நாஞ்சில்நாடனின் கதைகளின் சுருக்கம்

தி. சுபாஷிணி (செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை)
நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை
‘காலச்சுவடு’ வெளியீடு இது. 120 பக்கங்கொண்ட டெமி வடிவத்தில் வெளிவந்திருக்கின்றது. ஓவியர் ஜீவாவின் கோட்டோவியங்கள், இதற்கு உயிர் அளித்திருக்கின்றன. நாஞ்சில் நாடனின் பேராசிரியர் காந்தியவாதி, சமூகவியல் ஆய்வாளர் முன்னுரை அளித்தது மேலும் மதிப்பு பெறுகிறது.  ஆசிரியருடைய முன்முகத்துடன் 12 கட்டுரைகள் இதில் அடக்கம். இறுதி விடைமுகம் ஒன்றும் அளித்து முடிந்திருக்கிறார். காலம் நிகழ்த்திய மாற்றங்களைக் கூறும் நூல்.
‘நாஞ்சில் நாட்டின் கிடப்பு’ என்னும் முதல் கட்டுரை, அதன் அமைந்த இடத்தைப் பற்றிப் பகிர்கிறது. கிழக்கே ஆரல்வாய்மொழிக் கோட்டைக்கும், மேற்கே பன்றி வாய்க்காலுக்கும், தெற்கே மணக்குடிக்கும், வடக்கே மங்கலம் எனப்படும் குலசேகரத்துக்கும் இடைப்பட்ட பூமி என நாஞ்சில்  நாட்டைச் சொல்வார்கள். உத்தேசமாகச் சொன்னாலும் இன்று நாஞ்சில் நாடு என்று வழங்கப்பெறுவது கன்னியாகுமரி மாவட்டத்தின் வடகிழக்கே அமைந்த தோவாளைத் தாலுகாவும் அகஸ்தீஸ்வரம் தாலுகாவின் சில பகுதிகளுமே ஆகும். பிற மாவட்ட அரசியல், கலை, இலக்கிய ஆய்வாளர்கள் கருதுவது போல, மொத்த கன்னியாகுமரி மாவட்டமுமே நாஞ்சில் நாடு எனக் கொள்வது சரியானது அல்ல. வடக்கிலும் வடக்கிழக்கிலும் வடமேற்கிலும் மலைகள் சூழ்ந்த பகுதியும் ஆன செழிப்பான நிலத் துண்டு நாஞ்சில் நாடு எனக் கொள்ளலாம்.
நாஞ்சில் நாட்டு முதன்மைக் குடிகள் வெள்ளாளர்களும் சாம்பவர்களும் ஆவார்கள். சாணர் என்று அழைக்கப்படும் நாடகர்கள் பின்னாளில் வந்தவர்கள். இந்நாட்டு வெள்ளாளர்கள், மருமக்கள் வழியினர், மக்கள் வழியினர் சைவர் என மூன்று வகையினர் உண்டு. திருமணச் சடங்குகளுக்கும் சாவுச் சடங்குகளுக்கும் வைத்தியன் என்றும், நாசுவன் என்றும், குடிமகன் என்றும் அழைக்கப்பட்ட நாவிதர்களுக்கு முக்கியமான பங்கு இருந்தது. நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்களிடையே வரதட்சணையும் கல்யாணச் செலவுகளும் அதிகம்.
நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை
வெற்றிலை கைமாறுதல், நிச்சயதார்த்தம், தாலிக்குப் பொன்னுருக்கு, கல்யாணம், நாலாம் நீர், ஏழாம் நீர், உடன் மறுவீடு, மறுவீடு, இரண்டாம் மறுவீடு, ஆடித் தங்கல், தீபாவளிப் படி, கார்த்திகைச் சீர், சூல் அழைப்பு, பாண்ட சுத்தி, குழந்தைக்குச் சோறூட்டல், பிறந்த நாள், காது குத்து, பிறந்த முடி எடுத்தல் என்று எந்தச் சடங்கையும் தளர்த்துவதாக இல்லை” என்று வெள்ளாளர் குடிகளின் வாழ்வியலைப் பற்றி விளம்புகிறது.
நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்களின் அடிப்படைத் தொழில் விவசாயம். அதனினும் மரபு ரீதியாக மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதனைப் பற்றிக் கட்டுரையில் மிகவும் விளக்கமாகக் கொடுத்திருக்கிறார்.
அப்பகுதி ஊர்களின் அமைப்பை விளக்குகிறார். நடுவில் கோவில், சுற்றிலும் தெருக்கல், குறுக்கு முடுக்காக வெள்ளாள ஊர்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்று ஊர்களின் அமைப்பை விளக்குகிறார். அங்குள்ள வீடுகளைப் பற்றி விளக்கும் போது, அவை கொல்லம் அல்லது மங்களூர் ஓடுகள் அமைந்த கூரையுடன் கூடிய வீடுகளாகவும், சுற்றுக் கட்டுடனும், தட்டிப் போட்ட மட்டுப்பாகவும், பூமுக வீடுகளாகவும் இருந்தன என்று நாஞ்சிலார் கூறுகின்றார்.
“தெருவில் இருந்து வாசல், தெருப் படிப்புரை, உள்ளே நடுவில் முற்றமும் நான்கு புறமும் படிப்புரைகளும் படிப்புரைகள் எல்லாம் விளிம்புகளில் கருங்கல் வரிகள் பாவியவை. பிறகு தாய்வீடு, அரங்கு, நெல்போடும் பந்தயப் புரை, அடுக்களை, மேலே தட்டட்டி போட்டு மட்டுப்பா என. முற்றம் என அழைக்கப்பட்ட இடைவழிக்குப் பல உபயோகங்கள். கன்றுக் குட்டியைப் பிரித்துக் கட்டிப் போட, நெல்குத்த உரலும் தோசைக்கு மாவரைக்க ஆட்டுரலும் போட, திருமணத்துக்கு மண மேடை போட, சமைந்த பெண்ணின் தலைக்குத் தண்ணீர் விட, வற்றல் வடகம் பிழிந்து காயப் போட, இறந்தவரைக் குளிப்பாட்ட, சுற்றி நின்று ‘அம்மாடி தாயாரே’ அடிக்க, மாற்றுலக்கை போட்டு வெஞ்சனம் இடிக்க, கிழக்குப் பார்த்து அடுப்புக் கூட்டிப் பொங்கலிட…” என்று வீட்டினுள் இருக்கும் அமைப்பை அழகாய் அடுக்குகிறார்.
நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்களின் அடிப்படைத் தொழில் விவசாயம். அதனினும் மரபு ரீதியாக மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதனைப் பற்றிக் கட்டுரையில் மிகவும் விளக்கமாகக் கொடுத்திருக்கிறார்.
“ஆண்களும் பெண்களும் எழுதப் படிக்கத் தெரிந்தவராய் இருந்தனர். எல்லாச் சிற்றூர்களிலும் சுதந்திரத்துக்கு முன்பே பள்ளிக்கூடங்கள் இருந்தன. ஊருக்கு ஏழெட்டுப் போர் இன்டர்மீடியட், ஸ்கூல் ஃபைனல், எஃப்.ஏ. படித்தவர்கள் இருந்தனர். கிறிஸ்துவப் பாதிரிமார்கள், திருவிதாங்கூர் மன்னர்கள் ஏற்படுத்திய உயர்நிலைப் பள்ளிகள் இருந்தன.”
படித்தவர்கள் அனேகம் இருப்பினும் வேலைக்குப் போனவர்கள் மிகவும் குறைவு. அவ்வாறு வேலைக்குப் போனவர்களும் தவறு செய்து தன் சமூகத்திற்குக் கெட்ட பெயர் வாங்கிவிடக் கூடாது என்றிருந்தனர். பக்தி இருந்தது பயமற்று இருந்தனர். கடவுள் வழிபாடு பற்றி விரிவாக விளக்கி இருக்கிறார் ஆசிரியர். மேலும், குலதெய்வ வழிபாடு, சிறுதெய்வ வழிபாடு, சாஸ்தா வழிபாடு ஆகியவை இவர்களுக்கு இருந்திருக்கிறது. கோடைக் காலங்களில் கோவில்களிலும் வீட்டுப் படிப்புரைகளிலும் கம்ப இராமாயண வாசிப்பு இருந்திருக்கின்றது. திருவிழாக் காலங்களில் இசைக் கச்சேரிகள் நடந்தேறி இருக்கின்றன. அவர்களுக்கு இசையறிவும் இருந்திருக்கின்றது என்று கூறுகிறார்.
நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்களின் மரபு ரீதியான மொழியறிவு, இசையறிவு எல்லாம் அறுபட்டுப் போனதற்குத் திராவிட இயக்கங்களின் தாக்கம் ஒரு முக்கிய காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது. கைவசமிருந்த நுண்கலைகளையும் வெகுஜனக் கலைகளையும் பார்ப்பனக் கலைகள் என்று கூறிய துஷ்பிரச்சாரமும் வெறுப்பேற்றலும் நடைபெற்றது என்பது இன்று வரலாறு என்று வருத்தப்படுகிறார்.
தெருவில் எவரேனும் குடிசையின் கூரைக்கு ஓலை கட்டிக்கொண்டிருந்தால், அவ்வழி போவோர் தானாக முன்வந்து, ஓலையை எடுத்துக் கொடுப்பர். கனத்துச் சுவர் பெய்த அடைமழையில் விழுந்தால், களிமண் குழைத்து அடைக்கும்போதும் வலியவந்து உதவுவார்கள்.
“கல்யாணத்துக்கு ஆக்குப்புரையில் கோட்டை அடுப்புப் போட, விறகு சுமந்து அடுக்க, களம் திருத்த, கழிக்கோல் நட்டு ஓலைக் காமணம் போட, தேங்காய் தொலிக்க, காய்கறி வாங்க, நெல் குத்த, கல்யாணத்துக்கு முன்தினம் காய்கறி வெட்ட, தேங்காய் திருவ, தண்ணீர் சுமக்க, வைப்புக்கார ஐயருக்குக் கூடமாட நிற்க, பந்தி விளம்ப, இலை எடுக்க, பாத்திரம் கழுவி அடுக்க… அன்றைக்கு எல்லாம் சம்பளக்காரன் இல்லை.
அதுபோல் பெண்களும் அண்டை அயலார், உறவினர் யாவரும் உழைப்புத் தானத்துக்குத் தயங்கியவர் இல்லை. நெல் அவிக்க, வெஞ்சனம் இடிக்க, மாவிடிக்க, கடைச் சாமான்கள் புடைத்து நாவி அளந்து கட்டி வைக்க, அரிசி புடைக்க, கல் நாவ என ஒரு வீட்டில் பெண்பிள்ளைக்கு மேலுக்கு சுகமில்லை என்றால் கறிக்கு அரைத்துக் கூட்டிப் போட, பக்கத்து வீட்டுக்காரி வருவாள். மண்பானையில் வேகும் மூன்று பக்கா அரிசி வெந்ததும் உலை மூடி போட்டுக் கவிழத்து வடித்துக் கொடுக்க வருவாள். வயிற்றுச் சூலிக்கு உதவுவார் உண்டு. பிள்ளைத் தாய்ச்சிக்குப் பாலூற, பால்பூச்சி மீன் வாங்கித் தருவார் உண்டு. சிவந்த கண்ணில் பிள்ளைப்பால் பீய்ச்சுவார் உண்டு. மண்டையிடிக்கு ஆனைப்பல்லும் சுக்கும் உரைத்து நெற்றியில், உச்சியில் பூச சங்கில் பிள்ளைப் பால் பீய்ச்சித் தருவார் உண்டு. அதற்காகச் சின்னப்பிள்ளைச் சண்டைக்குப் போக மாட்டார்கள் என்றில்லை.
தன் வீட்டில் சர்க்கரைக் கொழுக்கட்டை, வெந்தயக் கொழுக்கட்டை அவித்தாலோ, உளுந்தஞ்சோறு பொங்கினாலோ, உளுந்தங்களி கிண்டினாலோ, வெந்தயக் காடி காய்ச்சினாலோ, வருக்கைச்சக்கை வெட்டினாலோ, பனங்கிழங்கு சுட்டாலோ, நாலு வீடு தாண்டி இருக்கும் வயிற்றுச் சூலிக்குச் சின்னச் சருவத்தில், தலை முந்தியைப் போட்டு மூடி சுடச்சுடக் கொண்டு போய்க் கொடுத்ததுண்டு.”
“பாதுகாப்பு” என்ற பெயரில் பெண்களைச் சிறை வைத்திருந்தனர் வெள்ளாளர். அவர்கள் மரபுரீதியான உணவுப் பழக்க வழக்கங்களையே மேற்கொண்டதாகப் பதிவு செய்கிறார் நாஞ்சிலார்.
“உணவு சமைப்பதில் பெண்களுக்கு நல்ல தேர்ச்சி இருந்தது. மேலும் சுவையில் ஒத்திசைவு இருக்கும் விதத்தில் சமைத்தனர். இன்ன குழம்புக்கு இன்ன தொடுகறி என்பது போல. வாய்வு, பித்தம் கூட்டும் காய்கறிகளைச் சமனப்படுத்த தேவையான சேர்மானங்கள் செய்தனர். எடுத்துக்காட்டாக சக்கை எனப்படும் பலாக்காய் புளிக்கறிக்கு நல்ல மிளகு சேர்த்து அரைக்க வேண்டும் என்பது போல. பிள்ளைச் சுறா மீனை, வெஞ்சனங்கள் வறுத்து அரைத்துக் குழம்பு வைக்க வேண்டும் என்பது போல.
தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் என்பது போல் இன்ன மீனை இன்ன விதத்தில் அரைத்துக் குழம்பு வைக்க வேண்டும் என்பதற்கு வாய்ப்பாடுகள் இருந்தன.
“உக்காந்து திண்ணு ஆயிரத்தை அரையே மாகாணி ஆக்கியவன்” என்று “மொச்சக்கொட்டை தீயலும் சாளைப்புளி மொளகும் வச்சுச் சண்ணுனான்” என்றும் தின்று கெட்டவனுக்கு வசை உண்டு. கிராமத்துக்கு ஒரு “கூட்டவியலு”, “துப்பு வாளை”, “அடைப் பாயசம்” பட்டப் பெயருடன் மனிதர்கள் உண்டு.”
நாட்டு வைத்தியமும் கை வைத்தியமும் இவர்களுக்குக் கைவந்த கலை என்கிறார் நாடன் அவர்கள். வெள்ளாளர்களிடத்தில் வெற்றிலை போடும் பழக்கம் இருந்திருக்கின்றது. ‘வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்’ என்ற பழமொழியை ஈண்டு வைக்கிறார்.
“எந்த மொழியும் புத்தம் புதிய, கருக்கழியாத, செம்புப் பானை போல் இருப்பதில்லை. தூரில் கரி பிடிக்கும், கழுத்துச் சவளும், விலா நசுங்கும், நிறம் மங்கும், கறைபிடிக்கும், காரை சேரும். காலம் தனது பதிவுகளைச் செய்யும். பழையன கழியும் புதியன புகும். ஆனால் நாஞ்சில் மொழிக்கு நேர்ந்து கொண்டிருக்கும் கதி துயரமும் சோர்வும் தருவது” என்று ஆசிரியர் கவலைப்படுகிறார். விவசாயம் சார்ந்த சொற்களாக, படம், படங்கு, தரங்கு, சுற்றுப்பூண், சைரு வேப்பந்தாங்கி என்று பட்டியலிடுகிறார். சமையலுக்கு உதவிய பாண்டங்களுக்கும் சிறப்பான பெயர்கள் உள்ளன. அக்காலத்தில் பழையது உண்ணவும், உப்பு போட்டு வைக்கவும் ‘மரவை’ இருந்தது என்கிறார்.
கடந்த காலம் இன்று அவர்களைக் கணக்குக் கேட்கிறது. எல்லா நாஞ்சில் நாட்டுக் கிராமங்களிலும் ஒரு வகை அமைதியின்மை, இளைஞர்களிடையே இருக்கிறது இன்று. அது புயலுக்குப் பிந்தைய அமைதியா அல்லது புயலுக்கு முந்தைய அமைதியா அல்லது புயலுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லாது தனக்கு இதுதான் விதிக்கப்பட்டது என்ற போதத்தின் கையாலாகாத அமைதியா?
பக்தி உணர்வு அவர்களிடம் திடீரென அதிகமாகி வருகிறது. இந்தத் திடீர் பக்தியின் அடிப்படைக் காரணங்களும் ஆராயப்பட வேண்டியவை. மேலும் பல இளைஞர்கள் இந்து சமய அடிப்படை வாதம் பக்கம் திரும்ப ஆரம்பித்துள்ளனர். அது எங்கு கொண்டு போய்ச் சேர்க்கும் என்பதும் எங்கு கொண்டுபோய்ச் சேர்த்தால் என்ன என்பதும் இரு அடிப்படை வேறுபட்ட கவலைகள்.
தன்னம்பிக்கை அற்ற, நோக்கத் தெளிவற்ற அல்லது நோக்கமேயற்ற, முயற்சி அற்ற, கடும் உழைப்பு அற்ற, பழமையில் மரியாதையும் புதுமை எதுவென்ற பிரித்தறி ஆற்றலும் அற்ற இந்தச் சமூகம் நேற்றைச் சுமந்துகொண்டு நாளையை நோக்கி நகரப் பிரயத்தனப்படுகிறது. இந்தச் சமூகத்தின் மீது உண்மையான அக்கறை கொண்ட சிலருக்கு அது புலப்படுகிறது. ஆனால் வெகுசனத்துக்குப் புலப்பட வேண்டும்.
தன் சமூகத்தினரைப் பற்றிய இந்த விளக்கமான பதிவு, காய்தல், உவத்தல் இன்றி உண்மையான கவலையுடன் விடை பெறுகிறார். வெள்ளாளன் நாஞ்சில் நாடனுக்கு அக்கறையும் கவலையும் இருக்கத்தானே செய்யும்.
“கவிமணி ஒரு ‘மான்மியம்’ படைத்தார். நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் சமுதாயம் ஒரு திருப்பங்கண்டது. சமுதாயத்தை மற்றொரு திருப்பத்துக்குச் சித்தப்படுத்துவது நாஞ்சில் நாடனின் இந்த ‘இரண்டாம் மான்மியம்’ சமுதாயத்தின் மூத்த தலைமுறையைச் சப்புக் கொட்ட வைத்து, அடுத்த தலைமுறையைச் சிந்திக்க வைத்து, இளைய தலைமுறையைச் சீண்டிவிட்டு, அனைவரையும் செயற்படத் தூண்டுகிறது இந்நூல்” என்று த. வேலப்பன் கூறுகிறார்.
“நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (காலம் நிகழ்த்திய மாற்றங்கள்) என்னும் நூல், இவரது கட்டுரைகளின் நுழைவாயில் இது. ஒரு வீட்டு முற்றத்தில் ஏற்றிய விளக்கு, எங்ஙனம் வீட்டின் முழுவதும் வெளிச்சம் பரவச்செய்து, ஒன்று விடாது பிரகாசிக்கச் செய்யுமோ அதுபோல் தான் இவரது கட்டுரைகள் பொருள் எனும் விளக்கு, ஒரு அணுவிடாது அது தொடர்பான அனைத்துத் தகவல்களையும் அடுக்கடுக்காய் ஒளிரச் செய்கின்றது. அழிவிலிருந்து ஒரு அடுக்கை எடுத்தாளும் அதன் கட்டமைப்பைக் குலைத்து விடுவோமோ என்ற அச்சம் எனக்கு இருக்கின்றது. இந்த அச்சத்துடன்தான் அடுத்த நூலுக்கும் பயணமாகின்றேன்

