காமம் செப்பாது…..முழுதும்

நாஞ்சில் நாடன்
பாசம் நேசம் பரிவு அன்பு நட்பு
பிரியம் பிணைப்பு கனிவு கரிசனம்
யாவற்றினுள்ளும் சுருண்டு கிடக்கும்
காமம் என்னும் ராஜ வெம்பாலை
நலிந்து வசமாய் வாய்த்த வட்டம்
பிரிய ஊக்கம் அற்று
படம் விரித்து கூசி நின்றது
 
காதல் எனும் சொல்லுரைக்க
பிளவு பட்ட நா நீட்டித் துழாவும்
சரசரவெனச் சுருள் பிரியும்
இழுத்து வாங்கிய காற்றில் பை நிரப்பிப்
படம் எடுக்கும்
 
காமத்துப் பாம்பில் வாலிபமென்ன வயசென்ன
ஆணென்ன பெண்ணென்ன 
அழகென்ன அதிரூபமென்பதென்ன 
பரமசிவன் கழுத்தில் படமெடுத்து ஆடுவது
உடலா மனமா?
 
காமம் அணங்கும் பிணியும் அன்றென்றான்
குறுந்தொகைப் புலவன் மிளைப் பெருங்கந்தன்
 
காமம் கையறு நிலையல்ல கை மீறிய நிலை
 
பாரதியைத் திரும்பவும் படியுங்கள்
காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்
கானமுண்டாம் சிற்ப முதற் கலைகள் உண்டாம்
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே
காதலினால் சாகாமல் இருக்கக் கூடும்
கவலை போம் அதனாலே மரணம் பொய்யாம்
 
காதல் பட்டினத்தடிகளின் சீடர் பத்ரகிரி எனில்
காமம் அவருடன் உறையும் நாய்
பிறவிப்பெருங்கடல் நீந்திக் கடப்பதும்
காமக் கடும்புனல் துழா அய்க் கரை சேர்வதும்
ஒரு கணக்கில் ஒன்றுதான்
சிற்றின்பம் என்பது பேரின்பம்
பேரின்பம் என்பதோர் சிற்றின்பம்
 
தன்பாற் காமம் எதிர்பாற் காமம்
கூடா ஒழுக்கம் கைக்கிளை பெருந்திணை
என இறுக்கிக் கட்டி இற்செறிந்தாலும்
கண்ணி தெறித்துக் கதிக்கப் பாய்வது காதல் வேகம்
காதலும் காமமும் உயிரும் விடுக்கும்
உயிரும் கொடுக்கும்
 
ஆதலினால் மானுடரே காதல் செய்வீர்.
 
தட்டச்சு : பாலா. சிங்கப்பூர்
எஸ் ஐ சுல்தான்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கவிதைகள், பச்சை நாயகி and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to காமம் செப்பாது…..முழுதும்

  1. Nalliah Thayabharan சொல்கிறார்:

    “ஆதலினால் காதல் செய்வீர்”

    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் காதல் எங்கள் மத்தியில் இருந்தது. பின்னர் குழந்தைத் திருமணம் நடைமுறைக்கு வர, எங்கள் மத்தியில் காதல் அருகிவிட்டது. இன்று நாங்கள் காதல் அற்றவர்களாக மாறிவிட்டோம். “” என அறை கூவியவன் பாரதி.

    ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன், அரசாட்சிகளின் அடித்தளமான உறுதியான சமூக அடுக்கதிகாரம், சாதி சார்ந்ததாக மாறிவிட்டது. இந்தியாவில் சாதி அதிகாரமும், சாதிப் பிரிவினையும், படு மோசமாக இருந்தன. சாதி அடையாளங்களை மீறுவது பலமாகத் தடுக்கப்பட்டு, அதற்காகவே குழந்தை வயதில் கல்யாணம் என்பது நடைமுறையாகி, இரண்டாயிரம் வருடங்களாக நாங்கள் காதல் என்றால் என்னவென்று தெரியாது வாழ்கின்றோம். இதனால் எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் இதயங்கள் இணையாது வெறும் உடல்கள் மட்டும் இணைந்த உடலுறவு மட்டுமே.

    ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தமக்குப் பிடித்த துணையை, தாமே தேடிக் கொள்வதுதான் உண்மையான காதல். வாழ்நாள் பூராக நீடிக்கும் காதல் உறவைத் தேடிக்கொள்ள கடந்த இரண்டாயிரம் வருடங்களாக எங்களுக்கு தடை போடப்பட்டுள்ளது.

