுகிறார், வல் என்பது சூதாடும் கருவி என்றும் அது முலைக்கு உவமை என்றும். சில பொருள் கொளல்கள் தமிழின் விந்தையைப் புலப்படுத்துகின்றன. ‘முலை முற்றிய மென் முகிழ் நகை மானுக்கு’ (பாடல் – 362) எனும் ஒரு வரியை இரண்டு விதமாகப் பொருள் கொள்ளுகின்றார் உரையாசிரியர். முலை எனும் சொல்லை முல்லை எனும் சொல்லின் தொகுத்தல் விகாரமாகக் கொண்டு முகிழ் எனும் சொல்லை முலை என்னும் முதற்சொல்லோடு சேர்த்து, மு(ல்)லை முகிழ் முற்றிய மென்னகை மானுக்கு என்று கொண்டு, முல்லை முகையை ஒத்த மெல்லிய பற்களை உடைய மான் போன்ற தலைவியை என்பது ஒரு பொருள். முற்றிய கொங்கைகளை உடைய, மான் போன்ற தலைவியை என்பது ஒரு பொருள். முற்றிய கொங்கைகளை உடைய, மெல்லிய, முகிழ்க்கும் நகைப்பினை உடைய பெண்மானாகிய தலைவி என்பது இன்னொரு பொருள்.
முத்தொள்ளாயிரத்தின் சிறப்பான வெண்பாக்களில் ஒன்று: கடற்கரை அல்லது ஆற்றங்கரை மணலில், தாழை மரப் புதர் நிழலில் அல்லது புன்னை மர நிழலில் அமர்ந்து, தலைவனைப் பிரிந்த தலைவி, ஆருடம் கணிக்கிறாள், தலைவனைக் கூடுவேனா, கூட மாட்டேனா என்று. ஆருடம் என்பது கண்களை மூடி, ஆட்காட்டி விரலால் மணலில் வட்டம் வரைவது. வட்டம் கூடினால் தலைவனைச் சேருவேன், கூடாவிட்டால் சேரமாட்டேன் என்பது கல்பனை. ஆனால் பாதி வட்டம் வரைந்த பிறகு, தலைவிக்கு ஐயம் எழுகிறது. ஒரு வேளை வட்டம்- கூடல் கூடாமற் போனால் என் செய என! எனவே கூடல் இழைப்பதைப் பாதியில் நிறுத்தி விடுகிறாள்:
‘கூடல் பெருமானைக் கூடலார் கோமானைக்
கூடப் பெருவேனேல் கூடு என்று – கூடல்
இழைப்பாள் போல் காட்டி இழையாது, இருக்கும்
பிழைப்பில் பிழைபாக்கு அறிந்து’ (முத்தொள்ளாயிரம் 20)
என்பது பாடல்.
அது போல் அம்பிகாபதிக் கோவையில் ஒரு பாடல் – 296.
‘முளைக்கும் பிறையை முனியும் திருநுதல் முத்து அரும்ப
விளைக்கும் பசலை விழி இணை காட்ட விடாத வண்டர்
கிளைக்கும் தெரிவரும் கேதகை நீழலின் கீழிருந்து
வளைக்கும் சுழிக்கும் அழிக்கும் ஒண் கூடல் வளைக்கை கொண்டே’
முளைக்கும் கீற்றுச் சந்திரனை முனிந்து, நெற்றியில் முத்துப்போல் வியர்வை அரும்ப, இரு விழிகளும் பசலை நோய் விளைந்ததைக் காட்ட, வண்டல் எனும் மகளிர் விளையாட்டை ஆட்டும் தோழியர் கூட்டம் அறியாதபடி, தாழைப் புதரின் கீழ் அமர்ந்து, தலைவி கூடல் இழைப்பதற்காக வட்டம் வளைத்துச் சுழிப்பாள், பின்பு கூடாதோ என அழிப்பாள், வளையல் அணிந்த தன் கையால் என்பது பொருள்.
அற்புதமான பாவங்கள் கொண்ட நூல் இது. பரத்தையின் பொருட்டுப் பிரிந்த தலைவன், வீடு வந்து தன் மகவைப் புல்லும்போது, தன் மகனைத் தலைவி கடிந்து கொள்வதைப் போல் ஒரு பாடல். தன் மகனைத் தந்தை தழுவும்போது, மகனின் மார்புச் சந்தனம் தலைவன் மார்பில் படிந்து, பின்னர் தலைவன் பரத்தையைத் தழுவும்போது, அந்தச் சந்தனம் பரத்தையின் மார்பிலும் சிதைந்து படியும், எனவே தகப்பனை ஏன் தழுவினாய் எனத் தன் சிறுமகனைக் கடிந்து கொள்ளும் பாடல். அகத்துறையின் அதிமதுரப் பாடல்களில் ஒன்று இது. பாடல் எண் 504.
‘மைவார் குழல்மட மங்கையர் தங்கள் வதுவை உன்னிக்
கைவாரணம் கடவும் பெருமானைக் கலுழ்ந்து அழைத்து உன்
செவ்வாய் அமுதம் அளைந்த செஞ்சாந்தம் சிதையப் புல்லி
இவ்வாறு செய்தது எல்லாம் அவர் மேனியில் ஏறுவதே’
முழு கட்டுரையும் படிக்க:  சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்
எஸ் ஐ சுல்தான்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்

  1. N.Rathna Vel சொல்கிறார்:

    முழுவதும் படித்தேன்.
    ஓரளவு புரிந்து கொண்டேன்.
    நன்றி ஐயா.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s