*******

என்பிலதனை வெயில் காயும்
nanjil_nadan
முதன்முதலில் ‘என்பிலதனை வெய்யில் காயும்’ என்றும் நாவலிலிருந்துதான், நாஞ்சில் நாடன் அவர்களின் படைப்புகளை அறியத் தொடங்கினேன். நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கு அதிகமாக இருந்ததால் மிகவும் தடுமாறினேன். கொஞ்சம் அலுப்பாக இருந்தது. கதையை அகராதி வைத்துப் படிக்க வேண்டிய தேவை வருமோ என்று சலிப்பு இருந்தது. நல்லவேளை அப்படியொன்றும் நிகழவில்லை.
அவரது மொழி எனக்கும் பழகிவிட்டது. இப்பொழுது குட்டுவம், கடவம், படிப்புரை, வெப்ராளம், விளம்புதல், அடியந்திரம் என்னும் சொற்களுக்கு பழகிப் போய்விட்டேன். இப்போது இட்டிலியைப் பார்த்தால் எனக்கு குட்டுவம் என்றுதான் தோன்றுகிறது. இக்கதை, பெற்றோரை இழந்து, தாத்தா பாட்டியிடம் வளரும் சுடலையாண்டியைப் பற்றிய கதை. அவனது பெற்றோரின் நினைவு நாள் சடங்கு செய்வதிலிருந்துதான் கதை தொடங்குகிறது.
அவன் பள்ளிக்கும் கல்லூரிக்கும் நடையாய் நடந்து பயின்றதையும், அதற்குத் தாத்தா படும் சிரமங்களையும் விவரிக்கின்றது. பேரனுக்கு வேலை கிடைத்தால் சரியாகி விடும் என்கின்ற எண்ணத்தில் தாத்தா தன் நிலம், வீட்டில் கொஞ்சம் இடம் என்று விற்றுப் படிக்க வைத்துக்கொண்டிருந்தார். சுடலையாண்டியும் படித்து முடிந்ததும் வேலைக்கு முயன்றுகொண்டிருந்தான். காலம் தாழ்ந்ததேயொழிய வேலை கிடைப்பது அரிதாயிற்று. தாத்தாவுக்கு உதவியாய்க் கூலி வேலைக்கும் சென்றான். கூலி வேலை அகப்படாத போழ்து, மலையேறி சர்க்கரை வள்ளிக் கிழங்கு வாங்கி வந்து, கிராமங்களில் விற்பான். தாத்தாவிற்கு ஒரு நாள் இவனுடைய தாய்மாமா நாகர்கோவிலில் இருப்பது நினைவில் வரவே, சுடலையை அவரைப் பார்க்க அனுப்புகின்றான்.
சுடலையும் மாமன் வீட்டு வாசலில் நிற்கின்றான். மாமி வருகிறாள். இவன் யாரென வினவுகிறாள். சுடலையும் தன்னை இன்னாரென்று அறிமுகப்படுத்திக்கொள்கிறான். அந்த அம்மாவும் அய்யாவை அழைக்கிறாள். அவர் வெளியே வந்து இவனைப் பார்க்கிறார். அந்த முகத்தில் தன் தாயின் முகச் சாயல் சிறிதேனும் இருக்கின்றதா என நோக்குகிறான் சுடலையாண்டி. அவர் அந்த அம்மாளிடம் ஒரு பத்து ரூபாயை அவனிடம் தரச் சொன்னார். இப்படித்தான் கதை முடிந்தது. நம் நெஞ்சில் உறவு என்னும் நெடுங்கதவம் அடித்துச் சாத்தப்பட்ட உணர்வு.
மிதவை
nanjil_nadan
கஷ்டப்பட்டு பி.ஏ. படித்து முடித்துவிட்ட பட்டதாரி சண்முகம். குறுங்குளத்தில் ஒரு சம்சாரியின் மகன். இரண்டு ஏக்கர் பட்டா நிலமும், இரண்டு பால் மாடுகளும் இரண்டிரண்டு வயது வித்தியாசத்தில் ஏழு பிள்ளைகளும், இவனது குடும்பம். மூத்த தலைமகன். படிக்கும் போது இருந்த கவனிப்பு, படித்து முடித்தபின் வேலையில்லாத போழ்து நீர்த்துப் போதல் நன்கு காட்டப்படுகிறது. வேலை கிடைத்து விடும் என்று பெரியப்பாவை நம்பியதில் இரண்டு வருடம் போகவே, குறுங்குளத்திற்கு வந்த ஐயரின் பரிந்துரையில் சண்முகம் வேலை தேடி பம்பாய் பயணப்படுகிறான்.
தாதரில் சுந்தரண்ணா காத்திருந்து இவனை நேவி நகருக்கு அழைத்துச் சென்றார். வழி நடுவே வரும் கட்டடங்களையும் இடங்களையும் சொல்லிக்கொண்டே வந்தார். பின் ஐயர் கூறுமிடங்களுக்குச் சென்று பார்த்ததில் உடனே நடந்து விடவில்லை. கிறிஸ்துமஸ் விடுமுறை நாள் அன்று மீண்டும் ஐயரைப் பார்க்கச் சண்முகம் போனான். அன்று அவனுக்கு விடிவு காலம். டிக்மானி, வொர்க்கிங் மானேஜர், ஆர். எச். தாம்சன் அன்டு கம்மெனி லிமிடெட், என்கிற கடிதத்தைக் கொடுத்தார். நல்ல சாப்பாடும் போட்டு அனுப்பினார். சுந்தரண்ணா உடன்தான் நேவி நகரில் தங்கி இருந்தான். அங்கு அனுமதியில்லாமல் தங்கியிருப்பவர்களைத் திடீரென்று இரவில் செக்கிங் வந்தனர். அதனின்று தப்பி, இரவில் சாலையில் நடந்த அனுபவங்கள் எல்லாம் கதையை மிகவும் வலுப்படுத்துகின்றன.
டாக்யார்டில் வேலைப் பார்க்கும் சுப்பையா மூலமாக பொங்கல் வீடுகளில் இடம் பார்த்தான். சண்முகம் குடிபெயர்ந்தான். சண்முகம் தானாகவே வலிய வேலையைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினான். பம்பாயில் மாதுங்காவில் தமிழ் மன்றம் இருப்பதாகக் கேள்விபட்டு விடுமுறை நாள்களில் அங்கு செல்லத் தொடங்கினான். அங்கு உறுப்பினராக எண்ணிய போழ்து அங்கு முதலில் மறுத்த மானேஜர், பின் அரசியல்வாதி தோரணையில் வந்த கவிப்பித்தனின் அதிகாரப் பரிந்துரையில் உறுப்பினராகச் சேர்த்துக்கொண்டார்.
கம்பெனியில் ஆட்குறைப்பு செய்தார்கள். மற்றவர்களை கன்ஃபர்ம் பண்ணியபோது, தனக்கும் கன்ஃபர்மேஷன் கிடைக்கும் என்று நம்பினான் சண்முகம். ஆனால் கிடைக்கவில்லை. ஏமாந்ததன் எதிரொலி மேலும் தீவிரமாக வேலை செய்வதில் காட்டினான். பொழுதைச் சிரமமப்பட்டுத் தள்ளிக் கொண்டிருந்த ஒரு சனிக்கிழமை, அவனது ஊரைச்சேர்ந்த கிங்காங்கின் அண்ணன் கருப்பையா பிள்ளை சாரின் மருமகன் காமாட்சியைப் பார்த்தான். காமாட்சி, சண்முகத்தைத் தன்னுடன்  தன் தங்குமிடத்திற்கு அழைத்துச் சென்றான்.
காமாட்சியுடன் செண்பகம் உடன் தங்கியிருந்தாள். அவர்களே சமைத்துச் சாப்பிட்டார்கள். இன்னொருவர் தங்கலாம் என்பதால் சண்முகத்தைக் கேட்டனர். எனவே பொங்கல் வீட்டிலிருந்து சண்முகம் ஜாகை மாறினான். செம்பகம் அரிசி வியாபாரம் செய்பவன். அவன் தம்பி முத்து நாடார் கடையில் வேலை செய்பவன். அப்போது அரிசித் தட்டுப்பாடு இருந்தது. அதனால் மறைவாக அரிசியை ஏர் பேக்கிலும் ஹாண்ட் பேக்கிலும் எடுத்துச் சென்று விற்றுவிடுவான். பல சமயம் ரெய்டில் தப்பித்து விடுவான். ஒருமுறை வியாபாரத்திற்குச் சென்றபோது 20 நாள்களுக்கு மேலாக வரவில்லை. பின் ஆளே அடையாளம் தெரியாத வண்ணம் வந்தான். அந்த நாள்களில் சண்முகத்திற்கும் மற்றவர்களுக்கும் ஏற்பட்டது மன உளைச்சல், முத்துவிற்கு அம்மை போட்டுவிட்டது. செண்பகம் மீண்டும் அரிசி வியாபாரத்தைத் தொடங்கினான். சண்முகத்தின் வாட்ச் அதற்கு உதவியது.
கதை பேசுகிற நேரத்தில் பக்கத்து வீட்டு அன்னம்மை பால் வந்த காம ஈர்ப்பு பற்றியும் ஆசிரியர் சொல்கிறார்.
முதல் மழை பெய்த இரவு, காலடியில் ஒரு புசுபுசு நாய்க்குட்டி படுத்திருந்ததைக் கண்ட சண்முகத்திற்கு நான்காண்டுகள் முன்பு தான் சாகடித்த அந்த நாய்க்குட்டியின் நினைவு வந்தது. காமாட்சி, தம்பி கலியாணத்திற்குப் புறப்பட்டான். சண்முகம் தன் கூடுதல் சம்பளத்திற்காக டியூஷன் எடுத்தான். மாதம் 60 ரூபாய். ஏப்ரல் மாதம் தேர்வு முடிந்ததும் மொத்தமாக வாங்கிக்கொள்வதாக திட்டம். டியூஷன் தாண்டி பில்கள் தயாரிக்கவும், கடிதம் எழுதவும், கோதுமையை சக்கியில் கொடுத்து அரைக்கவும் கூறுவார்கள். சில சமயம் அரைக்கக் கூலி கொடுக்க மாட்டார்கள். சண்முகத்திற்கு கேட்கத் தயக்கம். ஊருக்கு போகும்போது 400 ரூபாயை கொடுத்தார். 20 ரூபாயைப் பிடித்துக்கொண்டு விட்டார். செண்பகம் வாங்கிய கடனை திருப்பிக் கொடுத்தான். கம்பனியில் வேலை செய்யும் ரூபன், தீபாவளி பண்டிலிருந்து 200 ரூபாய் வாங்கித் தந்தார். மறுபடி பம்பாயில் கால்வைக்கும் போது, தான் 500 ரூபாய் கடனாளியாக இருப்போம் என்று தோன்றியது. இந்தக் கடன் தீர, ஓராண்டு ஆகலாம். கடன் வாங்குவதன்றி வேறென்ன மார்க்கம்?
தாதரை விட்டு மாதுங்கா வரை மெதுவாக நகர்ந்து, சயான் தாண்டியதும் வண்டி வேகம் எடுத்தது. இருக்கையில் வந்தமர்ந்து சமான்களைக் கடைசியாக ஒரு முறை சரிபார்த்து, தாராளமாகக் கால்களை நீட்டியதும் ஒரு நிம்மதியும் மகிழ்ச்சியும் கர்வமும் தோன்றின.
நாஞ்சில் நாடன், சண்முகத்துடன் நம்மையும் பயணிக்க வைத்துவிடுகிறார். ஊர்விட்டு ஊர் வந்த பட்டதாரியுடன் வாழ்வின் நிஜங்களை, யதார்த்தமாய் அப்படியே பதிவு செய்கிறார். சாதாரண கவனிப்பு நான்கு விஷயங்கள் என்றால் இவர் அடுக்கடுக்காய் 40 விஷயங்களால் பதிவு செய்கிறார். இயல்பாகவும் பொருந்தி விடுகிறது. பம்பாய் நகரின் அமைப்பு நம்மில் பதிந்து விடுகிறது. இந்த விவரிப்பு, கதைக்கு ஊறு விளைவிக்காது, அந்த வடிவத்தைச் சிதைக்காது, இடர் ஏற்படுத்தாது, பொருத்தி வடிவமைப்பதில் நாஞ்சில் நாடனின் தனித்துவம் அமைந்திருக்கிறது. சண்முகத்துடன் நாமும் நேவி நகர் சென்றபோது கலவரப்படுகிறோம். இத்தனையையும் மிதவை என்னும் நாவலில் அமைக்கிறார் நாஞ்சில் நாடன். இதற்கு நகுலன் அவர்கள் மதிப்புரை அளித்திருக்கிறார்.
Midhavai is a well constructed work which has added to Nanjil Nadan’s artistic effectiveness they accent a felt experience. It may be Noticed that though he is not concerned with the complicity in the fictroncial form, the distinctive nature of modernity with his novel does not pay it its effectiveness. – Nakulan
எட்டுத் திக்கும் மதயானை
nanjil_nadan
நாகர் கோவிலில் பி.காம் இறுதியாண்டு படிக்கும் மாணவன் பூலிங்கம். அவனுடன் படிக்கும் மாணவியரில் ஒருத்தி, செண்பகம். வெள்ளாளர் வீட்டுப் பெண் அவள். இவன், குயவர் இனத்தைச் சேர்ந்தவன். செண்பகத்துடன் பூலிங்கம் பேசினான் என்று யாரோ கூறப் போக, செண்பகத்தின் வீட்டு மக்கள் கல்லூரியிலிருந்து வீடு செல்லும் போது வழி மறித்து, டீக்கடையில் வைத்து அடித்துவிடுகின்றனர்.
செய்யாத தவறுக்கு தண்டனை, அவமானம், கோவம். அவர்கள் வீட்டு வைக்கோல் படப்பைத் தீயிட்டு விட்டு, ரயில் ஏறிவிடுகிறான். அதற்குப் பணம் கொடுத்து உதவுகிறாள் சுசீலா. போகும்போது ஒரு விஷயத்தையும் அவளிடம் சொல்கிறான். அவள் வயிற்றில் வளரும் கரு, அவனுடையது என்று. தீர்மானம் இல்லாத பயணம், ஆந்திராவில் தொடங்கியது. இரயிலில் ஐஸ்கிரீம் விற்கிறான். ரௌடிகளால் இடர்ப்பாடு. தற்காத்துக்கொள்ள நண்பன் கொடுத்த கத்தியால் குத்திவிட்டு ஓடிவிடுகிறான். ஹூப்ளிக்கு தரை மார்க்கம். பழமண்டியில் வேலை. சேட்டின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகிறான். விதி யாரை விட்டது?
