நாஞ்சில்நாடனின் “முத்துக்கள் பத்து”
நாஞ்சிநாடன் “முத்துக்கள் பத்து” குறித்து திலகவதி
(நாஞ்சிநாடன் “முத்துக்கள் பத்து” கதைகள் குறித்து திலகவதி எழுதிய முன்னுரை)
நாஞ்சில் நாடன் புத்திலக்கியப் படைப்பாளிகளின் பொதுவான போக்கிலிருந்து வேறுபட்ட தன்மைகளும் குணாம்சங்களும் கொண்டவர். சன்னதம் கொண்ட எழுத்து அவருடையது. கதைக் கருவின் ஆன்மாவைக் குறித்துத் தெளிவுற அறிந்திருந்தாலன்றி அதுபற்றி எழுதத்துணியாத இலக்கிய நேர்மை கொண்டவர். நாஞ்சில் நாடன் தமது படைப்பில் கதாபாத்திரங்களை வார்ப்பவர் அல்ல. அசல் மனிதர்களைப் படைப்பவர்.
“சிறுகதையின் வேகங்கள் வீச்சுகள், சரிவுகள், எழுச்சிகள் ஆகியவற்றைப் புரிந்து கொண்டு அந்த மீடியத்தைக் கையாள முடியும் என்ற நம்பிக்கையில் எழுத முற்பட்டேன்” என்று கூறும் நாஞ்சில் நாடன் தம் முயற்சியில் முழு வெற்றியும் பெற்றவர்.
நாஞ்சில் நாடனின் படைப்புகளை வட்டார இலக்கியம் என்று விமர்சகர்கள் வகைப்படுத்தலாம் அது சரியானதாகவும் இருக்கும். வட்டார இலக்கியத்தைப் படைத்து அதன் மூலம் தமிழ் இலக்கியத்தின் அப்பிரிவுக்குள் தம் பெயரை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக, என்பதற்காகவே படைக்கப்படுவதல்ல நாஞ்சில் நாடனின் படைப்புகள். வேர் கொண்ட அசல் மனிதர்களை படைக்கும் அவருடைய படைப்புச் சன்னதத்தின் விளைவாகும் படைப்புகள் அவை. மண்வாசனை கமழும் அந்த மொழியும் எழுத்தில் உருவாகும் ஜீவ உலகமும் படைப்புகள் காட்டும் அசல் மனிதர்களும் நாஞ்சில் நாடனின் தனிச் சிறப்புகள்.
நாஞ்சில் நாடனின் படைப்புகள் அவர் சித்தரிக்கிற மண் பரப்பின் வாழும் மனிதர்களிடையே புழங்கும் பேச்சையும் சொலவடைகளையும் பெய்து எழுதப்பட்ட சொற்சித்திரங்களல்ல. அந்த மனிதர்களின் ஜீவ உலகத்தை, உள் உலகத்தை, ஆன்மாவைச் சித்தரிப்பது. நாஞ்சில் நாட்டின் மண்ணுடன் படைப்பாளியின் உதிரப்புனலும், உள்ளுணர்வும், படைப்பாற்றலும், சொல்லாளுமையும் பிசைந்து கலந்து உருவானவை அவர் படைப்புகள்.
நாஞ்சில் நாடன், உத்திகளை முன்வைத்து அவற்றின் சட்டகங்ளுக்கு ஏற்ப தன் படைப்புகளையும் வார்த்தெடுப்பவர் அல்ல. தனக்கும் தான் வாழ்கின்ற காலகட்டத்துக்கும் தான் அறிந்த மண்ணுக்கும் நேர்மையாக இருத்தலே நாஞ்சில் நாடன் மேற்கொள்ளும் உத்திமுறை. ஒளி சிந்தும் எழுத்துலகம் அவருடையது. அதற்குக் காரணமாக இருப்பது அவர் மானுடத்தின் மீது கொண்டிருக்கும் மாறாத அன்பு.
இந்த அன்பே அவரை ஒரு போராளியாக ஆக்கியுள்ளது. மனிதனுக்கு ஏற்படக்கூடிய பலவிதமான சிக்கல்களுக்கும் எதிராகக் குரல் எழுப்புகிறது. அவர் எழுத்து சாதி, மதம், பணம், படிப்பு, ஒழுக்கம், அரசியல் என்று எந்தக் காரணத்தில் அந்தச் சிக்கல் ஏற்பட்டிருந்தாலும் அதை எதிர்க்கிற, பதிவு செய்கிற போர்க் குரல் எழுப்புகிற படைப்புகள் நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள்.
தனிப்பட்ட முறையில் எனக்கு நாஞ்சில் நாடன் எனும் எழுத்தாளர் மீதும் மனிதர் மீதும் ஏற்படும் அபிமானத்துக்கும் மரியாதைக்கும் காரணமாக இருப்பது மண்பரப்பின் பேராலோ ஜாதியின் பேராலோ குழுவை உருவாக்கி அதன் கதகதப்பில் இதம் காணா எழுத்தாண்மையுடன் தனித்து நடை போடுபவர் என்பதே. ஜாதியெனும் குடையின் கீழ் பாதுகாப்புத் தேடும் ஜாதியெனும் கவசத்தை பயன்படுத்தக் கூசும் மேலான பண்புதான்.
