நேர்நிரை -ஓர் விளக்கம்- பெருமாள் முருகன்

நாஞ்சில்நாடன் கதைகள் தொகுப்பில் ஒரு சிறுகதை உள்ளது – நேர்நிரை. ரெண்டு மூணு தரம் படிச்சி பாத்திட்டேன். முழுமையாக புரிந்து கொள்ளமுடியவில்லை. எதையோ தவறவிடுகிறேன்.
என்னுடைய சந்தேகங்கள்/குழப்பங்கள் :
1. கங்காதரன் பால்ராஜை வெறுப்பது எதனால். அதற்கான காரணம் கதையில் எங்கு உணர்த்தப்பட்டுள்ளது.?
2. பெயர்களை வைத்து கங்காதரன் சாதிய காரணங்களுக்காக பால்ராஜை வெறுப்பதாக எடுத்துக் கொள்ளலாமா ?
3. தலைப்பிற்கும் கதைக்கும் உள்ள தொடர்பு.
யாராவது இக்கதையை விளக்க முடியுமா ? …நன்றி …….பிரவீன்
பிரவீன்,
 கதைத் தலைப்பான நேர்நிரை என்பது நம் மரபான யாப்பிலக்கணத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. நாஞ்சில் நாடன் மரபிலக்கிய ஈடுபாடு மிக்கவர் என்பதால் அவரது பல தலைப்புக்கள் மரபிலக்கிய இலக்கணத் தொடர்களாக அமையும். என்பிலதனை வெயில் காயும், நஞ்சென்றும் அமுதென்றும்  ஒன்று ஆகியவை சட்டென நினைவு வருபவை.
நேர்நிரை என்பதில் நேர்- சமம் எனப் பொருள்படும். நிரை-வரிசை என்று பொருள். அட்டவணை போடும்போது கட்டம் ஒன்றை அடுத்து ஒன்று வருவதை நேர் என்றும் கட்டம் ஒன்றின் கீழ் ஒன்று வருவதை நிரை என்றும் கூறலாம். நேர்நிரை என்பதை இன்றைய தமிழில் எளிமைப்படுத்திச் சொன்னால் ‘சரிசமம்’ எனலாம். சரிநிகர், சரிநிகர் சமானம் என்றெல்லாம் விரிக்கலாம்.
இந்தக் கதை முரண்பட்ட இருவரைப் பற்றிப் பேசுகிறது. முதல்பகுதி பால்ராஜின் உழைப்பு சார்ந்த அவனது வாழ்க்கை தொடர்பானது. இரண்டாம் பகுதி கங்காதரனின் செல்வந்த, ஊதாரி வாழ்க்கை தொடர்பானது. இருவரும் ஒன்றாகப் படித்தவர்கள் என்றபோதும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்றபோதும் சிந்தனையிலும் செயலிலும் முரண்பாடுகள் பல. அனேகமாகச் சாதியும் ஒன்றுதான். இல்லையென்றால் இத்தனை உரிமையோடு பால்ராஜ், கங்காதரனை அணுக மாட்டான்.
கங்காதரனின் பார்வையில் வெறும்பயலாகத் தோன்றும் பால்ராஜைத் தனக்குச் சமமாகச் சிறிதும் கருத முடியவில்லை அவனால். அதைப் புறக்கணிப்பின் மூலமாக வெளிப்படுத்துகிறான் அவன். இயல்பான குணங்களோடு இருக்கும் பால்ராஜ் அவனது புறக்கணிப்பைத் தாமதமாகவே உணர்கிறான். கங்காதரன் பால்ராஜைப் புறக்கணிக்க அல்லது தனக்குச் சமதையாகக் கருதாமைக்குக் காரணம் கதையில் விவரிக்கப்படும் இரண்டு வாழ்க்கைக்குமான முரண் தான். எவ்வளவு நெருங்கியவர்களாக இருந்தபோதும் நம் வாழ்க்கை முறைக்கும் கௌரவம் என்று நாம் கருதும் விதத்திற்கும் ஒத்து வருபவர்களேயே இணைத்துக்கொள்கிறோம். மற்றவர்களை அசட்டை செய்வதுதானே நடக்கிறது? அதைவிட வலுவான காரணம் என்ன வேண்டும்?
கதையின் முடிவை நான் மிகவும் உணர்ந்து அனுபவித்தேன். காப்பியை அப்படியே வைத்துவிட்டுக் கங்காதரன் செல்கிறான். அதை எடுத்துப் பால்ராஜ் குடிக்கிறான். பொருளை வீணாக்காத அவன் வாழ்க்கைச் சூழல் மிகவும் பொருந்துகிறது. பால்ராஜின் வாழ்க்கையை நாஞ்சில் நாடன் விவரிக்கும் விதத்திற்கு மிகவும் சரியான முடிவு இதுதான்.
மேலும் விவாதிக்க வாய்ப்பிருந்தால் பேசலாம்.
அன்புடன்,
பெருமாள்முருகன்
கதையை படிக்க: நேர்நிரை

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to நேர்நிரை -ஓர் விளக்கம்- பெருமாள் முருகன்

  1. nathnavel சொல்கிறார்:

    நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.
    http://rathnavel-natarajan.blogspot.com/

  2. Mohamed Meera Sahib சொல்கிறார்:

    சட்டென்று புரிந்துகொள்ளக்கூடிய விளக்கம். நான் கூட சாதிய காரணங்களாக இருக்குமோ எண்ணினேன. அது இல்லை என்பதை தெளிவாக விளக்கி, பொருளாதார ஏற்றத் தாழ்வுகள்தான் என்பதை அழகாக விளக்கியமைக்கு நன்றி.

  3. Suresh சொல்கிறார்:

    இது சாதி ஏற்றத்தாழ்வு குறித்த கதையாகத்தான் நான் பார்க்கிறேன்.
    அவர்களின் பெயர்களிலேயே சாதி தெரிந்துவிடுகிறது.
    பேரின்பம், பால்ராஜ் போன்ற பெயர்கள் நாஞ்சில் நாட்டில் நிலமுடைய அதிகாரமிக்க சாதியினர் வைத்து கொள்வதில்லை.
    மேலும் பால்ராஜ், பேரின்பம் போன்ற பெயர்கள் கிறித்தவர்களிடத்தில் தான் பெரும்பாலும் உண்டு. நாஞ்சில் நாட்டில் கிறித்தவத்திற்கு மாறியவர்களில் தாழ்த்தபட்டவர்கள் அதிகம் .
    இது வெள்ளாளர்( கங்காதரன்) – சாம்பவர்( பால்ராஜ்) ஆகிய சாதியினரின் கதையாகத்தான் எனக்கு படுகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s