அவன் கவனம் எல்லாம் 500 ரூபாய் இருந்தால் ஊருக்குப் போகலாம் என்றே இவனை நம்பி வீட்டை ஒப்படைத்த போது, 500 கிடைக்குமோ என்று வீட்டைச் சோதனையிடுகிறான். ஒன்றும் கிடைக்கவில்லை. மாட்டிக் கொள்கிறான். அவமானம் கோவாவிலிருந்து மது பாட்டில் கடத்தல். போலீஸிடம் மாட்டிக்கொள்கிறான். திம்மனின் சகோதரி கோமதி அறிமுகம். ஒரு இனிய சினேகிதம் மலருகின்றது. போலிஸின் உதவியால் போதை மருந்துக் கடத்தலில் ஈடுபடுகின்றான். பணம் புழங்குகிறது, ஊருக்கும் பணம் அனுப்புகிறான் பூலிங்கம். அம்மாவிற்கு சந்தோஷம். எங்கேயோ மகன் நல்லா இருக்கட்டும் என்கின்ற நிம்மதி. சுசீலாவிற்கும் இத்தகவல் போக, அவள் செண்பகத்திடம் கூறுகிறாள். அப்போது தன்னிடம் அவன் எதுவும் தவறாகப் பேசியதில்லை என்று கூறி, செண்பகம் வருத்தப்படுகிறாள். தொழில் நிமித்தம் பம்பாய் சென்று, திரும்பும் வழியில் சரக்கைப் பறிகொடுக்கிறான். சேட்டிடம் மாட்டிக்கொள்ள, அடித்துப் போட்டுவிடுகின்றனர். கோமதியிடம் சொல்லாமல் பம்பாய் செல்கிறான்.
மேற்கில் வருணன், கிழக்கில் இந்திரன், வடக்கில் குபேரன், தெற்கில் எமதர்மன், தென்கிழக்கில் சுக்கிரன், வடமேற்கில் வாயு, தென்மேற்கில் கணபதி, வடகிழக்கில் ஈசன், எல்லோருக்கும் ஒரு திசை இருந்தது. ஆட்சி செய்யவோ அல்லது நோக்கிச் செல்லவோ, அல்லது கிடந்து உழலவோ!
வான வெளியில் சுய ஈர்ப்பிலிருந்து சுழன்று, பிற ஈர்ப்புகளின் உட்புக மறுத்து, எந்த விதியின் இயக்கத்துக்கும் ஆட்பட மறுத்த கோளத்தின் சுழற்சி போல் ஆகிவிட்டது வாழ்க்கை….. பலருக்கும் மயில் போல் அழகான தோகைகள். ஆனால் பறந்து எங்கும் போக முடியாமல்… பூலிங்கத்துக்குத் தோகையும் இல்லை, துடுப்பும் இல்லை.. பூலிங்கம் முதலில் குண்டக்கல் ரயிலில் ஏறுகிறான். ஒரு சிறிய திருட்டு. பணத்தை மட்டும் எடுத்துவிட்டு பெட்டியைப் பூட்டிவிட்டான். இப்பணம் பம்பாய் போக உதவியது.
இதற்கிடையில் சுசீலா, உருண்டைச் சொம்பாய் ஒரு பெண் குழந்தையை பெற்றாள். சுப்புவின் உதவியால் அண்ணாச்சியிடம் பூலிங்கம் அறிமுகப்படுத்தப்பட்டான்.
பெரிய கான்வாஸ் பை. அதில் 5 லிட்டர் கேன். சுற்றிலும் மேலேயும் கேன் தெரியாமல் அடுக்கப்பட்ட முறுக்குப் பொட்டலங்கள். முறுக்கு என்றால் உளுந்து வறுத்துத் திரித்து, அரிசி மாவு இடித்து, அரித்துச் சேர்த்துப் பிசைந்து, கறுப்பு எள் தூவி, கையால் சுற்றித் தேங்காய் எண்ணெயில் சுட்டவையல்ல. மரவள்ளிக் கிழங்கு மாவில் செய்த அச்சு முறுக்கு. முதல் நாள் ‘பொருபொரு’ என்றிருக்கும். பிறகு ‘சவுக்கு சவுக்கு’ என்றிருக்கும்.
nanjil_nadan
கோலி வாடாவில் மின்சார இரயில் பிடித்து, விடியில் இறங்கி, மகாத்மா காந்தி ரோட்டில் நடந்து, ஃப்ளோரா பவுண்டன் தாண்டி, காலா கோடா தாண்டி, ஜஹாங்கீர் ஆர்ட் காலரி தாண்டி, மியூஸியத்தின் மேற்கு நுழைவாயில் தாண்டியும் நான்கு சக்கர வண்டிகள் சில நின்றன. பழைய புத்தகங்கள், சிறுவருக்கான விளையாட்டுச் சாமான்கள், கீற்று மாங்காய் என அவற்றில் ஒன்றில் பெரிய சீனிச் சட்டியில் கடலை எண்ணெய் நுரைத்துக் காய்ந்துகொண்டிருந்தது.
உருளைக் கிழங்கு வடைக்கான மசாலா வேக வைத்த உருளைக்கிழங்கு, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சதைத்த உருண்டை, அரிந்த மல்லித்தழை, கறிவேப்பிலை, மஞ்சள் பொடி, உப்புப் பிசைந்து அரைத்த கடலை மாவு… எல்லாம் தயாராக இருந்தன. அடுக்கடுக்காய் 12 பாய்கள் கொண்ட தடுக்குகள் இருந்தன. இரண்டு ஜெர்கி கேன்கள் நிறையக் குடிநீர், கண்ணாடித் தம்ளர்கள், பிளாஸ்டிக் ஜக்கில் தண்ணீர்… சாராயம் முதல் வியாபாரம் என்னும் பாட்டாட்டா வடா…. பாவ் துணை வியாபாரம் என்று தோன்றியது..
இதுதான் நாஞ்சில் நாடன் விவரிக்கும் பாணி…
செண்பகத்தின் அப்பா பூலிங்கத்தை அடித்து, விஷயத்தைப் பெரிதாக்கியதில், செண்பகத்தின் திருமணம் அமையவில்லை. 20 தரத்திற்கும் மேல் வந்து போனதுதான் மிச்சம். எனவே பம்பாயில் நேவியில் கிளார்க் வேலை என வந்தவருக்குச் செண்பகத்தைத் திருமணம் செய்து, பம்பாய்க்கு அனுப்பினர்.
பம்பாயில் பூலிங்கத்தைச் சந்திப்போம் என்று செண்பகம் நினைக்கவில்லை. கணபதி பூஜையன்று பூலிங்கத்தைப் பார்த்தாள். நாள்கள் கடந்தன. பூலிங்கம் ஓய்வாக இருப்பதால், தமிழ் மன்றம் நூலகத்திற்கு வந்தான். யதேச்சையாக செண்பகம் வரவே சந்திப்பு நிகழ்ந்தது. வாழ்வில் ஒரு திருப்பத்திற்கு அடிபோட்டுவிட்டது விதி. அவள் தங்கும் இடம் போய், அவளைப் பார்த்தான். அவளின் கணவன் ஆண்மை இல்லாதவன் என்றும், சரியாவதற்கு வழியொன்றும் இல்லையென்றும் இன்னும் அவள் கன்னி கழியவில்லை என்றும் அறிந்தான். பின்பு லோண்டோ வரை ஒரு டிரிப் சுப்புவோடு சென்றான். அங்கு கோமதியைப் பார்த்தான். பூலிங்கத்திடம் ‘செண்பகத்தைத் திருமணம் செய்து கொள்’ என்று அவள் கூறினாள். மீண்டும் பம்பாய் வந்து செண்பகத்தைப் பார்க்கும்போது, செண்பகத்தை உள்ளே வைத்து, அவள் கணவன் பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றது தெரிந்தது. பக்கத்து வீட்டு மராத்திப் பெண். அவளுக்கு ஏதாவது உதவி செய்யச் சொன்னாள். வேறு சாவி போட்டு திறந்து அவளோடு பேசினான். 15 நாட்கள் கழித்து, அவளைத் தன்னோடு அழைத்துக்கொண்டு போனான்.
‘‘உண்மையில் பூலிங்கத்திற்கு சங்க நிதி பதும நிதி இரண்டும் கிடைத்தது போலிருந்தது. வாழ்வு திடீரென்று ஒரு பொருள் பூத்தது போல்.
கோமதிக்குப் பைத்தியம்தான் இப்படி எல்லாம் யோசிக்க என்று எண்ணினான். அடுத்தவன் மனைவியைக் கடத்திக்கொண்டு போன குற்றம் ஒன்றுதான் பாக்கி. பஞ்ச சீலங்கள் முழுதாகிப் போகும். வெயில் கண்ணைக் கூசும்படி அப்படி காய்த்தது. இரவு வண்டிக்குப் புறப்பட்டு போகலாம் என்று தோன்றியது. கதவை ஒரு பக்கமாகச் சாய்த்துவிட்டு கோமதி அம்மா வீட்டுக்குப் போனான். மனத்தில் ஏவல் செய்து விட்டதைப் போல் கோமதியின் சொற்கள் சுற்றிச் சுற்றி வந்தன.
இல்வாழ்க்கை என்பது உடலுறவு மட்டும்தானா என்று தோன்றியது. ஆனால் அது மட்டும் இல்லாவிட்டால் அது இல்வாழ்க்கையாகவும் இருக்க முடியாது போலிருக்கிறது. மகாத்மா காந்தி நடத்தியது, இராமகிருஷ்ணன் நடத்தியது அவை எல்லாம் இல்வாழ்க்கை என்று எப்படிக் கருத முடியும்? சாரைப் பாம்பின் தலையையும் வாலையும் பிடித்து எட்டி இழுத்து, எலும்புச் சங்கிலியை இற்றுப் போட்டுவிட்டு, ஊர்ந்து போ என்று சொல்வதைப் போல ஒருவேளை நகராமல் இருந்த இடத்தில் சற்றும் தண்ணீரும் உணவும் கிடைக்குமானால் உயிர் வாழ்வது சாததியமாக இருக்கக்கூடும். ஆனால் அது உயிர்வாழ்தல் தானா?
அரசு கெடுபிடியின்போது அண்ணாச்சி எல்லோர்க்கும் ரகசிய தாக்கீது விட்டிருந்தார். அவரும் கூட ரகசியமாய் ஓய்வில் சென்னை ஆஸ்பத்திரியில் இருந்ததாகச் சொன்னார்கள். பெருமாளே பைந்நாகப் பாய் சுருட்டிக்கொண்டால் ஆழ்வார்கள், அடியார்கள், அடியார்க்கு அடியார்கள் போய் ஒளிந்துகொள்வது எங்கே?
ஆனால் வாழ்க்கை வேடிக்கை ஆனதல்ல. வினைகள் நிறைந்தது. நல்வினை, தீவினை, செயப்படுவினை, செயப்பாட்டுவினை..
இந்நாவலில் பம்பாய் வாழ்வு முறை, கிடைக்கும் உணவு, வரும் வருமானத்திற்குள் வாழ்க்கையைப் பொருத்திக் கொள்ளுதல், ஒருவருக்கொருவர் இயல்பாக உதவி செய்துகொள்ளும் பாங்கு அனைத்துமே ஒரு இயல்பில் தானாகச் சரிசெய்துகொண்டு நடந்துகொண்டிருக்கும் பாவனையில் எடுத்துச் சொல்கிறார்.
இந்நாவல், Against All odds என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது
நாஞ்சில் நாடன் சிறுகதைகள்
அன்று அமாவாசை. சின்னதம்பியா பிள்ளையின் மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. எனவே பழைய கஞ்சியைக் குடிப்பதற்குப் பதில், தன் பெண் வீட்டிற்குப் போய் அமாவாசைச் சாப்பாடு சாப்பிடலாம் என்று கிளம்பினார். முதலில் பெரிய பெண் வீட்டிற்குப் போனபோது அப்பா சாப்பிட்டு வந்துவிட்டார் என்கிற தோரணையில் பேசினாள். இளைய பெண்வீட்டில் சாப்பிடலாம் என்றால், ‘‘அக்கா வீட்டிற்குப் போனேன் என்று இளைய மகளிடம் கூறும்போது, “உங்கிட்ட எத்தனை நாளப்பா சொல்றது, வந்தா நேரே இங்கே வான்னு. நீ பாட்டுக்கு அக்கா வீட்டிலே சாப்பிட்டு, அப்புறமா இங்கே வாறே’’
“அது சரியில்லேமா…. அம்மாச்சியாட்டா…. இன்னிக்கு….”
“அம்மாச்சியானா என்னா? நானுந்தான் குளிச்சு முழுகிட்டு உல வைச்சேன். உன் விரதத்திற்கு என் வீட்டில் சாப்பிட்டா என்ன பங்கம் வந்திடுமாம்! இனி இப்படி வா சொல்லு கேன்…”
அன்பில் விளைந்த கோபம், அவரை எட்டியது. அடுக்களையில் காய்ந்த தேங்காய் எண்ணெய் பப்படத்தைப் போட்டதில் உண்டான சொர்…… என்ற ஒலி.
கிழவருக்குத் தோன்றியது. இன்னும் சாப்பிடலைன்னு இவளிடம் சொன்னால் என்ன? என்ன இருந்தாலும் மகள்தானே! பெற்ற மகளிடமுமோ கௌரவம் பார்ப்பது?
செருப்பால அடி, மருமகன் வேற இருக்கான். அப்படியென்ன பசி? மரியாதை கெட்ட பசி? அப்படி வயத்தை நிறைச்சிக்காட்டித்தான் என்ன?
மனம், வாதமும் எதிர்வாதமும் செய்தது. கிழவருக்கு அப்போதுதான் படீரென்று புத்தியில் உரைத்தது. ‘சே! எல்லாம் இந்தத் திருநீறால் வந்த வினை!’
ஆமாம், ஐம்பதாண்டு பழக்கம். குளித்துவிட்டு திருநீறணிந்து விட்டுத்தான் சாப்பிடுவார். நெற்றியில் துலங்கும் நீறுடன் அவர் வெளியே இறங்கிவிட்டால், பிள்ளைவாள் சாப்பிட்டாகிவிட்டது என்று பொருள். இது ஊர் மாத்திரமல்ல, அவருடைய உறவினர்களும் அறிந்ததொன்று. அதுதான் இன்று அவரைக் காலை வாரி விட்டுவிட்டது.
