http://umakathir.blogspot.com/
பிரம்மச்சரியம் என்பது பிரச்சினையில்லாத வாழ்க்கை என்று மேலோட்டமாக
பார்த்தால் தெரிவது ஆனால் இறுதிவரை திருமணம் செய்துகொள்ளாத ஒரு
பெண்ணுக்கு என்னென்ன சோதனைகளை இச்சமூகம் தருமோ அத்தனையும்
ஆணுக்கும் உண்டு. திருமணமே ஆணையும் பெண்ணையும் முழுமையாக்குகிறது
என்பது நம் சமூக கட்டமைப்பின் விதிகளை தளர்த்தும் இருபாலருக்கும் ஒரே
பொதுவாகும். ஏனோ பெண்ணிற்கு மட்டும் இழைக்கப்படுவது போல
மாயை உண்டாக்கியிருக்கிறார்கள்.
தந்தையில்லாத ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து படித்து சுயமாக சம்பாதித்து
திருமணம் என்ற பந்தத்தில் நுழைய சமயம் பார்க்கும்போது அரைக்கிழவனாக
மாறியிருக்கும் அதற்கு மேலும் திருமணம் செய்து கொள்ளத்தான் வேண்டுமா
என்ற நினைப்பில் விட்டுவிட்டவர்களை எண்பதுகளில் அனேகம் பேரை காணலாம்.
இன்றையை வாழ்க்கைக்கும் சற்றேறக்குறைய இது பொருந்தும்.
இந்நாவலில் வரும் நாராயணனின் கதையும் இதுதான். கிராமத்து குடும்ப
பிண்ணனியில் வளர்ந்து பம்பாய்க்கு வேலைக்கு செல்லும் நாராயணனின் கதையும்
இதுதான். வாழ்வின் அனேக நேரங்களில் தனக்குள் மட்டும் உரையாடிக் கொண்ட
மனிதனின் கதை.
“எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல
வேள்வி அல்ல, பிரசவ வேதனை அல்ல
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ
அல்ல. பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல
பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல.
வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி
என் சுயத்தை தேடும் முயற்சி.”
இக்கதையை படித்து முடித்ததும் மனித மனங்களை ஓரளவு புரிந்துகொள்ளும்
அனுபவத்தை நீங்கள் பெறுவீர்கள். ஏராளமான கதைகளும் திரைப்படங்களையும்
நாம் பார்த்திருக்கலாம் ஒரே கதாபாத்திரத்தை மட்டும் வைத்துக் கொண்டு
கதையை சுவாரசியமாக்கும் முயற்சியை அனைத்திலும் பிரதானமாக காணலாம்.
ஆனால் இந்நாவலில் ஒரே கதாபாத்திரமான நாராயணனை சுற்றி மட்டும்
கதை செல்கிறது சுழித்து செல்லும் நதியை போல அதன் போக்கில் செல்கிறது
எத்தனை தடைகளை, எத்தனை சோதனைகளை அனைத்தும் தாண்டி திருமணம்
என்ற பந்தத்தில் சேராமலே அதன் பயணம் முடிகிறது.
“கரும்பு வண்டியின் மேல் அமர்ந்து, கரும்பைக் கடித்து துப்பிக் கொண்டே போன
பதினான்கு வயது பெண், கால் முட்டில் வைத்து ஒடித்த மறுபாதிக் கரும்பை அவனை
நோக்கி வீசி எறிந்த கணம் வாழ்க்கையை சுவாரசியமுள்ளதாக்கி விட்டுப்போனது.”
மூன்று செட் பனியன், ஜட்டி, கர்ச்சிப், சாக்ஸ், ஒரு லுங்கி, ஒரு துண்டு, விரிப்பு
போர்வை, தலையணை உறையுடன் பேண்டும் சர்ட்டும் ஆறேழு ஜோடிகள்
இருக்கும். மாற்றி மாற்றிப் போட்டுக்கொள்ள. எல்லாம் பாலியஸ்டர் விவகாரங்கள்.
நான்கு ஆண்டுகளுக்கு முன் எடுத்தது முதல் போன மாதம் எடுத்தது வரை.
பழையவை தையல் விடும். நிறம் மங்கி வெளிறும். கிழிவது கிடையாது. மிகவும்
சலித்து போனால் யாருக்காவது கொடுத்து விடுவது. சேர்த்து வைக்க இடம் பற்றாது.
உள்ளாடைகள் ஒன்றூ கிழிந்தால் மட்டுமே மாற்றூ வாங்குவது.
இதை தவிர ஆஸ்தி என்ன?
பேனா, பைஃபோகல் கண்ணாடி, பெல்ட், ஒரு ஜோடி ஷூ ஒரு ஜோடி தோல்செருப்பு.
ஒருஜோடி மழைக்கால ரப்பர் சாண்டக், மடக்கு குடை, அட்ரஸ்-டெலிபோன் எண்கள்
கொண்ட டயரி, கல்விச்சான்றிதழ்கள், வேலை செய்த கம்பெனிகளின் அனுபவ
சான்றிதழ்கள்,பாஸ்போர்ட், வங்கிக்கணக்கு புத்தகம்.
மூன்று மணி நேர முன்னறிவிப்பில் இடம்பெயர முடியும் எனும் தயார்நிலை வாழ்க்கை.
எல்லைப் போர்வீரனை போல கடிதங்களுக்கு பதில் எழுதிப்போட்டதும் கிழித்துப்
போட்டுவிடுவது. “நலமாக இருக்கிறேன், எல்லாரும் சுகமாக இருக்கிறீர்களா?