நாஞ்சில் நாடனை சந்தித்த ஒரு தருணத்தில் நான் அவரிடம், நகைச்சுவை உணர்வு பொங்கும் உங்கள் கதைகளின் ஊடாக ”நம்பிக்கையின்மை என்றில்லா விட்டாலும், எப்போதும் ஒரு கசப்புணர்வு தொடர்ந்து பதிவாவது ஏன்” என்றேன். “ஏனென்றால் நாம் வாழும் உலகமும், சந்திக்கும் வாழ்க்கையும் அத்தகையதாகத் தானே இருக்கிறது.” என்றார் நாஞ்சில் நாடன். உண்மையாக இருத்தலையே உத்திமுறையெனக் கொண்ட ஒரு நேர்மையான எழுத்தாளரின் உள்ளார்ந்த உணர்வென நான் அதை அடையாளங் கண்டேன்.
தன் படைப்புகளின் தரத்தினால் காலங்கடந்து நிலைத்திருக்கக்கூடிய நாஞ்சில் நாடன் அவர் வாழும் காலத்திலேயே புறக்கணிக்கப்படும் வேதனை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. விவாதங்களிலும் சர்ச்சைகளிலும் விலகி இருப்பதும், சினிமா மற்றும் வேறு விதமான விளம்பர வெளிச்சங்களுக்கு இடம் கொடாததும், நெத்தியடி வாக்குமூலங்களை அவ்வப்போது வாரி வழங்காமல் எழுத்தாளனின் தார்மீகக் கடமையை மட்டும் சரிவர நிறைவேற்றுவதும்தான் என்று அவர் செயல்படுவதே இதற்குக் காரணமாக இருக்கலாம். அது பற்றி அவருக்கு வருத்தங்கள் இருப்பதாகவும் தெரியவில்லை.
நல்ல எழுத்தை வாசகர்கள் படிக்கும்படி ஊக்கம் தரும் வண்ணம் அறிமுகப்படுத்துவதும், நினைவூட்டுவதும் நடுநிலை தவறாத விமர்சகர் பணி. ஆனால், தமிழ்ச் சூழலில் விமர்சகர்கள் அருகி வரும் இனம். விமர்சனம் என்றாலே பட்டியலிடுவது, பழிப்பது, பாராட்டுவது அதையும் படைப்பாளிக்கும் தனக்குமான பரிச்சயத்தின் அடிப்படையில் அல்லது படைப்பாளியைக் குறித்த தன் முடிவுகளின் அடிப்படையில் செய்வதே இங்கு வழக்கமாக இருக்கிறது. மொழி, கட்சி, குழு, வட்டாரம், ஜாதி, பத்திரிகைச் சார்பு என்று எழுத்தாளர்கள் வட்டங்களுக்குள் சுழல்வது போலவே, விமர்சகர்களும் சுழல்கிறார்கள். விமர்சனம் என்பது எழுத்தாளர் சொல்ல வந்ததை மொழியின் அழகியல், இயங்கியல் ஆகியவை மேன்மையுறும் பாணியில் சொல்லி, படைப்பாளி தன் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறாரா என்பதை, படைப்பின் ரசத்தை வடித்துக் காட்டும் பணியைச் செய்ய வேண்டும்.
விமர்சனம் என்பது காலாவதியாகி, கற்பனை வறட்சியுற்று படைப்பிலக்கியத்தை செய்ய முடியாத மலடுற்ற நிலையில், எழுத்தாளர்கள் தங்களை மாத்யூ ஆர்னால்டுகளாகவும் டி.எஸ். எலியட்டுகளாகவும் கற்பித்துக் கொண்டு அணிந்து கொள்ளும் வேறொரு முகமூடியாக இருக்கிறது. இவர்களுக்குப் பிடித்தவர் என்றால் எளிய நடை, இல்லையென்றால் அதுவே பாட்டி கதை. இப்படியே கவித்வம், தத்துவமரபு, வேர் கொள்ளுதல், கவனமற்ற எழுத்து, மீபொருண்மை, அந்நியத்தன்மை என்று கலைச் சொற்களைப் பிரசவித்து ‘மொழி வாந்தி’ எடுத்தலே இன்றைய விமர்சன பாணியாக இருக்கிறது.
தான் மையங்கொண்ட இடத்தின் எழுத்தாளர், ஐம்பது வருடங்கள் ஒரே பாணியில் எழுதினால் அவர் ஜாம்பவான். வேறு அணியைச் சேர்ந்தவர் என்றால், தான் முதலில் எழுதித் தன்னை இலக்கிய உலகில் நிலை நிறுத்திக்கொள்ள உதவிய அதே பாணியை காலமெல்லாம் திரும்பச் சொல்லும் கிளி, தன்னையே பிரதியெடுப்பவர், தேக்கமுற்றவர், இப்படி… ஏ.சி. பிராட்லியைப் போல இ.எம். டபிள்யு. டில்லியர்ட் போல, தீர்க்கமுற்ற விமர்சகர்கள் தமிழில் இல்லை.
போதாக்குறைக்கு, ஆயிரமானாலும் போர்ஹே ஆகுமா,
(நாஞ்சிநாடன் கதைகள் குறித்து திலகவதி எழுதிய முன்னுரை)இன்னும் வரும்)
(தட்டச்சு உதவி: சென்ஷி http://senshe.blogspot.com/)
(

















இதை, இதைத்தான் எதிர்பார்த்தேன். இன்னா அடி அடிச்சாலும் அவனுகளுக்கு வலிக்காதே. குண்டியத்தாங்கி, உருவிவிட்டு எப்படியாச்சும் வாங்கிக்கிட்டு வந்துருறாங்களே… வெட்கங்கெட்டப் பயலுக.
எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் நாஞ்சில்நாடனும் ஒருவர் .என் வலைத் தளத்தில் உள்ள பேட்டியில் அவர் பற்றி
குறிப்பிட்டுள்ளேன் .பார்க்க. http://www.umavaratharajan.com