“குடிக்கக் கொஞ்சம் வெந்நீர் குடும்மா”. விரத நாட்களில் சாப்பாடாகிவிட்டால், இரவு பலகாரம் வரை அவர் வெந்நீர்தான் சாப்பிடுவது, ‘சாப்பிட்டாகி விட்டது’ என்று நிச்சயமாக்கப்பட்டுவிட்ட பிறகு அதிலிருந்து நழுவ முடியுமா? வெந்நீரை வாங்கிக் குடித்துவிட்டு பேரனின் கன்னத்தை ஒரு தட்டுத் தட்டிவிட்டு, “சரிம்மா, கீழத் தெருவில் ஒரு ஆளைப் பார்க்கணும், பாத்துட்டு வந்துடுறேன். நேரமானா அவரு வெளியே போயிடுவாரு” என்று சாக்குச் சொல்லி விட்டு, ஒன்றரை மணி வெய்யிலில் இறங்கினார்.
வெயிலையும் பொருட்படுத்தாமல் வேகு வேகென்று முக்கால் மைல் நடந்து வீட்டினுள் நுழைந்து, அடுக்களைக்குள் புகுந்து, பானையிலிருந்த பழையதைப் பிழிந்து வைத்து விட்டு, ஊறுகாய் பரணியைத் தேடிய சின்னத்தம்பியா பிள்ளையை, போர்த்திக்கொண்டு படுத்திருந்த அவர் மனைவி விசித்திரமாகப் பார்த்தாள்.
இதுதான் இவரது முதல் குழந்தை. 1975ஆம் ஆண்டு பிறந்தது. ஜூலைத் திங்கள் தீபம் இதழ் உலகிற்குக் காட்டியது. அவ்வாண்டு இலக்கிய சிந்தனைப் பரிசு பெற்ற ஊட்டமுள்ள குழந்தை. இதன் பெயர் ‘விரதம்’.
சின்னத்தம்பியா பிள்ளை, அவ்வூரை வளைத்து ஓடும் ‘தேரேகால்’ பற்றியும், அவர் குளித்ததைப் பற்றியும் விளக்கமாக ஒரு பக்கத்திற்கு மேல் அடுத்தடுத்து விளக்குகிறார். அது அகண்ட காவேரி அல்ல என்றாலும், மணலை அரித்துக்கொண்டு சலசலவென ஓடும் என்பதிலிருந்து, ஆனி அல்லது புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் பெய்யும் பருவ மழையில் நுங்கும் நுரையுமாகப் புரண்டோடும் புது வெள்ளத்தில் சிறுவர்கள் பாலத்திலிருந்து, புன்னை மரக்கிளையிலிருந்து ஊஞ்சலாடிக்கொண்டே பாய்ந்து விடுவார்கள் என்பது வரை அப்படியே விளக்கி எழுதியிருக்கிறார். கண்கள் பார்த்து,  மனத்தில் பதித்து வைத்ததை அப்படியே விவரிக்கும் பாணி முதல் கதையிலேயே வடிவெடுக்கிறது.
1977ஆம் ஆண்டு முடிவிற்குள் 15 படைப்புகள் வெளிவந்துவிட்டன. இவ்வாண்டு தீபம் டிசம்பர் இதழில் வெளியான ‘வாய் கசந்தது’ எனும் இவரது கதைக்கு இலக்கிய சிந்தனைப் பரிசு கிடைத்தது. தன் தந்தைக்காகத் தனயன் வயல் வேலையில் உதவி செய்ததைப் பற்றிய கதை இது.
“ஐயப்பன் படிக்கிற பையனானாலும் விவசாய வேலைகள் கொஞ்சம் கொஞ்சம் செய்வான். வயலுக்கு, அப்பாவுக்கு கஞ்சி கொண்டு போனால் ஏர் மெனக்கெடாமல் கை ஏர் பிடிப்பான். சால் அடிக்கும் முதல் ஏரோ, சால் பார்த்து “மூணேர்ச்சால்…பாதிக்குக் கிழக்கே நாலேர்ச்சால்…”என்று கணக்குச் சொல்லும் கழுத்து ஏரோ அல்லது “மேல மோடாங்கிலே ஒரு பொட்டு இருக்கு… நாலாஞ்சால்லே உழவில்லே…” என்று சொல்லும் பின் ஏரோ அடிக்க வராதே தவிர, இடையில் எந்த ஏரையும் திராணியாக அடிக்க முடியும்.
சனி, ஞாயிறு நாட்களில் அப்பா சூட்டடிக்கும் களத்துக்குச் சும்மாவாகவேணும் பார்க்கப் போனான் என்றால் வெண் பிணையலையாவது வாங்கி உற்சாகமாக, நாலு மடக்கு அடிப்பான். சூடடிக் களத்தில் எந்த வேலை ஆனாலும் செய்வான். பிணையடிக்க, கதிர் வாரிப் போட, வட்டம் உதற, படப்புக்கு வைக்கோல் எடுக்க, பொலி திரட்ட, பொலி வீச, பொலி சுமக்க என்று நேரம் கிடைக்கும் போது செய்வான்.
பொழுதுபோக்காக இதுவரை இது போன்ற வேலைகளைச் செய்திருக்கிறானே தவிர, முழு நேர வேலையாக ஐயப்பன் சூடடிக்கப் போனதில்லை.
ஐயப்பனுக்கு கால்கள் கடுத்தன. அதிகாலை இரண்டு மணியிலிருந்து மாடுகளுக்கு பின்னால் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தான். மணி நாலரை இருக்கும். யாராவது வந்து பிணையலைப் பிடித்து நாலு மடக்கு அடிக்க மாட்டார்களா? கொஞ்சம் உட்கார்ந்து எழுந்தால் போதும். ஆனால் வாய்விட்டு எப்படிக் கேட்பது?… பிணையலடிப்பதுதான் சூடடியிலேயே கடுமையான வேலையோ? பிறகு ஏன் பிணையலடிக்கும் பையன்களுக்கு அரை ஆளங்கொத்து கொடுக்கிறார்கள்?
…..
அப்பம் அரையாளுக்கு அஞ்சேகால் படியும் ஒரு சொரங்கை நெல்லும் கிடைக்கும்… உத்தேசமா.. அஞ்சரைப் பிடின்னு வச்சிக்கிட்டாலும் ரெண்டே முக்காப் பக்கா … பக்காவுக்கு எம்பது பைசா அப்படியான ரெண்டு ரூவாயும் இருவது பைசாவும்….
இரவு ஒன்றரை மணிக்கு எழுந்தது ஐயப்பனின் நினைவுக்கு வந்தது.
இப்படி இக்கதை முடிகிறது. சிறுவனின் உழைப்பு, பயன் சிறியது. மனம் வலிக்கிறது. பதைபதைப்பு… அய்யோ என்கின்ற உணர்வைக் கொணருகிறார்… ஒரு வயலில் உள்ள இறுதி வேலைகள் அனைத்தையும் இக்கதையில் ஒவ்வொன்றாக விவரிக்கிறார். நாமே அக்களத்திலிருந்து காணுவது போல் யதார்த்தமாக காட்சியாக்கப்பட்டிருக்கின்றது.
‘இடலாக்குடி இராசா’ என்றால் எல்லோர்க்கும் ஒரு இளக்காரம். வெள்ளாட்டு மறியைப் பார்த்தாற்போல், வாயால் புர்ர்ர்… என்று ஒலியெழுப்பி மருட்டும் விளையாட்டு. சிலருக்கு வண்ணாக்குடி கழுதையைக் கண்டது மாதிரி. முன்னங்கால் கறண்டையில் முறுக்கிய பணிப்பிரியால் கட்டு. உராய்ந்து உராய்ந்து முட்டிகளில் சதைத்த செம்புண் சான்காலில் ஒவ்வொரு முறை இடம் பெயர்கையிலும் முன்னங்கால்களைத் தூக்கித் தூக்கித் தத்தித் தாண்டும் பெட்டைக் கழுதையைக் கண்ட பரிதாபம்.
இவ்வாறாகத்தான் இடலாக்குடி இராசைவைக் காட்சிப்படுத்துகிறார் தன் ‘இடலாக்குடி இராசா’ என்னும் கதையில் நாஞ்சிலார் அவர்கள்.
இந்தக் கடவுளின் குழந்தையின் உணர்வோடு தெரியாமல் அவ்வூர்ச் சிறுவர்கள் விளையாடிய விளையாட்டைப் பற்றி அமைகிறது இக்கதை.
“யாரு சித்தப்பாவா? ராசாக்கு பசிக்கில்லா?”
“பசிச்சா…? அது கொள்ளாண்டே..,!”
“அப்பம் இராசாக்கு சாப்பாடு இல்லையா? ராசா வண்டியை விட்டிரட்டா… வண்டி விட்டிருக்கேன்…” வேறு நிறங்கள் ஏதும் இல்லாத அந்தக் குரலில் ஒலிக்கும் ஒரு ஏமாற்றம். குடலைச் சுண்டி இழுக்கும். தொண்டையில் ஏதோ அடைக்கும்.
“அட.. இருப்பா… சொரணையிலே கூடுனவன்தான், ஏவுள்ள ராசாவுக்கு என்னமாங் குடு…”
“ஆமா உங்களுக்கு அவன்கிட்ட என்ன பரியாசம்? சவம் இப்படி ஒரு பொறவி… கடவுளு படைச்சு விட்டுட்டான்…” சொல்லும் போதே அந்த ‘சித்திக்கு’ கண்ணீர் முட்டும்…
நீள நீளமான தலைவாழை இலைகள், ஏந்திய கைகளில் எவர்சில்வர் மூக்கனில் இருந்து தண்ணீர். தண்ணீர் தெளித்து இலையைத் துடைத்து… விளம்ப நின்ற ஐந்து பையன்களின் முகத்தில் குறும்பின் தெறிப்பு. உப்புப் பரல் வந்தது. துவட்டல் வந்தது. தயிர்ப் பச்சடி வந்தது. அவியல் வந்தது. எரிசேரி வந்தது. வந்தவன் எல்லாம் ராசாவின் இலையை மட்டும் விட்டு விட்டு விளம்பிச் சென்றான். பிரப்பிரம்மமாக ராசா இடமும் வலமும் பார்த்தான்.
நடப்பதைக் கவனித்த யாவரின் முகத்திலும் பிதுங்கி நின்ற சிரிப்பு, எப்போது வெடிக்குமோ என்ற தெறிப்பு… கறி வகைகள் வைத்து முடித்து பப்படம் போட்டு, ஏத்தங்காய் உப்பேரி வைத்து…
காது வைத்த செம்பு நில வாயில் சாதம் எடுத்து, பித்தளைக் கோடுவையால் பார்த்து, இலையிலையாக வைத்துக்கொண்டு போனான் ஒருவன். தன் இலைத் தாண்டிப் போனதும் இடலாக்குடி ராசா விளித்தான்.
“எண்ணேன்… ஏ எண்ணேன்… ராசாக்கும் போடாமாப் போறியே…”
பருப்புக்குப் பின்னால் நெய் வந்தது.
ராசாவின் முகத்தில் ஒரு பதைபதைப்பு அடர்ந்தது. “எண்ணேன்… ராசாக்கில்லையா? அப்பம் நான் வண்டியை விட்டிரட்டா…”
இதற்காகவே காத்துக்கொண்டிருந்ததைப் போல… “சோ”வென்று சிரிப்பு. ஒரே சமயத்தில் போட்டித் தெறித்த அலையாய் பந்தலின் கூரையைக் கிளப்பும் எக்காலி ஓசை…
ராசாவின் கண்களில்…
அவன் இலைக்கு ஒருவன் சாதநிலவாயை எடுத்து வருமுன்னால்… “அப்பம் நான் வண்டியை விட்டிடுரேன்…” சொற்கள் நனைந்து வந்தன.
திடீரென்று சிரிப்பு நின்றது.
‘விறீர்’ என்று எழுந்து நடந்தான் ராசா. யாருக்குமே சாப்பிடப் பிடிக்கவில்லை.
தீபம் ஏப்ரல் இதழில் 1978ஆம் ஆண்டு வெளிவந்த கதை இது. படித்தவுடன் “ஐயோ! போகாதேயேன்! வாடா! ப்ளீஸ்… சாப்பிட்டுப் போயேன்” எனக் கத்திக் கூப்பிடவேண்டும் என்ற உணர்வைக் கொடுக்கின்றது. அந்த வட்டார வழக்குச் சொல்லோடு அமைந்தது இன்னும் உயிர் கொடுக்கிறது சொற்களுக்கு.
மருமகள் மேல் உள்ள ஆங்காரம், அவளுடைய வாரிசையே அழிக்க வைக்கும் அளவிற்குச் செல்லும் மாமியாரின் ஆங்காரம், தந்தையின் ஏமாற்று வேலையைக் கவனிக்கும் தனயனுடைய மனசின் கிழிசல், என நாஞ்சில் நாடனின் கதைகள் வன்மையான உணர்வுகளை யதார்த்தமாகப் பதிவு செய்கின்றன.
“சற்று நீளமாக இருந்தாலும் காய்கறிக் குப்பைக் கூளங்கள் போடாத, கடலைமாவும் கஞ்சித் தண்ணியும் கலக்காக பூசணிக்காய் சாம்பார், இஞ்சி, பச்சை மிளகாய் வாசம் வீசும் தேங்காய் சட்னி, மசாலா ரோஸ்ட், ஆனியன் ரவா, நெய் மசாலா என்கிற ஜிகினா வேலையெல்லாம் இல்லாமல் காலையில் இட்லியும் ரசத்தில் ஊறிய பருப்பு வடையும், அவியல், துவரன், சாம்பார் ரசம், மோருடன் சோறு, சீசன் போல் நெல்லிக்காய், மாங்காய் அல்லது எலுமிச்சங்காய் ஊறுகாய், சாயங்காலம் பருப்பு வடை, உளுந்த வடை, தேநீர், இரவு புளித்த மாத்தோசை, பொரி கடலை சட்னி, மிளகாய்ப் பொடி, நல்லெண்ணெய்”
இவை கிடைக்குமிடம் நாஞ்சில் நாடனின் “சைவமும் சாரைப் பாம்பும்” கதையில் வரும், திருநெல்வேலி நாகர்கோயில் நெடுஞ்சாலையில் வள்ளியூர் தாண்டி, காவல் கிணறு தாண்டி, உயரம் உயரமான மூக்காக, அரக்கர்களின் அடில் வீச்சுகளைத் தாண்டி முப்பந்தரத்து இசக்கியம்மன் கோயில் தாண்டி, ஆரல்வாய்மொழிக் கோட்டை வாசல் ஓரம் சுப்பையா பிள்ளைவாள் காபி கிளப் ஆகும்.
இது நாஞ்சில் நாடன் அவர்களின் மொழிநடை வளத்தைப் பறைசாற்றி நிற்கின்றது. இவர் ‘பிராந்து’ என்னும் கதையில் ஆண்களின் ஆடை உடுத்தும் பாங்கினைப் பதிவு செய்கிறார்.
