தாலிச்சரண்

நாஞ்சில் நாடன்
நாகமாகச் சீறியது இரு கை விரல்கள் பிடித்துத் தொங்கிய பொன்னின் தாலி. உலகில் மிகக் குறைந்த நபர்கள் பங்கேற்ற தாலிகட்டுக்கள் அதற்கு முன்பும் நடந்திருக்கும். பின்பும் நடக்குமாக இருக்கும்.
கிழக்குப் பார்த்து விளக்கேற்றி வைக்கப்பட்டிருந்தது.
 கிழக்கென்பது அனுமானம் தீர்மானித்தது. காங்கிரீட் அடுக்குப் பெட்டிகளுக்குக் கிழக்கும் மேற்கும் என்பது உழக்கில் கிழக்கும் மேற்கும் போல. ஆனால் வாஸ்து புரோகிதர்கள் உழக்கிற்குள்ளும் ஈசானமூலை, கன்னிமூலை, அக்னிமூலை என வாய்ப்பாடு சொல்வார்கள்.
 பிள்ளையார் பிடிக்க பசுமாட்டுச் சாணம் வேண்டும். கிடேரியானால் சாலவும் நன்று. வேண்டுமானால் நகரெங்கும் கேட்பார் கேள்வி இன்றியும் ஓட்டுவாரும் மேய்ப்பாரும் இன்றியும் சேணமும் கடிவாளமும் இன்றியும் தள்ளாடித் திரியும் கிழட்டுக் குதிரைகளின் லொத்திகள் கிடக்கும் அங்காங்கே.  எருமைத் தொழுவங்களில் கோரேகாவ், ஜோகேஸ்வரி தாண்டிப் போனால் மழை பெய்யும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்கள் அன்றிக் குளிக்காத எருமைகளின் சாணம் கிடைக்கலாம். கிராமத்து பசுமாடுகளின், அரைத்து உருட்டிய எள்ளுத் துகையல் போல கெட்டிச் சாணமாக இராது அது. ஓட்டல் கழிவு இலைகள், சந்தைக் குப்பை, பாலிதீன் பைகள், சாக்குப் படுதாக்கள், வால் போஸ்டர்கள், மக்காச்சோளத் தாள்கள், முட்டைக்கோசு, பூக்கோசு கழிவு இலைகள், தின்று செரித்தும் செரியாமலும் கெட்டியாகக் கரைத்த கம்மங் கூழ் போலக் கழியும் எருமைகள். உருட்டி வார முடியாது. அகப்பையால் கோரி வாரலாம். அதற்கும் மாட்டுக்காரப் பையாக்கள் தயவு வேண்டும்.
 பிள்ளையார் பிடிக்கும் அளவுக்கு வீட்டில் மஞ்சள் பொடி இருக்காது. எந்த மாவானால் என்ன என்று ‘மௌனாத் பஞ்சன் வீர் ஹனுமான் சக்கி’யில் அரைத்த கோதம்பு மாவு கணிசமாக இருந்தது. வெல்லப் பிள்ளையார், படிகப் பிள்ளையார், கற்கண்டுப் பிள்ளையார் போல, அது கோதம்பு மாவுப் பிள்ளையார்.  தும்பு வாழை இலையில் ஓரத்தில் உட்கார்ந்திருந்தார். ஒரு சீப்பு மோரீஸ் வாழைப்பழம், ஊதுபத்தி, சின்ன அலுமினியத் தட்டில்  எரிந்துகொண்டிருந்த சூடச்சதுரங்கள். உடைத்து மலர்ந்து கிடந்த தேங்காயில் ஊதுபத்திச் சாம்பல் கனிந்து விழுந்தது.

இன்னும்:  “தீதும் நன்றும்” 7. தாலி
தட்டச்சு உதவி: பிரவீன்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், எழுத்தாளர்களின் நிலை, கல்யாண கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள், பம்பாய் கதைகள், விகடன் கதைகள் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s