    கல்யாணப் பொருத்தத்தில் சாதி, பணம், சொத்து, அழகு, கல்வியறிவு, பதவி என பலவற்றை பார்த்த நாங்கள், கல்யாணம் செய்ய விரும்புபவர்கள் உண்மையாக ஒருவரை ஒருவர் விரும்புகிறார்களா? என்று பார்த்தது கிடையாது. ஒருவரை ஒருவர் விரும்புவதற்கு, ஒருவரோடு ஒருவர் பழகாமல் விருப்பம் வரவும் முடியாது. எங்கள் பாரம்பரிய கல்யாணங்களில் கழுத்தில் தாலி ஏறிய பின்னர்தான் கணவன் மனைவியை ஒருவரோடு ஒருவர் பழக அனுமதிக்கின்றோம். ஒரு ஆணும் பெண்ணும் தமக்கிடையே அன்பைப் பகிருந்தோறும், இருவரும் நெருங்கிப் பழகுந்தோறும், உள்ளத்தையும் அன்பையும் பகிர்ந்து கொள்வதால் வளரும் ஓர் உறவுதான் உண்மையான காதல்.

    எங்கள் எண்ணங்களோடு இணைவு இல்லாத ஓருவரோடு, சில நிமிடங்களுக்குப் பின் எதையுமே பேசவே முடிவதில்லை. அப்படி இணைவு இல்லாத ஒருவருடன் கல்யாணம் எப்படி வருடக் கணக்கில் தொடர முடியும்?

    பகிர்ந்துகொள்ள ஒரு பொதுத் தளம் இல்லாத நிலையில், நம் மத்தியில் கணவன் மனைவிக்கிடையில் வெறுமையான உரையாடல்களுடன் எங்கள் கல்யாணங்கள் எல்லாம் வெறும் ஒப்புக்கு போலியாக வெறும் சம்பிரதாயங்களுக்கும் கடமைக்கும் கணவன் மனைவி எனக் குறுகி, இறுதி வரை தொடர்கின்றன.

    கல்யாணமாகி கொஞ்சக் காலம் சென்ற பின் எங்கள் கணவன் மனைவிக்கிடையில் “சாப்பாடு தயாரா?”, “பிள்ளைகள் என்ன சாப்பிட்டார்கள்?” என சில சொற்களுக்கு மேல் அவர்களுக்கிடையில் உரையாடும் குடும்பங்கள் மிக மிக அரிது.

    காதல் என்பது ஒருநாள் விடயமல்ல. ஒவ்வொரு நாளும் காதல் உயிர்ப்போடு இருக்கவேண்டும். ஒருபோதும் வற்றாத ஜீவநதி அன்பு மட்டும்தான். உண்மையான காதலில்தான் அன்பு இருக்கும். எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவதும், குதர்க்கமாகப் பேசுவதும், குத்திக்காட்டுவதும், போலியான உறவுகளில்தான் இருக்க முடியும். கல்யாண வாழ்வில் காதல் இல்லாத காரணத்தால் பல ஆண்கள் விபச்சாரிகளை தேடிப்போனார்கள். நாங்கள் பெரும்பாலும் எங்கள் நண்பர்களோடுதான் மனம்விட்டு பேசுவோம்.
    கணவன் மனைவிக்கிடையில் மனம் விட்டுப் பேசி காதல் வளராதலால், வாழ்க்கை பூராக காதலுக்கான நீங்காத ஏக்கத்துடன், தொலைக்காட்சியிலும், கணணித் திரையிலும், கதை புத்தகங்களிலும் வெறும் கற்பனையில் காதலை பார்த்துவிட்டு, நாங்கள் மரணித்துப் போய்விடுகின்றோம்.
    இறுகிப்போன எங்கள் கலாச்சாரத்தில், இன்னமும் காதல் செய்வது தடை செய்யப்பட்ட ஒன்றாக இருப்பதனாலேயே, அது இரகசியமானதாகவும், மற்றவர்களால் வேவு பார்க்கப்படும் ஒரு நிகழ்வாகவும் இருக்கின்றது. இன்னமும் உண்மையான காதல் என்றால் என்னவென்று எங்களுக்கெல்லாம் தெரியாததால் ஒரு ஆணும் பெண்ணும் தற்செயலாக சற்று அருகில் பழக நேர்ந்தாலே அதனை காதல் என எண்ணி, கல்யாணம் செய்து கொள்கின்றார்கள். இதனால் காதலை நிதானமாக அணுக முடியாத நிலையில், கண்டவுடன் ஏற்பட்ட வெறும் கவர்ச்சியே, கல்யாணமாக நிறைவேறி பின்னர் தீராத பிரச்சனைகளாக இறுதி வரை தொடர்கின்றன.
    காதலை சரிவர அணுகவும், நிதானமாக முதிர்ச்சியுடன் எதிர்கொள்ளவும், தேவையான அனுபவத்திற்கு காதலை சாதாரணமாக அணுகும் பாசத்தையும், நேசத்தையும் பெருக்கிக்கொள்ளும் கலாச்சாரம் தேவை. காதலை சாதாரணமாக அணுகும் கலாச்சாரம் ஆரோக்கியமான சமூகங்கள் மத்தியில் இருக்கின்றது. பொருத்தமான கணவன் மனைவி உறவுகளே நிறைவான ஆரோக்கியமான ஒழுக்கமான சமூகங்கள் உருவாக வழிசமைக்கும்.

    – நல்லையா தயாபரன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s