ஒற்றை வேட்டியும் தலைமுண்டும்தான் அங்குசீலம். வேலை நடக்கும் போது, வேட்டியைத் தார் பாய்ச்சிக் கட்டியிருந்தால் மற்ற சமயங்களில் மடித்துக் கட்டுவதுண்டு. வேலை செய்யும்போது தலையில் கட்டப்பட்டிருக்கும். துவர்த்து, பிற சமயங்களில் தோள் மீது கிடக்கும். ஒரு பக்கமாகவோ, இரண்டு பக்கங்களிலும் கண்ட மாலை போலவோ, கல்யாணம், சடங்கு, பால் காய்ச்சு, சீமந்தம் என்று போகும்போது வேட்டியும் துவர்த்தும் வெளுத்து மடித்ததாக இருக்குமே தவிர, வேறு விசேடமான ஆடை அணிகலன்கள் கிடையாது. கேடயம் போன்ற மோதிரங்கள், தவில் வித்வான் அணிவது போன்ற நீண்ட சங்கிலிகள், கடயங்கள் எதுவும் புகுந்திருக்கவில்லை. புகுந்திருந்தாலும்கூட சம்சாரி அதற்கெல்லாம் எங்கே போவான்? காதில் சிவப்புக்கல் அல்லது வெள்ளைக்கல் கடுக்கண்களை முதியோர் அணிந்திருந்தனர். பேனாக் கத்தி, வெற்றிலை என்று அவரவர் உபயோகம் கருதி, வேட்டியின் முந்தியில் இருந்தன. அவை அந்தப் பிரதேசத்தின் ஆடவர் அணிகலன்கள் என்று சொல்லலாம். தொளதொளத்த சட்டைகளை ஒரு சிலர் மட்டுமே தயங்கி அணிந்தனர். உத்தியோகம் பார்ப்பவர்க்கு வேறு வழியில்லை.
“சைவமும் சாரைப் பாம்பும்” கதையில் எளிமையாகத் தொடங்கும் இந்த சமரசம், “பிணத்தின் முன் அமர்ந்து தேவாரம்” கதையின் வழியாக வாழ்வின் நிர்பந்தங்களுடன் வசப்பட்டு விடுகிறது. இந்த நிர்பந்தம் எல்லை தாண்டும்போது ஏற்படுகிற மனச் சிதைவுதான் ‘சாலப் பரிந்து’ கதையில் அடைய நேர்கிற குரூரமான சமரசம். பெற்ற தாய் என்றாலும் கூட பயன் மதிப்பற்ற ஒரு சுமையாகக் கருத வைக்கிற நகர வாழ்வின் நெருக்கடிகள் அவளைக் கொலை செய்கிற அளவுக்கு மனிதனைச் சீர் குலைத்து விடுகிறது.
இந்தச் சீர்குலைவும் சமரசங்களும் மறு எல்லையில் பெருங் கருணையாகவும் சக மனிதனின் மீதான பரிவாகவும் ஒளியேற்கின்றன. இவ்வாறான கருணையும் பரிவுமே மலைப் பாதையில் சூடாகி நின்றுவிட்ட பேருந்து ஓட்டுநரின் உதவிக்காகக் குடி தண்ணீர் பாட்டில்கள் வேண்டி நிற்கிறது. காட்டுப் பாதையில் இருளில் சாலையை மெல்லக் கடக்கும் பாம்பு ஒன்றை “போ மகனே போ” என்று சொல்லி, காத்திருக்க வைக்கிறது.
அறம் சார்ந்த சீற்றமே சமூகக் கேடுகளுக்கு எதிரான நேர்மையான விமர்சனங்களையும் கொண்டிருக்கும் ஒரு படைப்பாளி தன் தோட்டத்தின் வழியே சென்றடையும் இடம் இவ்வாறான கருணையும் பரிவும் ஊற்றெடுக்கும் சிகரத்தைத் தவிர வேறெதுவாக இருக்க முடியும்” என்று எம்.பாலகிருஷ்ணன் ‘நாஞ்சில் நாடன்’ கதைகள்’ தொகுப்பில் பதிவு செய்கிறார்.
சூடிய பூ சூடற்க
1975ஆம் ஆண்டிலிருந்து 2005 ஆம் ஆண்டு வரை எழுதிய கதைகளைத் தொகுத்து, “நாஞ்சில் நாடன் கதைகள்” என்ற தலைப்பில், 80 கதைகள் கொண்ட தொகுப்பு ஒன்றும் வெளியானது “நியமத் தொழிலராய் நிறையும் ஞானத்து உத்தமர் உறங்கினார். யோகியர் இண்டிலர் என ஓய்வெடுத்து விட்டாரோ என்று எண்ணம் தலைப்படும்போது, 2007ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் பதினைந்து கதைகள் கொண்ட நூலாக சூடிய பூ சூடற்க தமிழினி பதிப்பகம் வெளியிட்டது. இதன் இரண்டாம் பதிப்பு 2009இல் வெளிவந்தது 2010ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் நாள் சாகித்ய அகாதமி விருது வழங்கப் போவதாக தெரிவித்தது. இதன் மூன்றாம் பதிப்பு, 2010ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் வெளிவந்தது. சென்னை புத்தகக் கண்காட்சியில் 3000 புத்தகம் விற்பனை ஆணை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் முதல் கதை, “கொங்குதேர் வாழ்க்கை”. இதில் லைன் வீடுகளைப் பற்றி விளக்கம் கொடுப்பதில் இவருக்கு இணை இவர்தான். லைன் வீடு எனில் முதலில் பத்துக்குப் பத்தில் ஒரு முறி. பத்துக்குப் பத்து எனும் போது இடைச் சுவர்களின் கனம் முக்காலடி வீதம் நீளவாக்கிலும் அகல வாக்கிலும் கழித்துக்கொள்ள வேண்டும். அதுவே வரவேற்பறை, ஹால், டைனிங், படுக்கை, பூஜை, விருந்தினர், ஓய்வு அறைகள். எப்பெயரிலும் அழைக்கலாம். எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் இறைவன் ஏகன் தானே!
அடுத்தது பத்துக்கு ஏழில். வீட்டின் ஒரு மூலையில் சமையலறையும் இன்னொரு மூலையில் மோரி அல்லது அங்ஙணம். ஙப் போல் வளை. அதில் பாத்திரங்களைப் போட்டுக் கழுவலாம். சுவரில் தொங்கிய கண்ணாடி பார்த்து முகம் வழிக்கலாம். பல் தேய்த்து, வாய் கொப்பளித்து முகம் கழுவலாம். சாப்பிட்டுக் கை கழுவலாம். மீன் முள் தொண்டையில் நின்றால், காறித் காறித் துப்பலாம், இரவு நேரங்களில் ஒன்றுக்குப் போகலாம். உட்கார்ந்து துணி அலசலாம்.
சமையல் மேடைக்கும் அங்ஙணத்துக்கும் நடுவில் சிமண்ட் தொட்டி மூடியுடன் அல்லது செல்வாக்குடைய குடித்தனக்காரர் எனில் டிரம் பக்கத்தில் குடி தண்ணீர் நிறைந்த பித்தளை அல்லது செம்பு அல்லது கருக்காத இரும்பு அண்டாக்கள். பிளாஸ்டிக் குடங்கள், போகும் சின்ன வாளி. வெந்நீர் போட அலுமினியக் குண்டான். அடுப்புக்கு பக்கவாட்டில் சற்று உயரமாக ஒரு ஸ்டான்ட். அதில் தட்டு, கரண்டி, தம்ளர், கிண்ணம், சின்ன டப்பா, பாட்டில், சுவரோடு சேர்ந்து ஒரு செல்ஃப். அதில் கடுகு, உப்பு, குருமிளகு, உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு, அரிசி, சீனி தேத்தூள், கோதுமை மாவு…
அடுப்புக்கு மேடைக்குக் கீழே வெங்காயம், உருளைக் கிழங்கு, பூண்டு கிடக்கும் கூடை, காய்கறிக் கூடை, அரிவாள் மணை, திருவலைக் குத்தி, முறம் எனும் சுளவு, பிரம்புக் கூடை, குக்கர், மிக்ஸி, சமையல் பாத்திரங்கள், இட்லிக் குட்டுவம், உட்காரும் மணை.
முன்னறையில் ஒற்றைக் கட்டில், சிறிய மேசை, அதன் மேல் டி.வி. அல்லது டேப் அல்லது டிரான்ஸ்சிஸ்டர். கட்டிலின் கீழே சுருட்டிய படுக்கை, இடுப்பளவு அல்லது முக்கால் சைஸ் பீரோ.
‘‘கன்பத் சக்காராம் நாத்ரே, பைங்கன் வாடி சுடுகாட்டில் சாம்பலாகிக் காற்றில் பறந்து மண்ணோடு மண்ணாகி மக்கிப் போகலாம் என்று காத்திருந்த கட்டத்தில், பஞ்சம் என்பது தாண்ட முடியாத வாழ்கிணறாக வழிமாற்றுதல் கிடந்தது. எல்லோருக்கும்தான். எனில் எதற்காகத் தன் மகன் பாகோஜி கன்பத் நாத்ரே சாவென தனது உயிரையும் மனைவியின் மகள்களின் உயிரையும் உமிழ்ந்தான். பூச்சி மருந்து வாங்கமட்டும் அவனுக்கு எங்கிருந்து காசு கிடைத்தது என்று தெரியவில்லை. தன்னை மட்டும் ஏன் விட்டுப் போனான்? உடைந்து உடைந்து பெருகியது கிழவனுக்கு… தன்னிலிருந்து தன்னை விலக்கி, தன்னைச் சேர்த்துத் தன்னை மாய்த்து….
“யாம் உண்பேம்” என்னும் கதையில் வரும் நாத்ரேயர் புலம்பல்களை எந்தத் திசையினால் என்ன? திசையற்றவனுக்கு எல்லாம் சொந்தத் திசை. நாத்ரே ஊர்விட்டுப் போகிறான். அதலாபாத் இரயில் நிலையத்திலிருந்து புறப்படும் இரயில், காய்ந்த தையல் இலையில் பொதியப்பட்டிருந்த சோள ரொட்டிகள். காணமாகச் கொத்தமல்லித் தழையும் தழைப்பும் வதக்கிய வெங்காயம் வேகவைத்து உதிர்த்த உருளைக்கிழங்கும் போட்டுப் புரட்டிய சப்ஜி, எண்ணெய் வதக்கிய நீண்ட காரணமாக பச்சை மிளகாய். சூடு, ருசி, சிவப்பு ஒரு அழகு என்பதாம் கொடுத்து வைத்தவர்களுக்கு பாபுராவுக்கு பசிக்கு ருசி வேண்டாம். நித்திரைக்குப் பாய் வேண்டாம். கால்துண்டு ரொட்டியும் கொஞ்சம் சப்ஜியும் இலையில் மீதம் இருந்தன. ஒரு துண்டு ரொட்டியை வாயில் போட போகும்போது,
“அமிகாணார்… அமிகாணார்”
எனக்குத் தா என்றல்ல “நான் தின்பேன்” என்றல்ல, நாம் உண்போம் என. தூய சங்கத் தமிழில் பெயர்த்தால் “யாம் ஊண்பேம்” என.
பிடுங்காத குறையாகக் கையிலிருந்து வாங்கிப் பொட்டலத்துடன் எதிர் இருக்கையில் உட்கார்ந்து கால்துண்டு ரொட்டியில் கால் துண்டை வாயில் போட்டு மெல்லானார் நாத்ரே. தன்னிடம் இருந்த தண்ணீர் போத்தலை அவரிடம் நீட்டினான் பாபுராவ். நாத்ரேயின் குரல், காதில் தகப்பன் சாமியின் உபதேசம் போல மிச்ச வாழ்க்கைக்கு மந்திரம் போல ஒலித்து கொண்டிருந்தது. “யாம் ஊண்பேம்”.
சிங் எனும் துணைப்பெயர் கொண்டவரெல்லாம் பஞ்சாபி என எண்ணிக்கொள்ள வேண்டாம். தன்ராம் சிங் பஞ்சாபி அல்ல. கேட்டால் அவன் தன்னைக் நேப்பாளி என்பான். அவர்களுக்கும் சிங் என்று துணைப்பெயர் உண்டு. ஆனால் உண்மையில் தன்ராம் சிங், திபேத்துக்காரன். நேப்பாளி என்று சொன்னால் வடநாட்டில் சமூக அங்கீகாரம் சற்று அதிகம் என்பதை உங்களுக்குத் தெரியச் சொல்கிறேன். நேப்பாளிகளுக்கு சற்று மேலான தோற்றப் பொலிவு உண்டு. தன்மையில் கூரான மறம் உண்டு. திபேத்துக்காரர்களும் வெள்ளை நிறம்தான், கண்கள் இடுக்கமானவைதான், முகத்திலும் உடலிலும் நிரப்பாக மயிர் வளர்வதில்லைதான். எனினும் நேப்பாளிக்கள் வேறு, திபேத்தியர்கள் வேறு.
கூர்க்கா வேலை செய்யும் யாரைக் கேட்டாலும் நேப்பாளி என்பார்கள். நேப்பாளிகளுக்கு அதில் சற்று மன வருத்தம்தான். ‘காஞ்சா’ என்று மாருதி கார் விளம்பரத்தில் வரும் சொல்லைக்கூட அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. தன்ராம் சிங்கை துளைத்துக் கேட்டால், ‘திபேக்’ என்பான். அவனுக்கு ‘திபேத்’ என்று சொல்ல வராது. ஒரு வேளை அவனது பிராந்திய மொழிக் கொச்சையில் ‘திபேக்’ என்றால் ‘திபேத்’தோ என்னவோ!
இதுதான் தன்ராம் சிங் பற்றிய கதையில் நாஞ்சில் நாடன் தரும் கூர்க்கா பற்றிய தகவல் வரும். நாடுவிட்டு நாடு வந்து, பாதி வாழ்க்கைப் பயணத்தில், மீதி வாழ்க்கை கடிதத்தில் வாழ்பவர்கள்.
அவனுக்கு ஊரில் ஒரு குடும்பம் இருந்தது. இருக்கத்தானே செய்யும்? பெண்ணும் இரண்டு பையன்களும், இரண்டாண்டுக்கு ஒரு முறை மட்டுமே ஊருக்குப் போய் வரும் அபாக்யவான் அவன்.