உங்கள் கடிதம் கிடைத்தது. என்பவற்றுக்கு மேல் நான்காவது வார்த்தைக்கு போராட
வேண்டியிருந்தது. சிலசமயம் தேதி போடாமல் அஞ்சலட்டைகளை அச்சிட்டு
வைத்துக்கொள்ளலாமா என்று கூடத் தோன்றும்
இதுபோன்ற எத்தனையோ அர்த்தமுள்ள நிகழ்வுகளை கதை நெடுக காணலாம்.
பிரம்மச்சரியத்தை விரும்பி ஏற்றுக் கொண்டவனல்ல, வாழ்க்கையின் பாதையில்
தானாக வந்து ஒட்டிக்கொண்டது ஒருவகையில் அவனுக்கு சந்தோஷத்தையே
தந்தது. வாழ்வின் அடுத்தநொடி தரும் ஆச்சரியங்கள் ஏராளம். நாராயணனின்
வாழ்க்கையில் இதுபோன்ற அடுத்தநொடி ஆச்சரியங்களே அதிகமிருந்தன.
அவையில்லாத அடுத்த நொடிகள் யுகங்களாக.
கல்யாணமாகாதவன் என்றால் ஆயிரம் இளக்காரம். சமூகம் பல பெயர்களை நமக்கு
கொடுக்கும். நாராயணனுக்கு அவனைப்போன்றே கடைசி வரை திருமணம் செய்து
கொள்ளாத ஒருவன் நண்பன் குட்டினோ இக்கதையில் வரும் முக்கியமான பாத்திரம்.
ஆனால் அறுபதாவது வயதில் துணையை தேடிக்கொள்ளும் அதுவும் ஆதரவற்ற
பிள்ளைகளால் கைவிடப்பட்டவள்.
“கட்டிலில் வந்து விழுந்தாலும் கவனம் பக்கத்து அறையின் சப்தங்களில் சென்று
நிலை கொண்டவவாறு இருந்தது. சற்று நேரத்தில் கதவு திறந்து அடைபடும் ஓசை.
மூன்றாவது ஆள் வெளியேறுகிறான் போலும். உரத்த சத்தம் நின்று விட்டது.
மறுபடியும் எழுந்து கதவிடுக்கின் வழியாக உற்றுப்பார்த்தான் நாராயணன்.
தனக்கு நாற்பத்தைந்து வயதாகிறது என்பது ஞாபகம் வந்தது. நெருக்கடியான
பஸ்களில் ஸ்தனம் இடிப்பதையும் விட இது ஒன்றும் கௌரவமான செயலில்லை.
இருபத்தைந்து வயதுக்கு உட்பட்ட வாலிபன் எடுத்துக்கொள்ளும் அற்பத்தனமான
சுதந்திரங்களை தானும் எடுத்துக்கொள்வது ஈனமானது என்று எண்ணினான்.
ஆனால் மனித மனம் எந்த வயதிலும் கேவலமானதாக இருக்க முடியும் போலும்.
போர்த்துக்கொண்டுள்ள கௌரவ சட்டைகள் ஈனங்களை மறைத்தும் நாற்றங்களை
மூடியும் வைத்து விடும்.”
இதேபோன்றுதான் கதையின் மற்ற கதாபாத்திரங்களுடன் உரையாடுவதை
காட்டிலும் தனக்குள், தன் மனவிகாரங்கள், பண்புகள், கோபங்கள், துயரங்கள்
என அனைத்தையும் தனக்குள் மட்டும் பேசிக்கொள்ளும் ஒரு பாத்திரம்.
ஒருவகையில் இந்த புத்தகம் சுயபரிசோதனையாக கூட வாசிப்பவருக்கு
அமையலாம். தனியனின் பயணம்தான் சதுரங்க குதிரை ராணியை நெருங்க
முடியாத குதிரை.
ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு கணத்தில் தனித்து விடப்படலாம் அப்போது
அத்தனிமையின் பயணத்தில் யாருடைய வருகையும் இல்லாமல் கூட போகலாம்
தென்றலோ புயலோ எதுவுமே தீண்டாத சூன்யப்பெருவெளியின் இறுதி வரை
நிகழலாம். அப்பயணத்தின் இறுதியாக நீங்கள் கண்டவை எதுவாக இருக்கும்?
மற்றவருக்கு அவ்வாழ்க்கை எப்படியான புரிதலாக இருக்கும். நினைத்துப் பார்க்க
இயலாத கொடுமையாக இருக்குமென்றால் பிறந்ததின் அடையாளம் என்னவாக
இருக்கும்?
கதையை படித்து முடித்ததும் உங்களை அதுவே ஆக்கிரமித்திருக்கும். புயலிலே
ஒரு தோணி நாவலுக்கு அடுத்ததாக என்னை உளவியல் ரீதியாக பரிசோதிக்க
உதவிய புத்தகமாக இதைக் காணுகிறேன்.
நூல் பெயர்: சதுரங்க குதிரை
ஆசிரியர் பெயர்: நாஞ்சில் நாடன்.
விஜயா பதிப்பகம்
விலை ரூபாய் 70.00
*வண்ண எழுத்துக்களில் உள்ளவை புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
**புத்தகத்தை வாசிக்க கொடுத்த அய்யனாருக்கு நன்றி!
அய்யனாருக்கு கொடுத்த அண்ணாச்சிக்கு நன்றி! நன்றி!!
***நன்றி anyindian.com
புத்தகம் படிச்சின்னா அதபத்தி எழுது அப்பதான் உன்னோட அருமை பெருமைய
எல்லாரும் தெரிஞ்சிக்க முடியும்னு என்னை ஊக்குவித்த(??) அண்ணாச்சியை
இப்போது பெருமையோடு பார்க்கிறேன்.
Posted by கதிர்