‘‘பதினைந்து, இருபது பேர் சேர்ந்துதான் பயணமாவார்கள். பம்பாயில் இருந்து வாரணாசி வரை ஒரு ரயில் வண்டி. இறங்கி வண்டிமாறி பாட்னா, பரூணி, மன்சி. மறுபடியும் வண்டி மாறி, மீட்டர் கேஜில் சிலிகுரி. அங்கிருந்து மலைப்பாதையில் மங்கன் வழி சிக்கிம் நான்கு மணி நேரமாகும். பிறகு மலைப்பாதையில் தலைச் சுமடாகவும் மட்டக் குதிரையிலும் பாரம் ஏற்றிக்கொண்டு எட்டு முதல் பத்து நாட்கள் வரை நடை. காலை எட்டு மணிக்கு மேல் பிற்பகல் நாலு மணிவரை மலைப் பயணம். மலைக் கிராமம் ஒன்றில் கிடை, ஆண்டாண்டு நடந்து பழகிய மலைத் தடம், பனிப்பொழிவு, பாறைகள், கொடுங்குளிர்… நமக்கு பொள்ளாச்சியில் இருந்து உடுமலைப் பேட்டை போக அலுப்பாக இருக்கிறது.
இரயிலிலும் முன்பதிவெல்லாம் பழக்கமில்லை. ஜெனரல் கோச்சில் சேர்த்தாற்போல தடுப்புகளில் இடம் பிடித்துக்கொள்வார்கள். பயணத்துக்கு சுட்டு எடுத்துப் போகும் ரொட்டி. அடுத்த ரயிலுக்குக் காத்திருக்கும்போது தேவைக்கு மறுபடியும் ரொட்டித் தட்டிக்கொள்வது. மலை ஏறும்போது இரவில் சுடும் ரொட்டிகள் பகலுக்கு.
வர்ண டிரங்குப் பெட்டிகளில் இரண்டு ஆண்டுகளாகச் சேகரித்த துணிமணிகள், வெள்ளி ஆபரணங்கள்… இந்திய நாணயம் அவர்கள் ஊரில் செல்லுபடி ஆகாது. என்றாலும் சின்னஞ்சிறு நகரங்களில் அதிகாரபூர்வமற்ற நாணயமாற்று செய்துகொள்வார்கள். பணம் அனுப்புவது, தபால்கள் அனுப்புவது எல்லாம் ஊருக்குப் போகும் குழுக்கள் மூலமாகத்தான்’’.
திடீரென்று கன்ராம்சிங் கூடவே கூர்க்கா உடையணிந்த பன்னிரண்டு வயதுப் சிறுவன் ஒருவரைக் கூட்டி வந்தான். பால்குடி மறந்தானோ, பள்ளிக்குப் போனானோ தெரிவில்லை. மகனாக இருக்கும் என்றால், ‘அமாரா ஜவாய் ஷாப்’ என்றான் கன்ராம்சிங், மகளுக்கு எப்போது திருமணம் செய்தாய் என்றேன். அந்த விடுமுறையில் போயிருந்தபோது என்றான்.
ஒருவேளை, புலம்பெயர்ந்து, கன்ராம்சிங் தென்னாட்டு தெருக்களில் இரவுகளில் கோல் தட்டி, விசில் ஊதித் திரிந்து கொண்டிருக்கக்கூடும். மாதத்தின் முதல் வாரத்தில், உங்கள் வீட்டின் முன்வந்து சிரித்தபடி நின்றால், அருள் கூர்ந்து அவனுக்கு ஐந்து ரூபாய் தாருங்கள் கனவான்களே! என்று இறைஞ்சிக் கேட்டுக்கொள்கிறார் ஆசிரியர்.
பூமிநாதன் அரசு அலுவலகம் ஒன்றில் கடைநிலை ஊழியன். அன்று அரசு விடுமுறை. கொடியேற்றும் நாள். காந்திப் படத்திற்கு சின்ன மாலை, கொடியில் வைத்துக் கட்ட உதிரிப் பூக்கள் வாங்க, பூக்கடையில் நின்றான். அக்கடை எதிரில் ஒரு தியாகியின் சிலை. அவர் எதிரே பெரியவர் ஒருவர் பாடிக்கொண்டிருந்தார். தியாகிகளைப் பாடுகின்றாரோ? நாட்டுக்காகப் பாடுகின்றாரோ! உலக நலத்திற்கா? தனக்காகவா? பூமிநாதனுக்கு புரியவில்லை. ஆனால் அவர் கண்கள் கசிவதைக் காண்கின்றான். இன்னொரு மாலை என்று கேட்கின்றான்.
மாலையைத் தியாகி சிலைக்குப் போடுவாரா? கண்மூடிப் பாடிக்கொண்டிருக்கும் பெரியவர் கழுத்தில் சூட்டுவாரா என்பதைக் காண, சாலைச் சரியாக ஆர்வமாக இருந்தது.. சூடிய பூ சூடற்க.
‘பழிகரப்பு அங்கதம்’ என்னும் கதையில் பயணத்திற்காக மட்டும் பாடும் பாடல்களின் இறுதி மரணத்தின் கோரம் அங்கதமாய் மிளிர்கின்றது. உண்மையான பரிகசிப்பாய்ப் படைக்கப்பட்டிருக்கின்றது.
கான் சாகிப்
கான் சாகிப்
இது, நாஞ்சில் நாடனின் சமீபத்திய சிறுகதைத் தொகுப்பு. மொத்தம் 17 கதைகள் கொண்டது. இத்துடன் இவருடைய கதைகளின் எண்ணிக்கை 112 ஆகும்.
ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் காமாட்சிநாதன். மனைவி தனபாக்கியம் கூடமாட ஒத்துழைக்க மலையம்மை வந்து போனாள். அவளது கணவன் கருநாகம் தீண்டி இறந்தபின் தனபாக்கியம் தான் அவருக்கு ஆதரவு. தனபாக்கியம் காலம் முடிந்ததும், காமாட்சி நாதன் தனியாக இருக்கத் தொடங்கினான். மலையம்மையின் உதவியை நிராகரித்து விட்டார். பிள்ளைகளைப் படிக்கவை என்றார். நேத்தைக்குச் செய்ததை நாளைக்கும் செய்வேன். அந்தக் கவலை வேண்டாம் என்று அவளிடம் கூறிவிட்டார். மூன்று மாதங்களுக்குப் பிறகு மலையம்மையை ஏதேச்சையாய் பார்க்க நேரிட்டது. கூட்டத்தில் மலையம்மை நடந்து வந்தாள். அவனைக் கண்டு, தலைகுனிந்து ஒதுங்கி, இரண்டு பிள்ளைகளும் வந்தன. காமாட்சி நாதனுக்கு உயிரோடு இருக்கும்போதே யாரோ கொள்ளி வைத்தது போலிருந்தது.
அன்றே மலையம்மையையும் பிள்ளைகளையும் வரச் சொன்னார். காமாட்சிநாதன். எல்லாம் வல்ல இறைவன் திருவருளால் மங்களகரமான 1183 ஆம் ஆண்டு… மலையம்மைக்கும் காமாட்சி நாதனுக்கும் தாழக்குடி ஜெயந்தீசர் & அழகம்மன் கோவிலில் திருமாங்கல்ய தாரணம் நடைபெற்றது. பந்துமித்தரர்களும் ஊர் முதலடிகள் இருபது பேர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திச் சென்றார்கள்.
முதல் கதையான பின்பனிக்காலம் குறிப்பிடும் நின்ற சொல்லர் காமாட்சி நாதன். மீன் விற்கும் கோம்பையின் ரோஷம், எக்காலத்திற்கும் அந்த ஊருக்கே போகா அளவு தீவிரமாகப் பேசுகிறது ‘‘கோம்பை’’ என்னும் கதை.
நாஞ்சில் நாட்டுக் கல்யாண சமையல், ஐயமிட்டு உண் கதையில் பதிவாகியிருக்கின்றது.
ஒரு காலத்தில் ஒரு செம்பு அரிசி வைத்தால் கடுக்கரை, ஆரல்வாய் மொழிக்காரர்கள், செம்புக்கு எண்பது பேரும் தேரூர், சுசீந்திரம், தாழக்குடிக்காரர்கள் செம்புக்கு நூறு பேரும், நகரவாசிகள் அனைவருக்கும் குறும வயிற்றுவலி என்பதால் செம்புக்கு நூற்றிருபது பேரும் சாப்பிடுவார்கள். ஒரு செம்பு என்பது ஏழு மரக்கால் அரிசி. அதாவது இன்றைய கணக்கில் முப்பத்தைந்து கிலோ. இன்று யாரும் செம்புக் கணக்குப் பார்ப்பதில்லை. ஒரு செம்பு என்பது இருபத்தைந்து கிலோ கொண்ட டொப்பி புழுங்கலரிசிப் பை என்றாயிற்று. வைப்புக்காரன் தாழக்குடி சாத்தாங்குட்டிப் பிள்ளை சொன்னார். ஒரு பை அரிசி போட்டால் இருநூறு பேர் சாப்பிடுவார்கள் என்று, பத்துப் பை பொங்குவது என உறுதியாயிற்று. தேங்காய், காய்கறிகள், பழக்குலை, இலைக்கட்டு, வெஞ்சண சாமான்கள்…
அவியல், துவட்டல், எரிசேரி, பச்சடி, கிச்சடிகள், உப்பேரி, ஆனைக்கால் பப்படம், பருப்பு, சாம்பார், புளிசேரி, ஒலன், ரசம், சம்பாரம், கதலிப்பழம் அடக்கம் இருபத்தி ஒன்று கூட்டான்கள். சமையல் தனித் தேங்காய் எண்ணெயில். தேவைக்கு மட்டும் நெய்யும் நல்லெண்ணெயும். சிறுபயிற்றம் பருப்பு பிரதமன், சக்கைப்பழம், பருவகாலம் இல்லை என்பதால் ஏத்தன்பழம் பிரதமன், போளியுடன் பாலடைப் பிரதமன். வடக்கு மலையின் தாட்டு இலை. சம்மணம் போட்டு உட்கார்ந்தால் தொடை முட்டுக்கு முட்டு சரியாக இருக்கும். இன்று எந்தப் பந்தியிலும் பந்திப்பாய் விரித்த தரையில் அமர்ந்து எவரும் சாப்பிடுவதில்லை’’.
எண்ணல்களின் நீட்சியால் சிவஅணைஞ்சான், தன் மூச்சைக்கூட எண்ணும் அளவிற்குப் போய், பித்தனாய் ஆகிவிட்ட கதை ‘எண்ணப்படும்’! எண்ணல்களுக்கு இவ்வளவு தீவிர பாதிப்பு உண்டா என்று நமக்கே பிரமிப்பையும் திகைப்பையும் தருகிறது.
“யாவர் வீட்டு முற்றத்து நின்றும் கண்ணுக்குத் தெரியாத தடம்
ஒன்று ஓடுகிறது கப்ருஸ்தானுக்கு.
– உருது கவிதை.
கான் சாகிப், இந்தியாவிலிருந்து தோல் இறக்குமதி செய்கிற ஐப்பான் நிறுவனம் ஒன்றுக்கு பம்பாய் முகவர். தீவிர உருதுக் கவிதை வாசகர். இவன் அடிக்கடிக் கூறும் ஒரு கவிதைதான் மேலே கூறிய கவிதை.
ஆசிரியர் தன் சொந்த வாழ்வில் குறுக்கிட்டு, பாதித்து, கடந்தும் போன கான் பற்றி இவண் பேசுகிறார். இஃதோர் சிறுகதைப் புனைவா எனில் ஆம் ஆம் என்றும் இதுவோர் தன் வரலாற்றில் குறிப்பா எனில் ஆம் ஆம் என்றும் கூறலாம் என்கிறார் ஆசிரியர்.
கான் சாகிபின் அம்மா, அவருடைய அப்பாவுக்கு இரண்டாம் தாரம். ஆம்பூரிலும் இராணிப்பேட்டையிலும் சென்னையிலும் வர்த்தகம். நல்ல செல்வந்தர். எதிர்பாராது தகப்பன் மரணம். சொத்துகள் யாவும் முதல் தாரத்து மக்களுக்குப் போய்விட்டன. பி.காம். படித்திருந்த கான்சாகிப், தோல் மண்டிக்கு வேலைக்குப் போனார். ஆட்டுத் தோல் உப்பிட்டது, பதப்படுத்தியது எனத் தொழில் கற்றுக்கொண்டார். இது முன்கதைச் சுருக்கம். அவருக்கு இருபத்திரண்டு வயதிலேயே திருமணம் ஆகிவிட்டிருந்தது. ஆங்கிலம் போதிக்கும் மனைவியும் இரு மக்களும். எனக்கோ பம்பாய்க்கு பெண் தரத் துணியாத வெள்ளாளக் குடும்பங்கள் தப்பிக்கொண்டிருந்தனர்.
ரமலான் நோன்பு தினங்களில், இஃப்தார் நேரத்தில் கம்ஃபர்ட் ஓட்டலுக்குப் போவேன். தொழுகை முடிந்து எனக்காகக் காத்திருப்பார். தாராவில் இருந்து சைக்கிளில் நோன்புக் கஞ்சி வரும் இருவருக்கும் சேர்த்து. ஒருவேளை அந்த நோன்புக் கஞ்சிதான் இழுத்துக்கொண்டுபோய் நிறுத்திற்றோ? ஒன்றிரண்டு முறை நோன்பு தொடங்கும் ஸகரின் போதும் உடன் இருந்திருக்கிறேன்.
நோன்பு நாட்களில், இரவு முழுக்க, பம்பாயின் பிரதான பள்ளிவாசல்களைச் சுற்றிலும் கல்யாணக் கோலமாக இருக்கும். எத்தனை வகை, எத்தனை வாசம், எத்தனை நிறம், எத்தனை சுவை?
எனக்குக் காதுக்குள் பாடுவது போலிருக்கும், மதுரை சோமு. பம்பாய் சண்முகானந்த சபாவில் கேட்டது.
“ஓ ராம நீ நாமம் ஏமி ருசி?
ஏமி ருசிரா ராமா நீ எந்து ருசி”
பத்ராச்சல ராமதாசர் காசித்யம், பூர்வி கல்யாணி ராகம், இராமனின் சுவையை வியந்து, வியந்து பாடியது. ஆழ்வாரின் மனோபாவம் தான் – ‘உண்ணும் நீர், தின்னும் வெற்றிலை யாவும் நாராயணா எனும் நாமம்’. இரவு முழுக்க பார்த்தும் கேட்டும் வாசனை பிடித்தும் தின்றும் நடக்கையில் யாரோ மகான் ஒருவர் சொன்னது போல – இறைவன் ஏழைகளுக்கு ரொட்டி வடிவில் வருகிறான். பசித்தவனுக்கு உணவும் இறையனுபவம் தான். ஆனால் அதைப் பசித்தவன் மட்டுமேதான் பெறவும் இயலும்.
கான் சாகிப் கையில் காசிருந்தால் என் பைக்குள் என் கை போகாது. அவர் கையில் காசில்லை எனில் என் சீசன் டிக்கட் முதற்கொண்டு அடமானம் தான்.
அந்தக் காலத்தில் அலுவலகம் போகும்போது என் கையில் எப்போதும் ஒரு ரெக்சின் பை இருக்கும். பம்பாயில் தமிழ்ப் பார்ப்பனப் புரோகிதர் பலரும் வைத்திருந்தது போல. ரெக்சினுக்கு தீட்டுக் கிடையாதாம். விளையாட்டாகக் கான் சாகிப் அதைத் தூக்கி விசிறுவார். அதனுள் பெரும்பாலும் ஒரு புத்தகம், ஒரு பருவ இதழ், டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ், மதியம் சாப்பிட என ஏதும் கொண்டு போனால் அலுமினிய கன செவ்வக டப்பா.
ஒருநாள் ஓட்டல் அறைக்குப் போனபோது, தோளில் தொங்கப் போடும் விதத்தில், 14 x 10 அங்குல அளவில், தோற்பை ஒன்று எடுத்து முன்னால் எறிந்தார்.
“சுத்தமான பக்ரி கா சம்டா! எக்ஸ்போர்ட் குவாலிட்டி. தையல் கூலி மாத்திரம் நூற்றைம்பது கொடுத்தேன். பிக்காரி ஸாலா, இனி அந்த ரெக்சின் பையைக் கடாசு”.
என் தோளுக்கு அந்தப் பை வந்து, முப்பதாண்டுக்கும் மேலாயிற்று. எழுத்தாள, வாசக நண்பர்கள் கவனித்து இருக்கக் கூடும், என் தோளில் தொங்கியதை. தருமமிகு சென்னையில் வலப்பக்க விலாவில் நீளமாக பிளேடு போட்டான் ஒருவன். அண்ணன் அதைத் தைத்துக் கொடுத்தார். கோவை வந்த பிறகு ஒரு முறை மராமத்து செய்தேன். என்னுடன் அந்தத் தோற்பை, மராத்தியம், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், சோனார் பங்களா, ஆந்திரம், கர்நாடகம், கோவா, தேனிருந்து மழை பொழியும் தீந்தமிழ் நாடு, கடவுளின் சொந்த தேசம் கேரளம், பாண்டிச்சேரி என பல்லாயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்திருக்கிறது. சுக்காய்க் காய்ந்த முரல் கருவாடு, காஜூ ஃபென்னி, சத்யஜித்ரேயின் பதேர் பாஞ்சாலி வீடியோ கேசட் எனப் பலவும் சுமந்திருக்கிறது. கண்டக்கடர் பை என நண்பர்கள் பகடி செய்திருக்கிறார்கள்.
காலம் என்பது கறங்கு, காட்டு நடை, மழைப் புயல், கொடைக்கானல் காண செய்துவிட்டு சென்னை வந்தார். நான் கோவைக்குப் பெயர்ந்தேன். கடைசியாகக் கடைசி என்று தெரிந்திராமலேயே பெரியமேடு போனபோது அவரது குடும்பமும் இருந்தது. பி.காம். படிக்கிற மகன். பத்தாவதில் மகன். வாரம் இரண்டு டயாலிஸிஸ்”, ஒப்பில்லாமல் உணவு, குறைந்து குடிநீர் என்று போய்விட்டது மனது. கையறு நிலையில் இரு கைகளை நீட்டி குதாவிடம் வாழ்நாள் யாசித்து நின்ற ஜீவன்…
இருவருக்கும் கண்கள் கலங்கின. நாட்கள் எண்ணப்பட்டு விட்டனவா எனக் குடும்பத்தினருக்கும் உள்மனம் ஓங்கி ஒலித்தது. அவர் அடிக்கடி சொல்லும் கவிதை வரியொன்று – ‘யாவர் வீட்டு முற்றத்து நின்றும் கண்ணுக்குத் தெரியாத தடம் ஒன்று ஓடுகிறது கப்ரூஸ்தானுக்கு’.
வழக்கம் போல் தோள் தழுவி “குதா ஹாஃப்பீஸ்” சொல்லி விடை கொடுத்தார். இருவர் புறமுதுகிலும். சொட்டி நானைத்த சோகத் துளிகள். திரும்பிப் பார்க்காமல் நடந்தேன். புறப்படு வெள்ளை இளநீல ஒற்றைக் கோடுகள் போட்ட புதிய சங்கு மார்க் லுங்கி ஒன்று தந்தார்.
அதன் பிறகு கான் சாகிபை நான் பார்க்கவில்லை. உயிருடனோ, மையத்தாகவோ!
அந்தக் தோற்பைக்கும் முப்பத்திரண்டு வயது ஆகிறது. ஓரங்கள் வெளிறி, நைந்து, தையல் விட்டு, உள்ளே நட்டக் குத்தற போடுகிற பேனா ஒழுகிக் கீழே விழுந்து விடுகிற அளவு நான்கு மூலைகளிலும் ஓட்டைகளுடன்.
எல்லோரும் எறிந்து விடச் சொல்கிறார்கள். ஆனால் புறத்தோ, ஸ்தூலமாய் நான் சுமக்கும் கான் சாகிப் அது. போன வாரம், கோவை – ராஜவீதி அஞ்சு முக்கில், தோற்பைகள் பெட்டிகள் சீர்திருத்தும் கடையொன்றில் முன் நின்றிருந்தேன். தோள் பையைக் காட்டி, அதைப் பிரித்து வெட்டி, சின்னதாகவேனும் ஒரு பவுச் செய்து தரமுடியுமா எனக் கேட்டேன். அடுத்த வாரம் வரச்சொல்லி இருக்கிறான்’’.
ஆனந்த விகடன் தீபாவளி மலர், நவம்பர் 2010இல் வெளியானது இக்கதை. கான்சாகிபின் ஓவியம் பக்கத்தில் அமர்ந்திருக்கும் தோள் பையும் மிகவும் உயிரோவியமா£ய் உணர்வுக் காட்சியாய் கவர்ந்திழுக்கும்.
இயல்பாய் அமைந்த உறவு. யாரும் மெனக்கெட்டு ஒருவருக்காக காத்துக் கிடந்த உறவு இல்லை. தானாக வளர்ந்த உறவு. உன்னதமாய் வளர்ந்த உறவு. எதிர்பாப்பு இல்லா நட்பு.
நாஞ்சில் நாடனின் கதைகளில் ஒரு பகுதியாய், கும்பமுனிக் கதைகள் இருக்கின்றன. அவை அங்கதம் நிறைந்தது. அதன் கதாநாயகன் கும்பமுனி. உதவியாளன் தவசிப்பிள்ளை கண்ணுப்பிள்ளை இவருரின் உரையாடலில் எழுத்துலகத்தைப் பற்றிய கடும் விமர்சனம், சமுதாயத்தைப் பற்றிய எகத்தாளமும் நிறைந்திருக்கின்றனது. கிண்டலின் உச்சமாய் விளங்குகிறது. இவரைப் பற்றி ஆசிரியர் பின்வருமாறு கூறுகிறார்.
‘‘சமூகம் எனும் பாற்கடலில் கரந்திருக்கும் படர்ந்திருக்கும் மிச்ச நஞ்சைத்தான் கலைஞன் அவனவன் பலத்துக்கும் பொறுமைக்கும் தக்க கடைந்து உண்டு கொண்டிருக்கிறான். அது மனித குலத்தை நஞ்சிலிருந்து காக்கும், மீட்கும் முயற்சி. சில போதுகளில் படைப்பில் துளிகள் கலந்து வந்துவிடுவது, அவனது கவனக் குறைவினால்தான். உங்களை வந்தடையும் அந்த விடத்தின் கசப்பைப் பிரித்தெடுத்து உமிழ்ந்து விடலாம், அல்லது உண்டு, படைப்பாளி கொள்ளும் பேரவலத்தின் சிறு பங்கைப் பாவிக்கவும் செய்யலாம்.
சில சமயம் தோன்றுகிறது, கண்டத்தில் சிக்கிக்கொள்ளும் கசப்பை விழுங்க ஒண்ணாமல் உமிழ்ந்து விடுகிறேன் என. அதற்காகவே தேர்ந்த கதாபாத்திரம் கும்பமுனி. கும்பமுனி என்பவர் நேற்றைய நான், இன்றைய நான், நாளைய நான். உங்களைக் குலுக்கிச் சிரிக்க வைக்கவோ, குதூகலப்படுத்தவோ, நானொரு நகைச்சுவை எழுத்தாளன் அல்லன்’’.
வேறு சில நண்பர்கள் சொன்னார்கள், சமீப காலமாய் எனது கதைகளில் கட்டுரைத் தன்மை வெளிப்படுகிறது என.
“கடல் ஞாலம் செய்தேனும் யானே என்றும்
கடல் ஞாலம் ஆவேனும் யானே என்றும்”
எனும் திருவாய்மொழி ஞாபகம் வருகிறது எனக்கு. எல்லாம் அறிந்து செய்கிற வேலைதான். கட்டுரைகளும் கதை போல வாசிக்கப் பெற வேண்டும் எனும் கொள்கை உடையவன் நான். மேலும் கதைக்கும் கட்டுரைக்குமான ஆளுயரத் தடுப்புச் சுவர் இற்றும் இடிபட்டும் சிதிலமாகியும் வருகிறது தற்சமயம். எனினும் வாசிப்பு அனுபவத்துக்கு அது ஊறாக இருக்கிறது எனில் பிழை பொறுக்க!
இவர், தன்னுடைய கும்பமுனிக் கதைகளைத் தனித் தொகுப்பாகவே வெளியிடலாம்.
“ஆத்மா – இது இவருடைய 113ஆவது கதை. ஆசிரியர் பாணியில் சொல்லப் போனால் இது ஒரு கணக்குக்கு எனது முதல் கதை எனலாம். ஆனந்த விகடனில் 23.2.2011 இதழில் வெளிவந்தது. மாருதியின் ஓவியம் அழகு சேர்க்கிறது. கதாநாயகனின் பெயருக்கே பெரிய வியாக்கியானம் கொடுக்கிறார். இதில் ‘பீதாம்பார் அவர் பெயர். பாண்டுரங்கத் நாத்ரே அவரது பெயர். நாத்ரே என்பது குலப்பெயர்’ என்று நீண்டு கொண்டு செல்கிறது. நாத்ரேக்குத் தனிக்குடித்தனம் இரு பிள்ளைகள் இருந்தும் இந்த நிலை. தனது 84ஆவது வயதில், ஒரு காலைப் பொழுதில் 6 மணியளவில் தண்ணீர் பருக எழுந்த போது கிர்ரென்று தலைச்சுற்றியது. அவருக்குப் புதிய அனுபவமாக இருந்தது. வியர்த்துக் கொட்டியது. மேலும் மேலும் எடையேற்றியது போல் இறுதி மார்வலித்தது. நாத்ரேக்கு நிலைமை புரியாமல் போயிற்று. கதவைத் திறந்து வைக்கலாம் என அடி எடுத்து வைக்கும்போது, சோபாவில் சரிந்து விடுகிறார். சொர்க்கம் அல்லது நரகம் நோக்கிய கடைசி காலடி.
இக்கதை அவரது தனிமை வாசம் பற்றியது. அவருக்குப் பிள்ளைகள் இருந்தும் இப்படித் தனியாய் வந்த கதை பற்றியது.
நாத்ரேயின் உடல்குளிர ஆரம்பித்தது. இனி அவரவர் அலுவலகம் தொழிற்கூடம், பள்ளி, கல்லூரி எனக் கரைய ஆரம்பித்து, காலைப் பொழுது, இன்றோ, நாளையோ கூடக் காலை மாமாவை, அண்ணாவைக் காணோமே என எவருக்கோ தோன்ற, கனத்த பிண நாற்றம் காற்றில் பரவ, மூன்று நாட்கள் ஆகலாம், இறந்து கிடந்த நாத்ரேயின் பிணம் அழுக ஆரம்பிக்கும், நாற்றம் வரும் திசை நோக்கி வருவது மூலம் உணர்ந்து போலீசுக்குச் சொல்லி, கதவை உடைக்கலாம். அவரது ஆத்மாவுக்கு அதன் பின் சாந்தியும் கிடைக்கலாம்.
நாஞ்சில் நாடனின் நாவல்கள், சிறுகதைகள் விஸ்தாரமாய்த்தான் தொடங்குகின்றன. அதனால் நுட்பமனத் தகவல்கள், அடுத்தடுத்து அடுக்கிக் செல்லும் பாங்கு, சூழலை கட்டமைக்கு வீதம், நாஞ்சிலின் மண் மணத்தையும் மொழியின் வளத்தையும் கூறிச் செல்லும் நேர்த்தி, யதார்த்தமாய், கொஞ்சம் கூட வார்த்தைகளை வீணாக்காது, பம்பாய் வாழ்க்கையையும், நாஞ்சில் நாட்டையும் பற்றிய விவரங்கள், வாழ்வின் வலிகள் மிகைப்படுத்தாது அப்படியே அள்ளி வைத்த வகை எனத் தன் படைப்புகளை அவருக்கென உள்ள பாணியில் எடுத்துச் செல்லுகிறார்.
“உந்தித் தீயின் வெம்மையும், நாவின் சுவை மொட்டுகளில் சுடர்கிற அதன் தன்மையுமாய் வசப்படுகிற கதையுலகம் மொத்தமும் எளிய கிராமமொன்றின் கணக்கற்ற காட்சிகளாக விரிகின்றன. நிழலும் இருளுமாய் மனித வாழ்வின் கீழ்மைகளும் அவலகங்களும் ஊடாட, நாஞ்சில் நாடன் எனும் கதைசொல்லியின் கறாரான குரல் ஒலிக்கிறது.
இல்லாமைக் கண்டு வருந்தியும், தன் பசியாறி பிறர் பசி மறுப்போரின் கடமையை நொந்தும், தினம் மாறும் குணம் கொண்டோரைக் கண்டு வெகுண்டும் கதை பேசுகிறது. எண்ணி நகையாடியும் எடுத்தெறிந்து பேசியும் முகத்திலறைந்தும் முணுமுணுத்தபடியும் தொடர்கிறது. காட்சிகள் மாறுகின்றன. முகங்களும் மாறுகின்றன. நிலமும் நீள்விசும்பும் வேறாகி திரைகள் விழுந்தும் விரிந்தும் கதையாடல் நடந்தபடியே இருக்கிறது. அந்தக் குரல் மட்டும் தன் கதியால் நடுவாண்மை பிசகாது எவரும் அஞ்சாது, யாவற்றையும் உரசிப் பார்த்து, உள்ளதை உள்ளபடி சொல்கிறது. மெல்ல மெல்ல அந்தக் கதை சொல்லியின் குரலே காலத்தின் குரலாகவும் அறத்தின் குரலாகவும் ஒலிக்கத் தொடங்குகிறது.
என்கிறார் எம். பாலகிருஷ்ணன் (நாஞ்சில் நாடன் கதைகள் – மதிப்புரை)
 

8 Responses to நாஞ்சில்நாடனின் கதைகளின் சுருக்கம்

  1. R.BALAN சொல்கிறார்:

    varadhu vandha mamanidhan

  2. kanagaraj.k சொல்கிறார்:

    nanjil nadanaip purinthu kolla oru arumaiyana vayppu

  3. நாஞ்சில் நாடனின் படைப்புகளை என் போன்றோர் அறிந்துகொள்ள உதவும்

    நல் முயற்சி

    வாழ்த்துகள்

  4. muthukaruppan சொல்கிறார்:

    nanum oru nanjilnadanthan en vailirthenlvil nadantha ovoru nihalvm avar eluthil kanden mei s

  5. சுப்ரமணிய பிள்ளை சொல்கிறார்:

    மழையில் நனைந்த மத்தளம் கொட்ட, கீறி உடைந்த வரி நாதம் நின்றூத, அண்ணன் மாமனார் கைத்தலம் பற்ற……. நீலவேணி டீச்சர் என்ற சிறுகதையின் வரிகளை என்றும் மறக்க முடியாதவை.

  6. R. சங்கர் சொல்கிறார்:

    //பெற்ற தாய் என்றாலும் கூட பயன் மதிப்பற்ற ஒரு சுமையாகக் கருத வைக்கிற நகர வாழ்வின் நெருக்கடிகள் அவளைக் கொலை செய்கிற அளவுக்கு மனிதனைச் சீர் குலைத்து விடுகிறது.//

    ஐயா, இந்த கதையின் பெயர் மற்றும் வெளிவந்த தொகுப்பின் பெயர்?

    நன்றி.

R. சங்கர் க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s